Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

May 29, 2012

பன்னிரண்டு ஹைக்கூ கவிதைகள்


ஒரு கவிதைக்கு பதினெட்டு வினாடி வீதம், மொத்தம் பன்னிரண்டு கவிதைகளை மூன்றே முக்கால் நிமிடங்களில் எழுதிவிட்டேன்.

இது ஒரு புதிய உலக சாதனையாம்! எதற்கும் படித்து வையுங்கள். படித்தவர்கள் கணக்கில் உங்களுக்கும் கின்னஸ்காரர்கள் கினியா நாட்டிற்கு அழைப்பு தரக்கூடும்.


நன்றி: யாரோ ஒரு இணையப் புண்ணியவான்


சுப்பம்மா சுருக்குப்பையில்
மிளகாய்ப் பொடி
வைத்திருக்கிறாள்


பக்கத்து வீட்டிற்கு
நகிஷிமோ
வந்திருக்கிறான்


டிஷ் ஆண்டனா
மொட்டை மாடியில்
இருக்கிறது


வெண்ணிலா
வேறுவழியின்றி
காய்கிறது


நள்ளிரவில் யாரோ
காகிதம் கிழிக்கும்
சத்தம் கேட்கிறது


நீட்சேவை அறிந்தவன்
நித்திரையில்
இருக்கிறான்


வேகமெடுத்து வந்த
வாகனம் வழியிலே
நின்றது


ரோட்டோரக் கடையில்
நாயர் ஒருத்தர்
இளநீர் விற்கிறார்


என்னையே பார்க்கிறது
நான் வெட்டிச் சாய்த்த
மரம்


சில்லரையை எண்ணித்
தந்து சிரித்தும் வைக்கிறான்
சேட்டு


ரோஜா என்பது
நிறமல்ல, மலர்
என்கிறான் ரோஜர்


அமர்ந்தும் அமராமல்
அமர்ந்திருக்கிறது
அன்னாசிப் பழமொன்று

Nov 24, 2011

இந்தா பிடி இன்னும் அறுபது - முன்னுரை



வரவிருக்கும் புத்தகத் திருவிழாவில் வரவிருக்கும் பேயோனின் 108 புத்தகங்களில் வரவிருக்கும் இந்தா பிடி இன்னும் ஐம்பது கவிதைத் தொகுப்பில் வரவிருக்கும் கவிதைகள் எப்படியிருக்கும் என்று யோசித்து யோசித்து என் வீட்டுச்சுவர்க் காரைகள் பேர்ந்ததுதான் மிச்சம்.

இதென்ன போச்சு! நாமும் இந்தத் தலைப்பைக் கொஞ்சம் வளைத்து அதே புத்தகவிழாவில் ஒரு புத்தகம் ரிலீஸிட்டால் போச்சு என்று ராத்திரி முழுக்கக் கண்விழிக்காமல் எழுதிய கவிதைகளின் ஊர்வலம் நம் தளத்தில் இனி வாரம் ஆறாக வெளிவரவிருக்கின்றன.

என் முந்தைய கவிதைகளை வாசிக்காதவர்கள் இந்தத் தளத்தின் ஆர்க்கைவில் எப்படியேனும் தேடிக் கண்டுபிடித்து அவற்றில் ஒன்றிரண்டை வாசித்து விட்டு மேலே தொடர்ந்தால் எங்கெங்கே அடிபட்டு அவஸ்தைப்பட நேரிடும் என்பதறிந்து கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் படிக்கும் பாக்கியம் பெறலாம்.

மேலும் இவையெல்லாம் உயர் ஹைக்கூ வகையைச் சேர்ந்தவை என்பதால் மூன்றாம் வரியில் சரேலென்ற ஒரு மாபெரும் திருப்பம் இருக்கும்.

ஒரு உதாரணம் இங்கே: 
அடிப்பாள் அணைப்பாள்
அவள் தான்
அம்மா
இங்கே இரண்டாம் வரியின் மத்தியில் ”அவள்” என்னும் வார்த்தையில் நீங்கள் பயணம் செய்கையில் நிறுத்தி நிதானமாகப் பயணத்தைத் தொடர்தல் நல்லது. அப்போதுதான் மூன்றாம் வரியின் சரேல் திருப்பமான “அம்மா” என்னும் ட்விஸ்ட் உங்களை விபத்திலிருந்து காக்கும்.

சரி! ஆரம் பிக்கலாமா?




Related Posts Plugin for WordPress, Blogger...