Showing posts with label நட்பாஸ். Show all posts
Showing posts with label நட்பாஸ். Show all posts

Apr 8, 2012

ஜெயமோகனின் சங்க சித்திரங்கள்

சங்க சித்திரங்கள் - ஒரு முன்னோட்டம்


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்


ழை! 

சங்க இலக்கியங்களின் அடிப்படை அழகியல் அதுவே. அவை மனித உணர்ச்சிகளை இயற்கை மீது ஏற்றிக் காட்டுகின்றன.- அதன்மூலம் இயற்கையின் முடிவற்ற விந்தைகளை மனித உணர்வுகளுக்கும் தந்துவிடுகின்றன. இரு நிலைக் கண்ணாடிகள் ஒன்றையொன்று பிரதிபலித்து முடிவின்மையை உருவாக்குவதைப் போல! - ஜெயமோகன், சங்கச் சித்திரங்கள், பக்கம் 59.


ஜெயமோகன், 
சங்கச் சித்திரங்கள், 
288 பக்கங்கள், 
கவிதா பப்ளிகேஷன் 
டிசம்பர், 2002 பதிப்பு 
விலை ரூ.100

இணையத்தில் இங்கே கிடைக்கும் 

சங்கச் சித்திரங்கள் தொகுதியில் ஜெயமோகன் அறிமுகப்படுத்தும் கவிதைகளில் பெரும்பாலானவை சோகம் மிகுந்தவை, ஜெயமோகனின் வாழ்க்கை நினைவுகள் இவற்றின் சோகத்துடன் இருள் சேர்த்து, அவற்றுக்கு மேலும் வலிய அழுத்தம் கொடுக்கின்றன. இது போதாதென்று சங்க காலக் கவிதையைவிட்டு தமிழ் வெகு தொலைவு விலகிச் செல்கிறது என்ற உண்மை வேறு. இந்த உணர்வுகள் சங்கக் கவிதைகளையே துயரில் தோய்ப்பதாக உள்ளன. 

"ஒரு கவிதையில் இருந்து எவ்வளவு தூரம் முன்னகர முடியும் என்பது பார்ப்பதுதான் சிறப்பான கவிதை வாசிப்பு.... கவிதையின் மர்ம முடிச்சு நம் மனத்தில் மலர் விரிவது போல எப்போது என்று சொல்ல முடியாத ஒரு தருணத்தில் அவிழ்வதே கவிதை அனுபவம் என்பது," என்று எழுதும் ஜெயமோகன் (பக்கம் 23), "படிமம் வாசகனின் கற்பனை மூலமே விரிந்து முழுமை கொள்ள முடியும்" என்கிறார் . என் நண்பர் ஒருவர் சொன்னதுபோல் படிமம் காதலியின் கடைக்கண் வீச்சு. அதற்கு இலக்காகிறவனின் மனதிலேயே அது முளைத்து, கிளை விட்டு, காடாகி, பூத்து மண்ட முடியும். பூமணத்தால் இரவைத் தூக்கமின்றி அடிக்க முடியும்," என்று கவிதையின் இதயமாக படிமங்கள் இருப்பதைச் சுட்டுகிறார் (பக்கம் 51). சங்கச் சித்திரங்களை வாசிப்பது என்பது, சிலைகள் உயிர்பெற்று எழுவதுபோல் படிமங்கள் தம் வியாபகத்தை விரிக்கக் காணும் அனுபவம். ஜெயமோகனின் எழுத்தில் அது பக்கத்துக்குப் பக்கம் நிகழ்கிறது.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் நாற்பது பாடல்களைப் பேசுகிறார் ஜெயமோகன். ஒவ்வொன்றிலும் எதிர்பாரா படிமங்கள் நம் நினைவைக் கிளருகின்றன - பாடல்கள் தரும் காட்சிக்கு இணையான சித்திரத்தை ஜெயமோகன் தன் அனுபவத்திலிருந்து வரைகிறார். அவற்றின் உணர்வு நம் நினைவுகளை நெகிழ்த்தி, சங்கக் கவிதைக்கு புது வெளிச்சம் தருகிறது. 

நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக், கடிய கூறும், வேந்தே; தந்தையும், நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே; இஃதுஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று, அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை, மரம்படு சிறுதீப் போல, அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே. - 
- மருதனிள நாகனார் (புறநானூறு - 348)

மறவன் தன் பெண்ணை அரசனுக்கு மணமுடித்துக் கொடுக்க மறுக்கும்போது "அரிமதர் மழைக்கண்" - மழை மேகங்கள் என கறுத்த விழிகள் கொண்ட பெண், "மரம்படு சிறுதீபோல்" ஆகிறாள் அவள் தான் பிறந்த ஊருக்கு. இன்றைய சாதிக் கலவரங்களில் ஒன்றின் பொறியாக இருந்திருக்கக்கூடிய ஒரு காதலர் வேட்டையை நேரில் கண்ட ஜெயமோகனின் அகம் இந்தப் பாடலில் உள்ள மழைக்கண் என்ற பதத்தின் துயரை உணர்கிறது. அவளது கண்ணீரும், அவள் குலத்தை அழிக்கும் நெருப்பும். பெண்ணின் கண்ணீரா நெருப்பானது? அந்த நெருப்பை அணைக்க பெண்கள் அழ வேண்டியது எவ்வளவு இருக்கிறது? இவற்றுக்கு விடையில்லை. ஆனால், "அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை மரம்படு சிறுதீ போல அணங்கா யினள்தான் பிறந்த ஊர்க்கே" என்று முடியும் பாடல் உயிர்பெற்று விட்டது, இனி மழைக் கண்களின் துயரைக் காணாதிருக்க நாம் முனைந்து நம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டால்தான் உண்டு.(பெற்ற நெருப்பு). 

  ஞாயிறு காணாத மாண்நிழற் படீஇய
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக – நம் நீத்துச்
சுடர்வாய் நெடுவேல் காளையோடு
மடமா அரிவை போகிய சுரனே
- (குறுந்தொகை 378, கயமனார்).

வெயில் வருத்தக் கூடாது, அவள் பாதையில் நிழல் இருக்கட்டும், அவள் செல்லும் பாதையில் மணல் பரவட்டும், அதைக் மென்மழை குளிர்விக்கட்டும், என்று காதலனோடு ஓடிப் போன தன் பெண்ணை நினைத்து ஒரு தாய் பாடுகிறாள் நாயர் வகுப்பைச் சேர்ந்த தன் சக பணியாளரைக் காதலித்து மணம் புரிந்து கொண்ட ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணுடைய தாயின் உணர்வுகளை மனதில் கொண்டு ஜெயமோகன் இந்தப் பாடலை வாசிக்கும்போது உண்மை அதன் அத்தனை உக்கிரத்துடனும் சுடுகிறது (பாலை மழை).

நலத்தகைப் புலத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தண்கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணம் இல கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழி அவர் சென்ற நாட்டே'
- கழார்க் கீரன் எயிற்றியனார், குறுந்தொகை 330 

"நீரின் பிரியா பரூ உத்திரி: - இங்கே பிரிந்து விரிவது கசக்கிப் பிழிந்து ஆற்று நீரிலிட்ட துணி மட்டுமல்ல, நிகழ்வுகளால் உணர்த்தப்பட்டு மனதை ஆக்கிரமிக்கும் நினைவுகளும்தான். "இன்கடுங் கள்ளின் மணம்" - இனிப்பும் துவர்ப்பும் சேர்ந்த கள்ளின் மணம், பேதலித்த போதை நினைவுகளுக்கு அழகிய, எளிய படிமமாகிறது. இப்படிப்பட்ட இலை அவன் ஊரிலும் இருக்காதா, என்று கேட்கிறாள் தோழியிடம் - ஜெயமோகன் இந்தப் பாடலைத் தன் அந்நாளைய வாசகி அருண்மொழி நங்கையின் தலையில் உதிர்ந்து தங்கிய பொன்னிற கொன்றை மலரைக் கொண்டு வாசிக்கிறார் (கள் மணக்கும் மலர்).

இப்படி நாற்பது பாடல்கள். இவற்றில் ஒரே ஒரு பாடலைக் குறித்த ஜெயமோகனின் சித்திரத்தைக் கொஞ்சம் விரிவாக வாசிப்போம்.

 சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே
- கபிலர், குறுந்தொகை 

இந்தப் பாடல் ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். இன்றும் இதை நாம் படித்து ஓரளவுக்கு பொருள் புரிந்து கொள்ள முடிகிறது என்பதே பெரிய விஷயம். பாடலில், பூ, கிளி, பெண், யானை, என் உள்ளம் பின்னும் என்றெல்லாம் வருவதை வைத்து யாரோ ஒரு பெண்ணின் பின்னால் கபிலரின் உள்ளம் செல்கிறது என்று ஊகிக்க முடிகிறது. அந்த அளவுக்கு நாம் இந்தப் பாடலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். 

இருந்தாலும் எங்கோ தொலைவில் இருப்பவர்கள் குறித்த துக்கச் செய்தியை நாம் புரிந்து கொள்வதற்கும் ரொம்பவும் நெருக்கமானவர்களின் துக்கத்தை நாம் புரிந்து கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா? அசுவாரசியமான செய்திக்கும் இடி விழுந்த மாதிரியான அதிர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம் இரண்டுக்கும் உண்டு. 

பல பேராலும் பாராட்டப்படும் ஏ.கே. ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்பு நம் போன்ற இணைய வாசகர்களுக்கு விஷயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாக்குகிறது- 

Does that girl, eyes like flowers,
gathering flowers from pools for her garlands,
driving away the parrots from the millet fields,
does that girl know at all or doesn’t she,
that my heart is still there with her
bellowing sighs
like drowsy midnight elephant? 

இதைவிடத் தீவிரமாக கபிலரின் இந்தப் பாடல் நம் உள்ளத்தின் உள்ளிறங்க வேண்டுமென்றால் உதவி செய்வதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் இருக்கிறார். அவரது தளத்தில் கடலூர் சீனு இந்த இரு மொழிபெயர்ப்புகளைக் கவலையுடன் பகிர்கிறார்

வனத்தடாகத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து,
காட்டில் கிளியோட்டும் பெரிய கண்ணழகி அறியமாட்டாள்
தூங்கும் யானை போலப் பெருமூச்சு விட்டு
என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை
- கிரி உரை.
சுனைப்பூக்களைப் பறித்து மாலை தொடுத்துத்
தினைப்புனத்தில் கிளி விரட்டுபவளை
என் உள்ளம் ஒரு சாமத்தில் படுத்திருக்கும்
யானை போலப் பெருமூச்சு விட்டுப் பிரிந்த பின்னும்
அவளுடன் வசிப்பதை
அறிவாளோ அறியாளோ! - - சுஜாதா உரை 

கடலூர் சீனு கிரியின் மொழிபெயர்ப்பை "அகத்துடன் அகம் நிகழ்த்தும் பரிமாற்றம்." என்று ஒரு நிகழ்வாகவும் சுஜாதாவின் மொழிபெயர்ப்பை "“உலகத்தீரே இதனால் அறியப்படும் சேதி என்னவென்றால்..." என்ற அறிவிப்பாகவும் வாசிக்கிறார்- பொதுவாகவே சுஜாதாத்தனமாக சாற்றை விட்டுவிட்டு சக்கையை மட்டும் கொண்டு செல்வன மொழிபெயர்ப்புகள் என்று நம்புகிறார் சீனு, அவற்றை வாசிக்க நேரிடும் "தமிழே தெரியாத "வேர்ல்டு இலக்கிய” மேதாவி" என்ன சொல்லக்கூடும், என்பது அவரது அச்சமாக இருக்கிறது (காடுக்கு என்ன கதி நேரிடுமோ என்ற அந்த உத்தம வாசகனின் கவலைக்கு அடிப்படையாக இருந்த அந்த ராஜதுரோக சிந்தனை பாரதிக்குக் கிட்டாத தாந்தேவின் சிகரங்களை நினைவூட்டி பீதியைக் கிளப்பியது என்பது வேறு கதை, இங்கே, இப்போது எழுத்தாளர் ஜெயமோகனின் அதியற்புதமான சங்கச் சித்திரங்களைப் பாராட்டுவது மட்டுமே நம் நோக்கம்). 

நிற்க, எங்கேயோ போய் விட்டேன். சங்கச் சித்திரங்கள் புத்தகத்தில் ஜெயமோகனே நாம் பேசும் பாடலை இப்படி மொழிபெயர்க்கிறார்: 

சுனையில் பூக்கொய்து
மாலைதொடுத்து அணிந்து
தினைப்புனத்தில் கிளியோட்டும்
மலர்விழி அறிவாளா
நள்ளிரவில்
தூங்கும் யானையின்
மூச்சு போல
பெருமூச்சு விட்டபடி
என் மனம்
அவளைப் பின்தொடர்வதை?-(பக்கம் 160) 

ஆங்கிலத்தில், "breathtaking beauty", "she took my breath away" என்றெல்லாம் சொல்வார்கள். ஏறத்தாழ அதே பொருளில்தான் இந்தப் பாடல் இருக்கிறது - எங்கோ இருக்கும் அவளை கபிலரின் நினைவுகள் பெருமூச்சு விட்டபடி தொடர்கின்றன. 

இதன் விரிவான வடிவமாகவே இந்தப் பாடலையும் நீங்கள் கேட்கலாம்:


ஃப்ரெட்டி மெர்க்குரிக்கும் கபிலருக்கும் என்ன சம்பந்தம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கபிலர் பாடியதையே ஏறத்தாழ அச்சு அசலாக ஃப்ரெட்டியும் பாடியிருக்கிறார். காலம்தோறும் ஆண்மனம் உலகெங்கும் இப்படித்தான் பெருமூச்சு விட்டபடி பெண்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறது போல.

  "...பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே"

என்ற அடிகளின் பொருள் மிக அழகியது. எவ்வளவு யோசித்தாலும் இதுதான் என்று சொல்ல முடியாத தன்மை கொண்டது - ஆளாளுக்குத் தகுந்தபடி வாசித்துக் கொள்கிறார்கள். 

ஏ கே ராமானுஜம், 

 does that girl know at all or doesn’t she,
that my heart is still there with her
bellowing sighs
like drowsy midnight elephant?

என்றும், 

  ...அறியமாட்டாள்
தூங்கும் யானை போலப் பெருமூச்சு விட்டு
என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை

என்று கிரியும், 

 என் உள்ளம்
ஒரு சாமத்தில் படுத்திருக்கும்
யானை போலப் பெருமூச்சு விட்டுப் பிரிந்த பின்னும்
அவளுடன் வசிப்பதை
அறிவாளோ அறியாளோ!

என்று சுஜாதாவும், .... 

அறிவாளா
நள்ளிரவில்
தூங்கும் யானையின்
மூச்சு போல
பெருமூச்சு விட்டபடி
என் மனம்
அவளைப் பின்தொடர்வதை? 

என்று ஜெயமோகனும் மொழிபெயர்க்கிறார்கள்.
'உரை விளக்கங்கள், இலக்கணங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தன் வாழ்க்கை அனுபவங்களையும் கற்பனையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவன் இக்கவிதைகளை அணுக வேண்டும். கவிதையின் அசல் வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும். அவற்றுடன் உள்ள துறைக் குறிப்புகள் போன்றவைகூடத் தேவை இல்லை.... சங்க காலக் கவிதைகளை, சமகால நவீன கவிதைகளை எப்படி வாசிக்கிறோமோ அப்படி வாசிப்பதே நல்லது... பண்டைய கவிதைகளில் வெறும் வர்ணனைகளாகவோ அணியலங்காரங்களாகவோ நாம் கண்டு வருபவை உண்மையில் உக்கிரமான படிமங்களாக இருக்கக்கூடும்.....அந்தப் படிமம் அவனையும் மீறிய ஒன்று. சிற்பி செதுக்கியதுதான் தெய்வச் சிலை. ஆனால் தெய்வம் அவனுக்குக் கட்டுப்பட்டதல்ல. அவனும் வணங்கும் பிரம்மாண்டம் அது. ஒரு கனவுக்கு முடிவின்றி அர்த்தம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்," 
என்று சங்கக கவிதைகளை அணுகுவது எப்படி என்று தன் வாசகனுக்குக் குறிப்புகள் தருகிறார் ஜெயமோகன் (பக்கங்கள் 52, 53). 

"சங்கச் சித்திரங்கள்" புத்தகத்தில், இந்த அணுகுமுறையைக் கொண்டு ஜெயமோகன் தன் வாழ்க்கை அனுபவத்தின் தளத்தில் கற்பனைத் திறனைக் கொண்டு படைக்கும் சித்திரம் மிக அருமையான ஒன்று - வாசகன் ஒரு உயர்ந்த கலைஞனைத் தொடும் இடம் அது. கபிலருக்கு இணையான படைப்பாற்றலை ஜெயமோகனின் வாசிப்பில் நாம் காண்கிறோம். ... 

பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே 

என்ற அடிகளைப் பொதுவாக அனைவரும், 'உன்னைத் தொடரும் என் ஏக்க நினைவுகள்,' என்ற அளவில்தான் புரிந்து கொள்வோம். ஃப்ரெட்டி மெர்க்குரி போன்ற கற்பனாவாதிகள், "என் நினைவுகள் உன்னைத் தொடரும், அவை எப்போதும் உன்னோடிருக்கும், நீ எங்கிருந்தாலும் உன்னைக் கண்டடையும்," என்றெல்லாம் சொல்லலாம்.

ஆனால் ஜெயமோகன் கபிலரின் சங்கக் கவிதையுடன் காட்டும் சமகாலச் சித்திரம், "இருளின் பெருமூச்சு," என்ற ஒன்று. அதில் அவர் தான் மும்பையில் இருந்த நாட்களை நினைவு கூர்கிறார். பிழைப்பு தேடி வந்த இடத்தில், இருக்க இடமின்றி ஒரே அறையில் முகமற்ற பலர். அவர்களுடன் ஜெயமோகனும் ஒரு ஓரத்தில் ஒட்டியிருக்கிறார். 

ஓணத் திருநாள் இரவு. ஒரு தூக்கத்துக்குப்பின் கண்விழிக்கிறார் ஜெயமோகன். அறைக்குள் நிரம்பியிருந்த இருளில் ஒரு வித்தியாசம் தெரிகிறது. இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுடன் ஜெயமோகனின் இளமை நினைவுகள் அவரை ஆக்கிரமிக்கின்றன.
"தீபாவளிக்கு மழைகுளிர் போல ஓணத்துக்கு இளவெயில். ஊஞ்சல் ஆடும்போது மண்ணில் விரியும் நிழல்கோலங்கள். புத்தாடைகளின் மணம், முன்மதியத்தில் ஒரு தருணத்தில் தேங்காய்பால் முறுகி வெல்லத்துடன் முயங்கி மெல்ல எழும் பிரதமனின் மணம். அம்மா அகப்பையில் அள்ளித் தரும் பிரதமனின் ஈடற்ற சுவை. பிரியத்தின் இனிப்பு ஒரு துளி சொட்டிய இடத்தில் சென்று மொய்க்கின்றன எண்ணக் கூட்டங்கள். திடீரென்று அந்த விஷயம் புரிந்தது. அறையில் அத்தனை பேருமே தூங்காமல் படுத்திருக்கிறார்கள்! மூச்சொலிகள் இல்லாததுதான் அந்த வித்தியாசத்தை உருவாக்கியது. உடலின் அசைவு என் மனநெகிழ்வை வெளிக்காட்டிவிடும் என்று பயந்தவன் போல தசைகளை உறையச் செய்தபடி படுத்திருந்தேன்..."
அங்கே திடீரென்று இருளே உடைந்தது போல், ஒரு பெரிய மிருகத்தின் துயரம் போல் ஒரு பெருமூச்சு எழுகிறது. அதன்பின் அறையை வெவ்வேறு மூலைகளிருந்து எழும் பெருமூச்சுகள் நிறைக்கின்றன.
"அன்று மும்பையில் அந்த மூச்சொலியுடன் நான் இருளில் தூக்கம் கலைந்து எழும் வலிகொண்ட மதயானை ஒன்றையும் உணர்ந்தேன்," 
என்று எழுதுகிறார் ஜெயமோகன். 

உறங்கும் யானையின் உயிர்த்து என்பது அதன் ஆழ் பெருமூச்சு மட்டுமல்ல- அதன் வலி உயிர்த்தெழுகிறது என்றும் வாசிக்கலாம். அப்படிப்பட்ட பெருமூச்சே பெண் நினைவுகளைத் தொடர்கிறது. 

கபிலரின் பாடலுக்கு ஜெயமோகன் தரும் வாசிப்பு உழை என்ற சொல்லில், பெருமூச்சு என்ற பொருளுடன் வலியை இணைத்து அதை ஒரு படிமமாகவே மாற்றுகிறது. உழைப்பு, உழல்தல் போன்ற சொற்களில் உள்ள வலியும் பெருமூச்சும் மறக்க முடியாதவை..
.
.
.

Apr 6, 2012

கலி - நிமிஷக்கதை


நன்றி: நட்பாஸ்
இது ஒரு அப்பட்டமான நிஜக்கதை! இந்தக் கதை லைவ்லி ப்ளாண்ட் தளத்தில் வந்தபோது டாக்டர்.வரசித்தன் இட்ட இந்தப் பின்னூட்டம், கதைக்கு.... இல்லையில்லை இந்த நிஜத்தின் அர்த்தத்திற்கு மேலும் வலு சேர்த்தது. சேர்த்த வலு குழப்பத்தில், சோர்வில் நம்மைத் தள்ளியது வேறு கதை.
சரி சரி, நீங்கள் கதையைப் படியுங்கள்.
ப்ரேக் அடித்து நின்றது பேருந்து. “க்ளோபல், தமிழ்நாடு எல்லாம் எறங்கு”, கண்டக்டர் கூவ…. அருகில் அமர்ந்திருந்த பெரியவர் இறங்குவதற்கு படிக்கட்டு வரை துணைசென்றவன் திரும்பி வந்து பார்த்தால் அமர்ந்திருந்த இருக்கை ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்தது.
அடுத்த நிறுத்தத்தில் ஒரு திருவிழாக் கூட்டம் பேருந்தை நிறைத்து இருக்கையைத் தவறவிட்டதன் பலனை உணரவைக்கத் துவங்கியது. அதற்கும் அடுத்த நிறுத்தத்தில் இன்னொரு புளி மூட்டைக் கும்பல் பேருந்துக்கு மேலும் பலம் சேர்க்க, சுற்றி நின்ற நாலுபேர் என்னை நெறித்துக் கொண்டிருந்தார்கள்.
“சார், கொஞ்சம் வழிவிடுங்க, ப்ளீஸ்! ஓரமா போய் நின்னுக்கறேன்”
“உன் பையை எடுத்து யார்ட்டனா குடு நைனா. அத்த குட்த்தாலே நாலு ஆளுக்கு எடங்கெடைக்கும்”
“ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”, அழகிய இளமஞ்சள் கரம் என் பக்கம் நீண்டது.
“ஓரமாய்ப் போய் நின்னுக்கறேன்” திட்டத்தை அவசர அவசரமாகத் தள்ளிப் போட்டுவிட்டு நீட்டப்பட்ட நோட்டை வாங்க்கிக் கொண்டேன். நான் சரியாகப் பேருந்தின் மத்தியில் பிதுங்கிக் கொண்டிருந்தேன். இன்னொரு “பாஸ்” செய்தால்தான் சோழிங்கநல்லூரை வாங்குவது சாத்தியம்.
“கொஞ்சம் ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”
“சார், கொஞ்சம் ஒரு சோழிங்கநல்லூர் வாங்குங்க”
“எக்ஸ்க்யூஸ்மி”
“??”
“ஒரு சோழிங்கநல்லூர்”
“கையே வெள்ள எட்க்க முட்லபா”
மகளிர் இருக்கைகள் இருந்த பக்கத்தில் கண்டக்டருக்கு மூன்று இருக்கை இடைவெளியில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. அவள் என்னையே நிலைக்குத்திய பார்வை பார்க்க, “மேடம், ஒரு சோழிங்கநல்லூர் பாஸ் பண்ணுங்க”.
பதிலில்லை. ஆனால், அதே நிலைகுத்திய பார்வை. “கொஞ்சம், பாஸ் பண்ணுங்க ப்ளீஸ். ஒரு சோழிங்கநல்லூர்”. மீண்டும் அதே பதிலில்லாப் பதில். மீண்டும் வேண்டுதல், மீண்டும் கேளாமை. நான் சொல்வதை அப்பெண்மணியை கேட்க வைத்துவிட வேண்டும் என திடீர் உத்வேகப் பிடிவாதம் எனக்கு வந்தது. அவள் முகத்திற்கு நேரே பணத்தை நீட்டி, மேடம், மேடம் எனக் கத்தி, மேலும் ஒரு அரை டஜன் வித்தியாசமான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டு, “என்னப் பொம்பளடா இவ”, என பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டேன்.
திடீரென ஒரு கை என் கையிலிருந்து பணத்தைப் பிடுங்கி ஓரிரு நிமிடங்களில் சோழிங்கநல்லூரை என் கையில் திணித்தது. இப்போதும் அப்பெண் என்பக்கம் அதே முறைத்தல் பார்வையை வீசிக்கொண்டிருந்தாள். இருபதுகளின் மத்தியில் மாநிறத்தில் மெல்லிசான களைகூடின வசீகர முகம். என்ன பிரச்னை உனக்கு என ஒரு அசட்டையாக வெறுப்புப் பார்வையை நான் பதிலுக்குத் தந்துவிட்டுத் திரும்பிக் கொண்டேன்.
சோழிங்கநல்லூர் ஜங்ஷனில் கொஞ்சம் கூட்டம் கரைந்து மூச்சு விட அனுமதித்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டியதுதான். இப்போது அந்த முறைப்புப் பெண்மணியைத் திரும்பிப் பார்த்தேன். இது சினிமாவாக இருந்திருந்தால், என் அதிர்ச்சியை வெளிப்படுத்த அப்பேருந்து ‘சடன்’ ப்ரேக் அடித்து ”ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ர்ரீஈஈஈஈ”, என ஓலமிட்டு ஓசையுடன் நின்றிருக்கவேண்டும். அவள் நின்ற திருக்கோலம் இப்போதுதான் முழுசாய்த் தெரிந்தது. பச்சிளம் கைக்குழந்தை ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு நின்றிருந்தாள். தன் முகத்தால் அவள் மார்பை முட்டிக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை. சேலையை விலக்கிவிட்டு குழந்தையை உள்நுழைத்து விட்டாள் அவள்.
பிள்ளையைப் பெற்றவர்கள், பெறப்போகிறவர்கள், பெற்றுக் கொண்டிருக்கக்கூடாதவர்கள், பெற்றுக் கொள்ளக்கூடாதவர்கள் என அத்தனை வகைப் பெண்களும் அமர்ந்த திருக்கோலத்தில் அதைத் தரிசித்துக் கொண்டேயிருந்தார்கள்.
image credit : usefilm.com

Apr 3, 2012

நிமிஷக்கதை - லச்சுமி


இந்தக் கதையை தன் தளத்தில் பதிப்பித்து கௌரவம் தந்த நட்பாஸ் அவர்களுக்கு நன்றி.
”ராகவன், செக் புக் எடுத்துக்கிட்டு ரூமுக்கு வாங்க”
தனக்கானத் தனி அறையில் பெரியதொரு மேஜையின் பின்னால் அமர்ந்திருந்தார் மேனேஜர். வலது இடது புறங்களில் ட்ரேக்களில் ஃபைல்கள் தேங்கிக் கிடந்தன.
”மன்த் எண்ட் வந்துடுச்சி. நெக்ஸ்ட் மன்த் பெட்டி எக்ஸ்பென்சஸுக்கு கேஷ் ட்ரா பண்ணி வெச்சுக்கலாமே”
“பண்ணிடலாம் சார்”
”ஆபீஸ் எக்ஸ்பென்சஸ் ஃபோர்காஸ்ட் போட்டீங்களா?”
“இந்த மாசம் எதும் மாற்றம் இல்லை சார். போன மாசம் போலவே ஒன் பாய்ண்ட் டூ வேணும். நம்ம கிட்ட க்ளோஸ் ஒரு ஃபைவ் தவுசண்ட் இருக்கும். எனிவே, ஸேஃபா ஒன் பாய்ண்ட் டூ ஃபைவ் எடுத்துக்கலாம்”
“ஓகே, செக் எழுதுங்க. சீனியர் நாளைக்கு ஊருக்குப் போறாரு. இன்னைக்கே பாத்து செக்ல ஸைன் வாங்கிடுங்க”
செக் எழுதி மேனேஜர் ஒப்பம் வாங்கிக் கொண்டு, மேனேஜர் பார்த்து முடித்த தனக்கான ஃபைல்களை அவர் மேஜையிலிருந்து அள்ளிக்கொண்டு தன் இருக்கைக்குத் திரும்பினான் ராகவன்.
“க்ரிஷ்ணா, கொஞ்சம் மேல வர்றியா?”
இருபது செகண்ட்களில் க்ரிஷ்ணன் எதிரில் ப்ரசன்னமானான்.
“என்னய்யா? படியேறி வருவியா? இல்ல காத்துல பறந்து வருவியா?”, வழக்கமான பதிலற்ற சிரிப்பு சிரித்தான் க்ரிஷ்ணன்.
“இந்தா செக்கு, சீனியர் கிட்ட ஸைன் வாங்கிக்கோ. ராபர்ட்டை அழைச்சிட்டு பேங்க் போயி, ஒண்ணேகால் லட்சம், ட்ரா பண்ணிட்டு வந்துடு. சீக்கிரம் போயிட்டு வந்துடு, நான் இன்னைக்கு நேரத்துக்குப் போலாம்னு பாக்கறேன்”
அரை மணியில் கேஷ் செஸ்டில் ஒண்ணேகால் லட்சம் தஞ்சம் புகுந்தது.
ஃபோன் அடித்தது.
“சொல்லு பத்து”
“என்னங்க, சின்னவனுக்கு ஏதோ ஸ்கூல்ல ஃபேன்சி ஷோ’வாம்”
ஃபேன்சி ட்ரஸ் காம்படிஷனா?”
“ஆமாமா, அதுதான். நாளைக்குள்ள ஒரு ஐநூறு ரூபா கட்டணுமாம். வரும்போது ட்ரா பண்ணிட்டு வந்துடுங்க”
“பேங்க்’ல நாப்பத்தி ரெண்டு ரூபாதான் இருக்கு பத்து. கைலயும் நூத்தம்பதைத் தாண்டாது. உன்கிட்ட ஏதும் இல்லையா?”
“அதான் போனவாரம் மொத்தமா இருந்ததெல்லாம் வழிச்சித்தானே எடுத்துத் தந்தேன்”
”ரெண்டு நாள் பொறுக்கச் சொல்லேன் அவனை. சம்பளம் வந்துடும்”
“அதெல்லாம் பேசிட்டேன். அவன் நாளைக்குன்னா நாளைக்குன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான்”
“சரி சரி. இரு யார்கிட்டயாவது கேட்டு வாங்கிட்டு வர்றேன். கட் பண்ணு”
நண்பர்கள் சீனு, மனோஜ், ரவி – மூன்று பேருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். “ஐநூறு ரூபாய் கிடைக்குமா? நான்கு நாட்களில் திருப்பித் தருகிறேன்”
--------------0000000000----------------
இந்தக் கதைக்கு லைவ்லிப்ளானட் தளத்தில் வந்த சில சுவாரசிய பின்னூட்டங்கள் இங்கே
image credit:  business.rediff.com

Feb 17, 2012

அருகர்களின் பாதையின் காலக் கணவாய்கள்


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்



முதலிலேயே ஒன்று சொல்லி விடுகிறேன்: ஜெயமோகன் அவர்கள் அண்மையில் எழுதி முடித்த "அருகர்களின் பாதை" என்ற தொடர் பயணக் குறிப்புகளைப் பற்றிய எண்ணங்களை மட்டுமே இங்கு பகிர்கிறேன். இதைப் படிக்கும் நண்பர்கள், "என்னடா இவன், ஜெயமோகனுக்கே எப்படி எழுதுவதென்று பாடம் எடுக்கிறான்," என்று கோபப்பட வேண்டாம். அவர் இதுவரை எழுதியுள்ள பகுதிகளில் மேற்கோள் காட்டக்கூடிய பத்திகள் பல இருக்கின்றன. சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கும் குறைவில்லை. பிரமாதமான புகைப்படங்கள் ஒவ்வொரு பதிவிலும் உண்டு. அவற்றையெல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டுவதானால் நிறைய எழுதலாம். ஆனால் அதுவல்ல முக்கியம்.

ஜெயமோகன் இலக்கியவாதி என்ற அடையாளத்தைத் தாண்டி ஒரு ஆளுமையாக இருக்கும் நாட்கள் இவை. வழக்கம் போலவே இங்கே ஒரு டிஸ்கி-  பரவலாக  அறியப்படாதவராக, பெரும்பான்மை மக்கள் மத்தியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாதவராக அவர் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட, சமூக அக்கறையுள்ள பல இளைஞர்களுக்கு ஜெயமோகன் ஆதர்சமாக இருக்கிறார். அவர்களை நினைவில் கொண்டும் ஒரு வாசகனாகவும் மட்டுமே இந்தப் பதிவை எழுதுகிறேன்- தமிழில் பொருட்படுத்தத்தக்க கருத்துகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் எழுத்தாளர் என்ற வகையில் ஜெயமோகனிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதைச் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம் :)

பயணக் கட்டுரைகளை எழுதுபவர்கள் இரு வகை.  ஒரு வகையினர் தில்லியையே ஜெயிக்கப் போவதுபோல் படுபயங்கரமாக சத்தம் போட்டுக் கொண்டு கிளம்புவார்கள்.  நாமும் ஏதோ பெரிய பெரிய விஷயங்கள் வரப் போகிறதென்று படிக்க ஆரம்பிப்போம்.  கடைசியில் பார்க்கும்போதுதான், மன்னிக்கவும், நடுவிலேயே எங்கோ நாம் நம் நினைவைத் தொலைத்த இடத்தைப் பார்த்தால்தான், நம் அபிமான யாத்திரிகர் தில்லி விமான நிலையத்திலேயே ஆறு மாதங்களாக உட்கார்ந்திருந்திருக்கிறார் என்பது தெரியும்.  அப்புறம் ஒரு நாள் ஏதோ நினைவு வந்து, "என்ன ஆச்சு?" என்று தேடும்போது ஒரு பேரிடி இறங்கும்- அவர் தன் தொடருக்கு,  "இது பயணக் கட்டுரை அல்ல" என்று கிரிமினலாஜிக்காக தலைப்பு வைத்திருப்பார்.

ஆனால் யாத்திரிகர் ஜெயமோகன் அப்படிப்பட்டவரல்ல -  முடிவெடுத்தால் எடுத்ததுதான். ஜனவரி பதினான்காம் தேதியன்று பொங்கல், முறுக்கு இத்தியாதி வகையறாக்களுடன் கிளம்பினார் அவர். அப்போது துவங்கிய "அருகர்களின் பயணம்",  பிப்ரவரி பதின்மூன்றாம் தேதி சூடான உப்புமாவும் கருப்பு டீயுமாக முற்று பெற்றது (இது புறவயப்பட்ட காலவோட்டத்தைக் கருத்தில் கொண்டு மட்டுமே நாம் அறியக்கூடிய தரிசனம்- ஆனால், அகவயப்பட்ட அனுபவத்தின் எல்லைகள் பெல்காம் உப்புமாவின் படுபாதாள வீழ்ச்சியிலிருந்து காட்கர் கிராமத்து உளுந்துகூட்டிய சோற்றின் ஆகச்சிறந்த எழுச்சி வரை விரிகின்றன : இந்த அகப்பயண வரைபடம் பிறிதொரு சமயம் இங்கு பதிவு செய்யப்படலாம்). இந்தப் பயணத்தின் துவக்கத்துக்கும் முடிவுக்கும் இடைபட்ட ஏறத்தாழ முப்பது நாட்களில் தொடர்ந்து முப்பத்து ஒரு பயணக் குறிப்புகள் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். 

நண்பர்கள் சிலருக்கு அவரைப் பிடித்திருக்கலாம், சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். நம்மில் சிலர் அவரது எழுத்தின் ரசிகர்கள், சிலர் அரசிகர்கள். ஆனால் யாத்திரிகர் ஜெயமோகனின் தொழில் தர்மம் - அர்ப்பணிப்பு - நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பயணங்கள் களைப்பானவை.  உடல்நலனுக்குக் கேடானவை. எந்த ஒரு நீண்ட பயணத்திலும் ஆயிரம் பிரச்சினைகள், கவலைகள் நம்மை நிழலாய்த் தொடரும். இவை போதாதென்று ஆயிரம் திசைகளிலிருந்து ஆயிரம் கவன கலைப்புகள் நேரிடும். அத்தனையையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து,  ஒவ்வொரு இரவும் தூங்கப் போகுமுன் கர்மசிரத்தையாக எழுத உட்காருவதென்றால் அது சாதாரண காரியமா என்ன?

(இதை எழுதும்போதுதான் நினைவுக்கு வந்தவனாக, தில்லி விமானத்தில் ஆழ்ந்த நிஷ்டை கைகூடிய நிலையில் ஆறு மாதங்களாக அமர்ந்திருக்கும் நண்பரைப் பற்றி விசாரித்தேன்- அவர் அடுத்து அமெரிக்கா கிளம்பத் திட்டமிருக்கிறாராம். போச்சுடா!)

சீரியஸாகப் பேசினால்,  ஜெயமோகன் அருகர்களின் பாதையில் செய்த பயணம் முக்கியமான ஒன்று.  சமண வரலாறு, சமண ஆலயங்கள், இந்தியப் பண்பாடு மற்றும் இந்திய மரபு ஆகியவற்றினுள் காலம் மற்றும் வெளியில் செய்யப்பட்ட ஒரு நீண்ட பயணம் இது. தற்போது பயணக் குறிப்புகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெறும்போது சமணம் குறித்த விரிவான அறிதலை நிகழ்த்துவதாக இருக்கும். அது மட்டும் போதுமா?

நான் வாசித்தவரை இந்தப் பயணம் சமணத்தை ஆலயங்களாகவும் சிற்பங்களாகவும் அதன் உறைந்த வடிவில் பேசுவதாக இருக்கிறது.  சமண வரலாறு மற்றும் தத்துவங்கள் புதிய புரிதல்களாக, புதிய திசைகளில் விரிவதாக இருந்தாலும் சமகால சமணம் குறித்து அதிகம் பேசப்பட்டிருப்பதாக நினைவில்லை.  ஆனால், இன்றைய சமண சமூக அமைப்பு பரவலான கவனத்தைப் பெற வேண்டியது அவசியமாக இருக்கிறது. 

உதாரணத்துக்கு,  1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சமண மக்கள்தொகையில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்ற அளவில் பால்விகிதம் அதன் சமன்குலைந்த நிலையில் உள்ளது. ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற விருப்பத்தால் சமணர்கள் பெருமளவில் கருச்சிதைவு செய்து கொள்வதை இந்த நிலைக்குக் காரணம் சொல்கிறார்கள். இதை விவாதிக்கும் கட்டுரை இங்கே

ஒரு புழு பூச்சிக்குக்கூட தன்னால் எந்தக் கெடுதலும் வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருக்கும் ஒரு சமூகத்தில்தான் பெண் சிசுக்கொலை இந்தியாவிலேயே அதிக அளவில் நடைபெறுகிறது. மேற்சொன்ன சுட்டியில் சில மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 850 பெண்கள் என்ற நிலை இருப்பதையும், பீகார் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் 1000 ஆண்களுக்கு 600 பெண்கள் என்ற நிலை இருப்பதையும் குறிப்பிடுகிறார்கள. கண்ணுக்குத் தெரியாமல்- சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும்- நம் மண்ணில் ஒரு ஹோலோகாஸ்ட்டே நடந்து கொண்டிருக்கிறது.  இது வேதனையான விஷயம்.

அப்படி தப்பிப் பிறக்கும் பெண்களுக்கும் நிம்மதியான வாழ்க்கை அமைவதில்லை என்று எண்ண இடமிருக்கிறது.  சமண சமய துறவிகளில் ஆண்களைவிட பெண்கள் நான்கு மடங்கு அதிக அளவில் இருக்கின்றனர்.  உயிரைக் கொள்ளை கொள்ளும் அழகிகளாக உள்ள  பதின்ம வயது பெண்கள் துறவு பூணும் புகைப்படங்களை செய்தித்தாள்களில் பார்த்து நொந்து போன அனுபவம் உங்களுக்கும் நேர்ந்திருக்கும்.

இத்தனைக்கும், அருகர்களின் பாதை, அதன் துவக்கங்களைத் தொலைத்து ஓய்ந்துவிட்ட பாதையல்ல. ஜெயமோகனின் கட்டுரைகளைப் படிக்கும்போது இந்தியாவெங்கும் புதிய ஆலயங்கள் கட்டப்பட்டு வருவதை அறிகிறோம். பழைய ஆலயங்கள் சீரமைக்கப்படுகின்றன.  உயிர்த்துடிப்புள்ள ஒரு சமூகத்தை அவரது பயணத்தில் நாம் சந்திக்கிறோம். ஆனால் அதன் மறைவான மையத்தில் பெண்களின் கண்ணீர். அருகர்களின் பாதை இன்றும் தொடர்கிறது - தவறான திசையில்.

இந்தப் பதிவை இங்கு நான் எழுத முதற்காரணம் இதுதான்.  ஜெயமோகன் அருகர்களின் பாதையை நூல் வடிவில் எழுதும்போது, அது இன்றைய சமணர்களின் வாழ்க்கை முறையை, அவர்களுடைய விழுமியங்களைத் தீவிரமான கேள்விகளுக்குட்படுத்துவதாக இருக்க வேண்டும்.  நிகழ்கால நிஜங்கள் மறக்கப்படும்போது போலி உணர்வுகள் அந்த சமூகத்தின் மையத்தில் நிலைபெற்றுவிடும். அதன் கடந்த காலத்தில் எத்தனை உயர்ந்த மகோன்னதங்கள் இருப்பினும், சமகாலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத புளகாங்கிதங்கள் அந்த சமூகத்தை அழிக்கும். இது சமணர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும். 

சமணர்களின் பாதை இறந்தவர்களின் பாதையல்ல. இன்று இருப்பவர்களின் பாதை. இங்கு செய்யப்படும் பயணம் பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்ப்பதல்ல. இடுபாடுகளில் மறைத்து கிடக்கும் மாபெரும் சாதனைகளை நம் கற்பனைக் கண்கொண்டு கண்டு பிரமிப்பதல்ல. இந்தப் பயணம் நாஸ்டால்ஜியாவில் ஆழ்த்துவதாக இருந்துவிடக் கூடாது  சமணத்தின் மகத்தான தத்துவங்களையும் தரிசனங்களையும் எண்ணி வியப்பதோ, அதன் வானளாவிய சிற்பங்களின்முன் நம் ஆன்மிகச் சிறுமையை உணர்ந்து வணங்குவதுமோகூட அருகர்களின் பாதையாக இருக்க முடியாது. ஜெயமோகனின் பயணம் எப்போது படித்தாலும் அது வாசகனின் எதிர்காலத்தினுள்ளும் நீண்டு செல்லக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாக இருக்க வேண்டும். 

இங்கே கொஞ்சம் சென்டிமெண்ட் பேச வேண்டியிருக்கிறது.  வாழ்க்கையை ஒரு பயணமாகவும் சாகரமாகவும் பேசுவது நம் வழக்கம். தீர்த்தங்கரர்கள் என்றால் ford makers என்று விக்கிப்பீடியா சொல்கிறது. திசையற்ற சாகரத்தில் நம்மைப் போன்றவர்கள் சரியான திசையில் பயணிக்க வசதியான வாய்க்காலோ, வரப்போ, கால்வாயோ கட்டித் தருபவர்களே தீர்த்தங்கரர்கள்.

சமய நம்பிக்கை சீரழிந்த சமகால தமிழ் அறிவுச் சூழலில் இலக்கியவாதிகளே இதைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  ஜெயமோகன் என்றில்லை, யாராகவும் இருக்கட்டும். எழுத்தாளர்களுக்கு வரும் கடிதங்களில் பலவும் வாசகர்களின் இருப்பு மற்றும் ஆன்மிகச் சிக்கல்களுக்கு விடை தேடுபனவாக இருக்கின்றன. இது ஒன்றிரண்டு நல்ல கதை கட்டுரை கவிதை எழுதிய எந்த ஒரு எழுத்தாளனுக்கும் பழக்கப்பட்ட அனுபவமாக இருக்கும். தன்னை மிதவையாகவே உணரும் எழுத்தாளனும் தன் வாசகர்களுக்கு தோணியாக இருக்கிறான் என்பதுதான் இன்றைய மெய்ப்பாடு.

எனவே, அருகர்களின் பாதை ஏதோ ஏழெட்டு பேர் சென்று திரும்பிய இன்பச் சுற்றுலாவாக முடிந்து விடக் கூடாது, வரலாற்றை நினைவூட்டுவதும்கூட முக்கியமல்ல.  தனி மனிதனின் ஆன்மிக மீட்சியை உணர்த்துவதும்கூட குறைபட்ட வெற்றியாகவே இருக்கும்.  எழுத்தாளன் இன்றைய தமிழ்ச் சூழலில் டால்ஸ்டாயாகவும் தாஸ்தெவெஸ்கியாகவும் மதிக்கப்படக்கூடிய நிலையில் நிற்கிறான்.  இந்தப் பொறுப்பை உணர்ந்து அவன் எப்படிப்பட்ட பயணத்தை நிகழ்த்துகிறான் என்பது முக்கியம்.

இந்தப் பதிவு, எழுதப்பட்ட கட்டுரைகளின் விமரிசனமாக இல்லை : ஆனால், எழுதப்படப் போகும் புத்தகத்தின் முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் :)

முடிவாக, அருகர்களின் பாதையில் ஒரு முக்கியமான புகைப்படமும் மேற்கோளும்:



"இரண்டாயிரம் வருடத்துக்கு மேல் பழைமை கொண்ட கணவாய்ப்பாதை இது. சாதவாகனர் காலகட்டத்தில் இந்தப் பாதை கல்யாணுக்குச் செல்லும் முக்கியமான பாதையாக இருந்தது எனக் கல்வெட்டுகள் சொல்கின்றன. நான் என்றால் நாணயம், கட் என்றால் வழி. இது ஒரு சுங்கமுனையாக இருந்திருக்கிறது. இங்குள்ள குகைகளில் கிடைக்கும் கல்வெட்டுகள் மௌரியர் காலத்திலேயே இந்தப் பாதை பயன்பாட்டில் இருந்ததாகச் சுட்டுகின்றன. வட இந்தியாவில் இருந்து தென்னகத்துக்கு வரும் வழிகளில் இது முக்கியமானதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் இதற்குக் கீழே உள்ள பகுதிகள் எல்லாமே வளமானவை. நீர் வசதி கொண்டவை."

யாத்திரிகர் ஜெயமோகனுக்கு நன்றி கலந்த வணக்கத்துடன் கூடிய வாழ்த்துகள்!


Sep 14, 2011

நிமிஷக் கதைகள்

நேற்று மதியம் அலுவலகம் போகுமுன் தெருமுனைக் கடையில் லிம்கா குடிக்க வண்டியை நிறுத்தினேன்.  அந்தக் கடைப் பையனை எப்போதும்  கவனித்திருக்கிறேன். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பான். நாம் கேட்பதை இரண்டு முறைகள் திருப்பிச் சொன்னால்தான் கேட்டது கேட்டதாகக் கிடைக்கும். வாங்கின பொருட்களுக்கு விலை சரியாகப் போட்டிருக்கிறானா என சரிபார்த்துக் கொள்ளுதல் எப்போதும் நலம். நாற்பது ரூபாயை பதினாலு என்றும் சொல்வான். பத்து ரூபாயை ஐம்பத்தி நாலு என்றும் சொல்வான்.

நான் லிம்கா அருந்திக் கொண்டிருந்தபோது சொல்லிவைத்தாற்போல் அந்தப் பெரியவருக்கு இரண்டு கிலோ அரிசியை எழுபத்து நாலு என்றான். 

"ஒரு கிலோ எவ்ளோ தம்பி?"

"முப்பத்தி ஆறு"

"அப்போ ரெண்டு கிலோ?"

"ஓ! சாரி சார்! இந்தாங்க ரெண்டு ரூபா!"

கால்குலேட்டர், கம்ப்யூட்டர்கள் இல்லாமல் கணக்குப் போட்ட  பழங்கதைகள் பேசத் தொடங்கிவிட்டார் பெரியவர்.

பதினைந்து வருடங்களுக்கு முன் மூலக்கடை ஃ பாத்திமா ஸ்டோரில் பார்த்த கணக்கு என்ற நபர் நினைவிற்கு வந்தார். அங்கே அடித்த ஸ்பார்க்கில் எழுதியதுதான் "சிவலிங்கம் ஸ்டோர்ஸ்" என்ற இந்த நிமிஷக் கதை. 

நட்பாஸ் அவர்களின் லைவ்லி பிளானெட் தளத்தில், அவர் தந்த ஊக்கம் மற்றும் அனுமதி ஆகியவை துணை கொண்டு கடந்த சில வாரங்களாக நிமிஷக் கதைகள் எனப்படும் flash fiction வகைக் கதைகளை முயற்சித்து வருகிறேன். நான் எழுதும் நிமிஷக் கதைகளுக்குப் பெரிய மனது பண்ணி தன் தளத்தில் இடம் தரும் நட்பாஸ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Flash fiction பற்றி விக்கி:  http://en.wikipedia.org/wiki/Flash_fiction
.
.
.

Jun 9, 2011

சொக்கனின் கார்காலம்


சிறப்புப் பதிவர்: நட்பாஸ் 


இத்தனை நாட்களாக நான் நம் டிவிட்டர் நண்பர் என் சொக்கன் அவர்களின் கார்காலம்என்ற தொடர்கதையைப் படிப்பதை ஏன் தவிர்த்தேன் என்று வியப்பாக இருக்கிறது. ஒரு சமயம் அவருடன் அன்றாடம், நிமிடத்துக்கு நிமிடம் டிவிட்டரில் தொடர்பில் இருப்பதால் அவரை ஒரு இளையராஜா ரசிகராக, புத்தகங்களின் ஆராதகராக நினைக்கத் தோன்றுகிறதே தவிர, அவரை ஒரு இலக்கியவாதியாக என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதை இப்போது படித்துக் கொண்டிருந்தால், சொக்கனும் இந்த வரிகளை ஒரு மெல்லிய புன்னகையோடு கடந்து செல்வார் என்று தோன்றுகிறது- அவருக்கு தான் ஒரு இலக்கியவாதி என்ற பாவனை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் அப்படி அவர் தன்னை நினைத்துக் கொண்டால் அதில் தவறிருப்பதாகச் சொல்ல முடியாது. டிவிட்டரில் உள்ள ஒவ்வொருத்தரும் இலக்கியவாதிதான் என்பதைத் தவிர வேறு ஒரு வலுவான காரணமும் எனக்குத் தோன்றுகிறது. அதைச் சொன்னால் நீங்கள் எல்லாரும் என்னை அடிக்க வருவீர்கள். 

சொக்கனின் கார்காலம் படிக்கும்போது எனக்கு முதலில் வண்ணதாசனின் "போர்த்துக் கொள்ளுதல்" என்ற கதை நினைவுக்கு வந்தது. வண்ணதாசன் தன் கதையை ஏறத்தாழ முழுதும் சரசு என்ற பாத்திரத்தின் பார்வையில் எழுதியிருப்பார். வண்ணதாசனின் அவன் என்ற பெயர் சொல்லப்படாத பாத்திரம், சொக்கனின் கதையில் அரவிந்தனாகப் பேசுகிறதோ என்றுகூட நினைத்தேன். சரசு வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சொக்கனின் செல்வி தன்னுள் பொதித்து வைத்திருக்கிறாள். அவள் அரவிந்தனுக்கு அறிய முடியாத புதிராகவே இருக்கிறாள். ஆனால் சரசுவை அலட்சியப்படுத்தும், சரசுவின் உணர்வுகளில் அக்கறை காட்டாத அந்த அவன், அவனும் இதயம் உள்ளவன்தான். அவனால் தன் உணர்வுகளைப் பேச முடிந்திருந்தால் அவனும் அரவிந்தன் மாதிரி பேசியிருப்பானோ என்று தோன்றுகிறது.

போர்த்துக் கொள்ளுதலைப் படித்த காரணத்தால், எனக்கு கார்காலத்தில் அதன் எதிரொலிகளை நினைவு கூர்ந்து ரசிக்க முடிந்தது. வண்ணதாசனின் சிறுகதையில் வந்தவர்களின் வாழ்வின் மறுபக்கம் சொக்கனின் கார்காலத்தில் தென்படுவதாக நினைத்துக் கொண்டேன்.

எவ்வளவுதான் நேசம் மிகுந்தவர்களாக இருந்தாலும், உடலளவில் ஒன்றுகூட, மன அளவில் நிரந்தரமாய் இருக்கும் நிறைக்க முடியாத இடைவெளி எந்தவொரு தம்பதியராலும் நெருடலாகவே உணரப்படும் என்று நினைக்கிறேன். அதிலும் புதுமணத் தம்பதிகளுக்கு இந்த உணர்வு மனதை வருத்தும் தொடர்ந்த உறுத்தலாக இருக்கும் என்று தோன்றுகிறது. காதல் என்பது தன்வயமாக்கிக் கொள்ளுதல் என்று சொன்னால், இவர்களில் யாருக்கு வலுவான ஆளுமை இருக்கிறதோ அவர்கள் மற்றவரின் ஆளுமையை முழுமையாக தனதாக்கிக் கொள்ள நினைப்பார்கள், இல்லையா?

கார்காலத்தில் செல்விக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை- அவள் அரவிந்தனை உள்ளபடி ஏற்றுக் கொண்டு சூழலின் தேவைகளுக்கேற்ப தன் உணர்வுகளை நெகிழ்த்திக் கொள்கிறாள். ஆனால், அரவிந்தனுக்கு அவள் தன்னை முழுமையாக இப்படி ஒப்புக் கொடுத்ததும்கூட ஒரு குற்ற உணர்வையே தருகிறது- அவன் தனக்கும் செல்விக்கும் இடையில் ஒரு பெரிய பள்ளம் இருப்பதாக நினைக்கிறான்- செல்வியால் அதைக் கடக்க முடிகிறது, ஆனால் அரவிந்தன் எப்போதும் தான் எட்டியே நிற்பதாக உணர்கிறான். தன்னால் ஏன் அவளுடன் இயல்பாக நெருங்கியிருக்க முடியவில்லை, அவளது உணர்வுகளோடு ஒருமித்து உணர முடியவில்லை என்று மன உளைச்சலடைகிறான்- தன் இந்த விலகலுக்கு தனது பணம், பதவி மற்றும் தொழில் ஈடுபாடு இவையே காரணமாக இருக்குமோ என்றே சந்தேகப்படுகிறான்.

தொடர்கதை மிக மெதுவாக, பெரும்பாலும் அரவிந்தனின் மன ஓட்டத்தை ஒட்டியே சென்றாலும் அவனது உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் சொக்கன். அரவிந்தனுடைய உணர்வுகளுக்கு நம்மால் இசைய முடியவில்லையென்றால், இந்தக்கதையை நம்மால் பத்து நிமிடத்துக்குமேல் படிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

வண்ணதாசனின் கதையின் சாயலில் சொக்கனின் கதை இருக்கிறது என்று சொல்வது சொக்கனுக்கு நாம் இழைக்கும் அநீதி- இருந்தபோதும், இதைச் சொன்னதற்கு வண்ணதாசன் ரசிகர்கள் என்னை அடிக்க வருவீர்கள் என்றால், அடுத்து நான் சொல்வதைக் கேட்டால் சொக்கனே அடிக்க வந்து விடுவார்.

காளிதாசனின் மேக சந்தேசம் நினைவிருக்கிறதா? ஒரு யக்ஷன், குபேரனின் பணியாள், ஏதோ ஒரு குற்றம் செய்த காரணத்தால் விரட்டி விடப்படுவான். அவன் பருவமழைகால மேகங்களை பிரிந்திருக்கும் தன் காதலிக்கு தூது அனுப்புவான்.

கார்காலம் தொடர்கதையில், ஒரு வகையில் பார்த்தால் அரவிந்தன் யாரோ ஒரு குபேரனுக்குப் பணியாளாக இருக்கிறான். அவன் செய்த குற்றம்? தன் தொழிலில் முனைப்பாக இருப்பது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் ஒவ்வொரு வாரமும் பம்பாய், கல்கத்தா என்று தன் மனைவியை கண்ணீரும் கம்பலையுமாக விழுங்க முடியாத தொண்டை அடைப்புடன் பிரிந்து செல்கிறான்- தன் காதலையே வெளிப்படுத்தத் தெரியாதவன், பிரிவின் தவிப்பை மட்டும் சொல்லி விடுவானா என்ன?

காளிதாசனின் யக்ஷனுக்குத் தூது செல்ல மேகங்கள் கிடைத்தன, தன் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைத்தன. இங்கே,  அரவிந்தன் மும்பையின் மழைக்கால அழுக்கு சாலைகளில், செல்வி இல்லாத போதுகளின் தன் பிரிவாற்றாமையை அவளிடம் சொல்லக்கூடிய வல்லமை பொருந்திய காதலின் மொழியை, ஒரு பரிசுப் பொருளில் காணத்தேடி அலைகிறான்- சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் உளைச்சல் தரும் பிரிவின் வேதனையை விவரிக்க வார்த்தைகள் கிடைக்காமல். காளிதாசனின் யக்ஷனுக்கு இருக்கிற கவித்துவ உணர்வுகள், சொக்கனின் அரவிந்தனுக்கு சரியான வாக்கியங்களாகக்கூட பிடிபடுவதில்லை.

கதை இதுவரை வந்திருக்கிறது- இனி என்ன நடக்கும் என்பதை வாசிக்க ஆவலாக இருக்கிறேன். 
 .
.
.

May 1, 2011

மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை


சிறப்புப்பதிவர் : நட்பாஸ் 

நேற்று என்னால் தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ந்த "வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்குப் போக முடிந்ததென்றால் அதற்கு நான் என் நண்பர் கோபி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஏடிஎம் அட்டை எப்போதோ காலாவதியாகி விட்ட நிலையில், வீட்டில் வெறும் இருபது ரூபாய்தான் இருக்கிறது என்ற என் கையறு நிலையை இரவுதான் நான் உணர்ந்த்திருந்தேன். அதனால் ஐஓபி வங்கி கிளை திறப்பதற்கு அரை மணி நேரம் முன்னமேயே அங்கு போய் காசு எடுப்பதற்காக க்யூவில் நிற்க வேண்டிய அவசர நிலை. காஷியர் வந்தார், சன்னலைத் திறந்தார், "காசு கட்டறவங்க முதல்ல வாங்க," என்றார். நியாயம்தானே? பணம் நம்முடையது என்றாலும் வாங்குபவனை விட எப்போதும் கொடுப்பவனைக் கூடுதல் மரியாதையுடன் வரவேற்பதுதானே வணிக பண்பாடு? 

அப்போது முன்னால் வந்தவர்தான் கோபி. என்னைக் கண்டு, "இங்கேயும் நம்மாளுங்களைப் பாக்காம இருக்க முடியாதா?" என்று அலுத்துக் கொண்டாலும், நான் பஸ்ஸில்தான் வீடு திரும்பவிருக்கிறேன் என்ற என் நிலையை அனுதாபத்துடன் அவதானித்தார். 

"க்யூவில் எவ்வளவு நேரம் நிப்பே? நான் பைக்கில் போறேன், என்கூட வந்துடேன், " - அடியேனின் பொருளாதார நிலை அதற்கு இடம் தருவதாயில்லை என்பதை அவருக்குத் தெரிவித்தேன்.

"உனக்கு எவ்வளவு வேணும்?"  என்று என் கையிலிருந்த பணமெடுப்புப் படிவத்தை வாங்கிப் பார்த்தார், "ஐயாயிரம்தானே? நான் தரேன், வா"

அவர் என்னை என் வீட்டில் சேர்ப்பித்துவிட்டு அப்புறம்தான் தன் வீட்டுக்குப் போனார், இத்தனைக்கும் அவருக்குத் திருமணமாகி குழந்தைகளெல்லாம் இருக்கிறார்கள்.

("மாமா, நீ மாமியைக் கல்யாணம் செஞ்சப்புறம் எவ்வளவு நாள் சந்தோஷமா இருந்தே?"

"ரெண்டு வருஷம்"

"எல்லாரும் ஒரு வருஷம்னுதானே சொல்லுவாங்க. நீ மட்டும் எப்படி ரெண்டு வருஷம் சந்தோஷமா இருந்தே? அந்த ரகசியத்தை சொல்லுங்க. ப்ளீஸ்"

"அந்த ரெண்டு வருஷம் அவ ட்ரான்பர் ஆகி திண்டுக்கல்லில் இருந்த வருஷங்கள்"

கோபி வழியில் சொன்ன நிகழ்வு)

நண்பரின் புண்ணியத்தில் அதிகாலையிலேயே உச்சி சூரியனின் உக்கிரத்துடன் புலரும் சென்னையின் இளங்காலை வெயிலைத் தவிர்த்தேன். நன்றி கோபி, நல்ல உதவி, இதுபோன்ற அற்புதங்கள் என்றோ ஒருமுறையே நிகழ்வதுண்டு. அவற்றின் நினைவுகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

---------------------------------------------------------------



வெங்கட் சாமிநாதன் தன்னை ஒரு அசாத்திய திறமைகள் கொண்ட சிந்தனையாளராகக் காட்டிக் கொள்வதில்லை. "பொதுபுத்திக்கு அப்பாற்பட்ட எதையும் நான் சொல்லிவிடவில்லை. நான் எழுத்தாளன்கூட இல்லை. என் கட்டுரை "எழுத்து" இதழில் வெளிவந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் என் நண்பர் ஒருவர், "முதலில் சாமிநாதனை ஒழுங்கா தமிழில் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளச் சொல்லு. அப்புறம் அவன் எழுதப் போகட்டும்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கப்புறம் ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போதுகூட அன்னா கண்ணனைக் கேளுங்கள்.  நான் எழுதுவதில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றன என்பதை அவர் சொல்வார். வெறுமே ஐம்பது வருஷமா பொதுபுத்திக்குப் புலப்படக்கூடியதைச் சொன்னதுக்காக இப்படி விழா எடுத்துப் பாராட்டுவார்களா?" என்ற கேள்வியை முன்வைக்கிற வெங்கட் சாமிநாதன்  தன் புகழுக்கான அத்தனை பெருமையும் தமிழ்ச் சூழலையே சேரும் என்கிறார்.

""கட்டுமரத் துடுப்பைப் போல ஆடுதடி இடுப்பு" என்று லட்சக்கணக்கில் செலவு செய்து படமெடுக்கிறார்கள். இதிலுள்ள அபத்தம் பொதுபுத்திக்குத் தெரியாததா? எல்லாரும் இதை மௌனமாக ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லாருக்கும் தெரிந்த இதன் அபத்தத்தை, அழிவை யாரும் அதிகம் பேசுவதில்லை.  ஆனால் நான் பெரிதாக சொல்கிறேன்.  மற்றவர்களுக்கு ஏதேதோ சார்புகள் இருக்கின்றன. எனக்கு அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. அதனால் நான் சொல்லும் சாமானிய, பொதுபுத்திக்குத் தெரிந்த விஷயங்கள், துணிச்சலாக முன்வைக்கப்பட்ட சிந்தனைகளாக தமிழ்ச் சூழலில் தெரிகிறது," என்கிறார் வெசா. 

"இங்கு நான் மூன்று கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை போல் இருக்கிறேன்," என்று நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டாலும் அதில் உள்ள உண்மையைதான் நேற்றைய விழாவில் பேசிய அனைவரும் வெவ்வேறு திசைகளிலிருந்து சுட்டிக் காட்டினார்கள் என்று எனக்கு தோன்றியது- சிலர் மறைமுகமாக சொன்னார்கள், சிலர் வெளிப்படையாக சொன்னார்கள், கடந்த எண்பது ஆண்டு கால திராவிட இயக்க சிந்தனையின் தாக்கத்தின் விளைவுகள் குறித்து நேற்று பேசிய அனைவருக்கும் கோபமும் வருத்தமும் இருந்தது.  தமிழ் மரபின் வேர்களைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் வெகுசன ரசனையின் வெற்றி,  பரப்பியல் சார்ந்த சிந்தனைகளின் மயக்கம்- இவை தந்த பெருமிதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக கைமாற்றிப் பாதுகாத்த செல்வங்கள் அத்தனையும் மக்களால் அலட்சியபடுத்தப்பட்டு குப்பையோடு குப்பையாய் மட்கிப் போவதில் நேற்றுப் பேசிய அனைவருக்கும் துயரும் தாபமும் இருந்தன. இதற்கு எதிராக இயங்கி, தமிழ் மரபின் வேர்களைப் பாதுகாத்து, அதன் முக்கியத்துவத்தை பண்பாட்டின் மையத்துக்குக் கொண்டு வர முயற்சி செய்தவர்களில் முக்கியமானவராக இவர்கள் வெங்கட் சாமிநாதனைப் பார்க்கிறார்கள். 

அதிகம் யோசிக்காமல் சுயசார்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒற்றைப் பார்வையின் மேலாதிக்கத்தின் காரணமாக நம் பண்பாடு தன் பன்முகத்தன்மையை இழந்து தன் தொன்மைக்கு துரோகம்  செய்கிறதே என்ற வருத்தம் விழாவில் பேசிய அனைவரின் உரையிலும் வெளிப்பட்டது. நாஞ்சில் நாடன் மட்டும்தான் வழக்கம் போலவே தன் இயல்புப்படி இதை வெளிப்படையாக, ஆணித்தரமாகச் சொன்னார், "எனக்குப் பிடிக்காத வார்த்தை, இந்த 'பார்ப்பான்' என்பது. அதை சொல்லி விட்டால், எதிர்த்து எதுவும் பேச முடியாது என்று ஆகிவிட்டது.  இதைச் சொல்லும் என்னைப் பார்ப்பன அடிவருடி என்பார்கள். ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்," என்றார் நாஞ்சில் நாடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் உரக்கவே. தன் வழக்கப்படி அவர் ஆவேசமாக தமிழ்ச் சூழலை சாடிக் கொண்டிருக்கும்போது சீட்டு அனுப்பி தடுத்து  விட்டார்கள்.  அவருக்கு இருக்கிற கோபத்துக்கு ஊர் ஊராய்ப் போய் நாள் கணக்கில் கோபப்படுவார் நாஞ்சில் என்று தோன்றுகிறது.

நாஞ்சிலைத் தவிர்த்துப் பார்த்தால் நேற்று பேசியவர்களில் அனுபவப்பட்ட சிலரைத் தவிர மற்றவர்களுக்குப் பேசத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அவரவர் தமக்கிருந்த ஏதோ ஒரு காரணத்தால் தமிழில் தொடர்ந்து நாலு வாக்கியம் பேசவே சிரமப்பட்டார்கள். "இந்தப் புத்தகம் போடுவதற்கான எண்ணம் எங்களுக்கு ஸ்காட்ச் குடித்துக் கொண்டிருக்கும்போது வந்தது." என்ற பின்நவீனத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தகவலுடன் இந்த விழா துவங்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

யார் யார் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்களை நான் பதிவு செய்யப்போவதில்லை. அந்த அளவுக்கு எனக்கு நினைவுத் திறனும் கிடையாது. ஒவ்வொருத்தரும் தன் துறை, அல்லது தன் களம் சார்ந்த பார்வையில் வெங்கட் சாமிநாதனை அணுகினார்கள் என்று சொல்லலாம்.  நாஞ்சில் நாடன் பெரும்பாலும் இலக்கியம் மற்றும் அது சார்ந்த சமூக சூழல்,  வெளி ரங்கராஜன் நாடகம் மற்றும் நுண்கலை விமரிசனத்தில் வெங்கட் சாமிநாதனின் பங்களிப்பு- குறிப்பாக அவரால் நவீன தமிழ் நாடகத் துறையில் ஏற்பட்ட படைப்பூக்கம் பற்றி பேசினார். ஜெயமோகன் வெங்கட் சாமிநாதனின் விமரிசனப் பார்வை குறித்தும் அது எதிர்கொள்ளப்பட வேண்டிய விதம் குறித்தும் பேசினார் (இது பற்றி நண்பர்கள் விரும்பினால் தனி குறிப்பு பிற்சேர்க்கையாக இப்பதிவில் இணைக்கப்படும்). செங்கதிர் மிகுந்த தடுமாற்றத்துடன் பேசினார், அவர் என்ன சொல்ல வந்தாரோ அதை சரியாக சொல்லவில்லை என்றுதான் தோன்றுகிறது. நாட்டார் கதை ஒன்றைச் சொல்லி தனித்துவம் குறித்து ஆழ்ந்த ஒரு கருத்தை அவர் முன் வைத்தார் , ஆனால் அவருக்கு அதை அழகு செய்து சொல்லத் தெரியாததால், இவ்வளவுதானா என்று எனக்குத்  தோன்றியது. பொதுவாக ஆழமான உண்மைகள் ஆரவார அலங்காரங்கள் இல்லாமல் வந்தால் சாதாரணமாகத்தான் இருக்கும்- வெங்கட் சாமிநாதன் கூறும் பொதுபுத்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மிக அரிதாகவே புலப்படுகின்றன, பேரரசனின் புத்தாடைகளைப் போல.

இவர்கள் தவிர கவிஞர் திலகபாமாவும் அரவிந்தன் நீலகண்டனும் பேசினார்கள். கவிஞர் திலகபாமா எழுத்தாளர்களே விமரிசகர்களாக இருப்பதில் உள்ள ஒரு அபாயத்தைச் சுட்டிக் காட்டினார்- அவர்கள் தங்கள் எழுத்தைப் போன்றதாக இல்லாத படைப்புகளை தோல்வியடைந்தனவாக ஒதுக்கி விட நேர்கிறது, என்றும், தங்களைப் போன்று எழுதுபவர்களை ஒரு இன்செக்யூரிட்டி காரணமாக நசித்துவிட நேர்கிறது என்றும் சொன்னார். இது எந்த அளவுக்கு சரியான கருத்து என்று தெரியவில்லை. இருந்தாலும் படைப்பூக்கத்தில் செயல்படுகிறவர்களுக்குத் தங்களுக்குப் படைப்பூக்கம் அளிக்காத எதுவும் படைப்பு என்ற அளவில் தோற்றுப் போனதாகவே தெரியும் என்பது ஏற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.  மற்றபடி நசிப்பது, நசிக்காமல் இருப்பது போன்றவை தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயங்கள்.  இந்த மனப்போக்கைக் கைகொள்பவர்கள் நம்மிடையே எங்கும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டனின் பேச்சு விளையாட்டு போல அவருக்கு காவி சாயம் பூசும் பா ராகவன் போன்றவர்களுக்கும் அதை வினையாகவே செய்பவர்களுக்கும் அநீதி செய்வதாக இருந்தது. நான் நினைத்த மாதிரி இல்லாமல்,  நீல கலர் முழுக்கை சட்டை போட்டு வந்திருந்தார்- அவர் அரங்கில் அமரத் தேர்ந்தெடுத்த இருக்கைகள் பெரியாரின் உருவப்படத்தை ஒட்டியிருந்தன.  பெரியாரின் உருவப்படத்தின் கீழ் சிஷ்யப் பிள்ளைக்குரிய அடக்கத்துடன் அரவிந்தன் நீலகண்டன் யாரோ ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த அரிய காட்சியை காவிப் படைக்கு பயந்து நான் புகைப்படமெடுக்கத் துணியவில்லை. அவரும் தன் பேச்சில், மரபுகளைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்குபவர்கள் அடிப்படைவாத அடையாளங்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது, இதைத் தவிர்த்து, மரபை மீட்டு முன்னெடுத்துச் செல்வது எப்படி என்பதை நாம் யோசிக்கும்போது, அங்கு வெங்கட் சாமிநாதன் முக்கியமானவராக இருக்கிறார் என்று பேசியது அரவிந்தன் நீலகண்டனின் பிம்பத்துக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் பதிவின் துவக்கத்தில் சொன்ன மாதிரி, கடன் வாங்கிய காசில்தான் விழாவுக்கே போயிருந்தேன்.  போகும்போதே என்ன ஆனாலும் புத்தகத்தை வாங்கிவிடக் கூடாது என்று முடிவு செய்துகொண்டுதான் போயிருந்தேன்- என் நிலைப்பாட்டுக்குரிய கடப்பாடுகள் நியாயமானவை என்று நான் இப்போதும் நினைக்கிறேன். இதுவரை பேசியவர்கள் இலக்கியம், இசை, ஓவியம், நடனம், நாடகம், நாட்டாரியல் மற்றும் காண்பாரியம் குறித்து வெங்கட் சாமிநாதன் தன் கருத்துகளை விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக முன்வைத்தார் என்று பேசியிருந்தார்கள்.  அவரது பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்றும் சொல்லியிருந்தார்கள்.  ஆனால் வெங்கட் சாமிநாதன் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் புத்தகத்தை வாங்கக் கூடாது என்ற என் முடிவை மாற்றிக் கொள்ளப் போதுமானதாக யார் பேசியதும் இருந்திருக்கவில்லை- இவர்களின் உரை அறிவு சார்ந்த ஒன்றாக மட்டும் இருந்திருந்த காரணத்தால்.

வெங்கட் சாமிநாதன் கால காலத்துக்கும் மதிக்கப்பட வேண்டிய மனிதராக இருந்துவிட்டுப் போகட்டும், அவரது எழுத்து நம் பண்பாட்டின் வெவ்வேறு நரம்புகளைத் தாக்கித் தூண்டி எழுச்சியுறச் செய்திருக்கட்டும். ஆனால் அதனால் எனக்கென்ன வந்தது? கைக்காசு போட்டு ஒரு புத்தகத்தை வாங்கப் போதுமான காரணங்களா அவை? நான் என் காசை செலவு செய்தாலும் செய்யாவிட்டாலும் எதுவும் மாறப் போவதில்லை. எனவே ஒரு மாதிரி விண்டோ ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோதுதான் தன் முடிவுரையைப் பேச அகிலன் வந்தார்.

இந்தப் புத்தகம் பதிப்பாகக் காரணமாக இருந்தவர்களில் இவரும் சனாதனன் என்பவரும் இலங்கைத் தமிழர்கள். அண்மையில் இலங்கையில் நடந்த யுத்தத்தில் இங்குள்ள தமிழர்கள் அக்கறை காட்டவில்லை என்ற ஏமாற்றத்தின் காரணமாக சனாதனன் தமிழகம் வருவதில்லை என்றிருக்கிறாராம். அகிலன் ஒரு மிக எளிமையான விஷயத்தைச் சொன்னார். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாடு குறித்து பட்டப்படிப்பு படிக்க முடியும் என்ற நிலை உண்டு- அகிலன் அங்கு படித்த காலத்தில் இலக்கியம் நீங்கலாக, தமிழ் நாடகம், நடனம், இசை, நாட்டாரியல் என்று எந்த நுண்கலையைத் தொட்டாலும் அதில் வெங்கட் சாமிநாதன் நீங்கலாக வேறு எவரும் பொருட்படத்தக்க வகையில் எந்த ஆய்வு நூலையும் எழுதியிருக்கவில்லை என்றார் அவர். படித்தால் அவர் எழுதியைதான் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது என்று அகிலன் சொன்னதும், எனக்கு ஏறத்தாழ தமிழர்கள் அனைவரும் ஒரு நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக தோன்றியது. வெங்கட் சாமிநாதன் தனியொருவராக அதன் மரபுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முயன்றிருக்கிறார். தமிழ் மரபின் தொன்மையை தமிழ் அறிவுச் சூழலின் மையத்துக்குத் தன் வாதங்கள் மற்றும் விவாதங்கள் வழியாக கொண்டு வர ஐம்பதாண்டுகளாக பாடுபட்டிருக்கிறார் வெங்கட் சாமிநாதன். அவர் குறித்த வாதங்கள் விவாதங்களைத் தொகுத்து அவற்றின் வழியாக வெங்கட் சாமிநாதனை அறிவதே பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதாக முடிவு செய்தோம் என்றார் அவர்.

உண்மையாகவே சொல்கிறேன், அவரது பேச்சு என்னுள் ஒரு மனவெழுச்சியைத் தூண்டுவதாக இருந்தது- பாக்கெட்டில் ஒரு பகடை உருண்டது. முன்னூறு ரூபாய் காலி. ஒரு நிமிடம்தான் நினைத்துப் பார்த்தேன்-  அகிலனையும், இங்கே வருவதில்லை என்று முடிவு செய்திருக்கும் சனாதனையும் வெங்கட் சாமிநாதனைக் குறித்து ஒரு புத்தகம் போடத் தூண்டியது எது? மொழி. மொழி அவர்களுக்கு தவிர்க்க முடியாத வாழ்வாகவும் வீழ்ச்சியாகவும் இருக்கிறது. மொழியும் அதன் வரலாற்றைத் தன்னுள் அடக்கித் திரண்டிருக்கும் மரபும். இதைக் காக்க வெங்கட் சாமிநாதன் நேர்மையுடன் இயங்கியிருக்கிறார். அதை பெருமைப்படுத்தி இவர்கள் பணத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து ஒரு புத்தகம் போடுகிறார்கள், அதன்முன் என் காசு பிச்சைக் காசு, இல்லையா?

மொழியும், அதன் பண்பாடும் மரபும் நம் யாருக்கும் தனியுடைமை அல்ல. நம் சார்புகள் எவையாய் இருந்தால் என்ன? நாம் எங்கிருந்தால் என்ன, என்ன சாதியாய், என்ன சமயமாய் இருந்தாலென்ன? நம் மொழியே வேறாக இருந்தால்தான் என்ன?- இப்புத்தகம் வெளிவர உழைத்த திலிப் குமார் ஒரு குஜராத்தி என்கிறார்கள் (பெண்ணைப் பெற்ற அப்பா போல் அவர் அரங்கில் இங்குமங்கும் நடந்து எல்லாரையும் கவனித்துக் கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது).

இதுதான் நாம்.  இதை நேர்மையுடன் சுட்டிக்காட்டியதால்தான் வெங்கட் சாமிநாதன் மீது இன்றும் கவனம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இறுதியில் பேசும்போது வெங்கட் சாமிநாதன் சொன்னார், வீட்டில் அமர்ந்து பேசுவது போன்ற நெருக்கம் அவர் பேச்சில் இருந்தது. "நியாயமாகப் பார்த்தால் நான் எழுத்தாளன் அல்ல. என் எழுத்து இவ்வளவு கவனம் பெற்றிருக்கக் கூடாது. என் முதல் தொகுப்பு எங்கோ ஒரு சிற்றூரில் இருந்த விவசாயத் துறை சார்ந்த மூவரால் பதிப்பிக்கப்பட்டது. இப்போது இது இங்கே டெல்லியில் ஒருவர், வெளிநாட்டில் ஒருவர், சென்னையில் ஒருவர் என்று வெவ்வேறு நபர்களின் தனிப்பட்ட முயற்சியால் தொகுக்கப்பட்டு இங்கு இந்த விழா நடக்கிறது. ஒரு அகாதெமி அல்லது பல்கலைக் கழகம் போன்ற அமைப்பு செய்ய வேண்டிய வேலை இது.  ஆனால் எனக்கு இப்படி நடக்கிறது. இந்த மாதிரி கவனம் பெறுவது என்பது மிக அதிசயமான ஒன்று - மூன்று கைகளுடன் ஒரு குழந்தை பிறப்பது எவ்வளவு அதிசயமான ஒன்றோ அதைப் போன்றதுதான் நான் இந்த தமிழ் சூழலில் கவனிக்கப்படுவதும்," என்றார் அவர். தன் பொதுபுத்தி பற்றி அவர் சொன்னதை ஏற்கனவே சொல்லி விட்டேன்.

தனி மனிதர்கள் எதற்காக இப்படி வெங்கட் சாமிநாதனை கவனிக்கிறார்கள்? அவரிடம் அப்படி என்ன இருக்கிறது? அது அவரது பார்வைதான் என்று நினைக்கிறேன்.  நேர்மையாய் வெளிப்படும் அவரது தனிக்குரல்.  "இந்த ஐம்பது ஆண்டுகளில் நான் எழுதியதில் ஏதாவது பயனிருக்கிறது என்று நினைக்கிறேனா? நான் எதையாவது உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் என்று நினைக்கிறேனா? நான் எழுதியதில் எதற்காவது வால்யூ இருக்கிறது என்று நினைக்கிறேனா என்று கேட்டால் எதுவும் இல்லை என்றுதான் சொல்வேன்," என்று சொல்லி விட்டு நிறுத்தினார் வெங்கட் சாமிநாதன்.

"ஆனாலும் ஒன்று இருக்கிறது  என்று சொல்வேன். ஒரு சிறு வால்யூ. அதை நான் உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் என்று நினைக்கிறேன். நேர்மையாக, நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள். உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஒருவன் மட்டும் நேர்மையாக இருந்தால், அவனை ஏதாவது செய்யலாம்.  ஆனால் நாம் ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நேர்மையாக இருந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நேர்மையாக இருங்கள்," என்றார் அவர்.  இந்த சத்தியம்தான் அவர் தனியொரு மனிதனாக இயங்கியபோதும் அவரைக் காப்பாற்றி வெவ்வேறு மனிதர்களின் முயற்சியின் மூலமாக அவரை நம் கவனத்தில் தொடர்ந்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

உண்மையில் வெங்கட் சாமிநாதன் மூன்று கைகளுடன் பிறந்த குழந்தைதான். இந்த தமிழ் சூழலில்,  அமைப்பின் ஆதரவைப் பெறாமல் தனி மனிதர்களின் முயற்சியால் அவரது தவிர்க்க முடியாத கேள்விகள் தொடர்ந்து கவனத்தைப் பெறுகின்றன. அதனால் அவரும் ஒரு பேராளுமையாக நிலை பெறுகிறார். இந்த நிகழ்வுக்கு தமிழகத்தின் சீர்கேட்ட சூழலை அவர் காரணமாக சொன்னாலும் உண்மை அதுவல்ல. 

வெங்கட் சாமிநாதனின் முதல் புத்தகத்தை தம் முயற்சியில் பதிப்பித்த முதல் மூவர். இப்போது இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கும் மூவர். ஆமாம், இந்தக் குழந்தை மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை. ஆனால் இதுவல்ல அதிசயம் - அது ஐம்பது ஆண்டுகளாக ஒற்றை நாக்கில் பேசி வருகிறது, அதுதான் அதிசயம்.
.
.
.

Feb 15, 2011

எஸ் ராஜம் நினைவு விழா

இளம் வயது எஸ்.ராஜம்
Image courtesy: sawf.org

இப்படியெல்லாம் நட்பாஸ் அவர்கள்  எழுதுவதால்தான் அவரை நான் என் ஆசான் என்று விளிக்கிறேன். எஸ்.ராஜம் அவர்கள் நினைவு விழாவிற்கு  திரு.லலிதாராம் அழைத்திருந்தார். போகாதது எத்தனை குற்றம் என நட்பாஸ் அவர்களின் இந்த இடுகையை வாசித்தபின் முற்றிலும் உணர்ந்தேன்.

முழுக்கட்டுரையை வாசிக்கஎஸ் ராஜம் நினைவு விழா- நன்றி நவில் முகமாக…


அந்தக் கட்டுரையிலிருந்து சில பத்திகள்...


எஸ் ராஜம் நினைவு விழாவின் முடிவில் திரு எஸ் பி காந்தன் மற்றும் லலிதா ராம் ஆகியவர்கள் உருவாக்கிய ஆவணப்படத்தின் சில காட்சிகளைத் திரையிட்டார்கள்....
...ஒரு வகையில் அந்த ஆவணப் படத்தை ஒரு கண் திறப்பு என்று சொல்ல வேண்டும். ஒரு கணத்தில்.....

......அந்தஆவணப் படத்தின் துவக்கத்தில் டைட்டில் போடும்போது ராஜம் அவர்களின் இள வயது புகைப்படங்களை ஸ்டாப் மோஷன் ஷாட்களாக அமைத்து பின்னணியில் அவர் பாடுவதைக் கேட்கையில் அந்தக் குரலின் வேகமும் கோர்வையும் அருவி போல் பாய்ந்தன.....

....நான் அந்த கணத்தில் புகைப்படங்கள் மற்றும் அவரது குரல், கானம் வாயிலாக ராஜம் அவர்களை அறிந்தேன்- ஒரு கம்பீரமான ரீங்காரமாக. உச்சி வெய்யில் வேளையில் சர்வமும் அசைவற்றுக் கிடக்கும்போது கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அரைத் தூக்கத்தில் இருக்கிறவனை திடீரென்று அறையுள் நுழைந்து ரீங்கரிக்கும் பொன் வண்டு போல் அந்தக் குரல் என்னை எழுப்பியது-  மலர்ப்படுகைகள், வனம், ஆறு என்று அந்த வண்டின் ரீங்காரத்தூடே விரிந்து கொண்டே போகிறது அறைக்குள் இருக்கும் நம் உலகம்.....

....நாம் நம்மை மறந்து, நம் நினைவுகளை இழந்து காலப் பிரக்ஞையின்றி இந்த இசையின் லயத்துடன் ஒன்றும்போது நமக்கும் இந்த உன்னதம், நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்ட பிரம்மத்தின் சாந்நித்யம் ஒரு சிறு சன்னலின் ஊடாகத் தென்படுகிறது- இந்த லயிப்புக்கு வெளியே எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அவை லயிப்பின் அனுபவத்தை சுட்டலாமே அன்றி தொட்டு விட முடியாது......

நானே நேரில் கண்டிட்ட அனுபவம் தந்த என் ஆசானுக்கு நன்றி!
.
.
.

Dec 18, 2010

இணையவெளியில் மெட்ராஸ் தாதா



மாமல்லனின் ஜெமோ நிலைப்பாடுகள் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. பிதொநிகு என் கற்பனை என விமா சொன்னது ஜெமோ-விமா இடையேயான விஷயமே. இடையே ஊடாடி அடிதடியில் ஈடுபட நாமொருவருமில்லை. எனினும், விமா'வின் தொடர் ஜெ தாக்குகள் அவரது புது புத்தக ரிலீசொடு அதை முடிச்சுப் போடசொல்கிறது.

எப்படியோ... இப்படியப்படி உணர்ச்சிவசப் பட்டு எழுதுகிறாரேயோழிய... சிலப்பல நேரங்களில் மனிதரின் ஜீனியஸ்தனம் பட்டுத் தெறிக்கிறது...

தன் தளத்தில் அவர் வடிக்கும் விஷயங்களை விடுங்கள்,ஒரு பின்னூட்டத்தில் மனிதர் எழுதிய கவிதை படித்து மிரண்டேனேன்றால் மிரண்டேன் அப்படி மிரண்டேன். இதுவும் ஜெமோ தாக்கு எனினும் இதில் உள்ள அனாயாசமான அதேசமயம் ஆழ்ந்த கவித்திறனை ரசித்தேன்.

அறம்

எதற்கும் அசையாத
எம்பெருமான் விஷ்னு
கருவறை துறந்து
உற்சவ மூர்த்தியாய்
உலா வருதல்
உனக்காக அல்ல தனக்காக

ஸ்வாமி ஏள்றார் என
தரைவீழும் மனுஷா கேள்

பொன்முலாமின் உள்ளிருக்கும்
காரியார்த்தக் கல்மனிதனைக் காண்

இங்கே டார்கெட் ஜெமோ'தான் என்றாலும் மோதிரக்கைக் குட்டு வாங்கினது என் நெருங்கின நண்பர் ஒருவர். இப்படி நான் எழுதுவதை அவர் க்ஷமிக்கணும்.

இத்தனை நாள் கழித்து இதுபற்றி நான் இங்கே எழுதக் காரணம், தலைவர் கொஞ்சம் இடைவெளிக்குப் பின் தன் தளத்தில் இன்று ஒரு கவிதை வடித்திருப்பதுதான். இப்போ டார்கெட் நம்ம அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும் இப்போதைய சூழலில்  பரிதாபத்திற்கும் உரிய தேக எழுத்தாளர் அவர்கள்.

தேகக் கொசு
வெளியிட்டு இருப்பது
வெற்றுக் குசு


.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...