Showing posts with label கிழக்கு. Show all posts
Showing posts with label கிழக்கு. Show all posts

Feb 10, 2011

கறை (ரொம்ப) நல்லது!



கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னால் நான் பிறக்க இன்னும் ஏழெட்டு வருடங்கள் பாக்கியிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு நல்காலைப் பொழுதில் எங்கள் வீட்டில் அரங்கேறிய  ஒரு நிகழ்வு...

"அப்பா வந்துட்டியா வா வா வா..."

"கண்ணா, உனக்கு எத்தன தடவை சொல்லியிருக்கேன். எழுந்த கையோட அப்படியே வீதிக்கு வந்து நிக்காதேன்னு. பல்லு தேச்சியா, மொகம் கழுவி காபி சாப்டுட்டு வெளிய வந்து உட்காரு"

"எனக்கு அதெல்லாம் தெரியும். நீ என்ன கைய பின்னால மறைச்சி வெச்சுட்டு இருக்க?"

"ஒண்ணுமில்லையே! ஒண்ணுமில்ல! நீ போயி காபி சாப்பிட்டுட்டு வா, நான் கொஞ்சம் இங்க ஒக்காந்துட்டு இருக்கேன்"

"அதெல்லாம் இருக்கட்டும். என் பல்லும் அம்மா காபியும் எங்கயும் போகாது. நீ உன் கையில மறைச்சி வெச்சுட்டு இருக்கற குமுதத்தை இங்க கொஞ்சம் தந்துட்டு உள்ள போயி ஏதாவது வேலை இருந்தா பாரேன்"

"குமுதமா? குமுதம் எங்க இருந்து வந்துது?"

"கடைல இருந்து. இப்ப காலங்கார்த்தால போயி வாங்கிட்டு வந்தயில்ல?"

"ஹி ஹி ஹி...! இல்லியே!"

"பொய் சொல்லாதப்பா. அந்த கைய முன்னால காட்டு!"

ஏய்! ஏய்! ஏய்! பல்லு கூட வெளக்கமா என்னைத் தொடாத. நான் குளிச்சு எல்லாம் ஆச்சு. பூஜை கூட இன்னும் முடியலை"

"அப்போ பூஜையை முடிச்சிட்டு வா. அதுக்குள்ள நான் குமுதம் படிச்சிட்டு தந்துடறேன்"

"டேய் டேய்... இருடா. ரெண்டே நிமிஷம். அப்புசாமி மாத்திரம் படிச்சிட்டு தந்துடறேன். அப்புறம் நீ முழுக்க படிச்சிக்கோ"

"நானும் அதேதான் சொல்றேன். நானும் அப்புசாமி மட்டும் படிச்சிட்டு ரெண்டே நிமிஷம், குமுதம் மொத்தத்தையும் உன்கிட்டே தந்துடறேன். நீ அப்புறம் நாள் முழுக்க அந்த அப்புசாமியையும் ஆப்பிரிக்க அழகியையும் வெச்சுக்கோ"

"அப்பன் கிட்ட பேசற பேச்சா பேசறான். விச்சி! ஏ விச்சி! இவனை என்னன்னு கேளு! காலைவேளையில பல்லுகூட தேக்க செய்யாம என்கிட்டே வந்து ராவடி பண்றான்"

"அப்பா...அப்பா... குடு குடு... தூணை சுத்தி ஓடாதே. திண்ணைலருந்து டிச்சில விழுந்துடப் போறே"

என் அப்பாவும் தாத்தாவும் அப்புசாமிக்கும் ஆப்பிரிக்க அழகிக்குமாய்ப் வாரவாரம் போட்டுக்கொண்ட சண்டைகளை அம்மா இத்தனை வருடங்களில் எங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.

எங்கள் வீட்டில் வரலாறு கண்ட அந்த அ.ஆ.அ. கதையை புத்தக வடிவில் இரண்டொரு வருடங்கள் முன்பு புத்தகக் காட்சியில் கண்டபோது கையிருப்புக் காசு அனைத்தும் காணாமல் போயிருந்தது. வருடந்தோறும் இதே கதைதான். அ.ஆ.அ. கண்ணில் படும்போது என் அந்த வருட பட்ஜெட் அல்லது கையிருப்பு ரொக்கம் காணாமல் போயிருக்கும். இந்த வருடமும் அப்படியே ஆகிப்போனது.

அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை புத்தக மணம் மாறாமல் புத்தம்புதிதாய் இருபது ரூபாய்க்குத் தருகிறேன் என ஒருவர் கடைகட்டிச் சொன்னால் உங்களுக்கு  எப்படியிருக்கும்?

பத்ரி அவர்களின் அதிரடிப் புத்தகத் திருவிழாப் பதிவும் பாரா அவர்களின் கறை நல்லது படித்த போதெல்லாம் "சுண்டியிழுக்கறாங்க சுண்டியிழுக்கறாங்க டோய் சலனம் காட்டாதே!" என இருந்தது.  சொக்கனின் ட்வீட் வழியே ஹாய் மதன் முதலான புத்தகங்கள் இருபது ரூபாய்க்குக் கிடைக்கின்றன எனத் தெரிந்தது. ஓகே...நம்ம பட்ஜெட் இருநூறு ரூபாய். போறோம் அஞ்சு பத்து புக்கு வாங்கறோம். வந்துடறோம் எனத் தீர்மானம் நிறைவேறியது.

இன்று யதேச்சையாக வங்கி வேலையாய் அலுவலகத்திக்கு மட்டமடித்துவிட்டு அப்படியே மயிலை குளம் அருகே கிழக்கில் நுழைந்தேன். அப்போது அள்ளினதுதான் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும். இருபது என்றால் இருபது...ஆமாம் இருபதே ரூபாய்க்கு! அட்டை மட்டும் லேசாய் லேசாய் கறை பட்டிருக்கிறதே தவிர...புத்தகம் இன்னும் காகித மணம் மாறாமல் அப்படியே!

நான் நுழைந்தது மதியம் இரண்டே கால் சுமாருக்கு. அங்கு அமர்ந்திருந்த ஒரேயொரு விற்பனை சிப்பந்தி கொலைப் பசியில் இருந்தே நேரம். நான்கைந்து பேர் சுற்றி சுற்றி புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்தார்கள்.

"சார், டெய்லி சாப்பிடப்போக நாலு மனியாகிடுது. கொஞ்சம் சீக்கிரம் பாத்தீங்கன்னா. போயிட்டு வந்துடுவேன். ரெண்டே முக்காலுக்குள்ள வந்து  திறந்திடலாம். நீங்க மறுபடி வாங்க ப்ளீஸ்!", என கெஞ்சிக் கொண்டிருந்தார். நம் புத்தகப் பசியை அவர் அறியார் பாவம்.

ஐந்தே நிமிடம் ஒரு சூறாவளிச் சுற்றில் பதினேழு புத்தகங்களை அள்ளினேன். 

யுவகிருஷ்ணாவின் "சுண்டியிழுக்கும் விளம்பர உலகம்"
பாக்கியம் ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
வீயெஸ்வி எழுதிய எம்.எஸ். (வாழ்வே சங்கீதம்)
என் சொக்கன் - என் நிலைக்கண்ணாடியில் உன் முகம், திராவிட், வ.மெ.இடையினம் மற்றும் ரிச்சர்ட் ப்ரான்சன்
இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் மற்றும் சைக்கிள் முனி
எஸ்.சந்திரமௌலியின் "கோபுலு (கோடுகளால் ஒரு வாழ்க்கை)
ஆர்.முத்துக்குமார் எழுதிய அத்வானி
பா.ரா'வின் பர்வேஸ் முஷாரஃப் 
இந்திரா பார்த்தசாரதியின் "இயேசுவின் தோழர்கள்"
எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதிய பி.பீ.ஓ. ஓர் அறிமுகம்
வாசுதேவ் தொகுத்த "பூஜைரூம்"
ஞானியின் ஓ பக்கங்கள் 2007
யுவன் சந்திர சேகர் சிறுகதைகள்

பசியில் இருந்த அந்த விற்பனை சிப்பந்திக்கு நன்றி. இல்லையென்றால் ஐந்து பத்து இருபது விலைகளில் அங்கிருந்த இன்னமும் இருபது புத்தகங்களை அள்ளியிருப்பேனோ என்னவோ?

"தி.நகர்'ல இன்னமும் பெரிய இடம் சார். இன்னமும் நிறைய புக் இருக்க வாய்ப்பு இருக்கு" என ஒரு குரல் கேட்டது. சாவதானமாக இன்னும் ஒருமுறை போக வேண்டும் போலத்தான் இருக்கிறது. இருந்தாலும்....

நான் வாங்கிய புத்தகங்களின் ஒரிஜினல் விலை ரூ.1545/- நான் வாங்கின விலை ரூ. 365/-. போதுமா கனவான்களே? ரூ.1180/- தள்ளுபடி.... அதாவது 76% தள்ளுபடி. 


கறை ரொம்ப நல்லதுதானுங்களே?

வரும் ஞாயிறுவரை தி.நகரிலும் மயிலையிலும் இந்த தள்ளுபடி விற்பனை உள்ளது. 

இடம் 1:
மைலாப்பூர் குளம் எதிரில்.
தொலைபேசி எண் : 9500045643

இடம் 2:
L.R. சுவாமி ஹால்
சிவா விஷ்ணு கோயில் எதிரில்
சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில்
தி. நகர்,சென்னை
தொலைபேசி எண் : 9500045608
.
.
.

Jan 13, 2011

சென்னை புத்தக விழாவில் நானும்...

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் என்னிடம் பர்சனலாக அவர் புத்தகம் ஒன்றின் வாயிலாக சொல்லியபடி 'வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடிக்குமுன் மேலும் புத்தகங்கள் வாங்குதல் இல்லை' என்ற மகோன்னத சபதம் ஏற்றிருந்தேன்.

ஒவ்வொரு வருடமும் இப்படி சபதம் ஏற்பதுண்டு. சாந்தி தியேட்டர் வளாகத்தில் சரவணபவன் சென்று தயிர்வடை சாப்பிட்டுவிட்டு அப்படியே வாசலில் இருக்கும் சாந்தி புக்பேலஸ் வாசல் மிதிக்கும் வரை அல்லது ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி புத்தக விழா அரங்கினுள் நுழையும் வரை அந்த சபதம் உயிருடன் இருக்கும்.

இந்த வருடம் எனக்கு புத்தக விழா செல்ல அமைந்த முக்கியக் காரணங்கள் இரண்டு. என்.சொக்கன் அவர்களின் சென்னை புத்தக விழா விஜயம் முதற்காரணம். அவரை சந்திக்க வேண்டும் என்பது என் இந்த வருட விழா அஜெண்டாவில் இருந்தது. பதிப்பாளர் அழைத்திருந்தார்.  கார்பரேட் கனவுகள் இறுதி ப்ரூஃப் தயாராக இருப்பதாகவும், முடிந்தால் புத்தக விழா அரங்கில்  வந்து சேகரித்துக் கொள்ளுமாறும் சொல்லியிருந்தார். இது முக்கியக் காரணம்.


பூந்தமல்லி நெடுஞ்சாலையில் யு.டர்ன் எடுக்கையிலே தன் முத்திரை வரிகளுடன் வரவேற்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் "புத்தகங்களால் இந்த உலகைப் படியுங்கள், உலகையே புத்தகமாகப் படியுங்கள்" என ஏதோ படித்தேன். ஆஹா படி தேன்.



உள்ளே நுழைந்து பைக்கின் கழுத்தைத் திருகிவிட்டு உள்ளே நுழைய முற்படுகையில் வழியில் நின்று வழி மறித்து நடிகர் பார்த்திபன் தொடங்கி, சாரு, மனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்துச் சித்தர், ஜெமோ, எஸ்.ரா, மாமல்லன், வாலி, வைரமுத்து என அனைவரும் வரிசைகட்டி வரவேற்றனர்.  

தமிழ் எழுத்துச் சூழலின் ஆசான் சுஜாதாவின் வரவேற்பிற்கு இணை ஏதுமில்லை என்பேன். மூன்று அல்லது நான்கு பெரிய சைஸ் பேனர்கள் அவருக்கு. வெவ்வேறு பதிப்பக உபயத்தில். அத்தனை பெரிய பேனர்கள் "லைவ்" எழுத்தாளர்கள் யாருக்கும் கூட இல்லை என்பது சுஜாதா இன்னமும் எத்தனை "லைவ்லி"யான எழுத்தாளர் என நிரூபித்துக் கொண்டிருந்தது.


வார நாளாக இருந்ததனால் வாசலில் வழியெங்கும் பதிப்பகத் தகவல் காகிதங்களைத் தருபவர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. எனவே,  படிக்காமல் கிழித்தவைகள் குறைவாகவே இருந்தது சற்றே ஆறுதல்.

கூட்டம் சுமாராக நன்றாகவே இருந்தது. வார நாளாக இருந்தாலும் அந்த மதிய வேளையிலும் எல்லா சைஸ்'களிலும்.... ச்சே ச்சே... சீ சீ... மன்னிக்கவும்... எல்லா வயஸ்'களிலும் பெண்கள் வந்திருந்தார்கள். அஃப் கோர்ஸ், ஆண்களும் கூட சிலப்பலர் வந்திருந்ததாக நினைவு.

அடுத்த வருடங்களில் டிக்கெட் வாங்காமல் உள்ளே செல்ல வகை அமைகிறதா எனத் தெரியவில்லை. இந்த முறை நம் ஜம்பத்தை பரிசோதிக்கலாம் என்று டிக்கெட் கவுண்டரில் "ஹல்லோ சார், நான் இந்த மாதிரி அந்த மாதிரி...கிட்டத்தட்ட எழுத்தாளன் மாதிரி... டிக்கெட் எடுக்கணுமா?" எனக் கேட்டதற்கு, "தம்பி, சாருக்கு வி.ஐ.பி. டிக்கெட் அம்பது ரூபாவுல குடுத்து விழா அமைப்பு நன்கொடை ஐநூறு ரூவா வாங்கு", எனக் கேட்ட குரலுக்கு, "வேண்டாங்க, நான் வளவனூர் வண்டுமுருகன், சாதா டிக்கெட்டே குடுங்க" என உள்ளே நுழைந்தேன்.

அருணோதயத்தில் பதிப்பாளர் அரு.சோலையப்பன் காத்திருந்தார். கார்ப்பரேட் கனவுகளின் ப்ரூஃப் காகிதங்களை பெற்றுக் கொண்டு கொஞ்ச நேரம் அங்கே அவருடன் அளவளாவல். சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் அணிந்துரை மகிமைகளை பதிப்பாளர் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்கள் முன்புதான் அங்கே சிலம்பொலி வந்து சென்றார் எனத் தெரிந்தது.

அருணோதயத்தில் மங்கையர் கூட்டம் சற்று அதிகமாகவே மொய்த்திருந்தது. இன்டர்நெட், மெகாத் தொடர்கள் ஆகியவற்றைத் தாண்டியும் பெண்கள் இன்னமும் மாதர் நாவல்களைப் படிப்பது அங்கே தெரிந்தது. முக்கியமாக ரமணி சந்திரன் நாவல்கள். சிலர் "தொடுகோடுகள், சாந்தினி, மதுமதி" என நாவல் பெயர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மும்பையில் இருந்து வந்திருந்த ஒரு பெண்மணி கட்டுக் கட்டாய் ரமணி சந்திரன் நாவல்கள் வாங்கியது வாய் பிளக்க வைத்தது. யாருக்கோ போன் போட்டு "பூங்காற்று இருக்கா, தீப ஓளி வாங்கிட்டோமில்ல" என உறுதி செய்துகொண்டு புத்தகங்கள் அள்ளிக் கொண்டிருந்தார்.

அங்கேயே "தென்னை மரம் வளர்ப்பது எப்படி" (என் மாமாவுக்கு), "பிழையின்றி தமிழில் எழுதுவது எப்படி" (இது எனக்கு) வாங்கிவிட்டு மெதுவாய் நகர்ந்தேன்.

சொக்கன் அவர்களை கைபேசியில் அழைக்க கிழக்கில் சந்திக்க முடிவாயிற்று. கிழக்குக் காத்திருப்பில் உலோகம் (ஜெமோ), கம்ப்யூட்டர் கிராமம் (சுஜாதா) கையில் எடுத்து பில் போடுமுன் சொக்கன் வந்தார். பில்லிங் கவுண்டர் மேஜை மீது புத்தகத்தை வைத்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு பத்து நிமிட நலம் விசாரிப்புகள், என் பக்கமிருந்து அணிந்துரைக்கான நன்றி நவிலல்கள், அவரிடமிருந்து என் எழுத்திற்கு பாராட்டுக்களும் எனக்கான டெவலப்மென்ட் குறிப்புகளும் வாங்கி மற்றும் தந்து கொண்டபின், அவர் பொன்னான நேரத்தைக் கொல்லும் மனமின்றி அங்கிருந்து நகர்ந்தேன்.

அந்த பத்து நிமிடத்தில் "கிளியோபாட்ரா" முகில் அவர்களை முதலில் அறிமுகம் செய்தார் சொக்கன். முகில் போல லேசாகவே இருந்தார்.

பா.ரா. ஏதோ தீர்க்க சிந்தையோடு ஹரன் பிரசன்னாவின் பக்கவாட்டில் அமர்ந்திருக்க அங்கும் ஒரு அறிமுகம். சம்பிரதாய வார்த்தைகளை இதயத்திலிருந்து எடுத்து "உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்" எனச் சொல்லித் திரும்பினேன்.

நானாக சென்று ஹரன் பிரசன்னாவிடம் கை நீட்டினேன். "பிரசன்னா" என்று வெளியே குரல் கேட்டது. "யாவாரம் நடக்கற எடத்துல என்ன வந்து டிஸ்டர்பன்ஸ் வேண்டி கெடக்கு ராஸ்கல்" என்று ஒரு முரட்டுக் குரல் உள்ளேயிருந்து யாருக்கும் கேட்காமல் எனக்கு மட்டும் கேட்க. "ரொம்ப நன்றி சார்" என அங்கிருந்தும் நகர்ந்தேன்.

வாங்கிய புத்தகங்களை கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு சுற்று கிழக்கைச் சுற்றினேன். நம்பக்கூடாத கடவுளை (அரவிந்தன் நீலகண்டன்) கையில் எடுத்துக் கொண்டிருந்தபோது அலுவலக அழைப்பு.

"ஹலோ, சொல்லுங்க!"

"கிரி?"

"சரியா கேக்கலை. இருங்க வெளியே வர்றேன்", கையில் புத்தகங்கள். பில் போடவில்லை. வெளியே நடக்கத் துவங்கிவிட்டேன்.

"சார்! பில்லு", குரல் கேட்டு.

"ஓ! சாரி சார்! இந்தாங்க", என போனில் பேசிக்கொண்டே பில்லிட்டு, பணம் தந்து, புத்தகங்கள் வாங்கி, பேசி முடித்து மீண்டும் "அயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்" எனச் சொல்லி, "தட்ஸ் ஓகே சார்" என்ற வார்த்தைகளும் "தெரியுண்டா உங்களைப் பத்தி", என்ற பார்வைகளும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.


கால் வலி துவங்குமுன் முடித்துவிட வேண்டும் என நடக்கத் துவங்கினேன். நடக்க ஆரம்பித்த இரண்டு நிமிடத்திலேயே எதிர்ப்பட்ட ஒரு ஜீன்ஸ், டி.ஷர்ட் இளம்பெண் கையில் தேகத்தைப் புரட்டிக்கொண்டு இன்னொரு கையில் லாப்-டாப்'புடனும் வந்து "தடார்" என்று என் மீது முட்டிக்கொண்டு நின்றார்.

"ஓ! சாரி! நம்ம சாரு சார் நாவல் படிக்கற சுவாரசியத்துல எனக்கு எதுவும் தெரியலை", என்று கடைசி பக்கத்தை படித்த வேகத்தில் மூடி வைத்துவிட்டு அப்படியே தரையில் அமர்ந்து லாப்-டாப் திறந்து சாருவுக்கு கடிதம் எழுதத் துவங்கலானார்!

நிறைய பேர் நிறைமாத கர்ப்பிணி மனைவிகளை தரதரவென இழுத்துக்கொண்டு "உயிர்மை ஸ்டால்" எங்கே எனக் கேட்டவாறு விரைந்து கொண்டிருந்தது தெரிந்தது.

இந்த முறையும் வழக்கம் போலவே வேத கோஷ முழக்கங்களுடன் சில பார்ட்டிகள் கடை விரித்து நடைபாதை வாசகர்களை கைபிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் சி.டி.களுக்கு "ஜிங்கிள் ஜங்கிள்" என சத்தங்களுடன்  தனி ஸ்டால் அமைக்க முடியும் என்று இந்த முறையும் சிலர் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.

அதன் பின் எங்கும் உள்ளே நுழையாமல் ஒரு தீவிர ஜன்னல் வணிக நடைபயிற்சி கொஞ்ச நேரம். விகடனிலும் குமுதத்திலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என் இந்த வருடப் பட்டியலில் அங்கே வாங்க ஏதுமில்லாததால் அங்கும் நுழையாது இறுதியில் தமிழினியில் நேரே "சூடிய பூ சூடற்க"வை மட்டும் பறித்துக் கொண்டு வெளியே நடந்தேன்.

மாலை நேரம் நெருங்க உள்ளே நுழையும் கூட்டம் மெதுவாக அதிகமாகிக் கொண்டிருந்தது. ஊட்டி ட்ரை ப்ரூட், பழரசம், ஐஸ் கிரீம், ப்பீ நட்ஸ் என வெளியேவும் விற்பனை கன ஜோர்.

பார்க்கிங்கில் வண்டியை எடுக்கும்போது இரு தோழிகளின் சம்பாஷனை...

"என்னடி வாங்கினே?"

"ஊட்டி ட்ரை ப்ரூட்'ல பிரியாணி தாளிக்கற சாமான்"

Nov 12, 2010

பெங்களூரு புத்தகக் கண்காட்சி / கிழக்கு / சுஜாதா புத்தகங்கள்

பெங்களூரு புத்தகக் கண்காட்சி மற்றும் அதில் கிழக்குப் பதிப்பகம் கலந்து கொள்வது குறித்து இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் தகவலை உங்களுடன் அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.

பெங்களூரு நண்பர்களுக்கு இத்தகவல் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

நிறைய புத்தகம் வாங்குங்கள்! வாங்குவதைத் தவறாமல் வாசியுங்கள்!


_________________________________________

இடம்:
PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE


நாள்:
நவம்பர் 12 முதல் 21 வரை.
அரங்கு எண்: 159, 160, 161
பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறது கிழக்கு பதிப்பகம். கிழக்கு பதிப்பகத்தின் நூல்களை நீங்கள் மேற்கண்ட அரங்குகளில் வாங்கலாம். தன்னம்பிக்கை, அரசியல், வரலாறு, அறிவியல், உடல்நலம், வாழ்க்கை வரலாறு, நாவல், சிறுகதை, நிதி, வணிகம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பார்க்கவும் படிக்கவும் வாங்கவும் ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது கிழக்கு பதிப்பகம். 

எழுத்தாளர் சுஜாதாவின் 50க்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.  


பல்வேறு சிறந்த புத்தகங்களுடன் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை 10% தள்ளுபடியுடன்   நீங்கள் அங்கே வாங்கலாம்.

மேலதிக விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:   

 095000-45608 (காளி பாண்டியன்)


New Horizon Media Pvt Ltd
Phone: 91 44 42009601
Fax: 91 44 4300 9701
URL: NHM Online Store

Send sms START NHM to 575758 to get free SMS alerts on new books updates.

_________________________________________
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...