அவசர இனிப்பு தயார் செய்ய வேண்டுமா? சிம்பிள் அண்ட் சூப்பராக இருக்கவும் வேண்டுமா? வாருங்கள் பாசிப்பருப்பு கொண்டு அசோகா அல்வா செய்யலாம்.
பாசிப்பருப்பு இதர வகையறாக்கள் போல அல்லாமல் வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் ஏதும் தராதது. எனவே இந்த அல்வாவை குழந்தைகளுக்கும் தாராளமாகத் தரலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்களைக் காணச் செல்லும்போது உங்கள் கையால் ஏதேனும் செய்து எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புபவர் நீங்கள் என்றால், அசோகா அல்வா அதற்கு மிகவும் உகந்தது.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - ஒரு கப்
சர்க்கரை - இரண்டரை கப்
நெய் - இரண்டரை கப்
முந்திரி / ஏலக்காய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். பின்னர் தேவையான தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை நன்றாகக் குழைய வேக வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை வேக வைத்த பாசிப்பருப்புக் கலவையில் கலந்து கிளறவும். கிளறும்போதே சிறுக சிறுக நெய் ஊற்றி அடி பிடிக்காத வண்ணம் கிளறிக் கொள்ளவும்.
நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாத பதத்தில் வரும்போது, ஏலக்காய், முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான அசோகா அல்வா தயார்.
அசோகா அல்வாவின் மிக எளிய செய்முறை இது. இதனுடன் கோதுமை மைதா சேர்த்து செய்பவர்களும் இருக்கிறார்கள். இணையத்தில் அந்த ரெசிபிக்களும் நிறையவே கிடைக்கின்றன. நான் சொல்லும் செய்முறை T20 அசோகா அல்வா.
