Apr 5, 2012

The Vow - விமர்சனம்


நன்றி: தமிழோவியம் 


ருபது வருடங்களுக்கு முன் நியூ மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு ஜோடி சந்தித்த நிஜ சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  

 
the vow poster The Vow
ஒரு விபத்து. கணவனும் மனைவியும் அதில் சிக்குகிறார்கள். கணவனுக்கு லேசான காயம். மனைவி கோமா நிலையை அடைகிறாள். சில வருடங்களுக்கு முந்தைய நினைவு நிலையில் மனைவி கண் விழிக்கிறாள். சமீபத்தைய நினைவுகள் ஏதும் அவளிடம் இல்லை. தன் கணவனை ஒரு முன்பின் தெரியாத மனிதனாகக் காண்கிறாள். இங்கே தொடங்குகிறது கதை!  
 
எடுத்துச் சொல்லப்படும் தகவல்கள், எடுத்துத் தரப்படும் ஆதாரங்களின் உண்மைத்தன்மை இவற்றை அவள் நம்பினாலும் எதிரில் நிற்பவன் "யாரோ" என்னும்போது அவனுடன் எப்படி வாழ்க்கை நடத்த இயலும்? தான் மணமாகாத ஒருத்தி என்று முற்றிலுமாக நம்பிக் கொண்டிருக்கும் ஒருத்தி யாரென்றே தெரியாத ஒருத்தனுடன் எப்படி வசிக்க இயலும்? எனினும் அவன் தரும் ஆதாரங்களின் அடிப்படையில் அவனுடன் தங்க அவள் சம்மதிக்கிறாள். 
 
அவள் பெற்றோர், முன்னாள் காதலன் வாயிலாக எழும் சிக்கல்கள், அவளால் மீட்டெடுக்கவே முடியாத அவளின் முந்தைய வாழ்க்கையின் நினைவுகள், அது தொடர்பான சம்பவங்கள் என நகர்கிறது கதை.
 
இந்துக்களின் "மாங்கல்யம் தந்துனானே"  மந்திரத்தின் அர்த்தத்திற்கு (இந்த நன்னாளில் இந்த மங்கள நாணை உன் கழுத்தில் சூட்டும் நான், உனக்காக இப்படி அப்படி இருப்பேன் என…..) இணையாக திருமணத்திற்கு முன்னதாக கிருத்துவர்கள் சொல்லும் "கல்யாண சத்தியம்" அல்லது "வெட்டிங் ப்ராமிஸ்"தான் "The Vow". தான் எடுத்துக் கொண்ட "Vow"வைக் காப்பாற்ற கதாநாயகன் செய்யும் முயற்சிகளும் இறுதியில் நம் எதிர்பார்ப்பைக் கெடுக்காமல் இருவரும் ஒன்று சேர்வதுவும்தான் கதை.
 
கொஞ்சம் அசந்தாலும் லாஜிக் இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளும் தன்மை கொண்ட ஒரு கதைக்கு நல்ல திரைக்கதை அமைத்ததும், ரொமண்டிக் திரைப்படத்திகுத் தேவையான நச் நச் என்ற அழகான வசனங்கள் தந்ததும் படத்தின் பெரிய ப்ளஸ்.
 
படத்தின் மிகப் பெரிய பலம் ஹீரோ ஹீரோயின் (Channing Tatum / Rachel McAdams) இருவரின் அற்புதமான நடிப்பு. படத்தை ஒட்டுமொத்தமாகத் தூக்கி நிறுத்துவது போட்டி போட்டு நடிக்கும் அவர்கள் இருவரின் நடிப்புதான். 
 
குறிப்பாக Tatum வேலைக்குப் புறப்படும் நேரத்தில் தன்னெதிரே அமர்ந்துள்ள ரேச்சலை அணைக்கவும் இயலாமல், முத்தமிடவும் முடியாமல் ஒரு தடுமாற்றத்துடன் அவர் முதுகில் ஒரு தட்டு தட்டிவிட்டு "பை" எனச் சொல்லிப் புறப்படும் காட்சி, "ஓஹோ".
 
மைனஸ் என்று பார்த்தால் பார்த்துப் பார்த்துப் பழகிய கதையாக கதாநாயகியின் பெற்றோர் இருவரும் கதாநாயகனிடமிருந்து தம் மகளைப் பிரித்துச் செல்ல இறுதிவரை முயல்வது; கதாநாயகிக்கு தன் தந்தையின் மீது வெறுப்பு வரக் கூறப்படும் அரதப் பழசான காரணம் என்பவைகளை சொல்லலாம்.
 
படத்திற்குப் பேரழகு கூட்டுவது படத்தின் முடிவு. சரேல் திருப்பம், இடியாப்ப சிக்கல்கள், அதிலிருந்து மீள்தல், கண்ணீர், நீண்ட வசனங்கள், நீதி, நானூறு மீட்டருக்கு கட்டியணைத்து உருள்தல், நச்சென்று இச்…. இப்படி ஏதும் இல்லாமல் இயல்பாக படத்தை முடிக்கவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தைக் கொண்ட படத்தின் டைரக்டரைப் ( Michael Sucsy ) பாராட்டத்தான் வேண்டும். 
 
நன்றி 1: இப்படி ஒரு படம் ஆடுவதோ ஓடுவதோ தெரியாத என்னை "வாங்க சார்", என்று ரெகமண்டு செய்து பிடிவாதமாக அழைத்துச் சென்ற நண்பன் விஷாலுக்கு.
 
நன்றி 2: படத்தின் நடிக நடிகையர், இயக்குனர் பட்டியல் தந்துதவிய விக்கி 'க்கு
 
 
கொஞ்சமே கொஞ்சம் நெடிய பின் குறிப்பு 1 :
 
இந்தப்படம் பார்ப்பதற்காக முதன்முறையாக எக்ஸ்ப்ரஸ் அவென்யூவிற்குப் போயிருந்தேன் (எஸ்கேப் கொட்டகை). "சென்னை மெட்ரோ" வேலைகளை முன்னிட்டு மவுண்ட் ரோடில் டிராபிக் கண்டமேனிக்கு திருப்பி விடப்பட்டதில் இப்படியப்படி ஸ்பென்சர் டு ராயப்பேட்டை, ராயப்பேட்டை டு ஸ்மித் ரோடு, ஸ்மித் ரோடு டு ஸ்பென்சர், ஸ்பென்சர் டு ஜீபி ரோடு, ஜீபி ரோடு டு ராயப்பேட்டை என்று அரைமணி நேரம் சுற்றி ஒருவழியாக அவென்யூ உள்ளே நுழைந்தேன்.
 
ஐயா சென்னை டிராபிக் தெய்வங்களே! உங்கள் "டேக் டைவர்ஷன்" அறிவிப்புப் பலகைகளை  தயை கூர்ந்து ஆங்கிலத்திலும் வையுங்களேன்! "எக்ஸ்ப்ரஸ் அவென்யூ செல்ல ===> திரும்பவும்" என்னும் பலகையை ஆங்கிலப் படத்திற்குப் போகும் மூடில் இருந்த நானே கஷ்டப்பட்டுத்தான் படித்தேன் என்றால் தமிழ் தெரியாமல் நம்மூரில் உலாத்துபவர்கள் பட்ட அவஸ்தையைச் சொல்லவும் வேண்டுமோ?
 
 
கொஞ்சமே கொஞ்சம் நெடிய பின் குறிப்பு 2 :
 
எக்ஸ்ப்ரஸ் அவென்யூ நுழைந்ததும் "ஒரு மணிநேரத்திற்கு இருசக்கர வாகன நிறுத்தக் கட்டணம் இருபது ரூபாய்" என்றது அறிவிப்புப் பலகை. வெளியே வர மூன்று மணிநேரம் ஆகிவிட்டால் அறுபது ரூபாய் அழவேண்டுமே. 
 
தொண்ணூறாம் வருட ஆரம்பத்தில் பாண்டிச்சேரியில் வளர்ந்த காலகட்டத்தில் பத்து ரூபாய் பையில் இருந்தால் போதும்; நானும், வெங்கடேசனும், முருகனும் ட்ரிப்பிள்ஸ் அடித்துச் சென்று  "சைக்கிள் டோக்கன், மூவர் டிக்கட், மூவருக்கும் பாப்கார்ன் (௦ 0.50௦ + 6.00௦ + 3.00 )," என கரகாட்டக்காரன் வகையறாப் படங்களை அந்த பத்தே ரூபாயில் பார்த்த நினைவு ஏனோ மனதில் ஆடிச் சென்றது.
 
என்னத்த சொல்ல?

Apr 4, 2012

பார்வை - நிமிஷக்கதை


மேடவாக்கம் வந்து வலப்புறம் திரும்பி நின்றது T51 பேருந்து.
“மேடவாக்கம் வந்து பஸ்சு கெழக்கால திரும்பி நிக்கும். அதுக்கு ரெண்டு மூணு ஸ்டாப்பு தாண்டுனா வரும் தம்பி”, ஏதும் புலப்படாமலும் கூட ஜன்னலுக்கு வெளியே கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டு சொன்னார் அந்தப் பெரியவர்.
சென்னை வந்து சேர்ந்த இந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக திசை சொல்லிப் பேசும் ஒருவரைப் பார்க்கிறான் அவன்.
இதற்கு மேல் சோழிங்கநல்லூர் வரை எந்தத் திருப்பமும் இல்லை. அங்கேயும் பேருந்து இடப்பக்கம்தான் திரும்பும். கிழக்கு என்றால்…. அது நமக்கு வங்காள விரிகுடா இருக்கும் திசை. இப்படியே நேரே போய் ஓ.எம்.ஆர். தாண்டி ஈ.சி.ஆர். இணைப்புசாலை கடந்தால் வங்காள விரிகுடா. நாம் இப்போது கடற்கரை நோக்கிய திசையில்தான் இருக்கிறோம். ஆக, இப்போது பேருந்து கிழக்கால் திரும்பி நின்றிருக்கிறது.  எல்லாவற்றையும் யோசித்துக் கணக்குப் போட்டு முடித்த பின் கிழக்குத் திசை புலப்பட்டது.
“நீங்க சொன்ன மேடவாக்கம் பஸ் ஸ்டாப் வந்துடுச்சிங்க, ஆனா எனக்கு தமிழ்நாடு ஆஸ்பத்திரி சரியாத் தெரியாது”, கடந்த ஒரு வருடமாக அந்தத் தடத்தில் பயணம் செய்தும் தமிழ்நாடு ஆஸ்பத்திரியைப் பார்த்ததில்லை அவன்.
‘இப்ப அந்த ஹாஸ்பிடலுக்கு குளோபல் ஹாஸ்பிடல்’னு பேர் சார். இங்கருந்து ரெண்டாவது ஸ்டாப்”, பின்சீட்டுக்காரன் சொன்னான்.
மேலும் ஒரு நிறுத்தம் கடந்ததும் பெரியவர் எழுந்துவிட்டார்.  வீராவேசம் வந்தவர் போல் ஏனோ கை வீசியவண்ணம் தட்டுத் தடுமாறி படிக்கட்டு அருகே சென்று நின்று கொண்டு “தமிழ்நாடு ஆஸ்பத்திரி வந்தா சொல்லுப்பா” யாரையும் பார்க்காமல் ஆனால் உத்தேசமாக எல்லோரையும் பார்த்தவாறு சொன்னார்.
”தோ, வர்ற ஸ்டாப்தான் பெர்சு. கீய வுய்ந்துறாம நில்லு”, முன்பக்கமிருந்து குரல் கேட்டது. அவன் எழுந்தான். ஆபீசுக்கு ஏற்கெனவே நேரமாகிவிட்டது, ஆனது ஆச்சு இன்று ஒரு நல்ல காரியம் செய்ததாக இருக்கட்டும் என, ”பெரியவரே, அவ்ளோ தூரம் உள்ள நடக்கணுமே. நா வேணா உங்களோடா ஆஸ்பத்திரி வரை வரட்டா?”
ப்ரேக் அடித்து நின்றது பேருந்து. “க்ளோபல், தமிழ்நாடு எல்லாம் எறங்கு”, கண்டக்டர் கூவ….
“வேணாம் கண்ணு. தொண எதுர்பாத்து நிக்குற வய்சில்ல எனுக்கு. போறுது தனியாத்தானே போவுணும்”, இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.
image credit – Antigua Daily Photo

Apr 3, 2012

நிமிஷக்கதை - லச்சுமி


இந்தக் கதையை தன் தளத்தில் பதிப்பித்து கௌரவம் தந்த நட்பாஸ் அவர்களுக்கு நன்றி.
”ராகவன், செக் புக் எடுத்துக்கிட்டு ரூமுக்கு வாங்க”
தனக்கானத் தனி அறையில் பெரியதொரு மேஜையின் பின்னால் அமர்ந்திருந்தார் மேனேஜர். வலது இடது புறங்களில் ட்ரேக்களில் ஃபைல்கள் தேங்கிக் கிடந்தன.
”மன்த் எண்ட் வந்துடுச்சி. நெக்ஸ்ட் மன்த் பெட்டி எக்ஸ்பென்சஸுக்கு கேஷ் ட்ரா பண்ணி வெச்சுக்கலாமே”
“பண்ணிடலாம் சார்”
”ஆபீஸ் எக்ஸ்பென்சஸ் ஃபோர்காஸ்ட் போட்டீங்களா?”
“இந்த மாசம் எதும் மாற்றம் இல்லை சார். போன மாசம் போலவே ஒன் பாய்ண்ட் டூ வேணும். நம்ம கிட்ட க்ளோஸ் ஒரு ஃபைவ் தவுசண்ட் இருக்கும். எனிவே, ஸேஃபா ஒன் பாய்ண்ட் டூ ஃபைவ் எடுத்துக்கலாம்”
“ஓகே, செக் எழுதுங்க. சீனியர் நாளைக்கு ஊருக்குப் போறாரு. இன்னைக்கே பாத்து செக்ல ஸைன் வாங்கிடுங்க”
செக் எழுதி மேனேஜர் ஒப்பம் வாங்கிக் கொண்டு, மேனேஜர் பார்த்து முடித்த தனக்கான ஃபைல்களை அவர் மேஜையிலிருந்து அள்ளிக்கொண்டு தன் இருக்கைக்குத் திரும்பினான் ராகவன்.
“க்ரிஷ்ணா, கொஞ்சம் மேல வர்றியா?”
இருபது செகண்ட்களில் க்ரிஷ்ணன் எதிரில் ப்ரசன்னமானான்.
“என்னய்யா? படியேறி வருவியா? இல்ல காத்துல பறந்து வருவியா?”, வழக்கமான பதிலற்ற சிரிப்பு சிரித்தான் க்ரிஷ்ணன்.
“இந்தா செக்கு, சீனியர் கிட்ட ஸைன் வாங்கிக்கோ. ராபர்ட்டை அழைச்சிட்டு பேங்க் போயி, ஒண்ணேகால் லட்சம், ட்ரா பண்ணிட்டு வந்துடு. சீக்கிரம் போயிட்டு வந்துடு, நான் இன்னைக்கு நேரத்துக்குப் போலாம்னு பாக்கறேன்”
அரை மணியில் கேஷ் செஸ்டில் ஒண்ணேகால் லட்சம் தஞ்சம் புகுந்தது.
ஃபோன் அடித்தது.
“சொல்லு பத்து”
“என்னங்க, சின்னவனுக்கு ஏதோ ஸ்கூல்ல ஃபேன்சி ஷோ’வாம்”
ஃபேன்சி ட்ரஸ் காம்படிஷனா?”
“ஆமாமா, அதுதான். நாளைக்குள்ள ஒரு ஐநூறு ரூபா கட்டணுமாம். வரும்போது ட்ரா பண்ணிட்டு வந்துடுங்க”
“பேங்க்’ல நாப்பத்தி ரெண்டு ரூபாதான் இருக்கு பத்து. கைலயும் நூத்தம்பதைத் தாண்டாது. உன்கிட்ட ஏதும் இல்லையா?”
“அதான் போனவாரம் மொத்தமா இருந்ததெல்லாம் வழிச்சித்தானே எடுத்துத் தந்தேன்”
”ரெண்டு நாள் பொறுக்கச் சொல்லேன் அவனை. சம்பளம் வந்துடும்”
“அதெல்லாம் பேசிட்டேன். அவன் நாளைக்குன்னா நாளைக்குன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான்”
“சரி சரி. இரு யார்கிட்டயாவது கேட்டு வாங்கிட்டு வர்றேன். கட் பண்ணு”
நண்பர்கள் சீனு, மனோஜ், ரவி – மூன்று பேருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். “ஐநூறு ரூபாய் கிடைக்குமா? நான்கு நாட்களில் திருப்பித் தருகிறேன்”
--------------0000000000----------------
இந்தக் கதைக்கு லைவ்லிப்ளானட் தளத்தில் வந்த சில சுவாரசிய பின்னூட்டங்கள் இங்கே
image credit:  business.rediff.com

Apr 2, 2012

தொடர் பதிவுகள் - ஒரு எச்சரிக்கை



நண்பர்களே!

நான் இங்கே எழுதுவது மட்டுமல்லாமல் நண்பர் நட்பாஸ் அவர்களின் கள்ளிப்பெட்டி தளத்தில் அவ்வப்போது ஏதேனும் விருந்தினர் பதிவு அல்லது நிமிடக் கதைகள் எழுதுகிறேன்.

நம்ம மொதலாளி மாயவரத்தானின் கட்டுரை.காம் தளத்தில் சரிகமபதநி என்னும் இசை தொடர்பான தொடரும் வந்து கொண்டிருக்கிறது.

அண்ணன் நியூஜெர்ஸி கணேஷின் தமிழ் ஓவியத்திலும் நம் எழுத்துக்கு அவ்வப்போது இடம் தருகிறார்கள்.

அங்கங்கே எழுதியவைகளை நம் தளத்திலும் சேமித்து வைக்க வேண்டுமென்று நினைக்கிறேன். எனவே மற்ற தளங்களில் நாம் எழுதிய பதிவுகள் நாளை முதல் இங்கே வெளியாகும்.

இதை தகவல், எச்சரிக்கை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்...............

லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம் ஐ ஸே!

Apr 1, 2012

ஒரு அடேங்கப்பா ரக ”ஏப்ரல்.1 கதை”

”ஹலோ! நலம்தானா? நான் “எக்ஸ்.வொய்.இசட்”. ட்விட்டரில் நாம் நண்பர்கள். உங்கள் ஏரியாவில்தான் இப்போது இருக்கிறேன். சந்திக்கலாமா?”

ஒரு வெளியூர் ட்வீட்டரிடமிருந்து எஸ்.எம்.எஸ். வந்திருந்தது. மிகவும் சுவாரசியமான, புரட்சி சிந்தனை கொண்ட ட்வீட்டர்.

”சரி, எங்கே?”, என கேட்டு அனுப்பிய என் எஸ்.எம்.எஸ்.’க்கு, “என் உறவினர் வீட்டிற்கு சனிக்கிழமை மாலை வரவும்”, என முகவரியும் பதிலாய் வந்திருந்தது. அடடே! இது எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது தெரு. 

ஒரு உதாரணத்திற்கு அந்த முகவரியை ”16, பிள்ளையார் கோயில் தெரு, தென்றல் நகர், பம்மல்” எனக் கொள்வோமே.

“வெகேஷனுக்கு வந்திருக்கிறீர்களா?”, கேள்வி எஸ்.எம்.எஸ்.

“ஆமாம்”, பதில் எஸ்.எம்.எஸ்.

அத்துடன் மறந்துவிட்டேன். இன்று மாலை (சனிக்கிழமை), ‘மறந்தாச்சா?” என்ற நினைவூட்டலில் பின் மண்டையில் ஒரு தட்டு தட்டிக் கொண்டு புறப்பட்டேன். இந்த அமெரிக்க நேரத்தில் வேலை செய்யத் தொடங்கிய பின் இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் கேஸாகிப் போய் அன்றாட நிகழ்வுகள் எல்லாமும் தலைகீழாய்ப் போகிறது.

16, பிள்ளையார் கோயில் தெருவைக் கண்டறிய பெரிய கஷ்டம் ஏதும் இல்லை. வாசலில் போய் நின்றேன். வெளியே அவ்விட தேசத்து ஜாடையில் ஒரு பெண்மணி, “யெஸ்?”, என்ற கேள்விக்கு நம்ம ட்வீட்டரின் பெயர் சொன்னேன்.

“யெஸ், அது நான்தான். சொல்லுங்க என்ன வேணும்?”

இங்கே நான் முன்னமே உங்களுக்குக் குறிப்பிடத் தவறிய ஒரு தகவல், நம்மை சந்திக்க அழைத்த ட்வீட்டர் நண்பர், ஒரு பெண்மணி. தன் புரட்சி ட்வீட்டுகளால் தமிழ் ட்விட்டர் உலகையே கதி கலங்கச் செய்து கொண்டிருக்கும் ஒருவர்.

“ஹாய்! நான் கிரி”

“கிரி? சரி என்ன வேணும்?”

”ஆர்.எஸ்.கிரி... ட்விட்டர் காண்டாக்ட்”

“யார் வேணும் உங்களுக்கு?”

“எக்ஸ்.வொய்.இசட்”, பெயர் சொன்னேன். “ட்விட்டர் ஃப்ரெண்ட். போன வாரம் மெசேஜ் அனுப்பியிருந்தீங்களே. _____ ஊருதானே நீங்க”

“ரைட். பேரு கரெக்ட் ஊரும் கரெக்ட். ஆனா நான் ட்விட்டர்ல இல்லையே”

”இது நம்பர் பதினாறுதானங்க?”

‘ஆமாம்”

“பிள்ளையார் கோயில் தெரு’தானே?”

“கரெக்ட்”

“பம்மல் ஏரியாதானே”

”ஆமாங்க”

“தென்றல் நகர் தானுங்களே”

தர்மத்தின் தலைவன் படத்தில் ஞாபகமறதி ரஜினிக்குக் கிடைக்கும் பல்ப் போல, “இல்லை, இது பொதிகை நகர்”, என்று பதில் வரும் என்று எதிர்பார்த்தேன்.

“ஆமாங்க, நீங்க சொல்ற அட்ரஸேதான். ஆனா நீங்க தேடி வந்தது என்னையில்லை. கொஞ்சம் இருங்க”, என உள்ளே போய் விட்டார்.

இப்போது ஒரு பெரிய மனிதரின் முறை போல. அறுபதைக் கடந்த ஒருத்தர் சம்பந்தமே இல்லாமல் ஒரு ஒளிவீசும் பிரகாச முகத்துடன் வெளியே வந்தார். நெடுநெடு உயரம், பழுத்த பழம், நெற்றியில் மூன்று பட்டைத் திருநீர், மூன்றுக்கும் இடையில் ஒரு விரற்கடையளவிற்கு சந்தன மெழுகல், அதன் மத்தியில் புதிய ஐம்பது பைசா அளவிற்கு அடிக்கும் ரத்தச் சிவப்பில் குங்குமம். கழுத்தில் ருத்ராட்சம், காவி வேட்டி, வெள்ளை சட்டையில் தோற்றம்.

“அடடே! கிரி சார், வாங்க வாங்க!”

எனக்கு விலுக் என்றது. ஏதோ புரிவது போல் இருந்தது. இருந்தாலும் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல்,

“நீங்க.....”

“நான்தான்.... நீங்க தேடிவந்த அந்த எக்ஸ்வொய்இசட் நான்தான்”

“ஹல்லோ சார், நான் தேடி வந்தது ஒரு கேர்ள், rather ஒரு லேடியை”

"எல்லாம் நான்தான், மொதல்ல உள்ள வாங்க. இது நம்ம வீடுதான்”

அடப்பாவிகளா என்றாகிப் போனது எனக்கு. இத்தனை நாள் கிண்டலாக பெண் பெயரில் உலாவரும் ஆண்கள் என்றெல்லாம் ட்விட்டர் டைம்லைனில் கிண்டல் கேலிகள் ஓடும். இப்போது என்னெதிரில் ஒரு நிதர்சன நிஜத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறேன். ச்சே! இந்த நேரம் பார்த்து இந்தப் பாழாய்ப் போன ட்விட்டரை விட்டு வேறு விலகியிருக்கிறேனே!

உள்ளே போய் அமர்ந்தேன். இது போன்ற விஷயங்கள் எல்லாம் ட்விட்டர் உலகில் சாதாரணம்தான் என்றாலும், அதை நேரில் தரிசித்த வேளையில் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு எனக்கு பேச்சே வரவில்லை. அந்த மனிதரோ நான் வாயடைத்துப் போனதை ரசித்துக் கொண்டிருந்தார்.

“சார், நீங்கதான் அந்த எக்ஸ் வொய் இசட் அப்படிங்கறதுக்கு என்ன ஆதாரம்?”

“அது நான் இல்லைன்னு சொல்றதுக்கு உங்க கிட்ட ஏதும் ஆதாரம் இருக்கா?”

வாய்ப்பே இல்லை. இது அதே ராங்கு பார்ட்டிதான். ஒரே எதிர் கேள்வியிலேயே புரிந்துவிட்டது.

”இப்போ எதுக்கு அடையாளத்தைக் கலைச்சிட்டு என்கிட்ட உண்மை ஸ்வரூபத்தைக் காட்டினீங்க?”

“ஜஸ்ட் லைக் தட். உங்க ட்விட், பாடல்களின் ரெகுலர் ஃபாலோவர் நான். (மறந்தும் ரசிகன் /ரசிகை என்ற வார்த்தை வரவில்லை பாருங்கள்). உங்க ஏரியாவுக்கே வந்தேன். சரி சந்திக்கலாமேன்னுதான்”

எனக்குக் கொஞ்சமாய்த் தெளிந்த வேளையில் காபி, பிஸ்கட், ஆரஞ்சுப்பழம், அன்னாசி ஜூஸ் என்று பத்து நிமிடத்தில் அரை டஜன் தின்னும் விஷயங்கள் மேஜைக்கு வந்து குதித்தன. நான் தின்கிறேனா என்பதையெல்லாம் எதிர்பாராமல் நம்ம ட்வீட்டரரரரரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவற்றை அதகளம் பண்ணிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.

”ஒருவேளை நாளை ஏப்ரல் ஒண்ணுன்னு எல்லாம் கூடி நின்னு என்னை ஃபூல் பண்ணப் பாக்கறீங்களோ?”

என்னை உள் அறைக்கு அழைத்துச் சென்றவர், தன் மடிக்கணினி திறந்து அந்த ஐடியையும் ட்விட்டரில் திறந்து ஏதோ யாருடைய ட்விட்டுக்கோ விதண்டாவாதமான ஒரு ரிப்ளை தந்தார்.

“நம்பிட்டேன். போகலாம் வாங்க”, வெளியறைக்கு வந்தோம்.

”இப்போ நான் ட்விட்டர்ல இல்லைன்ஙற தைரியத்துல என்னை சந்திச்சீங்களா?”

”அதெல்லாம் இல்லை. நானே இன்னும் நாலஞ்சு நாள்’ல ட்விட்டருக்கு முழுக்கு போட இருக்கேன். அப்போ சொல்லிட்டுதான் போவேன்”

“இது பத்தி நான் பதிவு எழுதலாமா?”

“எழுதுங்க. பேரை மட்டும் குறிப்பிடாதீங்க. நான் உங்களை நம்பறேன்”

“ஓகே”

“நீங்க கண்டிப்பா ஒரு பாட்டு பாடணும் எங்களுக்காக. அதோ அந்த பறவை போல பாடுங்களேன்”

எனக்கு அந்த பாட்டு தெரிந்த வரையில் பாடினேன்.

மேலும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வழக்கமான ட்விட்டர் நண்பர்கள் சந்திப்பு போலல்லாமல் இத்தனை வித்தியாச சந்திப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆதலால், நான் ரொம்பவே கொஞ்சமாகத்தான் பேசினேன். அவர்தான் விடாமல் வளவள’வென லட்சுமி மோட்டார் கம்பெனியில் தான் பார்த்த வேலை பற்றியும், போளுவாம்பட்டியில் தன் தந்தை பார்த்த நீர் மணியம் வேலை பற்றியும், வெள்ளியங்கிரியில் விற்ற நிலம் பற்றியும் பேசிக் கொண்டே இருந்தார்.

”அது சரி! ஏன் இந்தப் பெண் வேடத்துல, பெண் ஐடியில, பெண் போர்வையில ”

“வெயிட் வெயிட் வெயிட்! நான் பெண் ஐடி’ல இருக்கேன், பெண் டிபி (புகைப்படம்) வெச்சிருக்கேன், இது ரெண்டும் சரி. ஆனா, நான் என்னைக்காவது நான் பெண் அப்படின்னு சொல்லியிருக்கேனா?”.

நெற்றி சுருக்கி யோசித்துப் பார்த்தேன். அப்படி ஒன்றும் நினைவில்லை.

சரிதான்! இது நாலு வருஷ ஏப்ரல் ஒண்ணு சமாச்சாரம் டோய் என்று நினைத்து விடை பெற்றுக் கொண்டு வந்தேன்.

ஏப்ரல் ஒண்ணு ஒரே ஒரு நாள் வர்ற சமாச்சாரம் இல்லை கண்ணுங்களா. இந்த விஷயம் எனக்கு மார்ச் முப்பத்தி ஒண்ணு தெரிஞ்சிருக்கு பாருங்க! அதான் விஷயம்!



Related Posts Plugin for WordPress, Blogger...