Showing posts with label வெள்ளிக் கதம்பம். Show all posts
Showing posts with label வெள்ளிக் கதம்பம். Show all posts

Jan 28, 2011

வெள்ளிக் கதம்பம்


கொஞ்சம் பர்சனல்

சரியாக ஒரு வருடம் முன்பு நிகழ்ந்த நிகழ்வு. எழுதிய பதிவு. பதிவிற்கான இணைப்பு கீழே. அதற்கு முன்னதாக யதேச்சையாக இப்பதிவை வாசித்துவிட்டு ஜெமோ அவர்கள் சிந்திய புன்முறுவல் இங்கே:


சாதாரணமாக எங்கும் நிகழ்வதுதான். ஆனால் இதை வாசித்தபோது மீண்டும் புன்னகை வந்தது. ’நாம் விரும்பும் ஒருவருக்கு நாம் அளிக்கும் ஆகச்சிறந்த பரிசே அவர் விரும்பும் பாவனைதான்’ [அனல்காற்று] - நன்றி: ஜெமோ -  


இரண்டு நாட்களாகவே சோகமும் அது தந்த சோம்பலுமாகவே இருக்கிறது. இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன; ஷைலஜா பிறந்தகம் செல்லப்போகிறாள் பிரசவத்திற்கு. போகப்போறியா, என கண்களில் சோகம் தேக்கி மௌனமாய் நான் கேட்கவும், அதேமௌனத்துடன் தலையசைத்து ஆமாம் என்றுவிட்டு, போகட்டுமா என மேலும் சோகம் தேக்கி அவள் கேட்பதுமாய் பொழுதுகள் நகர்கின்றன.


பட்டீஸ்வரர், பேரூர்

கோவை பயணத்தின் முக்கிய அம்சம் பட்டீஸ்வரர் கோவில் விஜயம்.  நான்கு வருடங்களுக்கு முன் ஒருமுறை இங்கு வந்திருக்கிறேன். சென்ற நவம்பரில் கும்பாபிஷேகம் நடைபெற்று இப்போது வண்ணமயமாக இருக்கிறது கோயில். மிகவும் பிரபலமான மற்றும் பழமையான கோயில் என்றாலும் இங்கு ஒரேயொரு ஆறுதல் போலி ஜனசந்தடி ஏதுமின்றி நிஜ ஆர்வத்துடன் வரும் பக்தர்கள். எனவே பெரும்பாலும் நீங்கள் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் இறைவனை தரிசிக்கலாம்.



ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில் இது என்பது மிகவும் ஆச்சர்யம் தரும் தகவல். சேர நாட்டில் அமைந்த கோயில் என்றாலும் மூலஸ்தானத்தை நிர்மாணித்தது சோழ மன்னன் என்பது மற்றொரு ஆச்சர்யத் தகவல். சோழர்களின் ஆன்மீக சேவை பற்றி என் சொல்ல? 

"If you do dharshan here you will not have re-birth. Thats the speciality of this temple" (இங்கு தரிசனம் செய்தால் மறுபிறப்பு உங்களுக்கு இல்லை என்பது இக்கோவிலின் சிறப்பு) என ஒரு நம்மூர்க்காரர் தன் வெளிநாட்டு விருந்தினர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  

அகில் வரவிற்குப் பின் கோயில் குளப் பயணங்கள் சற்றே குறைந்திருந்தன. இப்போது அவன் சற்றே வளர்ந்திருப்பதால் இவ்வாறு பயணப்பட ஏதுவாயிருக்கிறது. வீட்டின் நான்குக்கு நான்கு அறைகளில் அடைந்து கிடந்ததால் கோயில்களின் நெடுநீண்ட மண்டபங்கள் அவனுக்கு சில நேரங்களில் மிகவும் பிடித்தமான விளையாட்டு மைதானங்கள். சில நேரங்களில் வேற்று மனிதர்கள் என யாரையேனும் கண்டு கொண்டு அழத் துவங்குகிறான். நாம் தூக்கிக்கொள்ள நேரம் வந்துவிட்டது எனப் புரிந்து கொள்ளவேண்டும். ஆரத்தி நேரங்களில் கோயில்களில் ஆர்வமாக தரிசனம் செய்கிறான். மற்றபடி சுற்றிமுற்றிலும் உயர்ந்த மண்டபங்களையும், ஜனசந்தடிகளையும் ஆச்சர்யப் பார்வை பார்க்கிறான். பிரசாதம் வாங்கினால் சர்க்கரைப் பொங்கல் அவனுக்குப் பிடிப்பதில்லை. புளியோதரையா? "தா தா " என்கிறான். 

உபயோகம் கொள்(ளை)

மேக் யூஸ் ஆஃப் <http:makeuseof.com> தளம் பற்றி நான் முன்னமே எழுதியிருக்கிறேன். டெக்னோ ஆர்வலர்களுக்கு உகந்த சிறந்த தளம். இங்கே கிட்டத்தட்ட என்ன கணினித் தொழில்நுட்பத் தகவலை நீங்கள் தேடினாலும் கிடைத்துவிடுகிறது.

சமீபத்தில் இவர்கள் வெளியிட்டிருந்த விர்சுவல் மியூசியம் பற்றின தொகுப்பு அசர வைத்தது.

பிடித்த கவிதை:

தெருப்பாடகன்.
________________ 
ஒற்றி ஒற்றி எடுத்தும்
சிவப்பாய் கசிந்தது காயம்
சுற்றி நின்ற கூட்டத்தின்
நிழலால்
காயம் சரியாய்
தென்படவில்லை
சற்றே உற்று
தெளிவாய்ப் பார்த்ததில்
சின்னக் குழிவு
பிடரியின் நடுவில்
விட்டுவிட்டு வரும்
சிவப்புக்கு நடுவே
தட்டுத் தட்டாய் துருத்திய
எலும்பு.
ரத்தச் சகதியில் சுற்றி
நின்றவர்
கானணி செய்த ரங்கோலி. 
போக்குவரத்துக்
கிடைஞ்சலில்லாமல்
ரோட்டின் ஓரம்
நகர்த்தினோம்
அவனை.
பேண்டுப் பையில்
பர்சும் இல்லை
யார் எனக் கேட்டால்
பதிலும் இலை.
இரண்டு கட்டையில்
காந்தாரத்தில் ஸ்ருதி
பிசகாமல்
கேட்டவைக்கெல்லாம்
ஸ்வரமாய் பிடித்தான். 
'நிறைய ரத்தம்
பிழைப்பது கஷ்டம்' 
வேடிக்கை பார்க்கும்
பெரியவர்
சொன்னார்.
அது கேட்டதுபோல்
அவன் பாடிய ஸ்வரத்தை
மாற்றிப் பாடினான்.
கீழ் ஸஜ்ஜமத்தில்
'கா' வை நிறுத்தி
'சா' வென்றிசைத்தான். 
அடுத்து கேள்விகள்
அனைத்திற்கும் அவன்
'சா' 'கா' என்றான்.
ஸ்ருதிப் பிழையின்றி
'பாட்டுக் கலைஞன்'
கட்டத்தில்
ஒருவர் புதிர் விடுத்தார்.
அதுவும் கேட்டது போல் அவன்
இசைக்கும் ஸ்வரத்தை
உடனே இழந்தான்.
வெற்றுச் சொல்லாய் 'சா' எனச் 
சொன்னான்.
செத்தான் என்பதின் பகுதி
'சா' வேதான்.
இவன் தமிழன்.
என்றார் மனமகிழ்ந்த ஓர்
தமிழாசிரியர். 
பக்கத்தூரில் மருத்துவ
வசதி.
பாதி வழியிலே உயிர்
பிரிந்ததினால்
காய்கறி லாரியில்
ஊர்வலம் போனான். 
சுற்றி நின்றதால்
சுற்றமா என்ன?
அவரவர் வீட்டுக்கு
புறப்பட்டு போனோம். 
என்றோ வானொலி கீதம்
இசைக்கையில் அல்லது
பச்சைக் காய்கறி
விற்கும் சந்தையில் 'சா' 'கா'
என்றவன் நினைவு கிளம்பும். 
ஜுரம் விடும் வேளையில்
வெந்நீர் குளியலில்
படுக்கைவிட்டு
மீண்ட களிப்பில் 'சா' 'கா'
என்று
நானும் பாடி. அவன்
காந்தாரத்தைக்
கொப்பளித்துமிழ்வேன். 
இடித்தவன் தவிர
மற்றவர் யார்க்கும்
மனதளவிலே பாதிப்பில்லை
குற்ற உணர்வும்
மற்ற வியாதி போல்
அவ்வளவாகத் தொற்றுவதில்லை. 

- கமல்ஹாசன்

(நன்றி:  ஆனந்த விகடன்)


எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் தம்பி



இங்கே சீரியஸா ஏதும் சொல்றாங்களா? இல்லை இவங்களும் சேர்ந்து விஜய்'ய காமடி பண்றாங்களா?




Dec 24, 2010

வெள்ளிக் கதம்பம்


டிசம்பர் சங்கீத சீசனை முன்னிட்டு...

சங்கீத சீசனுக்கு ஓரிரு கச்சேரிகளுக்கு ரெவியு எழுத நினைத்தேன். இன்னும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். சரி இருக்கட்டும், சீசனுக்குத் தகுந்தாற்போல் ஒரு பழைய ஜோக்கை சொல்கிறேன்.

பாகவதரின் சிஷ்யகோடி: நம்ம பாகவதர் பாடினார்ன்னா அது பாட்டு. மனுஷர் ஒரு சமயம் புன்னாகவராளி ராகம் பாடினார், மேடையை சுத்தி சர்ப்பங்கள் சாரிசாரியா படமெடுத்து ஆடத் தொடங்கிடுத்து...

கேட்பவர்: ஓ சபாஷ்? 

சிஷ்யகோடி: இன்னொரு சமயம் அமிர்தவர்ஷினி  பாடினார். மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுத்து.

கேட்பவர்: ஓ பலே! அப்போ போன வார கச்சேரில பாகவதரைப் பார்த்து கல்வீச்சு மழை சாரி சாரியா நடந்ததே  அப்போ என்ன ராகம் பாடினார் உம்ம பாகவதர்?

சிஷ்யகோடி: %*&*(&))*)(*)*)(*%


ஆண்ட்ராய்ட் போன்களில் தமிழ்:

புதிய ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளில் உள்ள முக்கியப் பிரச்னை அவற்றின் பிரவுசர்கள் யுனிகோட் எழுத்துருக்களை ஆதரிப்பதில்லை. எனவே தமிழ் எழுத்துக்கள் வெறும் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன.

இந்தப் பிரச்னைக்கு உதவிக்கு வருகிறது ஓபெரா மினி பிரவுசர். 

முதலில்: ஓபெரா மினி உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் கீழ்கண்டவற்றை செய்து உங்கள் செட்டிங்'குகளை மாற்றுங்கள்.

1)  ஓபெரா மினி அட்ரஸ் பாரில் config: என டைப் செய்து "GO" பட்டனை ஹிட் செய்யுங்கள்.

2) கீழே ஸ்க்ரோல் டவுன் செய்து 'Use bitmap fonts for complex scripts' என்பதை தேடிப்பிடித்து "Yes" செலக்ட் செய்யுங்கள்.

3) Save செய்யுங்கள்.

மெல்லத்தமிழ் இனி உங்கள் ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் வாழும்.

ரசித்த கவிதை:


நிச்சலன சிதிலம்


நிச்சலன சிதிலத்தில் நகர்கிறேன்
பேரண்டம் பிளக்கும் ஞாபக வேர்கள்
எஃகின் எதிர்த்தண்மைக்குள் உருண்ட
நீயும் நானும் நாமென நின்ற நிலை
காற்றில் உராயும் ஒய்யாரமும் நீயென
ஊடாடும் கோட்டோவியம்
இதயநரம்புகள் இறுகிப் பிடிக்க
நொறுங்கி அகலும் பாறைத்துகள்
இயங்கும் தேகசுக நீட்சியாய்
நாளை வரும் மொட்டு
பூவின் பொக்கையிலோ
அதரத்தின் ஓரத்திலோ
சுட்டுப்போகும் ஈரம்.

 (இக்கவிதையின் மற்றொரு பரிமாணத்தை வாசிக்க ==> தமிழ் பேப்பர்)


எவன்டி உன்ன பெத்தான்:
இப்படி ஒரு பாடல் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் சிம்பு நடிக்க உருவாகிக் கொண்டிருக்கும் "வானம்" திரைப்படத்தில். அந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க காதுகள் ஆயிரம் வேண்டும். யப்பா யப்பா யப்பா... யுவன் ஷங்கர் ராஜா சார்.... அப்புறம் அந்தப் பாட்டை எழுதின ஏதோ ஒரு சார்.... பெறகு அதைப் பாடித் தொலைத்த சிம்பு சார்.... உங்களுக்கெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் காலத்துக்கும் கடமைப் பட்டிருக்கு.

"ஊரு விட்டு ஊரு வந்து" போன்ற டப்பாங்குத்து ரகப் பாடல்களிலும் கூட "ஷண்முகப்ரியா" என்னும் அற்புத ராகத்தைக் கலந்து அற்புதங்கள் தந்த அந்தப் பண்ணையபுரத்துப் பட்டிக்காட்டானின் மகனா இது போன்ற ஒரு பாடலுக்கு இசை அமைத்தான் என நினைத்தால் "நிஜமாவே வலிக்குது" சார்!

அந்தப் பாடல் உருவான விதத்தை இங்கே சாம்பிளில் பாருங்கள். இசை ஞானம், சுருதி ஞானம் கொஞ்சமேனும் உள்ளவர்கள் மனதைத் திடப் படுத்திக் கொண்டு இந்தப் படுத்தல்களைக் கேட்கவும்.





மடிப்பாக்கம் சபரி சாலை:


மடிப்பாக்க மாடுகளும், குப்பைகளும், குண்டும் குழியுமான தெருக்களும் பெரும்பாலும் எல்லோரும் அறிந்த விஷயம். கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு விஷயத்தில் ஜனநாயக நாடு என நம்மை நாமே மார்தட்டிக் கொள்ள இவையெல்லாம் அடிப்படை உதாரணங்கள். எனினும் சில முக்கியச் சாலைகளும் கூட பிரயாணம் செய்யத்தகா வண்ணம் இருக்கையில் அடக்கமாட்டாமல் கோபம் வருகிறது.

சபரி சாலை என்னும் இந்தப் புகழ் பெற்ற சாலை மடிப்பாக்கம் வாழ் மக்களை கீழ்கட்டளை, நங்கநல்லூர், மவுன்ட், வேளச்சேரி, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர்  என அனைத்து புறங்களிலும் இணைத்து வைக்கிறது. 

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சாலை தொடர் மழைகளில் சிதிலமடைந்து போக்குவரத்து இல்லாத சமயங்களில் கூட அந்த இரண்டு கிலோ மீட்டரைக் கடக்க பத்து நிமிடங்கள் வரை செலவு பிடிக்க வைக்கிறது. போக்குவரத்து நெரிசல் நேரங்களில் சொல்லவே வேண்டாம்.

சாலைகள் அமைக்கும்போதே சரிவர அமைக்காத காண்ட்ராக்டர்களுக்கு கடுமையான தண்டனைகள் அமல்படுத்தினாலே ஒழிய இது போன்ற பிரச்னைகள் தீராது. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் சட்டம் அமைப்பவர்களும், காண்ட்ராக்ட் எடுப்பவர்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் என்பதே.

வாழ்க ஜனநாயகம்!




Related Posts Plugin for WordPress, Blogger...