Showing posts with label முன்னூறாவது பதிவு. Show all posts
Showing posts with label முன்னூறாவது பதிவு. Show all posts

Jan 12, 2011

முன்னூறாவது பதிவும் என் முதல் புத்தகமும்!

யெஸ்! இது என் முன்னூறாவது பதிவு. 

image courtesy: http://www.law.ed.ac.uk

இங்கே கோ-இன்சைட் ஆகி வந்திருக்கும் மற்றொரு நற்செய்தி, நான் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் "கார்பரேட் கனவுகள்" புத்தகம் கடைசி ப்ரூஃப் கட்டத்தை இன்று எட்டியுள்ளது.

நூறாவது பதிவு வரைகையில் ஏதோ தலைக்குமேல் கொம்பு வளர்ந்த நினைப்பில் எழுதின ஞாபகம் வருகிறது. இருநூறு மொக்கையிலும் மொக்கை. இதோ இப்போது முன்னூறாவது பதிவு எழுதுகையில் இந்த நம்பர் கேமில் எல்லாம் ஒன்றும் இல்லை என்ற தெளிவு வந்திருக்கிறது போல் சற்றே தெரிகிறது.


சேர்த்துக் கொண்ட சொத்து விபரம்:

இங்குமங்குமாக சுமார் நானூற்று சொச்ச ஃபாலோவர்கள் சேர்த்துக் கொண்டது, அலேக்சாவில் ஏதோ கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படி ஒரு ரேங்கிங்  (உபயம்: எந்திரன், ஜெமோ, அறிவியல் பற்றின என் ஒரு பதிவு மற்றும் அதற்கு கூகிள் தரும் ஓஹோ ஆதரவு, தமிழர்களின் குஷ்பூ தேடல்கள், கிரிக்கெட்), சிலப்பல நல்ல நண்பர்கள், கொஞ்சமே கொஞ்சம் கெட்ட வார்த்தை வசவுகள் (உபயம்: சாரு குஞ்சுமோன்கள்) ஆகியவற்றை முதல் ஐந்து சொத்துப் பட்டியலில் சொல்லலாம்.

நான் சற்றே டுவிட்டரின் வம்புமடத்திற்குத் தாவிய சமீபத்தில் பதிவுகள் நசநசத்துப் போனதென்னவோ நிஜம். #டென்ட் தட்ட வேண்டும்.

வலைப்பூவில் எழுதிய பயனில் முக்கியமாகக் கிடைத்தது புத்தகம் எழுதும் வாய்ப்பு.

கார்பரேட் கனவுகள் - புத்தக வெளியீடு குறித்து....



அலுவலக நண்பர் பழனியின் மூலமாக செங்கை பதிப்பகம் அரு.சோலையப்பன் (அருணோதயம் அருணன் அவர்களின் புதல்வர்) அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஊக்குவித்ததன் பயனாக விரைவில் "கார்பரேட் கனவுகள்" வெளிவரவிருக்கிறது.

பி.பீ.ஓ. நாட்குறிப்புகளாக நம் தளத்தில் வெளி வந்த தொடர் இடையில் நிறுத்தப்பட்டதன் ரகசியம் இந்தப் புத்தகம் வெளிவருவதே. ஆறேழு அத்தியாயங்கள் மட்டுமே இங்கே வெளிவந்த அத்தொடர் இருபது அத்தியாயங்களுடன் புத்தக வடிவில் வெளிவர உள்ளது.

நம் தளத்தில் வெளிவந்த முன்னுரை இங்கே

வெறுமனே கதை சொல்லும் அனுபவக் குறிப்புகளாக மட்டுமில்லாமல் அல்லது வெறுமனே பி.பீ.ஓ. என்றால் என்ன என்னும் வகையில் விளக்கக் குறிப்புப் புத்தகமாக இல்லாமல் இரண்டையும் கலந்து கொடுக்கும் முயற்சியே இந்தப் புத்தகம்.

பி.பீ.ஓ’க்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படைத் தகவல்கள் தொடங்கி இங்கே இருக்கும் வேலை முறைகள், வேலைச் சிக்கல்கள், இத்துறை சார்ந்த மனிதர்கள் சந்திக்கும் நடைமுறைச் சவால்கள், ஒபாமா மசோதாக்களால் இந்தத்துறை காணும்  பாதிப்புகள், சக ஊழியர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், குதூகலங்கள், துயரங்கள், வெற்றி ரகசியங்கள், நான் சந்தித்த சில சுவாரசிய மனிதர்கள், சில சுவாரசியமான சம்பவங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது இந்தப் புத்தகம். 

புத்தகத்திற்கு பிரபல நட்சத்திர எழுத்தாளர் என்.சொக்கன் அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பது புத்தகத்தின் முக்கிய பலம் என நான் கருதுகிறேன். வல்லினம், மெல்லினம் இடையினம் என ஐ.டி.துறை குறித்து எழுதிய கைகளால் இந்த பி.பீ.ஓ. புத்தகத்திற்கு அணிந்துரை கிடைத்தது சாலப் பொருத்தம் எனவும் நான் நம்புகிறேன். 

விரைவில் புத்தக வெளியீட்டுத் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்!
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...