Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

May 21, 2012

கோகிலவாணி

கோகிலாவாணி! இந்தப் பெயர் தமிழகத்தில் மிகவும் பரிச்சயமான ஒன்று. தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் இறந்த ஒரு கல்லூரிப் பெண்ணின் பெயர் கோகிலா வாணி. ஆனால், நான் இங்கே சொல்வது கோகிலவாணி பற்றி!

இருபத்தியோரு வருடங்கள் முன் இதே நாளில் நிகழ்ந்த ஒரு அரசியல் படுகொலை! அது அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை, விடுங்கள். ராஜீவ் காந்தியின் படுகொலையானது தமிழகத்தில் நியாயப்படுத்தப்பட்டு வருடங்கள் பலவாகின்றன. 

ராஜீவ் இலக்காக குறிக்கப்பட்டபோது அந்த இலக்கில் குறிக்கப்படாமலேயே இருந்து தொலைத்திருந்தாலும் செத்துத் தொலைத்து வைத்தவர்கள் எத்தனைபேர் என்ற கணக்கு பற்றி நீங்கள் என்றேனும் யோசித்திருக்கிறீர்களா?

அந்தக் கணக்கின் விடை உத்தேசமாக 15 என்கிறது புள்ளிவிபரக் கணக்குகள். 

அவர்களில் போலீசார் ஒன்பது பேர். அவர்களையும் விட்டொழிப்போம். இந்திய ஜனநாயகத்தில் காவலர்களுக்கு மரியாதை தரவேணுமா என்ன?

மீதம் அரைடஜன் பேரும் பொது ஜனங்கள். இவர்களில் இந்திய அரசியல் பேர்வழிகள் யாரும் இல்லை, அதுவும் ஒரு ஆச்சர்யம் தரும் உண்மையே! அந்த அறுவரில் முனுசாமி மற்றும் லதா கண்ணன் ஆகிய இவர்கள் இருவர் மாத்திரம் கைராட்டைக் கட்சியின் ஆகாத சொத்துக்கள். காங்கிரஸின் தொண்டரடிப்பொடிகள்!

அந்த லதா கண்ணனின் மகள்தான் இந்த கோகிலவாணி. அந்தச் சின்னப்பெண் செய்த ஒரே தவறு, அவள் அம்மா தொண்டாற்றிய கட்சியின் தேசியதலைவர் எதிரே ஹிந்தியில் ஒரு பாடலைப் பாடிக்காட்டும் ஆர்வத்தைக் கொண்டது.


"போட்டுத் தள்றா அந்த சின்னப் பொண்ண!", என்றெல்லாம் எந்தத் தலைவனும் சொல்லியனுப்பவில்லை. இருந்தாலும் தணுவுடனும் ராஜீவுடனும் சிதறிப் போனது அந்த சின்னஞ்சிறு ஜீவனும்.

கோகிலவாணிக்கு நம் நினைவஞ்சலிகள்!

உயிர்களின் முக்கியத்துவம் பற்றி தமிழ்நாடு முழுவதுமாக, இந்தியா முழுவதுமாக, உலக முழுவதுமாகப் பேசிக் கொண்டிருக்கும் இந்தவேளையில் தீவிரவாதத்தைக் கையிலெடுப்பவர்கள் “எவன் மீது கோபமோ அவனை மட்டும் கொல்வோம்” என்ற உறுதியை இன்றேனும் எடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...