Showing posts with label பாடுகிறேன். Show all posts
Showing posts with label பாடுகிறேன். Show all posts

Mar 2, 2013

பாட்டுக்குப் பூட்டு

இங்கே பெரும்பாலானவர்களுக்குத் தெரிஞ்ச விஷயம், ஒண்ணரை வருஷம் முன்ன ஒரு ஆர்வக் கோளாறுல “பாடுகிறேன்”னு ஒரு தளம் ஆரம்பிச்சேன் நான். 

சொக்கன் 365பா’ன்னு தினம் ஒரு பாசுரம் பத்திப் பேசினப்போ அந்த 365பா’ங்கற டைட்டிலில் மயங்கி நானும் தினம் ஒரு பா’ட்டு பாடுவோம்னு ஆரம்பிச்சது. கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளே எறங்கிட்டோம்னு கொஞ்சம் தாமதமாத்தான் புரிஞ்சுது. ஒரு பாட்டு பாடி, பதிஞ்சு, எடிட் செஞ்சு, வலையேத்தி, ப்ளாக்’ல பகிர குறைந்தது ஒண்ணரை மணிநேரம் தேவைப்பட்டது. இது மூணாந்தரமா பாடிப் பதிஞ்ச பாடல்களுக்கு. அதிசயமா சில நேரம் பாட்டு நல்லா வந்து அமையறாப்போல இருக்கும். கொஞ்சம் ரெண்டாம் தரத்துக்குப் பக்கம்னு வைங்களேன். அதுக்கு இன்னும் ஒரு அரை/ஒரு மணிநேரம் கூட தேவைப்படும். அட, இவ்ளோ நல்லா வந்துருச்சே அதை இன்னும் மெருகேத்தலாம்ங்கற முனைப்புக்கு அந்த எக்ஸ்ட்ரா நேரம் தேவைப்படும்.



கரோக்கிங்கற இசை சேர்ப்போட பாடி வலையேத்தணும்னா இன்னும் மெனக்கெடணும்.

எப்படியோ 245 நாள்கள் 245 பாட்டு வரை பாடி முடிச்சேன். புதுவீடு வந்தப்புறம், ஆபீஸ்ல வேலைநேரமெல்லாம் மாறினப்புறம் தொடர்தல் முடியாமலே போச்சு. சரின்னு பாடி வலையேத்தறதை நிறுத்தினேன். நிறைய ஆனந்தப் பெருமூச்சு தமிழ் வலையுலகத்துல கேட்டுச்சு. இருந்தாலும் நம்ம பாட்டு ப்ளாக் இன்னமும் ஓபனாத்தான் இருந்துச்சு.

இப்போ, போன வாரம் அந்த சைட்டுக்கு மூடுவிழா நடத்திட்டேன். காரணம் ரெண்டு விஷயம்.

காரணம் 1: நான் பாடினதை நானே ரிவைண்ட் பண்ணிப் பாத்தேன். அதுக்கு மேலே ஒண்ணும் கேக்காதீங்க.

காரணம் 2: விஜயன் துரை’ங்கற அன்பர் எழுதின இந்தப் பதிவு: 

கேட்க ...ரசிக்க ..சில வலைப்பூக்கள்


நம்ம சைட்டுக்கு எந்த கேடகரி’ல எடம் ஒதுக்கியிருக்காரு பாருங்க. இதை மட்டும் லலிதா ராம் படிச்சாருன்னா அனகாபுத்தூர் தேடிவந்து என்னைய மிதிப்பாரு.

ஆக, என்ன சொல்ல வர்றேன்னா..... ..... அல்லாரும் சந்தோசமா இருங்க.

பிகு1: தளத்தை மூடும்போது ஆர்வக்கோளாறுல நான் வேறேதோ முயற்சி பண்ண, அதனால அன்பர்கள் சிலருக்கு அந்த பாட்டு சைட்டை விசிட் பண்ணச்சொல்லி அழைப்பு மெயில்கள் போயிருக்கு போல. நிச்சயம் நீங்களே அதை இக்னோர் பண்ணியிருப்பீங்க. பழகின பாவத்துக்கு இக்னோராதவங்க இக்னோரிடுங்கன்னு கேட்டுக்கறேன்.

பிகு2: என் பாட்டுக்கு ட்விட்டர்ல டான்ஸ் ஆடின கொரங்குக் கூட்டத்துக்கும் யார்னா தகவல் சொல்லிடவும். 

Aug 9, 2011

பாடல் பெற்ற தளம்

பக்கத்து டைலர் கடையில் "மீராவின் கண்ணன் மீராவிடமே" என்று ராஜா பாடிக்கொண்டிருந்தார்.

"சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ கட்டுங்க"

"அது எப்பிடி சார் கட்டும்"

"நீங்கதான் கட்டிக் கொடுங்க"

"இல்லை சார், ஒரு கிலோ உங்க குடும்பத்துக்கு எப்பிடி கட்டும்னு கேட்டேன்"

"இல்ல, இருவது கிலோ ஆடர் போட்டிருக்கு. வர சாயந்திரம் ஆகும், இது இன்னைய மதியத்துக்கு"

"எவ்ளோ?"

"முப்பத்தி ரெண்டு"

"என்ன அரிசி இது?"

"அடுத்து வருவது ............ படத்தில் யுவன் சங்கர் ராஜா படிய பாடல்"

.....ம்ம்ம் இது காதலா  இது காதலா இது காதலா இது காதலா ஒரு பெண்ணிடம் உருவானதா (!!!!)....."

"பொன்னிதான் சார்"

"சரி, சீக்கிரம் குடுங்க"

"இது காதலா இது காதலா இது காதலா இது காதலா இது காதலா "

பின்னங்கால் பிடரியில் விழ தலைதெறிக்க ஓ.........டினேன். அடடா.... இன்றைய பா'வை மறந்திட்டேனே. வீடு போய் என் ரிகார்டிங் தியேட்டரில் உட்கார வேண்டும்.


அதாகப்பட்டது மக்களே... இத்தனை நாள் "பேசுகிறேன்" மூலமாகத் தொடர்ந்து வந்த படுத்தல்கள், அவற்றுக்கு நீங்கள் தந்த பெரும் ஆதரவைக் கண்டு மனமுவந்து "பாடுகிறேன்" என்று மேலும் ஒரு தளத்தைத் துவங்கியுள்ளேன். "ஸ்கேன்மேன்" விஜய், என்.சொக்கன் இவர்களைத் தொடர்ந்து ஒரு 365 தின ப்ராஜக்டாக இத்தளத்தைத் திறந்துள்ளேன். 

தினம் ஒரு பாடல், இதுதான் கான்செப்ட். இதுவரை இருபது நாட்கள் ஓடியுள்ளன. அந்தப் படுத்தல்களுக்கும் உங்கள் ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன்.

பாடுகிறேன் தள முகவரி: http://365paa.blogspot.com
.
.
.




Related Posts Plugin for WordPress, Blogger...