Showing posts with label சரவணா ஸ்டோர்ஸ் புரசை. Show all posts
Showing posts with label சரவணா ஸ்டோர்ஸ் புரசை. Show all posts

Sep 10, 2010

புரசையில் சரவணா - தீதும் நன்றும்

சரவணா ஸ்டோரின் புரசை வருகை பற்றி "சூப்பர் சூப்பாராக" நம்ம சூர்யா விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.

சரவணாவின் தொழில் விரிவாக்கம் அவர்களுக்கு நன்மை. வடசென்னை மக்களை தி.நகர் வரை அலைய விடாமல் கொஞ்சம் அருகிலேயே கொள்முதல்களுக்கு அலைய வைப்பது வடசென்னைக்கு நன்மை. தி.நகரின் வழக்கமான திருவிழாக் கூட்டநெரிசலில் கொஞ்சம் குறையவிருப்பது தி.நகருக்கு நன்மை.

புரசை ஜனத்திரள் மீது மேலும் வலுக்கட்டாயத் திணிப்பு நேர்வது முதல் பிரச்னை. போக்குவரத்து போலீசார் பாவம்; போக்குவரத்துச் சிக்கல்கள் புரசைக்கு அடுத்த பிரச்னை. "அங்காடித் தெரு" பார்த்துப் பதறிய உள்ளங்களுக்கு அடுத்த பிரச்னை என்னவெனப் புரியும். மேலும் ஒரு அங்காடி, மேலும் பலப்பல ஜோதிகளும் கனிகளும்.

ஆனால் இங்கே முக்கியப் பிரச்னை என சிலர் பார்ப்பது "மதார்ஷா, ரஞ்சனாஸ், கிருஷ்ணா" என புரசைவாக்கம், டவுட்டன் பகுதிகளில் காலம்காலமாக கோலோச்சிவரும் ஜவுளி சாம்ராஜ்ய பெருந்தலைகளின் வணிகம் பற்றி. இவர்களின் வணிகத்தில் வீழ்ச்சி ஏற்படும் என்பது சிலப்பலரின் ஆரூடம்.

அந்த ஆரூடங்கள் எத்தனை தூரம் உண்மையாக வாய்ப்புள்ளது?

என் பார்வையில் ஒரேயொரு சதவிகிதம் கூட இல்லை. உண்மையில் பார்த்தால் புரசைவாக்கத்தில் இந்த பழைய பெருந்தலைகள் தவிர்த்து சின்னச் சின்ன வணிகர்கள் கூட இனி செழித்து வளர அமோக வாய்ப்பு உள்ளது.

எப்படி என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், ஒரு சின்ன ஒப்பீட்டிற்கு வரும்படி உங்களை அழைக்கிறேன்.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் வருகை (பஜாஜ் அலையன்ஸ், ஐ.என்.ஜி.வைஸ்யா, ஐ.சி.ஐ.சி.ஐ. போன்றோர்) மற்றும் அவர்கள் தந்த கவர்ச்சிகர காப்பீட்டுத் திட்டங்கள் எந்த விதத்தில் எல்.ஐ.சி. செய்து வந்த வணிகத்தை பாதித்தது? 

எந்த விதத்திலும் இல்லை என அடித்துச் சொல்கிறார் எல்.ஐ.சி.யில் பழம் தின்றுக் கொட்டை போட்ட என் தோழர் ஒருவர். உண்மையைச் சொல்லணும்னா மத்த தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் விளம்பரப் பலன்கள் பல நேரங்களில் எங்களை வந்தடைகின்றன என்கிறார் அவர். காப்பீட்டின் தேவையை அவர்கள் எங்களுக்கும் சேர்த்து மக்களுக்கு உணர்த்துகிறார்கள். காப்பீடு என வரும்போது மக்கள் தன்னாலே எங்களைத் தேடி வருகிறார்கள் என்பது அவர் வாதம்.

அதே போலத்தான்! நான் ரஞ்சனாஸ்'ல மட்டும்தான் ரவிக்கைத் துணி எடுப்பேன் என்று இருப்பவர்களை நீங்கள் கையைப் பிடித்து இழுத்தாலும் காரியமாகாது. அட, சரவணாவா? நான் இது வரைக்கும் அங்கே என் காலை வெச்சதே இல்லையப்பா, வைக்கவும் மாட்டேன் என்பவர்களை சரவணா ஸ்டோர்ஸ் கவரப்போவதும் இல்லை.

உண்மையில் தி.நகர் சென்று கொண்டிருந்த வடசென்னை மக்களை சரவணா ஸ்டோர்ஸ் புரசைக்கு வரவழைத்து அங்கிருக்கும் மற்ற வணிகர்களின் வணிகங்களையும் செழிக்கச் செய்யப் போகிறது.

வாழ்க சரவணா ஸ்டோர்ஸ்! வளர்க வடசென்னை!
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...