Showing posts with label ஜெட் விமானம். Show all posts
Showing posts with label ஜெட் விமானம். Show all posts

Aug 15, 2011

இது பயணக்கட்டுரை அல்ல - 2


போர்டிங் பாஸ் பரிசோதனை கவுன்டர் தொடங்கி விமானத்திற்கு நம்மை வழிநடத்தி, வரவேற்று, இருக்கையில் அமரவைக்கும் வரை வழிநெடூக மனித எந்திரன்களும் எந்திரிகளும் வணக்கம், வந்தனம், நமஸ்கார், நமோஷ்மார், ஸ்ஸ்வாகதங்களைச் சொல்லின. 

நாங்கள் ஆறுபேர் ஒன்றாய் வந்திருந்தாலும், விதியின் வசத்தில் எனக்கு மட்டும் தனித்தீவு ஒன்றில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. யாரோ ஒன்றாய் வந்த மூன்று நண்பர்கள் ஏ, சி மற்றும் டி இருக்கையில் அமர்ந்து கொண்டு ‘பி’ இருக்கையில் என்னை வைத்துப் பிழிய ஆயத்தமாயினர். மிஸ்டர் ஏ ஜன்னலோரம் உட்கார்ந்திருக்க, அவரை விடுத்து மற்ற இருவரிடமும் “ஸ்வாமி, ஏதாவது ஒரு ஓர சீட்டுல என்னை விட்டுடுங்க. நீங்க ஒட்டுக்கா கதைச்சிட்டு வரலாம்”, என்ற ஐடியாவை லெஃப்ட் ஹாண்டில் புறந்தள்ளின சி’யும் டி’யும். எக்கேடோ கெட்டுப் போங்க என “வாழ்விலே ஒரு முறை” “கண்ணீரில்லாமல்” இரண்டையும் கையிலெடுத்து இன்க்கி பின்க்கி பான்க்கி போட்டு, “கண்ணீரில்லாமல்” புத்தகத்தை கைப்பைக்குள் சொருகினேன்.

மிஸ்டர் ஏ என்னையே கொஞ்ச நேரம் பார்த்து “வாட் புக் இஸ் திஸ்”, 

“தமிழ்”

“தட் ஐ குட் ஸீ. ஹூ இஸ் தி ஆத்தர்”

“ஜெயமோகன்”

“ஓ, ஐ நோ பாரடியார் அண்ட் டிருவல்லுவர்”

“ஓ, குட் டு நோ. போத் ஆர் நோ மோர் நவ்”

“யா! ஐ நோ, யு கண்டின்யூ”, என கையிலிருந்த ஏதோ பிஸினஸ் புத்தகத்தில் மூழ்க....

மேலும் கொஞ்ச தாமதம், ரன்வேயில் காத்திருப்பு அப்படி இப்படியென ஒரு மணிநேரத் தாமதத்தில் விமானம் புறப்பட்டது.

விசிறி சாமியார் ஜெயமோகனுக்கு ஒரு ஆப்பிளைப் பரிசளிக்க, எனக்கு வயிற்றின் அமிலக் கரைசல் மறுபடி நினைவுக்கு வர... சரியாய் வந்து சேர்ந்தான் விமான சிப்பந்தி. தூரத்தில் நீள் செவ்வக வண்டியொன்றை அவன் மெதுவாய்த் தள்ளி வருவது தெரிய, “ஆஹா”, எனத் துள்ளியமர்ந்தேன். ஒவ்வொரு இருக்கையாய் நின்று, என்ன வேண்டும் என ஒவ்வொருவராய் விசாரித்து நீ.செ.வ. உள்ளிருந்து எடுத்துத் தந்து கொண்டிருந்தான். “அப்பாடா”, என நிம்மதிப் பெருமூச்சுவிட்டு சாய்ந்து அமர்ந்தேன்.

திடீரென “காச் மூச்” என ஏதோ சத்தம். ஒரு ’கன’வான் ஒருத்தர் அந்த சிப்பந்தியிடம் எழுந்து நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார். “எதிர்பாராததை எதிர்கொள்ளடா”, என உள்ளே குரல் அலறியது.

விஷயம் இதுதான்.... அந்த நேரத்து ஜெட் விமான சேவையில் உண்ணும் பொருள் யாவும் விலை கொடுத்தே வாங்கப்ப்ட வேண்டும். இதைத் தெளிவாக ஈ.டிக்கெட்டில் குறிப்பிடவில்லை என கனவானின் குற்றச்சாட்டு. ஏதும் தருகிறோம் என்றும் குறிப்பிடவில்லையே என்பது சிப்பந்தியின் வாதம். 

“ஐ டொண்ட் வாண்ட் எனிதிங்”, எனக் கடைசிக் கத்தலை இறைத்துவிட்டு அமர்ந்தார் கனவான்.

"ஐ டூ டோண்ட் வாண்ட் எனிதிங், இஃப் யு வாண்ட் மனி”, என்னுள்ளே எவனோ ஒருத்தன் திடீர்க் குரல் தந்தான். “டேய், யாரப்பா நீ? துட்டு இருக்குல்ல, வாங்கித் துன்னா என்னாவாம்”, என எதிர்க்குரல் தந்த அந்த இன்னொரு மடையனின் வாதம் தலையில் தட்டி அடக்கப்பட்டது.

அவ்வப்போது ஏதேதோ அறிவிப்புகள் ஹிந்தி கலந்த ஆங்கிலம், ஆங்கிலம் கலந்த ஹிந்தி என மாற்றி மாற்றி வந்து கொண்டிருந்தன. விமானி ஒருமுறை குரல் கொடுத்தார். முப்பத்து ஆறாயிரம் அடியில் பறப்பதாகவும், வெளியே மைனஸ் 43 டிகிரி குளிர் எனவும் குறிப்பிட்டார்.


இப்போது வண்டி அருகில் வர...

உள்ளேயிருந்த இரண்டாவது ஆசாமியின் குரல், “வெஜ் சாண்ட்விட்ச்?”

”டூ ஹண்ட்ரட் சார்”

முதல் ஆசாமி, “ஓ, நோ தேங்க்ஸ்”

இரண்டாம் ஆசாமி மீண்டும், “சாஃப்ட் ட்ரின்க்ஸ்”

“நைன்ட்டி சார்”

முதல் ஆசாமி, “ஓ, நோ தேங்க்ஸ்”

இருவரும் சேர்ந்து, “வாட்டர்”

“தட்ஸ் ஃப்ரீ சார்”

“குட், கிவ் மி அ கப்”

கையிலெடுத்த காகிதக் கோப்பை நிறைந்துவிடா வண்ணம் முக்காலுக்கு அரைக்கும் இடையே அளந்து கொடுக்கப்பட்டது.

ஏ’வும் சி’யும் கேஷ்யுக்களையும், சாஃப் ட்ரிங்க் டின்களையும், சாண்ட்விட்ச்’களையும் இடவலப் புறங்களில் அதகளம் செய்து என்னைக் கடுப்பேற்றின. 

வெளியே தட்பவெப்பநிலை சரியில்லாததால்,  சீட் பெல்ட் அணிந்தவாறே பயணிப்பது நலம் என ஒரு அறிவிப்பு வந்தது. அவ்வப்போது மேகங்களுக்குள்ளே புகுந்து தடதடத்து ரயிலாட்டம் ஆடியாடிச் சென்றது விமானம். வயிற்றை ஏதோ பயம் கவ்வியிழுத்தது. 

பெல்ட் அணிந்து தலை சாய்த்து டி’யைப் பார்க்க அங்கே கைகளில் ஏதுமில்லை. இந்த சிகாமணி பரவாயில்லை தின்னி பார்ட்டியில்லை என நினைத்த வேளையில்,

கடந்து சென்ற ஹோஸ்டஸிடம் , “கேன் யு கெட் மீ மை பேக்?”, தலைக்கு மேலே காட்டினார்.

“ஏன் உன்னால எந்திரிச்சி எடுக்க முடியாதா?” என்ற கடுப்பை ஒரு புன்னகை மூலம் அந்தப்பெண் முகத்தில் மறைத்து, அந்தப் பையை மேலிருந்து எடுத்துத் தந்தாள். 

தன் பையைத் திறந்து ஒரு காகிதத் தட்டு, அதன் மேல் ஐந்து வகை வடக்கத்தி பட்சணங்களை வைத்து மொசுக்கத் தொடங்கினார் மிஸ்டர்.டி. “டேய், உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?”, எவனோ உள்ளே புலம்பினான்.

மீண்டும் சிப்பந்தி வண்டியோடு வந்து தின்றும் தின்னாத குப்பைகளை அள்ளிக்கொண்டு போக, வெறும் வயிற்றில் குலுங்கின அரைக்கோப்பைத் தண்ணீர் விமானப்பயண ஸீ-ஸாக்களோடு சேர்த்து பிரட்டத் தொடங்கியது.

இப்போது ஜெயமோகன் வீட்டிற்குள் குட்டிப்பையன் மனோஜ் வந்து ஃப்ரிட்ஜ் உள்ளே இருந்த சிப்ஸ் வாங்கித் தின்றான். அடுத்த அத்தியாயத்தில் யாரேனும் ஏதேனும் தின்றால், நான் ஜன்னல் வழியே குதித்துவிடும் அபாயம் கருதி புத்தகத்தை மூடி உள்ளே வைத்தேன். 


ஜன்னல் வழியே பார்த்தேன். ஏதோ பனிப்பிரதேசத்திற்கு சற்றே மேலே பறப்பது போல் பனிப்படுக்கையாய் கீழே மேகம். அதிலும் சில மேகங்கள் கோன் ஐஸ் ரூபத்தில் தெரிந்து வெறுப்பேற்றின. போதும்டா என இருக்கையில் சாய்ந்து கண்கள்மூடித் தூங்கக் தொடங்கினேன். 

விமானம் புறப்பட்டு இரண்டு மணிநேரங்கள் ஆகியிருக்க, இறங்குமுன் முகலட்சணத்தை சோதித்துக் கொள்ள வாஷ்ரூம் நோக்கி நடந்தேன். வயிற்றில் மீண்டும் உருட்டல் பிரட்டல். ஒன்றுமில்லா வயிற்றிலிருந்து ஏதோ எடுத்துக் கொண்டு வந்தது. வயிற்றில் ஒரு அழுத்தம் தந்து அதை எடுத்துத் தொலைத்தேன்... “அரை கப் தண்ணீர்”

”விமானம் தரையிறங்க இருப்பதால் பயணிகள் இருக்கையில் அமரவும், சீட் பெல்ட் அணிந்து கொள்ளவும்”

ஜெட் பந்தம் நிறைந்தது. தில்லி விமான நிலையம் வரவேற்கக் காத்திருந்தது.

Aug 12, 2011

இது பயணக்கட்டுரை அல்ல - 1

மதியம் பன்னிரண்டு முப்பது. சுடச்சுட பருப்பு ரசம், பீட்ரூட் பொரியல் சகிதம் தட்டில் உட்கார்ந்திருந்தது. இருந்த கொலைப் பசிக்கு அந்த காம்பினேஷன் அமிர்தமாய் இருந்தது. அவதி அவதியாக அள்ளிக் கொட்டிக் கொண்டேன். கால் வயிறு நிறைந்ததா எனத் தெரியவில்லை. "இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கவா", என்றவளிடம், "இல்லை, ஃப்ளைட்'ல எப்படியும் ஏதும் தருவான், அங்க பாத்துக்கறேன்", என எழுந்தேன். 

"தயிர் சாதம் கொஞ்சம் சாப்பிடலாமே? உங்களுக்குப் புடிச்சாப்ல இன்னைக்கு நல்லா உறைஞ்சிருக்கு"

"வேண்டாம்னு சொன்னனே", கால் டாக்சி வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு இருபதுக்கு டெல்லி விமானம் ஏற வேண்டும்.

"காபி ஒரு அரை கப் தரவா?", கேட்ட அம்மாவிடமும் வேண்டாம் என்றாயிற்று.

வழக்கமாக பையைத் தோளில் மாட்டினால் அழுது ஆர்ப்பரிக்கும் அகில் என் அம்மா இடுப்பில் அமர்ந்து கொண்டு என்னை வெறித்த பார்வை பார்த்து டாட்டா சொல்லியும் சொல்லாமலும் வழியனுப்பினான். அவன் அழுதிருந்தால் தேவலாம் என்றிருந்தது. வீடு திரும்ப இரண்டு வாரங்கள் பிடிக்கும்.

டாக்சி புறப்பட்டதும் ஏதோ தொண்டையை இடைஞ்சல் செய்தது. அந்த அரை கப் காபியை குடித்திருக்கலாம் எனத் தோன்றியது.

சொல்லி வைத்தாற்போல் நூற்றியறுபதை வாங்கிக்கொள்ள கால்டாக்சி டிரைவரிடம் இருநூறுக்கு சில்லறை இல்லை. 

"சரி, இருநூறுக்கு பில்லைக் கொடப்பா. ஆபீஸ்'ல க்ளைம் பண்ணிக்கறேன்", அறுபத்திநாலு பற்களும் சிரித்துத் தெறித்தது. என் அலுவலக செலவில் அவர் வீட்டம்மா சூடப்போகும் மல்லிகையின் அந்த எக்ஸ்ட்ரா முழத்தையும் அதை விற்றவள் சேமித்த முன்னிரவின் மூன்று நிமிடங்களையும் ஓரிரு நிமிடங்கள் நினைத்துக் கொண்டேன். 

சென்னை விமான நிலையத்திற்கு இது என் இரண்டாவது நுழைவு. இதற்கு முன் நுழைந்து கடந்த இடங்கள் எல்லாம் மாறிவிட்டாற்போல் தோன்ற, பட்டிக்காட்டு மிட்டாய்க்கடையை பட்டணத்தான் பார்ப்பதுபோல் சுற்றியொரு நோட்டம் விட்டேன்.

"என்ன புதுசா உள்ள நுழையறாப் போல லுக்கு வுடறீங்க", உடன் பயணித்த அலுவலகத் தோழன் ஒருத்தன் என்னிடம் எதையோ சோதித்துப் பார்த்தான். சுஜாதா பாஷையில் சொல்லவேண்டும் என்றால், "மையமாக சிரித்தேன்".

"அப்புறம் சொல்லிடறேன், ஜெட் ஏர்வேஸ்'ல இந்த மத்தியான ப்ளைட்'ல குடிக்கத் தண்ணி கூட யோசிச்சுத்தான் தருவான். லஞ்ச்  வீட்லயே முடிச்சிட்டீங்க இல்ல? அப்டி இல்லேன்னா பாத்து இங்கயே ஏதான சாப்டுக்கோங்க", இரண்டு வாரங்கள் முன் இதே நேரம் இதே விமானத்தில் பயணப்பட்ட அதே தோழன் எச்சரிக்கை விடுத்தான். அடக் கொடுமையே! "இத்த நம்பியா வீட்ல சுடுசோறு வேணாம்னேன்?", என கேட்டுக்கொண்டேன். இருந்தும் உள்ளேயொரு குரல், "இவன் பொய் சொல்கிறான். விமானத்தில் ஒரு வெல்கம் ட்ரிங்'காவது தராமலா இருப்பான், ஐந்தாயிரத்து சொச்சம் வாங்கியிருக்கிறானே?", என ஒலித்தது.

பசியின் முதல் அமிலத்துளி இரைப்பையின் மேல்வட்டத்தை மெதுவாய்த் தொட்ட உணர்வு. அப்படியேதும் இவன் சொன்னாற்போல் அவன் தராவிடில்? ஐந்தரை வரை தாங்குமா?

"காபி எவ்ளோ?"

"சிக்ஸ்டி",

ஓ! நாம் விமான நிலையத்தினுள் இருக்கிறோம்.

"ஓகே"

"நீயெல்லாம் வாங்கமாட்ட தெரியும்டா", குரல் ஒலிக்காமல் ஒலித்தது.

"புது தில்லி செல்லும் விமானம் இரண்டு இருபதுக்குப் பதிலாக இரண்டு ஐம்பதுக்குப் புறப்படும். தில்லியில் இருந்து வந்து சேரும் விமானத்தின் தாமதமே இதற்குக் காரணம். சிரமத்திற்கு வருந்துகிறோம்", இயந்திரம் அரற்றியது.

வேறு வழியேயில்லை. "காபி ஒரு கப் குடுங்க", வாங்கிக்கொண்டு காத்திருப்பு நாற்காலிக்கு வந்தேன்.

அறுபதை அழுததற்கு அது ஒரு கேப்புச்சினோ’வாக இருந்து தொலைத்திருக்கலாம். உள்ளூர் சினிமாக் கொட்டகைகள் தரும் ப்ரூ காபியைத் தோற்கடிக்கும் சுவை. பாதிக்குமேல் குப்பைத்தொட்டியின் பசிக்கு இரையாயிற்று.

எதிர் நாற்காலிகள் வெள்ளை, கருப்புத் தோல்கள், பஞ்சாபி டர்பன், ராஜஸ்தானி உருமால், என விதவிதமாய் உலகின் எல்லா சாதி மத சனங்களையும் அடக்கியிருந்தது. எல்லாம் வழக்கம்போல் தனித்தனித் தீவாய் அமர்ந்து வெறித்த பார்வையுடன் ஓங்கியுயர்த்தி சுணக்கம் காட்டிய உதடுகளுடன் படித்துக் கொண்டு, இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு என ஏதேதோ செய்து கொண்டிருந்தன.

”விமானம் வந்தாச்சு, ஏறிக்கொள்ள வாங்கப்பு”, என்ற அழைப்புக் குரலுக்கு எல்லோரும் விமானத்தைத் தவற விட்டிடும் பதட்டத்தில் ஓடிச் சென்று க்யூவில் நின்றோம்


தொடர்ச்சி : 




Related Posts Plugin for WordPress, Blogger...