Showing posts with label மகாநதி. Show all posts
Showing posts with label மகாநதி. Show all posts

Sep 15, 2017

வீழ்வேன் என்று நினைத்தாயோ?




இணையதளங்களில் உங்களுக்கு என்று ஒரு கணக்குத் துவங்கப் போகிறீர்கள் என்றால் உங்கள் பெயருக்கு அடுத்ததாக அங்கே உங்களைப் பற்றிய சுயகுறிப்பு (பயோடேட்டா) ஒன்றை வரையச் சொல்கிறார்கள் எல்லா தளத்தினரும். இந்த சுயகுறிப்புகளை எல்லாம் தேடிப்பிடித்து வாசிப்பது என்பது என் பொழுது போக்குகளுள் ஒன்று, குறிப்பாக டிவிட்டரில்.  குறிப்பாக நம் தமிழ் மக்கள்தம் குறிப்புகள் வாசித்தல் அலாதியிலும் அலாதி அனுபவம்.

"| இளையராஜா ரசிகன் | ரயில் பயணம் | ஜெயகாந்தன் | நா.முத்துக்குமார் | கலைஞர் | பரோட்டா சால்னா |" என்று சிலர் எளிமையாக முடித்துக் கொள்வர்.

பொதுவாக பத்து பேர்களில் ஒருவரேனும் "தன்மானத் தமிழன்" என்று இருப்பார். தெலுகு நமக்கு வாசிக்க வாராது என்பதால் "மானங்கெட்ட தெலுங்கன்" என்று எம் கொல்ட்டி மக்கள் யாரும் தெலுகு ட்வீட்டர்லு உலகில் எழுதிக் கொள்கிறார்களா எனத் தெரிவதில்லை.

"தாறுமாறான தல ரசிகன்", "கொலைவெறி பிடித்த தளபதி ரசிகன்" இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தம் பயோடேட்டாவாகக் கொண்டோர் நிறைய தென்படுவர்.

"விவசாயியின் மகன், VB script எழுதுகிறேன்", "காவிரிப்படுகையில் பிறந்தவன்; காசுக்கு தண்ணீர் விற்கும் உலகில் உழல்கிறேன்" என்ற பொருள் தரும் குறிப்புகள் அங்கங்கே இடரும்.

"வெளிய சிரிக்கிறேன்; உள்ள அழுகறேன்", என்போரை அடிக்கடிப் பார்க்கலாம். < எதுக்கு அழுகணும்? ஃபிரிட்ஜ்ல போயி உக்காரலாமே? >

"ரொம்ப கெட்டவன்", "ரொம்ப ரொம்ப கெட்டவன்", "மோசமானவன்"  "கேவலமானவன்",  என்று பயமுறுத்துவோரும் உண்டு.

இந்த மேற்படி இனத்தவருக்கு டஃப் கொடுக்கும் பெண்ணினம் உண்டு.  "ராட்சசி", "அடங்காதவள்", "திமிர் பிடித்தவள்", "கேடு கெட்டவள்" மற்றும் இன்னபிற.

அச்சுப் பிச்சுப் பெண்கள் என்றோர் இனம் உண்டு.  "அம்மா அப்பாவின் செல்லக்குட்டி", "அப்பாவின் தேவதை", "டெய்ரி மில்க் சாப்டுட்டே இருப்பேன்", "பிங்க் கலர்ன்னா ரொம்ப புடிக்கும்", என்றெல்லாம் போகும்.

இதையெல்லாம் தாண்டினால் தமிழ்ச் சூழலில் தடுக்கி விழுந்தால் நமக்குத் பார்க்கக் கிடைப்பது "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ", என்ற வசனம். இது பாரதியார் எழுதியது என்று நான் சொல்லித் தெரியும் அவசியம் இங்கே யாருக்கும் இல்லை என்று நம்புகிறேன்.

அதென்னவோ நம்மவர்கள் எல்லோருக்கும் அந்த வசனத்தை பாரதி தமக்காகவே எழுதியதாகக் காதில் ஒலிக்கிறது போலும். 

இந்த பாரதியின் வசனத்தை நான் முதன்முதலில் கேட்டது "மகாநதி" திரைப்படத்தில். படத்தின் இடையில் வரும் ஒரு பாடலுக்கு முன்னதாகவும், படம் முடியும் வேளையிலும் கமல்ஹாசன் இந்த வசனத்தை வாசிப்பார். அதற்கு முன் தமிழ் கூறும் நல்லுலகில் பொதுவெளியில் இந்த வசனத்தை நான் எழுத்திலோ ஒலியிலோ பார்த்து / கேட்டதில்லை.

கூகிள் ஆண்டவரிடம் இந்தப் பதத்தைத் தந்து கொஞ்சம் என்னான்னு பாரு நைனா என்றால் இப்படி இமேஜ் இமேஜாகக் கொட்டித் தீர்க்கிறார்.



"நீங்க கொஞ்சம் ஷட்டப் பண்ணுங்க"களுக்கு இடையே "வீழ்வேன் என்று நினைத்தாயோ"க்களுக்கும் டிசர்ட்டுகள் வருவது சந்தோசம் தருகிறதுதான் என்றாலும், நம் மக்களுக்கு இந்த வார்த்தைகளின் அர்த்தம் நிஜமாகவே விளங்கித்தான் இதையெல்லாம் பயோவில் எழுதுவதையும், சட்டையில் பொறித்துக் கொள்வதையும் செய்கிறார்களா என்று எனக்குப் புரியவில்லை.



என் புரிதலில், "உன்னா மேரி யா.மொய்தீன் கடைல மட்டன் பிரியாணி துன்னுட்டு டயபடீஸ் வந்து, அந்து நொந்து வெந்து நட்டுனு போற டம்மி பீஸ் இல்லடா நான். எனக்கு சாவு இல்ல, இந்த ஒலகம் அழிய வரியும் என் கவிதை வாழும்டா என் சிப்ஸு", என்கிறார் பாரதி. இல்லையா?

ஆனால் நம்ம மக்கள் என்னவோ, "ஹாஃப் உள்ள உட்டாலும் ஸ்டெடியா ஸ்டெய்ட்டா நிப்பன் கேட்டியா?", என்ற ரேஞ்சுக்கு இதைப் புரிந்து வைத்திருப்பதாக எனக்குப்படுகிறது.

...இப்பாடலை ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும்என்னுள் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதன்எழுகிறான்உடனே இவ்வுளகில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டக்க வேண்டும் என்றெண்ணம் பீறிட்டெழும்.....
இப்படியும் ஒருத்தர் இந்தப் பாடல் குறித்துச் சொல்கிறார். 

இது ஒரு பக்கம் இருக்க.... ...அலுவலகத்தில் ஹைதராபாத்தில் இருந்து தோழர் ஒருவர் சென்னைக்கு வந்திருக்கிறார். நம்ம பண்ருட்டிக்காரர்தான். ஹைதையில் எட்டு வருடம் ஜாகையை நிறைவு செய்துவிட்டு வந்திருக்கிறார். அதிதீவிர அஜீத் ரசிகர். விவேகம் படம் வெளியான நாள்முதல் தினப்படி பட வசூல் குறித்த செய்தியை அவர் வாசிக்க அதை நாங்கள் கேட்க எனத்தான் எங்கள் காலைச் சிற்றுண்டி துவங்கும்.

நேற்று ட்வீட்டர், வாட்சாப் என்று என்னத்தையோ நான் மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் இடறிய யாரோ ஒருத்தரின் பயோடேட்டா, "நான் வீழ்வேன் என்று நினைப்பாயோ" என்று சொல்ல நம்ம ஹைதை நண்பரிடம், "தம்பி இந்த வீழ்வேன் என்று நினைத்தாயோ" வசனத்தை யார் ஒரிஜினலாச் சொன்னதுன்னு தெரியுமா என்று கேட்டேன்.

"அஜீத் தான் ஜி. பில்லா-டூ  படத்துல சொல்லுவாரே", என்றார்.

Nov 7, 2010

அவன் ஒரு மகாநதி...

சினிமாவை சினிமாவாக விலகியிருந்து பாராமல் அதில் இருந்த சூட்சுமங்களை, உருவாக்கத்தின் பின்னணியில் இருக்கும் பல்துறை உழைப்புகளைப் பற்றி நான் புரிந்து கொள்ளத் தொடங்கியிருந்த என் பதினெட்டாம் வயது...

காதல் இளவரசனாகவும் முத்தக்கலை வித்தகனாகவும் கமலை எனக்குத் தெரியும். நாயகன், தேவர் மகன் என இரண்டு கனமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகனாகவும், மூன்றாம்பிறை, புஷ்பக் போன்ற படங்களில் வித்தியாச பாத்திரத்தில் நடித்த நடிகனாகவும் கமல் மீது எனக்கு கொஞ்சம் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருந்தது. மைக்கேல் மதன காமராஜனை நான் அப்போது பார்த்ததாய் நினைவில்லை...

கொளத்தூர் குமரனில் மகாநதி பார்க்கச் சென்றேன். என்னை அப்படியே உலுக்கிப் போட்டது அந்தப் படம்.  படம் தந்த பாதிப்பில் இருந்து நான் மீண்டு வர எனக்கு பத்து தினங்கள் பிடித்தது. இப்படிக் கூட படம் பண்ண முடியுமா என நான் ஆச்சர்ய வியப்பின் உச்சியில் இருந்தேன்.

தென் தமிழகத்தில் சீவல் பாக்டரி நடத்தி மகன், மகளுடன் சந்தோஷ வாழ்க்கை வாழும் விடோயர் கிருஷ்ணாவாக கமல். வில்லன் ஹனீபா ஆசை காட்டி இழுத்த இழுப்பிற்கு சென்னைப் பட்டினம் வந்து அவர் வாழ்க்கை சீரழியும் கதைதான் மகாநதி. 


கட்டுமரக்காரன், பெரியமருது என சி' சென்டரை நோக்கிக் குறிவைத்து வந்து கொண்டிருந்த படங்களுக்கும்; காதலன், மே மாதம் போன்ற  பான்டசி படங்களுக்கும் இடையே மகாநதியை உள் நுழைத்த கமலும் சந்தானபாரதியும் மிகவும் தைர்யசாலிகள்.  


எந்தப் படமும் ஒரு முறை பார்க்கவே யோசிக்கும் நான் மகாநதியை அதன் பாதிப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ளக் கூடாது என்ற பிடிவாதத்தில் மூன்று முறை பார்த்தேன்.


நான் அதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி, பார்த்த படம் எதுவும் என்னை முழுமையாக அப்படியே உள் விழுங்கியதில்லை.ஆனால் மகாநதி என்னை முழுமையாக ஆக்கிரமித்தது. வில்லனாக நடித்த வி.எம்.சி.ஹனீபா'வை திரைக்குள் சென்று உதைக்கத் தோன்றியது. துலுக்கானத்தை கமல் புரட்டியெடுத்த காட்சியில் ஓ'வென ஆர்ப்பரித்தேன் நான். 

தான் பெரிய மனுஷியான செய்தி சொல்லி சிறையிலிருக்கும் கமலிடம் "மகாநதி" ஷோபனா காலில் விழும் காட்சியில் கமலுடன் சேர்ந்து நானும் அழுகிறேன்.

மகாநதியைக் கடந்தபின் சினிமா குறித்த என் பார்வை முற்றிலும் மாறிப்போனது.

அதன் பின் நடிப்பு, நவரசம், நகைச்சுவை என கமல் தந்த விதவித விருந்துகள்  எதையும் நான் தவற விடவில்லை. நம்மவர், குருதிப்புனல், ஹே ராம், அவ்வை ஷண்முகி, அன்பே சிவம் என ஒவ்வொன்றாய் நான் என் வியப்புகளையும் சிலாகிப்புகளையும் எழுதி முடிக்க எனக்கு ஒரு புத்தகம் போதாது.

தமிழ் எழுத்துலகில் சுஜாதாவின் இடம் எப்படி யாராலும் ஈடு செய்து நிரப்ப இயலாத ஒன்றோ அதே போல் தமிழ் சினிமா உலகில் கமல் கொண்ட இடத்தை அவருக்கு முன்னரும் சரி பின்னரும் சரி யாரும் கொண்டதுமில்லை. கொள்ளப் போவதுமில்லை.

கமல் ஒரு ராட்சசன். தமிழ் சினிமா ராட்சசன். கமலை அடித்துத் தின்ன கமலால் மாத்திரமே முடியும். தான் கொண்ட பிடிவாதமும், விடா முயற்சியும், மூர்க்கத்தனமும், கர்வமும்தான் தனக்கு அழகு என முழுமையாக உணர்ந்த படைப்பாளன் கமல்.

இன்று ஐம்பத்தி ஆறாம் பிறந்த நாள் காணும் கமல் இன்னமும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு தமிழ்த் திரையியுலகில் இன்னமும் பலப்பல சாதனைகள் படைத்து வாழ வாழ்த்துகிறேன்.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...