Showing posts with label செஞ்சுரியன். Show all posts
Showing posts with label செஞ்சுரியன். Show all posts

Dec 25, 2010

ஒரு செஞ்சுரியனின் நிழலில்....


இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டி நாளை பாக்சிங் டே மேட்ச் என அழைக்கப்பட்டு துவங்குகிறது. அதற்கு முன், முடிந்து போன முதல் போட்டியின் சில அம்சங்களைக் கவனிக்கும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.


சரி....நான் சொல்ல வந்ததை நான் சொல்லத் தொடங்குமுன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு உதரணங்களைப் பாருங்கள்....

உ.ம். 1 :

1999'ஆம் வருடம் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்கத்தில் சங்கமம் திரைப்படம் வெளிவந்தது. வியாபார ரீதியாக படம் வெற்றி பெறாவிடினும் அந்தப்படத்தின் பாடல்கள் ஆண்டுகள் கடந்து இன்றும் பிரபலமானவை. அந்தப் படத்தின் பாடல்கள் எவை என நான்கு பேரிடம் கேட்டால் பதில் என்ன தெரியுமா?

"வராக நதிக்கரையோரம் - அதுதானே அருமையான பாட்டு அந்தப் படத்துலையே. ஷங்கர் மகாதேவன் அறிமுகப் பாட்டு இல்லையா அது? பட்டிதொட்டியெல்லாம் கலக்கி எடுத்துச்சி இல்லை அந்த பாட்டு."

"பிறகு?"

"அப்புறம் ரெண்டு மூணு பாட்டு சுமாரா இருக்கு.ஆனாலும் வராக நதிக்க்காயயோரம்தான் அருமை. தெரியுமில்ல?"

"கவிஞர் வைரமுத்து தேசிய விருது வாங்கின பாட்டு?"

"அது வராக நதிக்கரையோரம்"

"இல்லை! ஸ்ரீநிவாஸ், சுஜாதா பாடின முதல் முறை சொல்லிப்பார்த்தேன், கேட்டதில்லையா நீங்க?"

"அந்தப் படத்துல அப்படி ஒரு பாட்டு இருக்கா என்ன?"

ஒரு தேசிய விருது பெற்ற பாடல் பற்றின விபரத்தை எளிமையாக மறக்கடித்துவிட்டது அல்லது கவனிக்க அனுமதி மறுத்துவிட்டது அந்த "வராக நதிக்கரை".

Overshadowing!

உ.ம். 2:

2008'ஆம் வருடம் மும்பை தீவிரவாதத் தாக்குதல்களின் போது அத்தனை தொலைக்காட்சி சேனல்'களும் லைவ் அண்ட் எக்ஸ்க்ளூசிவ் என்று ஒரு மாத காலத்திற்கு அலறி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க, இடையில் இறந்து போன ஒரு முன்னாள் பிரதமரின் மரணம் ஒரு வரிச் செய்தியாக மட்டுமே மக்களுக்குக் கிடைத்தது. தினசரிகள் போனால் போகிறதென்று இருபதாம் பக்கத்தின் ஈசானி மூலையில் ஒரு பத்தி செய்தி வரைந்தன.

அவர் வி.பி.சிங்

விகடன் போன்ற சில பத்திரிக்கைகள் மாத்திரம் "ஆக்கிரமிப்பது அவமானம் பின்வாங்குவது பெருமை" என அவரின் அமைதிப்படை வாபஸ் நிகழ்வின் பெருமையினை  நினைவுறுத்தி கட்டுரை வரைந்து அவருக்குப் புகழஞ்சலி செலுத்தின.

ஒரு முன்னாள் பிரதமரின் மரணத்தை அத்தனை எளிமையாக மறைத்து வைத்துவிட்டது ஒரு தீவிரவாதத் தாக்குதல் குறித்த செய்தியின் தொடர் ஒளிபரப்புகள்.

வராக நதிக்கரையும் தீவிரவாதத் தாக்குதல் குறித்த நேரிடைச் செய்திகளும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவைதான், யாரும் மறுக்கவில்லை. எனினும் இதர முக்கியப் படைப்புகளை / செய்திகளை அவை விழுங்கும் வண்ணம் இருப்பின்....?

மற்றும் ஒரு Overshadowing!

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம்....

சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் டெஸ்டின் சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்.

இந்திய அணி இரண்டு இன்னிங்க்ஸ்'களிலும் சேர்த்து இந்தப் போட்டியில் இருபது விக்கெட்டுகளை இழந்து 595 ஓட்டங்களை எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா ஆடியது ஒரே இன்னிங்க்ஸ். இழந்தது மொத்தம் நான்கே விக்கெட்டுகள். ஆடியவர்கள் ஐந்தே பேர். ஆடிய ஐவரில் இருவர் அரை சதம், இரண்டு சதம் மற்றும் ஒரு இரட்டை சதம். ஒற்றை இலக்கத்திலோ அல்லது அரை சதத்திற்குக் குறைவாகவோ யாரும் ஆட்டமிழக்கவில்லை.

இத்தனை மோசமான தோல்வியிலும் இந்திய அணியின் சார்பில் மூன்று பேர் அரை சதம் கடந்தனர்.

இங்கே நான் சொன்னதெல்லாம் சாதாரண புள்ளி விவரங்கள். கொஞ்சம் முக்கியமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாமா?

மார்க்கேலும் ஸ்டெயினும் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து தலா ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வெற்றிக்கு வித்திட்ட கனவான்கள்!


டெஸ்ட் கிரிக்கெட்டில் பதினோராயிரத்து அறுநூற்று ஐம்பது ரன்களை இதுவரை எடுத்திருக்கும் காலிஸ் அடித்த முதல் இரட்டை சதம் இது. முதல் இரட்டை சதத்திற்கு முன்னரே இத்தனை ரன்களைக் கடந்த ரன் மெஷின் காலிஸ் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

இரண்டாவது இன்னிங்க்சில் ஓரிருவரின் ஆட்டங்களும், சச்சின் - தோனியின் கூட்டணியில் வந்த நூற்று சொச்ச போராட்ட ரன்களும் கவனிக்கத்தக்கவை எனினும் இந்தியா அப்படியொன்றும் கண்ணியமான ஒரு தோல்வியை சந்திக்கவில்லை. ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் இருபத்தி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா இந்தியாவிற்கு அடித்தது சம்மட்டி அடி.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் பிரயன் லாராவைக் கடந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார் ராகுல் டிராவிட். இவருக்கு முன்னால் ரிக்கி பாண்டிங், அவருக்கு முன்னால் சொல்லத் தேவை இல்லாமல் நம் லிட்டில் மாஸ்டர்.

அது மட்டுமல்ல பன்னிரண்டாயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையையும் பெற்றார் டிராவிட். எழுந்து நின்று கைதட்ட வேண்டாமா நாம்?

இத்தனை புள்ளி விவரங்களையும், முக்கிய நிகழ்வுகளையும், ஓரிரு சாதனைத் தருணங்களையும் நம்மைக் காணவிடாமல் நம் கண்ணை மறைக்கின்ற ஒரே செய்தி அந்த "ஐம்பதாவது சதம்".

சச்சினின் ஐம்பதாவது சதம் ஒரு செய்திதான். சாதாரண செய்தி அல்ல முக்கியச் செய்தி. முக்கியம் மற்றுமல்ல ஒரு மாபெரும், சிறந்த, உலக கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் கொண்டாடத்தக்க ஒரு நிகழ்வு. யாரேனும் மறுக்க இயலுமா?

சர்.பிராட்மேன் அவர்களுக்குப் பின் உலக கிரிக்கெட் அரங்கிற்குக் கிடைத்த மாபெரும் கிரிக்கெட் ஆட்டக்காரன் சச்சின். இதை நாம் சொல்லிக் கொள்ளவில்லை. உலக கிரிக்கெட் ஜாம்பவான்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சொல்லி மகிழ்கிறார்கள்.


எனினும், நான் இங்கே மேலே குறிப்பிட்ட அத்தனைத் தகவல்களையும் சச்சினின் ஐம்பதாவது சதம் என்ற மாபெரும் செய்தியின் நிழலில் மறைத்துவைத்து இரண்டு நாட்கள் அனைத்து ஊடகங்களும் கத்திக் கதறிக் கொண்டிருந்தன.

சச்சினின் சதம் ஒரு மாபெரும் கொண்டாடத்தக்க செய்தி. ஆனால் அது ஒன்று மட்டுமே செய்தியல்ல ஊடகங்களே.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...