Showing posts with label சிறப்புப் பதிவர்கள். Show all posts
Showing posts with label சிறப்புப் பதிவர்கள். Show all posts

Apr 8, 2012

ஜெயமோகனின் சங்க சித்திரங்கள்

சங்க சித்திரங்கள் - ஒரு முன்னோட்டம்


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்


ழை! 

சங்க இலக்கியங்களின் அடிப்படை அழகியல் அதுவே. அவை மனித உணர்ச்சிகளை இயற்கை மீது ஏற்றிக் காட்டுகின்றன.- அதன்மூலம் இயற்கையின் முடிவற்ற விந்தைகளை மனித உணர்வுகளுக்கும் தந்துவிடுகின்றன. இரு நிலைக் கண்ணாடிகள் ஒன்றையொன்று பிரதிபலித்து முடிவின்மையை உருவாக்குவதைப் போல! - ஜெயமோகன், சங்கச் சித்திரங்கள், பக்கம் 59.


ஜெயமோகன், 
சங்கச் சித்திரங்கள், 
288 பக்கங்கள், 
கவிதா பப்ளிகேஷன் 
டிசம்பர், 2002 பதிப்பு 
விலை ரூ.100

இணையத்தில் இங்கே கிடைக்கும் 

சங்கச் சித்திரங்கள் தொகுதியில் ஜெயமோகன் அறிமுகப்படுத்தும் கவிதைகளில் பெரும்பாலானவை சோகம் மிகுந்தவை, ஜெயமோகனின் வாழ்க்கை நினைவுகள் இவற்றின் சோகத்துடன் இருள் சேர்த்து, அவற்றுக்கு மேலும் வலிய அழுத்தம் கொடுக்கின்றன. இது போதாதென்று சங்க காலக் கவிதையைவிட்டு தமிழ் வெகு தொலைவு விலகிச் செல்கிறது என்ற உண்மை வேறு. இந்த உணர்வுகள் சங்கக் கவிதைகளையே துயரில் தோய்ப்பதாக உள்ளன. 

"ஒரு கவிதையில் இருந்து எவ்வளவு தூரம் முன்னகர முடியும் என்பது பார்ப்பதுதான் சிறப்பான கவிதை வாசிப்பு.... கவிதையின் மர்ம முடிச்சு நம் மனத்தில் மலர் விரிவது போல எப்போது என்று சொல்ல முடியாத ஒரு தருணத்தில் அவிழ்வதே கவிதை அனுபவம் என்பது," என்று எழுதும் ஜெயமோகன் (பக்கம் 23), "படிமம் வாசகனின் கற்பனை மூலமே விரிந்து முழுமை கொள்ள முடியும்" என்கிறார் . என் நண்பர் ஒருவர் சொன்னதுபோல் படிமம் காதலியின் கடைக்கண் வீச்சு. அதற்கு இலக்காகிறவனின் மனதிலேயே அது முளைத்து, கிளை விட்டு, காடாகி, பூத்து மண்ட முடியும். பூமணத்தால் இரவைத் தூக்கமின்றி அடிக்க முடியும்," என்று கவிதையின் இதயமாக படிமங்கள் இருப்பதைச் சுட்டுகிறார் (பக்கம் 51). சங்கச் சித்திரங்களை வாசிப்பது என்பது, சிலைகள் உயிர்பெற்று எழுவதுபோல் படிமங்கள் தம் வியாபகத்தை விரிக்கக் காணும் அனுபவம். ஜெயமோகனின் எழுத்தில் அது பக்கத்துக்குப் பக்கம் நிகழ்கிறது.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் நாற்பது பாடல்களைப் பேசுகிறார் ஜெயமோகன். ஒவ்வொன்றிலும் எதிர்பாரா படிமங்கள் நம் நினைவைக் கிளருகின்றன - பாடல்கள் தரும் காட்சிக்கு இணையான சித்திரத்தை ஜெயமோகன் தன் அனுபவத்திலிருந்து வரைகிறார். அவற்றின் உணர்வு நம் நினைவுகளை நெகிழ்த்தி, சங்கக் கவிதைக்கு புது வெளிச்சம் தருகிறது. 

நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக், கடிய கூறும், வேந்தே; தந்தையும், நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே; இஃதுஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று, அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை, மரம்படு சிறுதீப் போல, அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே. - 
- மருதனிள நாகனார் (புறநானூறு - 348)

மறவன் தன் பெண்ணை அரசனுக்கு மணமுடித்துக் கொடுக்க மறுக்கும்போது "அரிமதர் மழைக்கண்" - மழை மேகங்கள் என கறுத்த விழிகள் கொண்ட பெண், "மரம்படு சிறுதீபோல்" ஆகிறாள் அவள் தான் பிறந்த ஊருக்கு. இன்றைய சாதிக் கலவரங்களில் ஒன்றின் பொறியாக இருந்திருக்கக்கூடிய ஒரு காதலர் வேட்டையை நேரில் கண்ட ஜெயமோகனின் அகம் இந்தப் பாடலில் உள்ள மழைக்கண் என்ற பதத்தின் துயரை உணர்கிறது. அவளது கண்ணீரும், அவள் குலத்தை அழிக்கும் நெருப்பும். பெண்ணின் கண்ணீரா நெருப்பானது? அந்த நெருப்பை அணைக்க பெண்கள் அழ வேண்டியது எவ்வளவு இருக்கிறது? இவற்றுக்கு விடையில்லை. ஆனால், "அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை மரம்படு சிறுதீ போல அணங்கா யினள்தான் பிறந்த ஊர்க்கே" என்று முடியும் பாடல் உயிர்பெற்று விட்டது, இனி மழைக் கண்களின் துயரைக் காணாதிருக்க நாம் முனைந்து நம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டால்தான் உண்டு.(பெற்ற நெருப்பு). 

  ஞாயிறு காணாத மாண்நிழற் படீஇய
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக – நம் நீத்துச்
சுடர்வாய் நெடுவேல் காளையோடு
மடமா அரிவை போகிய சுரனே
- (குறுந்தொகை 378, கயமனார்).

வெயில் வருத்தக் கூடாது, அவள் பாதையில் நிழல் இருக்கட்டும், அவள் செல்லும் பாதையில் மணல் பரவட்டும், அதைக் மென்மழை குளிர்விக்கட்டும், என்று காதலனோடு ஓடிப் போன தன் பெண்ணை நினைத்து ஒரு தாய் பாடுகிறாள் நாயர் வகுப்பைச் சேர்ந்த தன் சக பணியாளரைக் காதலித்து மணம் புரிந்து கொண்ட ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணுடைய தாயின் உணர்வுகளை மனதில் கொண்டு ஜெயமோகன் இந்தப் பாடலை வாசிக்கும்போது உண்மை அதன் அத்தனை உக்கிரத்துடனும் சுடுகிறது (பாலை மழை).

நலத்தகைப் புலத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தண்கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணம் இல கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழி அவர் சென்ற நாட்டே'
- கழார்க் கீரன் எயிற்றியனார், குறுந்தொகை 330 

"நீரின் பிரியா பரூ உத்திரி: - இங்கே பிரிந்து விரிவது கசக்கிப் பிழிந்து ஆற்று நீரிலிட்ட துணி மட்டுமல்ல, நிகழ்வுகளால் உணர்த்தப்பட்டு மனதை ஆக்கிரமிக்கும் நினைவுகளும்தான். "இன்கடுங் கள்ளின் மணம்" - இனிப்பும் துவர்ப்பும் சேர்ந்த கள்ளின் மணம், பேதலித்த போதை நினைவுகளுக்கு அழகிய, எளிய படிமமாகிறது. இப்படிப்பட்ட இலை அவன் ஊரிலும் இருக்காதா, என்று கேட்கிறாள் தோழியிடம் - ஜெயமோகன் இந்தப் பாடலைத் தன் அந்நாளைய வாசகி அருண்மொழி நங்கையின் தலையில் உதிர்ந்து தங்கிய பொன்னிற கொன்றை மலரைக் கொண்டு வாசிக்கிறார் (கள் மணக்கும் மலர்).

இப்படி நாற்பது பாடல்கள். இவற்றில் ஒரே ஒரு பாடலைக் குறித்த ஜெயமோகனின் சித்திரத்தைக் கொஞ்சம் விரிவாக வாசிப்போம்.

 சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே
- கபிலர், குறுந்தொகை 

இந்தப் பாடல் ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். இன்றும் இதை நாம் படித்து ஓரளவுக்கு பொருள் புரிந்து கொள்ள முடிகிறது என்பதே பெரிய விஷயம். பாடலில், பூ, கிளி, பெண், யானை, என் உள்ளம் பின்னும் என்றெல்லாம் வருவதை வைத்து யாரோ ஒரு பெண்ணின் பின்னால் கபிலரின் உள்ளம் செல்கிறது என்று ஊகிக்க முடிகிறது. அந்த அளவுக்கு நாம் இந்தப் பாடலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். 

இருந்தாலும் எங்கோ தொலைவில் இருப்பவர்கள் குறித்த துக்கச் செய்தியை நாம் புரிந்து கொள்வதற்கும் ரொம்பவும் நெருக்கமானவர்களின் துக்கத்தை நாம் புரிந்து கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா? அசுவாரசியமான செய்திக்கும் இடி விழுந்த மாதிரியான அதிர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம் இரண்டுக்கும் உண்டு. 

பல பேராலும் பாராட்டப்படும் ஏ.கே. ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்பு நம் போன்ற இணைய வாசகர்களுக்கு விஷயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாக்குகிறது- 

Does that girl, eyes like flowers,
gathering flowers from pools for her garlands,
driving away the parrots from the millet fields,
does that girl know at all or doesn’t she,
that my heart is still there with her
bellowing sighs
like drowsy midnight elephant? 

இதைவிடத் தீவிரமாக கபிலரின் இந்தப் பாடல் நம் உள்ளத்தின் உள்ளிறங்க வேண்டுமென்றால் உதவி செய்வதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் இருக்கிறார். அவரது தளத்தில் கடலூர் சீனு இந்த இரு மொழிபெயர்ப்புகளைக் கவலையுடன் பகிர்கிறார்

வனத்தடாகத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து,
காட்டில் கிளியோட்டும் பெரிய கண்ணழகி அறியமாட்டாள்
தூங்கும் யானை போலப் பெருமூச்சு விட்டு
என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை
- கிரி உரை.
சுனைப்பூக்களைப் பறித்து மாலை தொடுத்துத்
தினைப்புனத்தில் கிளி விரட்டுபவளை
என் உள்ளம் ஒரு சாமத்தில் படுத்திருக்கும்
யானை போலப் பெருமூச்சு விட்டுப் பிரிந்த பின்னும்
அவளுடன் வசிப்பதை
அறிவாளோ அறியாளோ! - - சுஜாதா உரை 

கடலூர் சீனு கிரியின் மொழிபெயர்ப்பை "அகத்துடன் அகம் நிகழ்த்தும் பரிமாற்றம்." என்று ஒரு நிகழ்வாகவும் சுஜாதாவின் மொழிபெயர்ப்பை "“உலகத்தீரே இதனால் அறியப்படும் சேதி என்னவென்றால்..." என்ற அறிவிப்பாகவும் வாசிக்கிறார்- பொதுவாகவே சுஜாதாத்தனமாக சாற்றை விட்டுவிட்டு சக்கையை மட்டும் கொண்டு செல்வன மொழிபெயர்ப்புகள் என்று நம்புகிறார் சீனு, அவற்றை வாசிக்க நேரிடும் "தமிழே தெரியாத "வேர்ல்டு இலக்கிய” மேதாவி" என்ன சொல்லக்கூடும், என்பது அவரது அச்சமாக இருக்கிறது (காடுக்கு என்ன கதி நேரிடுமோ என்ற அந்த உத்தம வாசகனின் கவலைக்கு அடிப்படையாக இருந்த அந்த ராஜதுரோக சிந்தனை பாரதிக்குக் கிட்டாத தாந்தேவின் சிகரங்களை நினைவூட்டி பீதியைக் கிளப்பியது என்பது வேறு கதை, இங்கே, இப்போது எழுத்தாளர் ஜெயமோகனின் அதியற்புதமான சங்கச் சித்திரங்களைப் பாராட்டுவது மட்டுமே நம் நோக்கம்). 

நிற்க, எங்கேயோ போய் விட்டேன். சங்கச் சித்திரங்கள் புத்தகத்தில் ஜெயமோகனே நாம் பேசும் பாடலை இப்படி மொழிபெயர்க்கிறார்: 

சுனையில் பூக்கொய்து
மாலைதொடுத்து அணிந்து
தினைப்புனத்தில் கிளியோட்டும்
மலர்விழி அறிவாளா
நள்ளிரவில்
தூங்கும் யானையின்
மூச்சு போல
பெருமூச்சு விட்டபடி
என் மனம்
அவளைப் பின்தொடர்வதை?-(பக்கம் 160) 

ஆங்கிலத்தில், "breathtaking beauty", "she took my breath away" என்றெல்லாம் சொல்வார்கள். ஏறத்தாழ அதே பொருளில்தான் இந்தப் பாடல் இருக்கிறது - எங்கோ இருக்கும் அவளை கபிலரின் நினைவுகள் பெருமூச்சு விட்டபடி தொடர்கின்றன. 

இதன் விரிவான வடிவமாகவே இந்தப் பாடலையும் நீங்கள் கேட்கலாம்:


ஃப்ரெட்டி மெர்க்குரிக்கும் கபிலருக்கும் என்ன சம்பந்தம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கபிலர் பாடியதையே ஏறத்தாழ அச்சு அசலாக ஃப்ரெட்டியும் பாடியிருக்கிறார். காலம்தோறும் ஆண்மனம் உலகெங்கும் இப்படித்தான் பெருமூச்சு விட்டபடி பெண்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறது போல.

  "...பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே"

என்ற அடிகளின் பொருள் மிக அழகியது. எவ்வளவு யோசித்தாலும் இதுதான் என்று சொல்ல முடியாத தன்மை கொண்டது - ஆளாளுக்குத் தகுந்தபடி வாசித்துக் கொள்கிறார்கள். 

ஏ கே ராமானுஜம், 

 does that girl know at all or doesn’t she,
that my heart is still there with her
bellowing sighs
like drowsy midnight elephant?

என்றும், 

  ...அறியமாட்டாள்
தூங்கும் யானை போலப் பெருமூச்சு விட்டு
என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை

என்று கிரியும், 

 என் உள்ளம்
ஒரு சாமத்தில் படுத்திருக்கும்
யானை போலப் பெருமூச்சு விட்டுப் பிரிந்த பின்னும்
அவளுடன் வசிப்பதை
அறிவாளோ அறியாளோ!

என்று சுஜாதாவும், .... 

அறிவாளா
நள்ளிரவில்
தூங்கும் யானையின்
மூச்சு போல
பெருமூச்சு விட்டபடி
என் மனம்
அவளைப் பின்தொடர்வதை? 

என்று ஜெயமோகனும் மொழிபெயர்க்கிறார்கள்.
'உரை விளக்கங்கள், இலக்கணங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தன் வாழ்க்கை அனுபவங்களையும் கற்பனையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவன் இக்கவிதைகளை அணுக வேண்டும். கவிதையின் அசல் வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும். அவற்றுடன் உள்ள துறைக் குறிப்புகள் போன்றவைகூடத் தேவை இல்லை.... சங்க காலக் கவிதைகளை, சமகால நவீன கவிதைகளை எப்படி வாசிக்கிறோமோ அப்படி வாசிப்பதே நல்லது... பண்டைய கவிதைகளில் வெறும் வர்ணனைகளாகவோ அணியலங்காரங்களாகவோ நாம் கண்டு வருபவை உண்மையில் உக்கிரமான படிமங்களாக இருக்கக்கூடும்.....அந்தப் படிமம் அவனையும் மீறிய ஒன்று. சிற்பி செதுக்கியதுதான் தெய்வச் சிலை. ஆனால் தெய்வம் அவனுக்குக் கட்டுப்பட்டதல்ல. அவனும் வணங்கும் பிரம்மாண்டம் அது. ஒரு கனவுக்கு முடிவின்றி அர்த்தம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்," 
என்று சங்கக கவிதைகளை அணுகுவது எப்படி என்று தன் வாசகனுக்குக் குறிப்புகள் தருகிறார் ஜெயமோகன் (பக்கங்கள் 52, 53). 

"சங்கச் சித்திரங்கள்" புத்தகத்தில், இந்த அணுகுமுறையைக் கொண்டு ஜெயமோகன் தன் வாழ்க்கை அனுபவத்தின் தளத்தில் கற்பனைத் திறனைக் கொண்டு படைக்கும் சித்திரம் மிக அருமையான ஒன்று - வாசகன் ஒரு உயர்ந்த கலைஞனைத் தொடும் இடம் அது. கபிலருக்கு இணையான படைப்பாற்றலை ஜெயமோகனின் வாசிப்பில் நாம் காண்கிறோம். ... 

பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே 

என்ற அடிகளைப் பொதுவாக அனைவரும், 'உன்னைத் தொடரும் என் ஏக்க நினைவுகள்,' என்ற அளவில்தான் புரிந்து கொள்வோம். ஃப்ரெட்டி மெர்க்குரி போன்ற கற்பனாவாதிகள், "என் நினைவுகள் உன்னைத் தொடரும், அவை எப்போதும் உன்னோடிருக்கும், நீ எங்கிருந்தாலும் உன்னைக் கண்டடையும்," என்றெல்லாம் சொல்லலாம்.

ஆனால் ஜெயமோகன் கபிலரின் சங்கக் கவிதையுடன் காட்டும் சமகாலச் சித்திரம், "இருளின் பெருமூச்சு," என்ற ஒன்று. அதில் அவர் தான் மும்பையில் இருந்த நாட்களை நினைவு கூர்கிறார். பிழைப்பு தேடி வந்த இடத்தில், இருக்க இடமின்றி ஒரே அறையில் முகமற்ற பலர். அவர்களுடன் ஜெயமோகனும் ஒரு ஓரத்தில் ஒட்டியிருக்கிறார். 

ஓணத் திருநாள் இரவு. ஒரு தூக்கத்துக்குப்பின் கண்விழிக்கிறார் ஜெயமோகன். அறைக்குள் நிரம்பியிருந்த இருளில் ஒரு வித்தியாசம் தெரிகிறது. இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுடன் ஜெயமோகனின் இளமை நினைவுகள் அவரை ஆக்கிரமிக்கின்றன.
"தீபாவளிக்கு மழைகுளிர் போல ஓணத்துக்கு இளவெயில். ஊஞ்சல் ஆடும்போது மண்ணில் விரியும் நிழல்கோலங்கள். புத்தாடைகளின் மணம், முன்மதியத்தில் ஒரு தருணத்தில் தேங்காய்பால் முறுகி வெல்லத்துடன் முயங்கி மெல்ல எழும் பிரதமனின் மணம். அம்மா அகப்பையில் அள்ளித் தரும் பிரதமனின் ஈடற்ற சுவை. பிரியத்தின் இனிப்பு ஒரு துளி சொட்டிய இடத்தில் சென்று மொய்க்கின்றன எண்ணக் கூட்டங்கள். திடீரென்று அந்த விஷயம் புரிந்தது. அறையில் அத்தனை பேருமே தூங்காமல் படுத்திருக்கிறார்கள்! மூச்சொலிகள் இல்லாததுதான் அந்த வித்தியாசத்தை உருவாக்கியது. உடலின் அசைவு என் மனநெகிழ்வை வெளிக்காட்டிவிடும் என்று பயந்தவன் போல தசைகளை உறையச் செய்தபடி படுத்திருந்தேன்..."
அங்கே திடீரென்று இருளே உடைந்தது போல், ஒரு பெரிய மிருகத்தின் துயரம் போல் ஒரு பெருமூச்சு எழுகிறது. அதன்பின் அறையை வெவ்வேறு மூலைகளிருந்து எழும் பெருமூச்சுகள் நிறைக்கின்றன.
"அன்று மும்பையில் அந்த மூச்சொலியுடன் நான் இருளில் தூக்கம் கலைந்து எழும் வலிகொண்ட மதயானை ஒன்றையும் உணர்ந்தேன்," 
என்று எழுதுகிறார் ஜெயமோகன். 

உறங்கும் யானையின் உயிர்த்து என்பது அதன் ஆழ் பெருமூச்சு மட்டுமல்ல- அதன் வலி உயிர்த்தெழுகிறது என்றும் வாசிக்கலாம். அப்படிப்பட்ட பெருமூச்சே பெண் நினைவுகளைத் தொடர்கிறது. 

கபிலரின் பாடலுக்கு ஜெயமோகன் தரும் வாசிப்பு உழை என்ற சொல்லில், பெருமூச்சு என்ற பொருளுடன் வலியை இணைத்து அதை ஒரு படிமமாகவே மாற்றுகிறது. உழைப்பு, உழல்தல் போன்ற சொற்களில் உள்ள வலியும் பெருமூச்சும் மறக்க முடியாதவை..
.
.
.

Feb 17, 2012

அருகர்களின் பாதையின் காலக் கணவாய்கள்


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்



முதலிலேயே ஒன்று சொல்லி விடுகிறேன்: ஜெயமோகன் அவர்கள் அண்மையில் எழுதி முடித்த "அருகர்களின் பாதை" என்ற தொடர் பயணக் குறிப்புகளைப் பற்றிய எண்ணங்களை மட்டுமே இங்கு பகிர்கிறேன். இதைப் படிக்கும் நண்பர்கள், "என்னடா இவன், ஜெயமோகனுக்கே எப்படி எழுதுவதென்று பாடம் எடுக்கிறான்," என்று கோபப்பட வேண்டாம். அவர் இதுவரை எழுதியுள்ள பகுதிகளில் மேற்கோள் காட்டக்கூடிய பத்திகள் பல இருக்கின்றன. சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கும் குறைவில்லை. பிரமாதமான புகைப்படங்கள் ஒவ்வொரு பதிவிலும் உண்டு. அவற்றையெல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டுவதானால் நிறைய எழுதலாம். ஆனால் அதுவல்ல முக்கியம்.

ஜெயமோகன் இலக்கியவாதி என்ற அடையாளத்தைத் தாண்டி ஒரு ஆளுமையாக இருக்கும் நாட்கள் இவை. வழக்கம் போலவே இங்கே ஒரு டிஸ்கி-  பரவலாக  அறியப்படாதவராக, பெரும்பான்மை மக்கள் மத்தியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாதவராக அவர் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட, சமூக அக்கறையுள்ள பல இளைஞர்களுக்கு ஜெயமோகன் ஆதர்சமாக இருக்கிறார். அவர்களை நினைவில் கொண்டும் ஒரு வாசகனாகவும் மட்டுமே இந்தப் பதிவை எழுதுகிறேன்- தமிழில் பொருட்படுத்தத்தக்க கருத்துகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் எழுத்தாளர் என்ற வகையில் ஜெயமோகனிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதைச் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம் :)

பயணக் கட்டுரைகளை எழுதுபவர்கள் இரு வகை.  ஒரு வகையினர் தில்லியையே ஜெயிக்கப் போவதுபோல் படுபயங்கரமாக சத்தம் போட்டுக் கொண்டு கிளம்புவார்கள்.  நாமும் ஏதோ பெரிய பெரிய விஷயங்கள் வரப் போகிறதென்று படிக்க ஆரம்பிப்போம்.  கடைசியில் பார்க்கும்போதுதான், மன்னிக்கவும், நடுவிலேயே எங்கோ நாம் நம் நினைவைத் தொலைத்த இடத்தைப் பார்த்தால்தான், நம் அபிமான யாத்திரிகர் தில்லி விமான நிலையத்திலேயே ஆறு மாதங்களாக உட்கார்ந்திருந்திருக்கிறார் என்பது தெரியும்.  அப்புறம் ஒரு நாள் ஏதோ நினைவு வந்து, "என்ன ஆச்சு?" என்று தேடும்போது ஒரு பேரிடி இறங்கும்- அவர் தன் தொடருக்கு,  "இது பயணக் கட்டுரை அல்ல" என்று கிரிமினலாஜிக்காக தலைப்பு வைத்திருப்பார்.

ஆனால் யாத்திரிகர் ஜெயமோகன் அப்படிப்பட்டவரல்ல -  முடிவெடுத்தால் எடுத்ததுதான். ஜனவரி பதினான்காம் தேதியன்று பொங்கல், முறுக்கு இத்தியாதி வகையறாக்களுடன் கிளம்பினார் அவர். அப்போது துவங்கிய "அருகர்களின் பயணம்",  பிப்ரவரி பதின்மூன்றாம் தேதி சூடான உப்புமாவும் கருப்பு டீயுமாக முற்று பெற்றது (இது புறவயப்பட்ட காலவோட்டத்தைக் கருத்தில் கொண்டு மட்டுமே நாம் அறியக்கூடிய தரிசனம்- ஆனால், அகவயப்பட்ட அனுபவத்தின் எல்லைகள் பெல்காம் உப்புமாவின் படுபாதாள வீழ்ச்சியிலிருந்து காட்கர் கிராமத்து உளுந்துகூட்டிய சோற்றின் ஆகச்சிறந்த எழுச்சி வரை விரிகின்றன : இந்த அகப்பயண வரைபடம் பிறிதொரு சமயம் இங்கு பதிவு செய்யப்படலாம்). இந்தப் பயணத்தின் துவக்கத்துக்கும் முடிவுக்கும் இடைபட்ட ஏறத்தாழ முப்பது நாட்களில் தொடர்ந்து முப்பத்து ஒரு பயணக் குறிப்புகள் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். 

நண்பர்கள் சிலருக்கு அவரைப் பிடித்திருக்கலாம், சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். நம்மில் சிலர் அவரது எழுத்தின் ரசிகர்கள், சிலர் அரசிகர்கள். ஆனால் யாத்திரிகர் ஜெயமோகனின் தொழில் தர்மம் - அர்ப்பணிப்பு - நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பயணங்கள் களைப்பானவை.  உடல்நலனுக்குக் கேடானவை. எந்த ஒரு நீண்ட பயணத்திலும் ஆயிரம் பிரச்சினைகள், கவலைகள் நம்மை நிழலாய்த் தொடரும். இவை போதாதென்று ஆயிரம் திசைகளிலிருந்து ஆயிரம் கவன கலைப்புகள் நேரிடும். அத்தனையையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து,  ஒவ்வொரு இரவும் தூங்கப் போகுமுன் கர்மசிரத்தையாக எழுத உட்காருவதென்றால் அது சாதாரண காரியமா என்ன?

(இதை எழுதும்போதுதான் நினைவுக்கு வந்தவனாக, தில்லி விமானத்தில் ஆழ்ந்த நிஷ்டை கைகூடிய நிலையில் ஆறு மாதங்களாக அமர்ந்திருக்கும் நண்பரைப் பற்றி விசாரித்தேன்- அவர் அடுத்து அமெரிக்கா கிளம்பத் திட்டமிருக்கிறாராம். போச்சுடா!)

சீரியஸாகப் பேசினால்,  ஜெயமோகன் அருகர்களின் பாதையில் செய்த பயணம் முக்கியமான ஒன்று.  சமண வரலாறு, சமண ஆலயங்கள், இந்தியப் பண்பாடு மற்றும் இந்திய மரபு ஆகியவற்றினுள் காலம் மற்றும் வெளியில் செய்யப்பட்ட ஒரு நீண்ட பயணம் இது. தற்போது பயணக் குறிப்புகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெறும்போது சமணம் குறித்த விரிவான அறிதலை நிகழ்த்துவதாக இருக்கும். அது மட்டும் போதுமா?

நான் வாசித்தவரை இந்தப் பயணம் சமணத்தை ஆலயங்களாகவும் சிற்பங்களாகவும் அதன் உறைந்த வடிவில் பேசுவதாக இருக்கிறது.  சமண வரலாறு மற்றும் தத்துவங்கள் புதிய புரிதல்களாக, புதிய திசைகளில் விரிவதாக இருந்தாலும் சமகால சமணம் குறித்து அதிகம் பேசப்பட்டிருப்பதாக நினைவில்லை.  ஆனால், இன்றைய சமண சமூக அமைப்பு பரவலான கவனத்தைப் பெற வேண்டியது அவசியமாக இருக்கிறது. 

உதாரணத்துக்கு,  1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சமண மக்கள்தொகையில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்ற அளவில் பால்விகிதம் அதன் சமன்குலைந்த நிலையில் உள்ளது. ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற விருப்பத்தால் சமணர்கள் பெருமளவில் கருச்சிதைவு செய்து கொள்வதை இந்த நிலைக்குக் காரணம் சொல்கிறார்கள். இதை விவாதிக்கும் கட்டுரை இங்கே

ஒரு புழு பூச்சிக்குக்கூட தன்னால் எந்தக் கெடுதலும் வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருக்கும் ஒரு சமூகத்தில்தான் பெண் சிசுக்கொலை இந்தியாவிலேயே அதிக அளவில் நடைபெறுகிறது. மேற்சொன்ன சுட்டியில் சில மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 850 பெண்கள் என்ற நிலை இருப்பதையும், பீகார் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் 1000 ஆண்களுக்கு 600 பெண்கள் என்ற நிலை இருப்பதையும் குறிப்பிடுகிறார்கள. கண்ணுக்குத் தெரியாமல்- சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும்- நம் மண்ணில் ஒரு ஹோலோகாஸ்ட்டே நடந்து கொண்டிருக்கிறது.  இது வேதனையான விஷயம்.

அப்படி தப்பிப் பிறக்கும் பெண்களுக்கும் நிம்மதியான வாழ்க்கை அமைவதில்லை என்று எண்ண இடமிருக்கிறது.  சமண சமய துறவிகளில் ஆண்களைவிட பெண்கள் நான்கு மடங்கு அதிக அளவில் இருக்கின்றனர்.  உயிரைக் கொள்ளை கொள்ளும் அழகிகளாக உள்ள  பதின்ம வயது பெண்கள் துறவு பூணும் புகைப்படங்களை செய்தித்தாள்களில் பார்த்து நொந்து போன அனுபவம் உங்களுக்கும் நேர்ந்திருக்கும்.

இத்தனைக்கும், அருகர்களின் பாதை, அதன் துவக்கங்களைத் தொலைத்து ஓய்ந்துவிட்ட பாதையல்ல. ஜெயமோகனின் கட்டுரைகளைப் படிக்கும்போது இந்தியாவெங்கும் புதிய ஆலயங்கள் கட்டப்பட்டு வருவதை அறிகிறோம். பழைய ஆலயங்கள் சீரமைக்கப்படுகின்றன.  உயிர்த்துடிப்புள்ள ஒரு சமூகத்தை அவரது பயணத்தில் நாம் சந்திக்கிறோம். ஆனால் அதன் மறைவான மையத்தில் பெண்களின் கண்ணீர். அருகர்களின் பாதை இன்றும் தொடர்கிறது - தவறான திசையில்.

இந்தப் பதிவை இங்கு நான் எழுத முதற்காரணம் இதுதான்.  ஜெயமோகன் அருகர்களின் பாதையை நூல் வடிவில் எழுதும்போது, அது இன்றைய சமணர்களின் வாழ்க்கை முறையை, அவர்களுடைய விழுமியங்களைத் தீவிரமான கேள்விகளுக்குட்படுத்துவதாக இருக்க வேண்டும்.  நிகழ்கால நிஜங்கள் மறக்கப்படும்போது போலி உணர்வுகள் அந்த சமூகத்தின் மையத்தில் நிலைபெற்றுவிடும். அதன் கடந்த காலத்தில் எத்தனை உயர்ந்த மகோன்னதங்கள் இருப்பினும், சமகாலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத புளகாங்கிதங்கள் அந்த சமூகத்தை அழிக்கும். இது சமணர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும். 

சமணர்களின் பாதை இறந்தவர்களின் பாதையல்ல. இன்று இருப்பவர்களின் பாதை. இங்கு செய்யப்படும் பயணம் பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்ப்பதல்ல. இடுபாடுகளில் மறைத்து கிடக்கும் மாபெரும் சாதனைகளை நம் கற்பனைக் கண்கொண்டு கண்டு பிரமிப்பதல்ல. இந்தப் பயணம் நாஸ்டால்ஜியாவில் ஆழ்த்துவதாக இருந்துவிடக் கூடாது  சமணத்தின் மகத்தான தத்துவங்களையும் தரிசனங்களையும் எண்ணி வியப்பதோ, அதன் வானளாவிய சிற்பங்களின்முன் நம் ஆன்மிகச் சிறுமையை உணர்ந்து வணங்குவதுமோகூட அருகர்களின் பாதையாக இருக்க முடியாது. ஜெயமோகனின் பயணம் எப்போது படித்தாலும் அது வாசகனின் எதிர்காலத்தினுள்ளும் நீண்டு செல்லக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாக இருக்க வேண்டும். 

இங்கே கொஞ்சம் சென்டிமெண்ட் பேச வேண்டியிருக்கிறது.  வாழ்க்கையை ஒரு பயணமாகவும் சாகரமாகவும் பேசுவது நம் வழக்கம். தீர்த்தங்கரர்கள் என்றால் ford makers என்று விக்கிப்பீடியா சொல்கிறது. திசையற்ற சாகரத்தில் நம்மைப் போன்றவர்கள் சரியான திசையில் பயணிக்க வசதியான வாய்க்காலோ, வரப்போ, கால்வாயோ கட்டித் தருபவர்களே தீர்த்தங்கரர்கள்.

சமய நம்பிக்கை சீரழிந்த சமகால தமிழ் அறிவுச் சூழலில் இலக்கியவாதிகளே இதைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  ஜெயமோகன் என்றில்லை, யாராகவும் இருக்கட்டும். எழுத்தாளர்களுக்கு வரும் கடிதங்களில் பலவும் வாசகர்களின் இருப்பு மற்றும் ஆன்மிகச் சிக்கல்களுக்கு விடை தேடுபனவாக இருக்கின்றன. இது ஒன்றிரண்டு நல்ல கதை கட்டுரை கவிதை எழுதிய எந்த ஒரு எழுத்தாளனுக்கும் பழக்கப்பட்ட அனுபவமாக இருக்கும். தன்னை மிதவையாகவே உணரும் எழுத்தாளனும் தன் வாசகர்களுக்கு தோணியாக இருக்கிறான் என்பதுதான் இன்றைய மெய்ப்பாடு.

எனவே, அருகர்களின் பாதை ஏதோ ஏழெட்டு பேர் சென்று திரும்பிய இன்பச் சுற்றுலாவாக முடிந்து விடக் கூடாது, வரலாற்றை நினைவூட்டுவதும்கூட முக்கியமல்ல.  தனி மனிதனின் ஆன்மிக மீட்சியை உணர்த்துவதும்கூட குறைபட்ட வெற்றியாகவே இருக்கும்.  எழுத்தாளன் இன்றைய தமிழ்ச் சூழலில் டால்ஸ்டாயாகவும் தாஸ்தெவெஸ்கியாகவும் மதிக்கப்படக்கூடிய நிலையில் நிற்கிறான்.  இந்தப் பொறுப்பை உணர்ந்து அவன் எப்படிப்பட்ட பயணத்தை நிகழ்த்துகிறான் என்பது முக்கியம்.

இந்தப் பதிவு, எழுதப்பட்ட கட்டுரைகளின் விமரிசனமாக இல்லை : ஆனால், எழுதப்படப் போகும் புத்தகத்தின் முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் :)

முடிவாக, அருகர்களின் பாதையில் ஒரு முக்கியமான புகைப்படமும் மேற்கோளும்:



"இரண்டாயிரம் வருடத்துக்கு மேல் பழைமை கொண்ட கணவாய்ப்பாதை இது. சாதவாகனர் காலகட்டத்தில் இந்தப் பாதை கல்யாணுக்குச் செல்லும் முக்கியமான பாதையாக இருந்தது எனக் கல்வெட்டுகள் சொல்கின்றன. நான் என்றால் நாணயம், கட் என்றால் வழி. இது ஒரு சுங்கமுனையாக இருந்திருக்கிறது. இங்குள்ள குகைகளில் கிடைக்கும் கல்வெட்டுகள் மௌரியர் காலத்திலேயே இந்தப் பாதை பயன்பாட்டில் இருந்ததாகச் சுட்டுகின்றன. வட இந்தியாவில் இருந்து தென்னகத்துக்கு வரும் வழிகளில் இது முக்கியமானதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் இதற்குக் கீழே உள்ள பகுதிகள் எல்லாமே வளமானவை. நீர் வசதி கொண்டவை."

யாத்திரிகர் ஜெயமோகனுக்கு நன்றி கலந்த வணக்கத்துடன் கூடிய வாழ்த்துகள்!


Sep 18, 2011

சண்டே ஸ்பெஷல் - நாளைய தொழில்நுட்பம்

சிறப்புப் பதிவர்: நட்பாஸ்

முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது பல நிறுவனங்கள் நம்மை கைபேசியில் அழைத்து பதிவு செய்யப்பட்ட சேதிகளைச் சொல்கின்றன. அவை இனிய பெண் குரல்களாக இருப்பது நம்மை மகிழ்வூட்டும் விஷயம்தான் என்றாலும், நம் வீட்டம்மாவைப் போலவே தனக்கு வேண்டிய விஷயத்தை மட்டும் அவை பேசுவது வருந்தத்தக்கது- நம்மால் அவற்றோடு பொருள் செறிந்த சம்பாஷனை நிகழ்த்த முடியாது, பேச்சுகிடையில் ஒரு வார்த்தை பேச முடியாது, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கின்றன என்பன கைபேசியிலாவது சொன்ன பேச்சு கேட்காமல் புரட்சி செய்வோம் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன- நான் இதுவரை இந்த இனிய பெண் குரல்களுக்கு செவி சாய்த்ததில்லை என்பதை மட்டுமல்ல, இவற்றின் கழுத்தை நெரித்து ஊமையாக்கியிருக்கிறேன் என்பதையும் இங்கு சொல்ல வேண்டும்.

ஆனால் இது எத்தனை நாட்களுக்கு என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. டிவிட்டரில் நீங்கள் ரவி சாஸ்திரி என்றோ கிரிக்கெட் என்றோ கீச்சிட்டால், உடனே தட் இஸ் நெய்தர் ஹியர் நார் தேர் என்றோ இட் இஸ் எ பிக்கி என்றோ ஒரு கீச்சு உங்களை நோக்கி ரவி சாஸ்திரி பாட்டிடமிருந்து வரக் கண்டிருப்பீர்கள். இப்போது இது போன்ற பாட்கள் பேசவும் துவங்கிவிட்டன. இவை பேசும் விஷயங்களைப் பார்த்தால், நாம் இந்த இனிய பெண் குரல்களின் சுண்டு விரல் அசைவுகளுக்கு அடிமையாகும் நாள் தொலைவில் இல்லை என்ற அச்சம் வருகிறது. நிஜ மனிதர்களின் குரலில் பேசும் இவை, நிஜ மனிதர்களின் சிந்தனை ஓட்டத்தை பிரதிபளிப்பனவாகவும் இருக்கின்றன. 

இப்படி இரு சாட்பாட்கள் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டபோது அவை என்ன பேசின என்பதை அண்மையில் அறிய நேர்ந்தது. காணொளி பாருங்கள்:  

எப்போது எந்திரக் குரல்கள் உடல் வேண்டுமென்ற ஆசை உனக்கில்லையா என்றும் உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்றும் பேசிக்கொள்ள துவங்கி விட்டனவோ, அப்போதே மனிதனை எந்திரன்கள் ஆளும் நாள் தொலைவில் இல்லை என்ற அலாரம் பெல் நமது மண்டைக்குள் உரக்க ஒலிக்க வேண்டும். ஆனால் பாருங்கள், நாம் இன்னும் உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம். நிற்க.

இதுபோன்ற தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் நிற்பது எம்ஐடியின் மீடியா லாப் என்ற ஒரு கட்டுரையில் படித்தேன். இருபத்தாறு ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும் இந்த மாறுபட்ட அமைப்பின் (இதன் தற்போதைய இயக்குனர் ஜோய்ச்சி ஈடோ கல்லூரிப் பட்டப் படிப்பையும் முடிக்காதவர்) ஆய்வுகள் நமக்கு எத்தகைய எதிர்காலத்தை சாத்தியமாக்கும் என்பதைப் பேசும் இந்தக் கட்டுரைதான் இந்த வார இணைய வாசிப்பில் நான் ரசித்துப் படித்த கட்டுரை.

அவற்றைப் பற்றி ஒவ்வொன்றை சிறு குறிப்புகள் தருகிறேன் பாருங்கள். 

நம் கைபேசி நம்மோடு எப்போதும் இருப்பது. அதைப் பேசவும், செய்திகள் பரிமாறிக் கொள்ளவும், இணையத்தை மேயவும் பயன்படுத்திக் கொள்கிறோம். நம்மில் சிலர் அதைக் கொண்டு செலவு செய்யவும் செய்கிறார்கள். எதிர்காலத்தில் நம் கைபேசிக்குத் தெரியாமல் நாம் எதையும் செய்யப்போவதில்லை என்ற நிலை வரப்போகிறது- நம் மன, உடல், மற்றும் நிதி ஆரோக்கியத்தைக் குறித்த தகவல் பெட்டகமாக இருக்கப்படக்கூடிய கைபேசி, பயனர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஒரு பணம் காய்ச்சி மரமாக இருக்கும்.

 பீஸோ எலக்ட்ரிக் சர்க்யூட்களைப் பற்றி நம்மில் பலருக்கு எதுவும் தெரியாது. நான் விசாரித்தவரை அது அசைவு மற்றும் அழுத்தத்த்தை மின்னாற்றலாய் மாற்றுகிறது. இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் நடக்கும்போது உங்கள் காலணிகள் பாதத்தின் அழுத்தத்தைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கி சேமிக்கலாம்- நீங்கள் அமரும் நாற்காலிகள் உங்கள் எடையை மின்சாரமாய் சேமித்துத் தரலாம். எங்கெங்கு காணினும் சக்தியடா! என்று பாடினானே பாரதி, அந்த சக்தி கண்ணுக்குத் தெரியாமல் இனி இருக்காது- உங்களுக்கு சேவகம் செய்வதாக இருக்கும்.

எம்ஐடியின் எட் பாய்டன் என்ற விஞ்ஞானி, செடிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பாசிகளில் ஒளி உணர்திறன் கொண்ட செல்களை பிரெயின் செல்களாக மாற்றுகிறார். இது தவிர, ஆப்டோஜெனடிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு நம் மூளையில் உள்ள தேர்ந்தெடுத்த ந்யூரான்களை ஒளிரச் செய்து நம் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். இதன் எதிர்கால சாத்தியங்கள் என்ன? உடலின் மற்ற இடங்களில் பலவற்றில் பழுதுபட்ட பாகங்களை செயற்கைக் கருவிகளைக் கொண்டு திருத்தியமைக்கிற மாதிரி, கண்ணுக்குள் கான்டாக்ட் லென்ஸ் இருப்பது போல், மூளையின் பழுதுபட்ட பாகங்களும் ரிப்பேர் செய்யப்படலாம்.

கைபேசி பாக்கட் மருத்துவராக மாறி வருவதை சென்ற பதிவில் பார்த்தோம்- மிங் செர் போ என்ற விஞ்ஞானி, கைபேசியின் புகைப்பட லென்ஸ் மூலம் நம் முகத்தில் இதய இயக்கம் சார்ந்த ரத்தக் குழாய்களின் நுண்ணிய மாற்றங்களைத் துல்லியமாய்ப் படம் பிடிக்கக்கூடிய தொழில் நுட்பத்தை வடிவமைத்திருக்கிறார். நம் உடல் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்பே, நோய்க்குறிகளின் வளர்நிலையிலேயே அவற்றை கைபேசிகளைக் கொண்டு கண்காணித்து, அடையாளம் கண்டு தக்க சமயத்தில் தேவையான சிகிச்சை தர முடியும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள். நோய் நாடி என்று வள்ளுவர் ஏதோ சொல்லியிருப்பதாக நினைவு- எதிர்காலத்தில் நாம் நம் கைபேசிகளை அவ்வாறழைத்து கௌரவிக்கலாம்.

எம்ஐடி, ஸ்க்ராட்ச் என்ற ஒரு எளிய மென்பொருளை வடிவமைத்துள்ளனர். இதைப் பயன்படுத்தி சிறு குழந்தைகளும் கேம்கள், கதைகள், இசை, ஓவியங்கள் போன்ற கலை வடிவங்களை உருவாக்கலாம். குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த மென்பொருளைக் கொண்டு இதுவரை இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட கேம்கள் படைக்கப்பட்டுள்ளன. கோடுகளை மின் சர்க்யூட்களாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டு ஓவியங்கள் ஒளிரத் துவங்கியுள்ளன. இது போன்ற தொழில்நுட்பங்கள் நம் கல்வி முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்- இதுவரை அவர்களால் சாத்தியப்படாத விஷயங்கள் குழந்தைகளின் கைக்கெட்டும் தொலைவுக்கு வந்து விட்டன.

முப்பரிமாண பிரிண்டர்களைப் பற்றி இன்னொரு நாள் பார்க்க வேண்டும். இயந்திரங்கள் உட்பொருட்களைக் கொண்டு கட்டிடம் சமைக்க வல்லனவாகிவிட்டன. எம்ஐடியின் ஸ்டீவன் கீட்டிங், உட்புறத்தில் சன்னத் துளைகளும் விளிம்புகளில் உறுதியாகவும் உள்ள பனை மரத்தை ஒத்த கான்க்ரீட் பில்லர்களை முப்பரிமாண பிரிண்டர்களைக் கொண்டு அச்சிட்டிருக்கிறார- இவை எடை குறைவாகவும் குறைந்த ஆற்றல் தேவை கொண்டவையாகவும் உள்ளன என்கிறார்கள். முழு கட்டிடத்தையும் இப்படி அச்சிடும் நாள் தொலைவில் இல்லை என்கிறார் இவர்: கட்டிடத் துறை என்றில்லை, அனைத்து உற்பத்தித் துறைகளிலும் இந்த முப்பரிமாண பிரிண்டர்கள் நுழைந்து மனிதர்களுக்கு தொழிற்சாலைகளின் கதவடைக்கும் நாளையும் நாம் பார்க்கப் போகிறோமோ என்னவோ.

மோட்டாரின் ஆற்றலில் இயங்கும் சுவர்களையும், வடிவம் மாறும் பர்னிச்சர்களையும் வடிவமைக்கும் தொழில்நுட்பம் வந்து விட்டது: நமது இல்லங்கள் தேவைக்குத் தகுந்த மாதிரி உருவம் மாறி, பயன்பாடும் மாறும்- உங்கள் படுக்கையறையின் மரச்சாமான்கள் சுவருக்குள் சென்று, அலுவலக மேசை நாற்காலிகள் வெளிவரும்: இடத்தேவை குறித்த நம் கண்ணோட்டம் நாம் நினைத்துப்பார்க்க முடியாதபடி மாறப் போகிறது. 

இதை எல்லாம் அந்தக் கட்டுரையில் படித்ததும் கர்ட் வோன்னகட் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது- நீண்ட நாட்களாகவே மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம்தான்- நூறாண்டுகள் கழித்து இன்றைய இலக்கியத்தை வாசிக்கும் விமரிசகர்கள், நாம் பாலியல் விழைவைப் பேசாத விக்டோரிய நாவல்களை எழுதியவர்களை விமரிசிப்பது போலவே தொழில் நுட்பத்தைப் பேசாத படைப்பாசிரியர்களையும் எடை போடுவார்கள், என்று சொல்கிறார் அவர்.

ஆமாம், காமம் நம் அகத்தை நிறைத்து நம் அன்றாட நடவடிக்கைகளை, நம் வாழ்வியல் தீர்வுகளை, தீர்மானிக்கும் அளவுக்கு தொழில் நுட்பக் கருவிகளும் நம் வாழ்வை நிறைத்திருக்கின்றன. மானுடத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக அமைந்த இந்த தொழில் நுட்ப வளர்ச்சியையும், நம் வாழ்வில் அதன் பங்களிப்பையும் பேசும் இலக்கியவாதிகள் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள்?

ஒருவர் மட்டுமே நினைவுக்கு வருகிறார். ஆனால் அவர் இலக்கியவாதி இல்லை என்று பெரும்பான்மை விமரிசகர்கள் கட்டம் கட்டி விட்டார்கள்: பார்ப்போம், காலத்தின் தீர்ப்பு வேறு மாதிரி இருக்கிறதா என்னவென்று. ஆங்கிலத்தில் மரங்களைக் கண்டு வனத்தைக் காணாதிருப்பது என்றேதோ சொல்வார்கள். இதுவும் அந்த கதையாக முடியுமோ என்னவோ!

Sep 11, 2011

சண்டே ஸ்பெஷல் - பாக்கெட் டாக்டர்

(இந்த வார இணைய வாசிப்பில் பிடித்தது)
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்



ஒரு காலத்தில் அப்ளிகேஷன் என்றால் வேலை வாய்ப்புப் படிவம் என்று இருந்தது- அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் தாடி வளரும் வேகத்தில் நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிற பட்டதாரிகளாக இருப்பார்கள். இப்போது ஸ்மார்ட் ஃபோன்கள் வந்து விட்ட நிலையில், எதற்கெடுத்தாலும் "இதுக்கு ஒரு அப்ளிகேஷன் இருக்கே!" என்று சொல்கிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு அப்ளிகேஷன் என்பது வேலை கிடைக்குமா என்ற ஏக்க நினைவுகளைக் கிளரும் அசந்தர்ப்ப நினைவூட்டலாக இல்லை- அப்ளிகேஷன்கள் காரியத்தை முடித்துத் தருகிற கருவிகளாகி விட்டன. இணையமும் கைபெசியும் இருந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று.இருக்கிறது இன்றைய நிலைமை. இது மருத்துவத் துறையில் எப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்கி வருகிறது என்று அண்மையில் படித்தேன், ஒரே கணத்தில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து எதிர்காலத்துக்குள் அடியெடுத்து வைத்த உணர்வு வந்து விட்டது.

இந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கான அப்ளிகேஷன்கள் பலவற்றில் ஸ்டெதாஸ்கோப் எக்ஸ்பர்ட் என்பது ஒன்று. இது ஒரு ஸ்டெதாஸ்கோப்பாகப் பயன்படக்கூடியது. இதயம் மற்றும் வயிற்றில் ஏற்படக்கூடிய ஒலிகளை, ஒரு விலையுயர்ந்த, நுட்பமான ஸ்டெதாஸ்கோப்புக்கு உரிய துல்லியத்துடன் இது பதிவு செய்து கொள்கிறது. அது தவிர, இதன் நூலகத்தில் வெவ்வேறு இதய நோய்களில் காணப்படும் அறுபது வகை இதயத்துடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல் டப் டப் என்று துடிக்கவேண்டிய இதயம் ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இதைவிட இருமடங்கு வேகமாக, நாலு கால் பாய்ச்சலில் ஓடுமாம். மருத்துவ மாணவர்கள் தங்கள் பயிற்சியில் நோயாளிகளின் இதயத்தில் நேரடியாக இந்த ஒலியைக் கேட்கும் வாய்ப்பு ஓரிரு முறைகள் கிடைத்தால் அதிகம். ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் இத்தகைய பிரத்யேக அப்ளிகேஷன்களின் துணையால் வெவ்வேறு நோய்க்குறிகளை இந்த மாணவர்கள் இனங்கண்டு மனதில் நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

இந்த போன்களின் பயனர்கள் தங்கள் இதயத் துடிப்புகளை இத்தகைய அப்ளிகேஷன்களைப் பயன்படுத்திப் பதிவு செய்து வைத்துக் கொள்வது அடுத்த கட்டம், இல்லையா? அடுத்து, தங்கள் இதயம் ஏறுக்கு மாறாக எக்கு தப்பி அடித்துக் கொள்கிறது என்ற சந்தேகம் இருந்தால், அந்த சந்தேகத்தை இந்த ஒலிக் கோப்புடன் இணைத்து தங்கள் மருத்துவருக்கு அனுப்பலாம்- அவருக்கும் விஷயம் குன்சாக இருந்தால் தன் சந்தேகத்தைத் தெளிவித்துக் கொள்ள, பயனரின் இதயத் துடிப்பு அடங்கிய அந்த ஒலிக் கோப்பை ஒரு இதயநல மருத்துவருக்கு ஒரே கிளிக்கில் பார்வர்ட் செய்யலாம். இவை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே நடக்கின்றன. இதய நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஸ்மார்ட் ஃபோன்கள் எப்படி பயன்படுகின்றன பார்த்தீர்களா?

ஆய்வுக் கூடங்களில், சில சாங்கியங்களைத் தகுந்த வகையில் கடைபிடித்து அறிவியல் உண்மைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பார்கள் என்ற ஒரு மாந்த்ரீகக் கலை போன்ற தோற்றம் நம் மனதில் இருக்கிறது. எப்போது அறிவியல் நம் பாக்கெட்டில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் அப்ப்ளிகேஷன்களாகக் குடியேறியதோ, அப்போதே அது தன் பிரமிப்பைக் களைந்து குழந்தை விளையாட்டாய்ப் போய் விடுகிறது. அமெரிக்காவில் UCLAவைச் சேர்ந்த Aydogan Ozgan என்ற பேராசிரியர் வடிவமைத்த விஷயத்தைப் பாருங்கள்.

அது லென்ஸ் இல்லாத ஒரு மைக்ரோஸ்கோப். அதன் எடை அறுபது கிராமுக்கும் குறைவு. அதை காமெரா ஃபோன்களோடு இணைத்துக் கொள்ளலாம். இந்த மைக்ரோஸ்கோப் பத்து டாலருக்கும் குறைவான விலையில் கொள்ளை மலிவு. இவை நிழல்களைக் கொண்டு டிஃப்ராக்ஷன் முறையில் ஒரு முப்பரிமாண புகைப்படத்தை உருவாக்குகின்றன.. நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் அதன் உள்ளிருக்கும் உபரிகள் ஒளியை அரைகுறையாகத் தம்முள் ஊடுருவிச் செல்ல அனுமதிக்கின்றன. எனவே, நம் ரத்தமோ எச்சிலோ, அதன் ஒரு துளியை இந்த ஸ்மார்ட் ஃபோனில் இணைக்கப்பட்டுள்ள மைக்ரோஸ்கோப்பால் படமெடுத்தால் அது நிழல்களை வைத்து அந்த செல்லை முப்பரிமாண புகைப்படமாகப் பதிவு செய்து கொள்கிறது. இந்தப் புகைப்படத்தை ஒரு லேப்புக்கு அனுப்ப எத்தனை கிளிக் தேவைப்படும்? நம் ஊரைப் போலவே டாக்டர் இருக்கிறாரோ இல்லையோ, உயர்தர நோய் காணும் உபகரணங்கள் கொண்ட சோதனைக் கூடங்கள் இருக்கின்றனவோ இல்லையோ, உலகெங்கும், எவ்வளவு ஏழைப்பட்ட கிராமமாக இருந்தாலும் எல்லாரிடமும் கைபேசி இருக்கிறது. நாள்பட நாள்பட ஸ்மார்ட்ஃபோன்களின் விலை குறைந்து வருகிற நிலையில், இந்தியாவாகட்டும் ஆப்பிரிக்காவாகட்டும், மருத்துவத்துறையில் இந்த அப்ளிகேஷன்களின் பயன்கள் எண்ணற்றவை.

உதாரணத்துக்கு மலேரியாவை, அல்லது டைபாய்டை எடுத்துக் கொள்ளுங்களேன். நமக்கு காய்ச்சல் இருந்தாலும் மருத்துவரிடம் செல்வது கஷாயங்களும் தெருவோர பார்மசிக்களும் தோற்றுப் போன பின்னர்தான், அப்புறமும்கூட நாம் அனைவரும் ரத்தத்தை உடனே சோதனை செய்து பார்த்து விடுவதில்லை. இந்த மாதிரி ஒரு அப்ளிகேஷன் உங்கள் போனில் இருந்தால், தலை வலிக்கத் துவங்கி வாந்தியெடுத்த மறு கணமே உங்கள் ஒரு துளி ரத்தத்தை படம் எடுத்து ஒரு கிளிக்கில் அதன் வழியில் அனுப்புவீர்களா மாட்டீர்களா? நம் பாக்கெட்டுக்குள் வந்து விட்டன லேப்பில் மட்டும் இருக்கக்கூடிய விலையுயர்ந்த உபகரணங்கள் அனைத்தும். இந்த பேராசிரியரின் அப்ளிகேஷன் கிளிக் செய்து லேப்புக்கு செல்லும் தேவையைக்கூட பெருமளவில் குறைக்கிறது. புகைப்படமெடுத்த மறு கணமே சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளை அடையாளம் கண்டு எது எது எவ்வளவு இருக்கின்றன என்ற தகவலைத் தெரிவித்து விடுகின்றன. இந்த விபரத்தை உங்கள் மருத்துவருக்கு ஒரு குறுஞ்செய்தியாக அனுப்பினால் அவர் தன் பிரிஸ்கிரிப்ஷனை இன்னொரு குறுஞ்செய்தியாக அனுப்புவார். படிக்க எளிதாக இருக்கும் இந்த மருந்துப் பட்டியலை ஒரு பார்மசிக்கு எஸ்எம்எஸ் செய்தால் வீட்டுக்கு வந்துவிடலாம் உங்கள் மருந்துகள்!

இது போல் இப்போதே ஃபூஜிட்சு நிறுவனம் உங்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயத் துடிப்பு, எடை போன்ற விபரங்களைப் பதிவு செய்யும் இயந்திரங்களிடம் இருந்து தேவையான தகவல்களை ப்ளூடூத் வழியாக உங்கள் கைபேசிக்கே பெற்றுக் கொள்ளும் தொழில் நுட்பத்தை வடிவமைத்துள்ளது. மருத்துவ மற்றும் தொழில் நுட்ப வசதி அதிகம் இல்லாத டவரில்லா காடுகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், நாளை உங்கள் உடல்நிலை குறித்த தகவல்களை கைபேசியிலேயே அலசி ஆராய்ந்து நோய் நாடி குணம் நாடி செய்தி அனுப்பும் அப்ளிகேஷன்களுக்கு வழியமைத்துத் தரலாம், இல்லையா? அந்த நாள் தொலைவில் இல்லை.

இப்போதே ஆப்பிளின் அப்ளிகேஷன் ஸ்டோரில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த அப்ளிகேஷன்கள் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சர்க்கரை மற்றும் எடையைக் கண்காணிக்கத் துணை செய்பவை. இவற்றின் பயன் மருத்துவத்துறைக்கு பெரிய அளவில் துணை செய்யும் என்று நம்புவதற்கிடமிருகிறது- ஒவ்வொரு கணமும் நோய்க்குறிகளைக் கண்காணிக்கவல்ல கருவிகளாக நம் கைபேசிகள் நமக்கும் நம் மருத்துவருக்கும் உதவி செய்யும்.

பாட்டு கேட்கவும் வீடியோ பார்க்கவும் நம் மொட்டைத் தலையை பேஸ்புக்கில் அப்லோடி நண்பர்களை அலற வைக்கவும் அவகாசப்பட்ட நேரத்தில் டிவிட்டரில் வலைபாயவும் நாம் பயன்படுத்தும் கைபேசிகளுக்கு இத்தகைய சாத்தியங்கள் இருக்கின்றன என்று நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? ஆனால் இதெல்லாம் பட்டிதொட்டியெங்கும் நடைமுறைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நான் சொன்ன கட்டுரையைப் படிக்கும்போது நினைத்துக் கொண்டேன்.

Jul 18, 2011

உதகை காவிய முகாம் – 2 (இறுதிப் பகுதி)

சிறப்புப் பதிவர்: சு. வீரராகவன் < சிந்தா குலத்தின் வலைப்பூ >


இரவு ஜடாயு அவர்களின் உரை முடிந்து இரவு உணவு அருந்தியபின் நான் மிகவும் களைத்திருந்தேன். ஓய்வு தேவை என்று மூளை கதறினாலும், அடுத்த நாள் தொடரப் போகும் இரகு வம்சத்தையும் இலியட் காவியத்தைப் பற்றி இணையத்தில் படிக்கும் ஆவலும், அன்று நடந்தபோது எழுதியக் குறிப்புகளை சரிபார்க்கவும் பரபரத்துக் கொண்டிருந்தது மனசு. சிலர் நூலகத்திலேயே படுத்துக் கொள்ளலாம் என்றும் சிலர் குருகுலத்தின் அறைகளில் தங்கிக் கொள்ளலாம் என்றும் 18 பேருக்கு மூன்று காட்டேஜ்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார்கள். நூலகத்தில் இருப்பவர்கள் மேலும் சில மணி நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும் நிகழ்ச்சிகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

குருகுல அறைகளில் இருப்பவர்கள் அறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்கள். கட்டிலோ ஒருவர் சவுகரியமாக படுக்க மட்டுமே போதுமானதாக இருந்தது என்பதைக் காலையிலேயே கவனித்திருந்தேன். அதில் 3,4 பேர் தங்குவது என்றால்?

காட்டேஜ் ஒவ்வொன்றிலும் 6 பேர் தாராளமாக தங்கலாம் என்றிருந்தார்கள்.

உடனே ஓடிப் போய் வேனில் ஏறிக்கொண்டேன். என்ன ஒரு முட்டாள்தனம்? ஜெயமோகனோடும் நாஞ்சிலோடும் தேவ தேவனோடும் இரவுகளிலும், காலை நடையிலும் உரையாடும் பாக்கியத்தை இழந்து விட்டேன் என்பது பிறகே புரிந்தது.

காளிதாசரின் ரகு வம்சத்தைப் பற்றி இணையத்தில் இங்கே சுருக்கமாக ஆங்கிலத்தில் படித்து இன்புறலாம். தமிழில் இவ்வளவு சுருக்கமாக இணையத்தில் எனக்கு கிடைக்கவில்லை.

பைபிளில் புதிய ஏற்பாடு இவ்வாறு தொடங்குகிறது.

ஆதியிலே வார்த்தை இருந்தது.
அவ்வார்த்தை கடவுளோடு இருந்தது.
அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தது.
ஆதியிலே கடவுளோடு இருந்தது.
அவர் வழியாகவே அனைத்தும் உண்டாயின.

இதனுடன் காளிதாசரின் ரகுவம்சத்தில் ஆரம்ப வரிகளைப் பார்க்கலாம்.


வாக2ர்தா1விவ ஸம்ப்ரிக்தெள வாக2ர்தப்ரதி பத்தயே:
ஜக2த: பிதரெளவந்தே2 பார்வதீ பரமேஸ்வரெள

பதவுரை:
வாக2ர்தா1விவ = சொல்லின் பொருளைப் போல்
ஸம்ப்ரிக்தெள = ஒன்றோடொன்று இழைந்திருப்பது போன்று
ஜக2த: = உலகிற்கு
பிதரெள = தாயும் தந்தையுமாகிய
பார்வதீ பரமேஸ்வரெள = பார்வதி அம்மையையும், பரமசிவனையும் வாக2ர்தப்ரதி பத்தயே: = வாக்கில் வெளிப்படும் பொருள்களின் அறிவுக்காக
வந்தே2 = வணங்குகிறேன்.


கருத்துரை:
சொல்லும் பொருளும் என இணைந்த 
தொல்லுலகின் தாய் தந்தையரை, பார்வதி பரமேசுவரனை,
சொல்லையும் பொருளையும் அறிந்திட வேண்டிப் பணிகின்றேன்.

’சொல்லும் பொருளும் என இணைந்த’என்பதற்கு உதகை காவிய முகாமில் இரகுவம்சத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும்போது ” சொல்லையும் பொருளையும் பிரிக்க முடியாது. அது போல் இணைந்துள்ள சக்தியும் சிவமும்” என்று பொருள் கொண்டனர். ஜெயமோகன் சொல்லை பிரித்தால் பொருள் தராது. எனவே சொல்லாக சக்தியும் பொருளாக சிவமும் இணைந்திருப்பதாக விளக்கினார்.

என்னால் இதனை ஏற்க முடியவில்லை. குழப்பமாகவே இருந்தது. ஏனெனில் தமிழில் சொல் என்றால் பதம் எனப்படும். பதம் பகுபதம், பகாப் பதம் என இருவகைப்படும். பிரித்தாலும் பொருள் தராதது பகாப்பதம். பிரித்தாலும் பொருள் தரக் கூடியது பகுபதம். அது போல் சமஸ்கிருதத்தில் இருக்கிறதா என என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

பைபிள் வாசகத்தை மீண்டும் பார்ப்போம்.

ஆதியிலே வார்த்தை இருந்தது. வார்த்தை என்றால் என்ன?

1 In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
2 He was with God in the beginning.
3 Through him all things were made; without him nothing was made that has been made.

என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படுகிறது.

வார்த்தை வேறு இறைவன் வேறு என்றும் சொல்ல முடியாது.

வார்த்தையாக இறைவன் இருந்தான் என்றும் கூற முடியாது.

ஆதியில் வார்த்தை இறைவனோடுதான் இருந்தது என்றும் கூற முடியாது.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அவனன்றி ஓரணுவும் அசையாது. அவனே அனைத்தையும் படைத்தான். 

இங்குதான் திருவள்ளுவரின் முதல் குறள் எனக்கு ஒரு புதிய பொருளைத் தந்தது.

இறைவன் முதலில் வார்த்தையை உருவாக்கி பின்னர் அதற்கானப் பொருளைப் படைத்திருக்கக் கூடும் எனில் வார்த்தைகளுக்கு முதலான அகர முதலான எழுத்துக்களுக்கும் இறைவனே முதலானவன் அல்லவா?

பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் குறிப்பிட்டது போல் பொருளைப் படைத்து விட்டு பிறகு அதற்குப் பெயரிட்டிருந்தால் அகர முதலான எழுத்துக்களுக்கு வடிவம் தரவே உலகைப் படைத்தான் இறைவன் என்கிறார் திருவள்ளுவர் என்று புரிந்து கொள்கிறேன்.

இனி காவிய முகாமிற்கு மீண்டும் செல்வோம். 

ஒரு மகா காப்பியம் என்பது பண்டைய இதிகாசம் அல்லது புராணங்களை ஆதாரமாகக் கொண்டதாக இருத்தல் வேண்டும். இது சில அதிகாரங்களாகவோ, பகுதிகளாகவோ பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் அரசரை அல்லது வீர்ரைப் பற்றிய பிறப்பு, வீரம், உன்னத குணங்கள் முதலியன அடங்கி இருத்தல் அவசியம். கூடுமானவரை கீழ்க்கண்ட குறிப்புகள் அடங்கியும் இருக்க வேண்டும்; அதாவது:-

ஒரு நகரத்தைப் பற்றிய விளக்கம் (சருக்கம் 16)
கடலைப் பற்றி (சருக்கம் 13)
மலை, காலங்கள் பற்றி (சருக்கம் 4 மற்றும் 16)
தோட்டம் அல்லது நீரில் விளையாடல் (சருக்கம் 8 மற்றும் 16)
பானமருந்தல், காதல், விழாக்கள்; பிரிதல், இணைதல், காதலர் திருமணம் (சருக்கம் 8,12,7)
மகவு பிறத்தல் (சருக்கம் 3)
அவை விளக்கம் (சருக்கம் 8, 15)
தூது (சருக்கம் 5)
அரசன் (சருக்கம் 16,12,4)
போர்ச் செயலும் வெற்றியும் (சருக்கம் 2,7, 12) குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

காளிதாசர் இயற்றிய இந்த ரகுவம்சம் 19 சருக்கங்களோடு நிறுத்தப்பட்டதா அல்லது தொடர்ந்து இயற்றப்பட்டதா என்பது சந்தேகமே. ரகுவுடன் துவங்கி 28 வீர்ர்களை மட்டும் குறிப்பதாக இருக்கிறது. இதில், சிருங்காரம், வீரம், கருணை முதலிய குணங்கள் தகுந்த இடங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் சுருக்கம் கீழ்க்கண்டவாறு:

திலீப மன்னன் வசிட்டரிடம் சென்று தனக்கு குழந்தை இல்லாமைக்கு காரணம் அறிதல்.
திலீபன் நந்தினீ என்னும் பசுவுக்கு சேவை செய்து குழந்தை உண்டாக வரம் பெறுதல்.
ரகுவின் பிறப்பும், குழந்தைப் பருவமும், இளமைப் பருவமும்.
ரகுவின் பட்டாபிஷேகம் மற்றும் திக்விஜயம்.
ரகுவின் மகன் அஜனின் பிறப்பு, விதர்ப்ப நாட்டு இளவரசி இந்துமதி சுயம்வரத்திற்கு போதல்
இளவரசி இந்துமதி அஜனை மணத்தல்.
அஜனுடைய திருமணம்; அவனை எதிர்த்த அரசர்களை வெல்லுதல்
தசரதனுடைய பிறப்பு மற்றும் இந்துமதி மரணம்.
தசரதன் வேட்டைக்குப் போய் ரிஷி சாபம் பெறுதல்.
மஹாவிஷ்ணு தசரதனுக்கு மகன்களாய் பிறத்தல்.
இராமர் சிவன் வில்லை ஒடித்து சீதையை மணத்தல், பரசுராமன் சந்திப்பு.
இராமரின் வனவாசம், சீதையை இராவணன் எடுத்துப் போதல், இராவண வதம்.
இராமர் புஷ்பக விமானத்தில் இலங்கையை விட்டு அயோத்தி அடைதல்.
சீதையை காட்டில் விட்டுவிடுகிறான் இலக்குவன். வான்மீகி முனிவர் ஆசிரமத்தில் சீதை அடைக்கலம்.
குச லவர்களின் பிறப்பு, இராமருடன் போர் புரிய எதிர்த்து நிற்றல், சீதை பூமியில் மறைதல்.
குசன் அயோத்தி அடைதல். அவன் குமுதவதியை மணத்தல்.
குசனின் மகன் அதிதிக்குப் பட்டமளித்தல், அதிதி அயோத்தியை ஆளுதல்.
அதிதியின் மகன் நிஷதன் முதலாக இருபத்தொரு அரசர்களைப் பற்றிய சுருக்கமான விளக்கம்.
அக்னி வர்ணனுடைய சிற்றின்ப வாழ்க்கை விளக்கம். அக்னி வர்ணன் நோய்வாய்ப்படுத்தல், அவனுடைய ராணி அரசை ஏற்றல்.

ரகுவம்சத்தைப் பற்றியும் இலியட் காவியத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. ஜெயமோகனின் வார்த்தைகளில் சொல்வதென்றால்ம் இலியட் காவியத்தை வீரகதைப் பாடல்களில் இருந்து காவியத்தை நோக்கி நகர்ந்த ஒரு வடிவம் என்று சொல்லலாம்.

உக்கிரமான போர்ச்சித்தரிப்பே அதன் சிறப்பு. அதன் முதல் வரியே சொல்வது போல் அது அக்கிலிஸ் என்ற மாவீரனின் ஆண்மை, ஆணவம், கட்டுக் கடங்காத சினம் ஆகியவற்றின் விரிவான சித்தரிப்பு மட்டுமே.

காவிய காலகட்டத்தின் ஆரம்பத்தில் காவிய கர்த்தன் ஒரு பெரும் தொகுப்பாளனாகவே இருக்கிறான். அசாதாரணமான நினைவாற்றலே அவனுடைய முதன்மைத் தகுதியாக இருக்கிறது. ஹோமர் பார்வையிழந்தவர் என்பது இங்கு குறிப்பிட தக்கது. இரண்டாம் கட்டத்தில் காவிய கர்த்தன் பேர்றிஞனாக ஆகிறான். அறிஞர்களுக்காக எழுத ஆரம்பிக்கிறான். கம்பராமாயணமும், ரகுவம்சமும் கவிதையை சுவைக்கும் தகுதி கொண்டவர்களுக்கானவை. அவற்றின் அடிப்படை இயல்பென்பது செறிவே. இக்கட்டுரையின் முதல் பகுதியில் நான் குறிப்பிட்டதைப்போல் மூச்சுக்காற்றுபட்ட கண்ணாடி மங்கி தெளிவதைப் போல மனம் மயங்கி தெளிந்தாள் என்பது ஒரு நாட்டார் பாடலில் வர முடியாது. இது அருவமான ஒரு மன உணர்வை வர்ணிக்கும் முயற்சி. அதற்காக இங்கே கற்பனை ஒரு கருவியாக ஆகியிருக்கிறது. செவ்வியலாக்கத்தின் முதல் படி இதுவே.

இலியட்டில் செவ்வியல்தன்மை எங்கே உள்ளது? அதிலுள்ள புராணத் தன்மையே செவ்வியல் அம்சத்தை உருவாக்குகிறது. 

உதாரணமாக, இதன் கதாநாயகனாகிய அக்கிலிஸின் பிறப்பு. 
ஜுயூஸ் என்ற தலைமைத் தெய்வம் (இந்திரன்) பொஸைடன் என்ற கடல்தெய்வம் (வருணன்) ஆகியோர் தீட்டிஸ் என்ற கடல்தெய்வத்தினை காதலிக்கிறார்கள். ஆனால் அவளுக்கு பிறக்கும் குழந்தை தந்தையை விட வல்லமை கொண்டதாக இருக்கும் என்று இருப்பதால் பிலியூஸ் என்கிற மன்னனுக்கு மணம் செய்விக்கிறார்கள். அவளுக்கு பிறக்கும் மகனே அக்கிலிஸ். அவன் மாவீரன். ஆனால் மனிதனுக்கு பிறந்தவனாதலால் மரணம் உண்டு. எனவே அவன் அன்னை அவனை ஹயடிஸ் என்ற பாதாளத்துக்கு கொண்டு சென்று அங்கே ஓடு ஸ்டிக்ஸ் என்ற நதியின் நீரில் அக்கிலிஸின் குதிகாலை பிடித்து நீரில் முக்கி எடுக்கிறாள். ஆகவே அவன் குதிகால் மட்டும் மரணமுள்ளதாக ஆயிற்று. அதன் வழியாகவே அவன் கொல்லப்பட்டான்.
இந்த கதை இந்தியப் புராணங்களோடு பலவகைகளில் ஒத்து போவது ஆச்சரியமே.

மகாபாரதத்தில் பீமனை துரியோதனன் கை கால்களைக் கட்டி கங்கையில் போடுகிறான். கங்கையில் இருந்த ஒரு பிலம் வழியாக பாதாளம் சென்று நாகங்களின் தலைவன் வாசுகி கொடுக்கும்  நாகவிஷத்தை அருந்தி ஆயிரம் யானை பலம் பெறுகிறான்.
அக்கிலிஸின் குதிகால் துரியோதனைனின் தொடையை நினைவூட்டுகிறது.  

நாடகத் தன்மையின் உச்சமே சிறந்த கவிதை. கம்ப ராமாயணத்தில் நாம் உயர்தர நாடகத் தருணங்களை காண்கிறோம். இலியட்டிலும் பல உச்சகட்ட நாடகத் தருணங்கள் உள்ளன.

அக்கிலிஸுக்கும் அகமெம்னானுக்கும் உருவாகும் மோதல், அக்கிலிஸை அவன் தாய் உட்பட உள்ள தேவதைகள் சமதானப்படுத்துவது, நண்பன் கொலை செய்யப்படும்பொழுது அக்கிலிஸ் கொள்ளும் கோபாவேச வெறி எல்லாமே நாடகத்தன்மை மிக்க இடங்கள் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். குறிப்பாக பழிவாங்கும் போது ஹெக்டரை கொன்று அந்த சடலத்தை அக்கிலிஸ் அவமதிப்பதே நாடகத்தன்மையின் உச்சம். பிற்கால காவியங்களில் கதை நாயகன் அறத்தைக் காக்கவே வீரத்தை கைகொண்டிருப்பான். அர்ஜூனனும் ராமனும் அற நாயகர்கள். அக்கிலீஸ் வீரன் மட்டுமே. ஹெக்டரைக் கொன்ற பின் பதினொரு நாட்கள் சடலத்தை தன்னுடன் வைத்து இழிவு படுத்துகிறான். அதன் பின்னர் ஹெக்டரின் தந்தை அவனைக் காண வந்ததும், பிணத்தை தருமாறு மன்றாடியதும் சிறப்பான காட்சிகள். அக்கிலிஸ் ஒப்புக் கொண்டு சடலத்தை வண்டியில் வைத்துவிட்டு சாப்பிட அழைக்க ப்ரியம் அதை மறுக்கவில்லை. பதினொரு நாட்களாக சரியாக சாப்பிடாமல் உறங்காமல் இருந்த அந்த தந்தை பசியாறியபின் அக்கிலிஸை முழுமையாக பார்த்து அவன் அழகை வியக்க, அக்கிலிஸும் ப்ரியத்தின் உயரத்தையும் கம்பீரத்தையும் பார்த்து வியக்கிறான். இங்கேதான் ஒன்றை கவனிக்க வேண்டும்.

கொன்றவன் செத்தவனின் தந்தைக்கு ஆறுதல் சொல்வதும் இருவரும் சேர்ந்தே அருந்தும் விருந்துதான் இலியட்டின் உச்சம் எனக் கருதுகிறார் ஜெயமோகன். ஒரு எளிய வீர கதையை பெருங்காப்பியமாக்கும் இந்த இடத்தை ரசிக்க வேண்டுமென்றால் நீங்களும் இந்த மூன்று காப்பியங்களோடு காலப் பயணியில் பின்னோக்கி (முன்னோக்கி அல்ல) பயணிக்க வேண்டும்.

பிறகு ஞாயிறு காலை நாஞ்சில் நாடனோடு கலந்துரையாடல் இருந்தது. சனிக்கிழமை இரவு ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்த கதக்களி நிகழ்ச்சியால் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் காணொலிகளை ஜெயமோகனின் இணையத்தில் காணலாம். 

அதில் கதக்களி பற்றிய பல விசயங்கள் என்னை வியக்க வைத்தது. ஒவ்வொரு முறையும் ஆடுபவர் தன் திறனை வெளிப்படுத்த ஆடும் முறையை மாற்றிக் கொள்வார் என்பது பாராட்டக் கூடிய ஒரு புதிய செய்தி / அனுபவம். அதே போல் முத்திரை என்றால் விரல்களில் காட்டப்படும் ஒரு அசைவு என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, முத்திரைக்கு ஆரம்பம், நடு, இறுதி என செயல் வடிவில் காட்டிய கதக்களி ராஜீவ் அவர்களுக்கு எனது பாராட்டுகள். நமஸ்காரங்கள்.

இப்போது நாஞ்சிலாரின் விசயத்திற்கு வருகிறேன். நாஞ்சிலாரிடம் நான் முன்வைத்த கேள்வி  உங்களை எழுதத் தூண்டிய(வர்) சூழ்நிலை / யார்?

பதிலை சுருக்கமாக சொல்கிறேன்:  சாதாரணமாக பிழைப்புக்காக பம்பாய் சென்று நாள் முழுவதும் உழைத்து விட்டு மாலையில் இருப்பிடம் திரும்பும் ஒருவர் என்ன செய்வார்?

நண்பர்களோடு பொழுது போக்கலாம்.  வெட்டியாக தூங்கி ஓய்வெடுக்கலாம். வானொலி கேட்கலாம். உலாவி வரலாம். இறுதியாக புத்தகங்கள் படிக்கலாம். ஆர்வம் மிகுந்து எழுதிப் பார்க்கலாம். நாஞ்சிலாரும் அதனையே செய்தார். 

மேலும் ஜெயமோகனின் இணையத்தில் கேட்கவும் முடியும். இது நம்மைப் போன்ற ஆரம்ப எழுத்தாளர்களுக்கு / எழுத துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல. இளையத் தலைமுறைக்கும் செய்தி விடுப்பதாக உணர்கிறேன்.

பல விசயங்களை சொல்லாமல் விட்டிருக்கிறேன். அதில் சுவராசியம் இல்லையென்றோ எனது மறதி என்றோ கூறப் போவதில்லை. கட்டுரை நீளம் கருதியே வெட்டி விட்டு விட்டேன். இந்த இரு பகுதிகளில் உள்ள விசயங்கள் அடுத்த ஆண்டு மீண்டும் உதகைக்கு செல்லும் வரை எழுதக் கூடிய விசயங்களாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

நன்றி.

Jun 9, 2011

சொக்கனின் கார்காலம்


சிறப்புப் பதிவர்: நட்பாஸ் 


இத்தனை நாட்களாக நான் நம் டிவிட்டர் நண்பர் என் சொக்கன் அவர்களின் கார்காலம்என்ற தொடர்கதையைப் படிப்பதை ஏன் தவிர்த்தேன் என்று வியப்பாக இருக்கிறது. ஒரு சமயம் அவருடன் அன்றாடம், நிமிடத்துக்கு நிமிடம் டிவிட்டரில் தொடர்பில் இருப்பதால் அவரை ஒரு இளையராஜா ரசிகராக, புத்தகங்களின் ஆராதகராக நினைக்கத் தோன்றுகிறதே தவிர, அவரை ஒரு இலக்கியவாதியாக என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதை இப்போது படித்துக் கொண்டிருந்தால், சொக்கனும் இந்த வரிகளை ஒரு மெல்லிய புன்னகையோடு கடந்து செல்வார் என்று தோன்றுகிறது- அவருக்கு தான் ஒரு இலக்கியவாதி என்ற பாவனை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் அப்படி அவர் தன்னை நினைத்துக் கொண்டால் அதில் தவறிருப்பதாகச் சொல்ல முடியாது. டிவிட்டரில் உள்ள ஒவ்வொருத்தரும் இலக்கியவாதிதான் என்பதைத் தவிர வேறு ஒரு வலுவான காரணமும் எனக்குத் தோன்றுகிறது. அதைச் சொன்னால் நீங்கள் எல்லாரும் என்னை அடிக்க வருவீர்கள். 

சொக்கனின் கார்காலம் படிக்கும்போது எனக்கு முதலில் வண்ணதாசனின் "போர்த்துக் கொள்ளுதல்" என்ற கதை நினைவுக்கு வந்தது. வண்ணதாசன் தன் கதையை ஏறத்தாழ முழுதும் சரசு என்ற பாத்திரத்தின் பார்வையில் எழுதியிருப்பார். வண்ணதாசனின் அவன் என்ற பெயர் சொல்லப்படாத பாத்திரம், சொக்கனின் கதையில் அரவிந்தனாகப் பேசுகிறதோ என்றுகூட நினைத்தேன். சரசு வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சொக்கனின் செல்வி தன்னுள் பொதித்து வைத்திருக்கிறாள். அவள் அரவிந்தனுக்கு அறிய முடியாத புதிராகவே இருக்கிறாள். ஆனால் சரசுவை அலட்சியப்படுத்தும், சரசுவின் உணர்வுகளில் அக்கறை காட்டாத அந்த அவன், அவனும் இதயம் உள்ளவன்தான். அவனால் தன் உணர்வுகளைப் பேச முடிந்திருந்தால் அவனும் அரவிந்தன் மாதிரி பேசியிருப்பானோ என்று தோன்றுகிறது.

போர்த்துக் கொள்ளுதலைப் படித்த காரணத்தால், எனக்கு கார்காலத்தில் அதன் எதிரொலிகளை நினைவு கூர்ந்து ரசிக்க முடிந்தது. வண்ணதாசனின் சிறுகதையில் வந்தவர்களின் வாழ்வின் மறுபக்கம் சொக்கனின் கார்காலத்தில் தென்படுவதாக நினைத்துக் கொண்டேன்.

எவ்வளவுதான் நேசம் மிகுந்தவர்களாக இருந்தாலும், உடலளவில் ஒன்றுகூட, மன அளவில் நிரந்தரமாய் இருக்கும் நிறைக்க முடியாத இடைவெளி எந்தவொரு தம்பதியராலும் நெருடலாகவே உணரப்படும் என்று நினைக்கிறேன். அதிலும் புதுமணத் தம்பதிகளுக்கு இந்த உணர்வு மனதை வருத்தும் தொடர்ந்த உறுத்தலாக இருக்கும் என்று தோன்றுகிறது. காதல் என்பது தன்வயமாக்கிக் கொள்ளுதல் என்று சொன்னால், இவர்களில் யாருக்கு வலுவான ஆளுமை இருக்கிறதோ அவர்கள் மற்றவரின் ஆளுமையை முழுமையாக தனதாக்கிக் கொள்ள நினைப்பார்கள், இல்லையா?

கார்காலத்தில் செல்விக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை- அவள் அரவிந்தனை உள்ளபடி ஏற்றுக் கொண்டு சூழலின் தேவைகளுக்கேற்ப தன் உணர்வுகளை நெகிழ்த்திக் கொள்கிறாள். ஆனால், அரவிந்தனுக்கு அவள் தன்னை முழுமையாக இப்படி ஒப்புக் கொடுத்ததும்கூட ஒரு குற்ற உணர்வையே தருகிறது- அவன் தனக்கும் செல்விக்கும் இடையில் ஒரு பெரிய பள்ளம் இருப்பதாக நினைக்கிறான்- செல்வியால் அதைக் கடக்க முடிகிறது, ஆனால் அரவிந்தன் எப்போதும் தான் எட்டியே நிற்பதாக உணர்கிறான். தன்னால் ஏன் அவளுடன் இயல்பாக நெருங்கியிருக்க முடியவில்லை, அவளது உணர்வுகளோடு ஒருமித்து உணர முடியவில்லை என்று மன உளைச்சலடைகிறான்- தன் இந்த விலகலுக்கு தனது பணம், பதவி மற்றும் தொழில் ஈடுபாடு இவையே காரணமாக இருக்குமோ என்றே சந்தேகப்படுகிறான்.

தொடர்கதை மிக மெதுவாக, பெரும்பாலும் அரவிந்தனின் மன ஓட்டத்தை ஒட்டியே சென்றாலும் அவனது உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் சொக்கன். அரவிந்தனுடைய உணர்வுகளுக்கு நம்மால் இசைய முடியவில்லையென்றால், இந்தக்கதையை நம்மால் பத்து நிமிடத்துக்குமேல் படிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

வண்ணதாசனின் கதையின் சாயலில் சொக்கனின் கதை இருக்கிறது என்று சொல்வது சொக்கனுக்கு நாம் இழைக்கும் அநீதி- இருந்தபோதும், இதைச் சொன்னதற்கு வண்ணதாசன் ரசிகர்கள் என்னை அடிக்க வருவீர்கள் என்றால், அடுத்து நான் சொல்வதைக் கேட்டால் சொக்கனே அடிக்க வந்து விடுவார்.

காளிதாசனின் மேக சந்தேசம் நினைவிருக்கிறதா? ஒரு யக்ஷன், குபேரனின் பணியாள், ஏதோ ஒரு குற்றம் செய்த காரணத்தால் விரட்டி விடப்படுவான். அவன் பருவமழைகால மேகங்களை பிரிந்திருக்கும் தன் காதலிக்கு தூது அனுப்புவான்.

கார்காலம் தொடர்கதையில், ஒரு வகையில் பார்த்தால் அரவிந்தன் யாரோ ஒரு குபேரனுக்குப் பணியாளாக இருக்கிறான். அவன் செய்த குற்றம்? தன் தொழிலில் முனைப்பாக இருப்பது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் ஒவ்வொரு வாரமும் பம்பாய், கல்கத்தா என்று தன் மனைவியை கண்ணீரும் கம்பலையுமாக விழுங்க முடியாத தொண்டை அடைப்புடன் பிரிந்து செல்கிறான்- தன் காதலையே வெளிப்படுத்தத் தெரியாதவன், பிரிவின் தவிப்பை மட்டும் சொல்லி விடுவானா என்ன?

காளிதாசனின் யக்ஷனுக்குத் தூது செல்ல மேகங்கள் கிடைத்தன, தன் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைத்தன. இங்கே,  அரவிந்தன் மும்பையின் மழைக்கால அழுக்கு சாலைகளில், செல்வி இல்லாத போதுகளின் தன் பிரிவாற்றாமையை அவளிடம் சொல்லக்கூடிய வல்லமை பொருந்திய காதலின் மொழியை, ஒரு பரிசுப் பொருளில் காணத்தேடி அலைகிறான்- சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் உளைச்சல் தரும் பிரிவின் வேதனையை விவரிக்க வார்த்தைகள் கிடைக்காமல். காளிதாசனின் யக்ஷனுக்கு இருக்கிற கவித்துவ உணர்வுகள், சொக்கனின் அரவிந்தனுக்கு சரியான வாக்கியங்களாகக்கூட பிடிபடுவதில்லை.

கதை இதுவரை வந்திருக்கிறது- இனி என்ன நடக்கும் என்பதை வாசிக்க ஆவலாக இருக்கிறேன். 
 .
.
.

May 23, 2011

தூஸ்ரா - மேடை நாடக விமர்சனம்

சிறப்புப் பதிவர்: லலிதா ராம்

நான் நாடகங்கள் அதிகம் கண்டிராதவன். நான் பார்த்த நாடகங்கள் அனேகமாய் எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகங்கள்தான். நுணுக்கங்கள் உணர்ந்து எழுதப்படுவதே விமர்சனம். நாடக நுணுக்கங்களுக்கும் எனக்கும் ஸ்நானப்ராப்தியே இல்லாத நிலையில், இந்தக் கட்டுரையை ஓர் பார்வையாளனின் அனுபவ பகிர்வாகப் பார்ப்பதே சரியாக இருக்கும். 

தூஸ்ரா-வின் கதைக் களன் கிரிக்கெட். கிரிக்கெட்டே தன்னைப் பற்றிப் பேசுவதாக நாடகம் தொடங்குகிறது. கணேஷ் விஸ்வநாதனின் கிரிக்கெட் உலகப்பயணமே கதையாக்கப்பட்டிருக்கிறது. கமெண்ட்ரி காலத்தில் இருந்து கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் கதையுடன் சுலபமாக ஒன்றலாம். வசனம் ஆங்கிலத்தில் என்ற போதும், கேட்கும்போது அந்நியமாய் படவில்லை. காட்சியின் சூழலை உருவாக்க முன்னர் பதிவுசெய்த காட்சிகளை பின்னணியாக ப்ரொஜெகட்ரில் ஓடவிடுவதை இன்றுதான் முதலில் பார்த்தேன். சிறப்பாகச் செய்துள்ளனர். காட்சி மாறும் போது இடம்பெறும் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. 
ஆனந்த் ராகவ்


முதல் காட்சி கணேஷின் தந்தையும், தாயும் பேசிக்கொள்வதில் தொடங்குகிறது. கணேஷின் தந்தையாக ஆனந்த் ராகவின் நடிப்பு ஏனோ எனக்கு சோ-வின் டயலாக் டெலிவரியை நினைவுறுத்தியது. ஆனந்தை எனக்கு எழுத்தாளராகத்தான் தெரியும். அவருக்குள் இருக்கும் நடிகரை இன்றுதான் அறிந்தேன். கிரிக்கெட் நுணுக்கங்களை விவரிக்கும் வசனங்களை அனுபவித்து எழுதியிருக்கிறார். அவர் பேச்சிலும் அது தெளிவாக வெளிப்பட்டது. கணேஷின் தாயார் பல நாடகங்களில் நாம் கண்டிருக்கக்கூடிய டிபிகல் தாயார். நகைச்சுவைக்காக சற்றே அதீதப் படுத்தப்பட்டாலும் நெருடலாக அமையாத பாத்திரம்.  ( உதாரணம்: “பௌலரை பேட்டிங் பண்ண சொல்றாங்க, ஆனால் பேட்ஸ்மனை பௌலிங் போடச் சொல்றதில்ல”). ஐ.பி.எல் போன்றதொரு லீகைத் தொடங்க, தொழிலதிபர்கள் கிரிக்கெட் வாரியத் தலைவருடன் பேசும் காட்சியில் தெரிந்த கச்சிதம் முதல் காட்சியிலும் இருந்திருக்கலாம். “கிரிக்கெட் விளையாடுவது ஹாக்கி, ஃபுட்பால் மாதிரி அல்ல. இதில் நுட்பமான திட்டங்கள் பல உண்டு.”, என்பது போன்ற அவசியமற்ற ஒப்பீட்டையும் தவிர்த்திருக்கலாம்.  



நாடகம் முழுவதும் நகைச்சுவை இழையால் நிரப்ப ஆசிரியர் முனைந்து முயன்றுள்ளார். நிறைய காட்சிகளில் வெற்றியும் பெற்றுள்ளார். குறிப்பாக பி.சி.சி.ஐ சேர்மனாக நடித்த அரசியல்வாதி வரும் போதெல்லாம் அரங்கில் சிரிப்பலை பரவியது. கிரிக்கெட் வாரியத்தை தோசைக்கடை அனாலஜியில் விளக்கிய இடமும், பங்களதேஷின் பெயரை மறந்து, ஞாபகம் வரவேண்டி அதைப் பற்றி விவரித்த விதமும் படு பிரமாதம். நிறைய பணத்தைப் பார்த்து, “நான் டெலிகாம் மினிஸ்டர் இல்லை”, போன்ற பஞ்ச் லயாக் இடங்களில் அவரது டைமிங் கச்சிதமாய் அமைந்திருந்தது. ஒரே குறை அந்தப் பாத்திரத்தை வடக்கிந்தியர் என்று கூறியிருப்பது.  ‘ராகவன்’ என்ற பெயரை உச்சரிப்பதில் தொடங்கி, அவர் பேசும் ஆங்கிலத்தில் வடக்கிந்தியத் தாக்கம் சுத்தமாக இல்லை. தென்னிந்திய அமைச்சர் என்று கூறியிருந்தாலும் காட்சிக்கு கேடு ஏதும் வந்திருக்காது என்றே தோன்றியது. 

கிரிக்கெட் ரசிகராகத் தோன்றிவரின் நடிப்பே நாடகத்தின் சிறந்ததாக எனக்குப் பட்டது. புள்ளி விவரங்களை எடுத்து விடுவதாகட்டும், ரத்தத்தில் வரைந்ததை விவரிப்பதாகட்டும், ஹீரோ தோற்கும்போது பொங்கி எழும் காட்சியிலாகட்டும் அந்த இளைஞரின் நடிப்பு பாசாங்கற்று, பிரமாதமாய் வெளிப்பட்டது.  

நடுவில் ஒரு காட்சியில் கிர்மானி விடியோவில் பேசுகிறார். பார்வையாளர்களின் கவனத்தைக் கவர இது நல்ல உத்திதான் என்ற போதும், அந்தக் காட்சியில் ஏனோ ஏகப்பட்ட இரைச்சல். அவர் கேட்கும் கேள்விக்கு கதாநாயகனின் பதில் மிகமிகத் தட்டையாய் இருப்பது துரதிர்ஷ்டம்.  

அவுட் என்று தெரிந்தும் அம்பயர் கொடுக்காததால் தொடர்ந்து ஆடிய மகனோடு தந்தை விவாதிக்கும் காட்சியில் நிறைய கேவலுடன் ஆனந்த் ராகவ் பேசியிருக்கிறார். அந்தக் காலத்தில் அவுட் என்றால் அம்பயர் கொடுக்காவிட்டாலும் ப்ளேயர்கள் கிரீஸை விட்டுக் கிளம்பியது போலவும், இன்றைய ஆட்டக்காரர்கள்தான் ‘வேல்யூஸ்’ ஏதுமின்றி ஆடுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருப்பது சற்றே செயற்கையாக அமைந்திருந்தது. அன்றும், இன்றும், என்றும் மிக சொற்பமானவர்களே அவுட் ஆன அடுத்த நொடி அம்பயருக்கு காத்திருக்காமல் வெளியேறுவார்கள். இதற்காக தந்தை காட்சியின் முடிவில் உடைந்து அழுவது கொஞ்சம் அதீதமென்றால், தந்தை அழுவதைப் பார்த்து மகனும் அழுவது ரொம்ப அதீதம். இந்தக் காட்சியும், மகனுக்கு ஷூ வாங்க வேண்டி தன்னிடம் இருக்கும் ஒரே தங்கச் சங்கிலியை விற்பது போன்ற சம்பவங்களும் ஏனோ நான் சிறு வயதில் பார்த்த செவ்வாய்கிழமை தூர்தர்ஷன் நாடகங்களை ஞாபகப்படுத்தின. குடிக்கமாட்டேன் என்று தந்தையிடம் வாக்கு கொடுத்திருந்தவன், கடைசியில் ஒய்னை குடிப்பது போல காட்சியமைத்து, அவன் புக்கிகளிடம் விலை போவதை வசனமின்றி உணர்த்தியது போன்ற subtle காட்சிகளாகவே மற்ற காட்சிகளையும் அமைத்திருக்கலாம்.

கதாநாயகன் வரும் காட்சிகளில் முக்கால்வாசி நேரம் வேறு யாராவது பேசுகின்றனர். மௌனமாக இருக்கும் போதெல்லாம் ஹீரோவின் முகத்தில் ஒரு சங்கடப் புன்னகை தவழ்கிறது. தான் பேசாத போதும் காட்சியில் நடித்தாக வேண்டுமென்பதை அவர் உணரவேண்டும். தன் கேப்டன் குடித்துவிட்டுப் புலம்பும் போதும், அப்பா கோபப்படும் போதும்,  ரசிகன் உணர்ச்சிவசப்படும் போதும், புக்கி தன்னை விலை பேசும் போதும் ஒரே மாதிரியான பாவத்தை வெளிப்படுத்துகிறார்.  

தீவிர கிரிக்கெட் ரசிகனான எனக்கு, 1983-ல் ஸ்ரீகாந்த் அடித்த 38-ஐ 37 என்றது, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் மாட்ச் கமெண்ட்ரிக்காக பாதி ராத்திரியில் விழித்தது (வெஸ்ட் இண்டீஸ் என்றால் சரியாக இருக்கும்), ஃபீல்டரை ஷார்ட் மிட் விக்கெட்டுக்கு போகச் சொல்லிய பின் ‘பீச்சே பீச்சே’ என்று டீப் மிட் விக்கெட் ஃபீல்டருக்குச் சொல்வது போல அணித் தலைவன் அர்ஜுன் காட்டிய பாவங்கள், போன்ற சில இடங்கள் நெருடலாக அமைந்தன. (இவை எல்லாம் nit-picking என்றறிவேன். ஆனந்த் ராகவ் மன்னிப்பாராக.) 


நன்றி: http://www.flickr.com/photos/shande/

மொத்தத்தில் நாடகம் சற்றே நீளமென்றாலும் அலுப்பு தட்டவில்லை. 2 மணி நேரத்தை 1.30 மணி நேரமாக்கி, கதாநாயகனின் நடிப்பையும் மேம்படுத்தினால் அடுத்த முறை நாடகம் அரங்கேறும் போது இன்னும் பல பாராட்டுகளைப் பெறும்.


_________________


லலிதா ராமின் வலைமனைகள்: கமகம் / கிரிக்கெட் தவிர

May 1, 2011

மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை


சிறப்புப்பதிவர் : நட்பாஸ் 

நேற்று என்னால் தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ந்த "வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்குப் போக முடிந்ததென்றால் அதற்கு நான் என் நண்பர் கோபி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஏடிஎம் அட்டை எப்போதோ காலாவதியாகி விட்ட நிலையில், வீட்டில் வெறும் இருபது ரூபாய்தான் இருக்கிறது என்ற என் கையறு நிலையை இரவுதான் நான் உணர்ந்த்திருந்தேன். அதனால் ஐஓபி வங்கி கிளை திறப்பதற்கு அரை மணி நேரம் முன்னமேயே அங்கு போய் காசு எடுப்பதற்காக க்யூவில் நிற்க வேண்டிய அவசர நிலை. காஷியர் வந்தார், சன்னலைத் திறந்தார், "காசு கட்டறவங்க முதல்ல வாங்க," என்றார். நியாயம்தானே? பணம் நம்முடையது என்றாலும் வாங்குபவனை விட எப்போதும் கொடுப்பவனைக் கூடுதல் மரியாதையுடன் வரவேற்பதுதானே வணிக பண்பாடு? 

அப்போது முன்னால் வந்தவர்தான் கோபி. என்னைக் கண்டு, "இங்கேயும் நம்மாளுங்களைப் பாக்காம இருக்க முடியாதா?" என்று அலுத்துக் கொண்டாலும், நான் பஸ்ஸில்தான் வீடு திரும்பவிருக்கிறேன் என்ற என் நிலையை அனுதாபத்துடன் அவதானித்தார். 

"க்யூவில் எவ்வளவு நேரம் நிப்பே? நான் பைக்கில் போறேன், என்கூட வந்துடேன், " - அடியேனின் பொருளாதார நிலை அதற்கு இடம் தருவதாயில்லை என்பதை அவருக்குத் தெரிவித்தேன்.

"உனக்கு எவ்வளவு வேணும்?"  என்று என் கையிலிருந்த பணமெடுப்புப் படிவத்தை வாங்கிப் பார்த்தார், "ஐயாயிரம்தானே? நான் தரேன், வா"

அவர் என்னை என் வீட்டில் சேர்ப்பித்துவிட்டு அப்புறம்தான் தன் வீட்டுக்குப் போனார், இத்தனைக்கும் அவருக்குத் திருமணமாகி குழந்தைகளெல்லாம் இருக்கிறார்கள்.

("மாமா, நீ மாமியைக் கல்யாணம் செஞ்சப்புறம் எவ்வளவு நாள் சந்தோஷமா இருந்தே?"

"ரெண்டு வருஷம்"

"எல்லாரும் ஒரு வருஷம்னுதானே சொல்லுவாங்க. நீ மட்டும் எப்படி ரெண்டு வருஷம் சந்தோஷமா இருந்தே? அந்த ரகசியத்தை சொல்லுங்க. ப்ளீஸ்"

"அந்த ரெண்டு வருஷம் அவ ட்ரான்பர் ஆகி திண்டுக்கல்லில் இருந்த வருஷங்கள்"

கோபி வழியில் சொன்ன நிகழ்வு)

நண்பரின் புண்ணியத்தில் அதிகாலையிலேயே உச்சி சூரியனின் உக்கிரத்துடன் புலரும் சென்னையின் இளங்காலை வெயிலைத் தவிர்த்தேன். நன்றி கோபி, நல்ல உதவி, இதுபோன்ற அற்புதங்கள் என்றோ ஒருமுறையே நிகழ்வதுண்டு. அவற்றின் நினைவுகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

---------------------------------------------------------------



வெங்கட் சாமிநாதன் தன்னை ஒரு அசாத்திய திறமைகள் கொண்ட சிந்தனையாளராகக் காட்டிக் கொள்வதில்லை. "பொதுபுத்திக்கு அப்பாற்பட்ட எதையும் நான் சொல்லிவிடவில்லை. நான் எழுத்தாளன்கூட இல்லை. என் கட்டுரை "எழுத்து" இதழில் வெளிவந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் என் நண்பர் ஒருவர், "முதலில் சாமிநாதனை ஒழுங்கா தமிழில் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளச் சொல்லு. அப்புறம் அவன் எழுதப் போகட்டும்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கப்புறம் ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போதுகூட அன்னா கண்ணனைக் கேளுங்கள்.  நான் எழுதுவதில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றன என்பதை அவர் சொல்வார். வெறுமே ஐம்பது வருஷமா பொதுபுத்திக்குப் புலப்படக்கூடியதைச் சொன்னதுக்காக இப்படி விழா எடுத்துப் பாராட்டுவார்களா?" என்ற கேள்வியை முன்வைக்கிற வெங்கட் சாமிநாதன்  தன் புகழுக்கான அத்தனை பெருமையும் தமிழ்ச் சூழலையே சேரும் என்கிறார்.

""கட்டுமரத் துடுப்பைப் போல ஆடுதடி இடுப்பு" என்று லட்சக்கணக்கில் செலவு செய்து படமெடுக்கிறார்கள். இதிலுள்ள அபத்தம் பொதுபுத்திக்குத் தெரியாததா? எல்லாரும் இதை மௌனமாக ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லாருக்கும் தெரிந்த இதன் அபத்தத்தை, அழிவை யாரும் அதிகம் பேசுவதில்லை.  ஆனால் நான் பெரிதாக சொல்கிறேன்.  மற்றவர்களுக்கு ஏதேதோ சார்புகள் இருக்கின்றன. எனக்கு அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. அதனால் நான் சொல்லும் சாமானிய, பொதுபுத்திக்குத் தெரிந்த விஷயங்கள், துணிச்சலாக முன்வைக்கப்பட்ட சிந்தனைகளாக தமிழ்ச் சூழலில் தெரிகிறது," என்கிறார் வெசா. 

"இங்கு நான் மூன்று கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை போல் இருக்கிறேன்," என்று நகைச்சுவையாக அவர் குறிப்பிட்டாலும் அதில் உள்ள உண்மையைதான் நேற்றைய விழாவில் பேசிய அனைவரும் வெவ்வேறு திசைகளிலிருந்து சுட்டிக் காட்டினார்கள் என்று எனக்கு தோன்றியது- சிலர் மறைமுகமாக சொன்னார்கள், சிலர் வெளிப்படையாக சொன்னார்கள், கடந்த எண்பது ஆண்டு கால திராவிட இயக்க சிந்தனையின் தாக்கத்தின் விளைவுகள் குறித்து நேற்று பேசிய அனைவருக்கும் கோபமும் வருத்தமும் இருந்தது.  தமிழ் மரபின் வேர்களைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் வெகுசன ரசனையின் வெற்றி,  பரப்பியல் சார்ந்த சிந்தனைகளின் மயக்கம்- இவை தந்த பெருமிதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக கைமாற்றிப் பாதுகாத்த செல்வங்கள் அத்தனையும் மக்களால் அலட்சியபடுத்தப்பட்டு குப்பையோடு குப்பையாய் மட்கிப் போவதில் நேற்றுப் பேசிய அனைவருக்கும் துயரும் தாபமும் இருந்தன. இதற்கு எதிராக இயங்கி, தமிழ் மரபின் வேர்களைப் பாதுகாத்து, அதன் முக்கியத்துவத்தை பண்பாட்டின் மையத்துக்குக் கொண்டு வர முயற்சி செய்தவர்களில் முக்கியமானவராக இவர்கள் வெங்கட் சாமிநாதனைப் பார்க்கிறார்கள். 

அதிகம் யோசிக்காமல் சுயசார்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒற்றைப் பார்வையின் மேலாதிக்கத்தின் காரணமாக நம் பண்பாடு தன் பன்முகத்தன்மையை இழந்து தன் தொன்மைக்கு துரோகம்  செய்கிறதே என்ற வருத்தம் விழாவில் பேசிய அனைவரின் உரையிலும் வெளிப்பட்டது. நாஞ்சில் நாடன் மட்டும்தான் வழக்கம் போலவே தன் இயல்புப்படி இதை வெளிப்படையாக, ஆணித்தரமாகச் சொன்னார், "எனக்குப் பிடிக்காத வார்த்தை, இந்த 'பார்ப்பான்' என்பது. அதை சொல்லி விட்டால், எதிர்த்து எதுவும் பேச முடியாது என்று ஆகிவிட்டது.  இதைச் சொல்லும் என்னைப் பார்ப்பன அடிவருடி என்பார்கள். ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்," என்றார் நாஞ்சில் நாடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் உரக்கவே. தன் வழக்கப்படி அவர் ஆவேசமாக தமிழ்ச் சூழலை சாடிக் கொண்டிருக்கும்போது சீட்டு அனுப்பி தடுத்து  விட்டார்கள்.  அவருக்கு இருக்கிற கோபத்துக்கு ஊர் ஊராய்ப் போய் நாள் கணக்கில் கோபப்படுவார் நாஞ்சில் என்று தோன்றுகிறது.

நாஞ்சிலைத் தவிர்த்துப் பார்த்தால் நேற்று பேசியவர்களில் அனுபவப்பட்ட சிலரைத் தவிர மற்றவர்களுக்குப் பேசத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அவரவர் தமக்கிருந்த ஏதோ ஒரு காரணத்தால் தமிழில் தொடர்ந்து நாலு வாக்கியம் பேசவே சிரமப்பட்டார்கள். "இந்தப் புத்தகம் போடுவதற்கான எண்ணம் எங்களுக்கு ஸ்காட்ச் குடித்துக் கொண்டிருக்கும்போது வந்தது." என்ற பின்நவீனத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தகவலுடன் இந்த விழா துவங்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

யார் யார் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்களை நான் பதிவு செய்யப்போவதில்லை. அந்த அளவுக்கு எனக்கு நினைவுத் திறனும் கிடையாது. ஒவ்வொருத்தரும் தன் துறை, அல்லது தன் களம் சார்ந்த பார்வையில் வெங்கட் சாமிநாதனை அணுகினார்கள் என்று சொல்லலாம்.  நாஞ்சில் நாடன் பெரும்பாலும் இலக்கியம் மற்றும் அது சார்ந்த சமூக சூழல்,  வெளி ரங்கராஜன் நாடகம் மற்றும் நுண்கலை விமரிசனத்தில் வெங்கட் சாமிநாதனின் பங்களிப்பு- குறிப்பாக அவரால் நவீன தமிழ் நாடகத் துறையில் ஏற்பட்ட படைப்பூக்கம் பற்றி பேசினார். ஜெயமோகன் வெங்கட் சாமிநாதனின் விமரிசனப் பார்வை குறித்தும் அது எதிர்கொள்ளப்பட வேண்டிய விதம் குறித்தும் பேசினார் (இது பற்றி நண்பர்கள் விரும்பினால் தனி குறிப்பு பிற்சேர்க்கையாக இப்பதிவில் இணைக்கப்படும்). செங்கதிர் மிகுந்த தடுமாற்றத்துடன் பேசினார், அவர் என்ன சொல்ல வந்தாரோ அதை சரியாக சொல்லவில்லை என்றுதான் தோன்றுகிறது. நாட்டார் கதை ஒன்றைச் சொல்லி தனித்துவம் குறித்து ஆழ்ந்த ஒரு கருத்தை அவர் முன் வைத்தார் , ஆனால் அவருக்கு அதை அழகு செய்து சொல்லத் தெரியாததால், இவ்வளவுதானா என்று எனக்குத்  தோன்றியது. பொதுவாக ஆழமான உண்மைகள் ஆரவார அலங்காரங்கள் இல்லாமல் வந்தால் சாதாரணமாகத்தான் இருக்கும்- வெங்கட் சாமிநாதன் கூறும் பொதுபுத்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மிக அரிதாகவே புலப்படுகின்றன, பேரரசனின் புத்தாடைகளைப் போல.

இவர்கள் தவிர கவிஞர் திலகபாமாவும் அரவிந்தன் நீலகண்டனும் பேசினார்கள். கவிஞர் திலகபாமா எழுத்தாளர்களே விமரிசகர்களாக இருப்பதில் உள்ள ஒரு அபாயத்தைச் சுட்டிக் காட்டினார்- அவர்கள் தங்கள் எழுத்தைப் போன்றதாக இல்லாத படைப்புகளை தோல்வியடைந்தனவாக ஒதுக்கி விட நேர்கிறது, என்றும், தங்களைப் போன்று எழுதுபவர்களை ஒரு இன்செக்யூரிட்டி காரணமாக நசித்துவிட நேர்கிறது என்றும் சொன்னார். இது எந்த அளவுக்கு சரியான கருத்து என்று தெரியவில்லை. இருந்தாலும் படைப்பூக்கத்தில் செயல்படுகிறவர்களுக்குத் தங்களுக்குப் படைப்பூக்கம் அளிக்காத எதுவும் படைப்பு என்ற அளவில் தோற்றுப் போனதாகவே தெரியும் என்பது ஏற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.  மற்றபடி நசிப்பது, நசிக்காமல் இருப்பது போன்றவை தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயங்கள்.  இந்த மனப்போக்கைக் கைகொள்பவர்கள் நம்மிடையே எங்கும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டனின் பேச்சு விளையாட்டு போல அவருக்கு காவி சாயம் பூசும் பா ராகவன் போன்றவர்களுக்கும் அதை வினையாகவே செய்பவர்களுக்கும் அநீதி செய்வதாக இருந்தது. நான் நினைத்த மாதிரி இல்லாமல்,  நீல கலர் முழுக்கை சட்டை போட்டு வந்திருந்தார்- அவர் அரங்கில் அமரத் தேர்ந்தெடுத்த இருக்கைகள் பெரியாரின் உருவப்படத்தை ஒட்டியிருந்தன.  பெரியாரின் உருவப்படத்தின் கீழ் சிஷ்யப் பிள்ளைக்குரிய அடக்கத்துடன் அரவிந்தன் நீலகண்டன் யாரோ ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த அரிய காட்சியை காவிப் படைக்கு பயந்து நான் புகைப்படமெடுக்கத் துணியவில்லை. அவரும் தன் பேச்சில், மரபுகளைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்குபவர்கள் அடிப்படைவாத அடையாளங்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது, இதைத் தவிர்த்து, மரபை மீட்டு முன்னெடுத்துச் செல்வது எப்படி என்பதை நாம் யோசிக்கும்போது, அங்கு வெங்கட் சாமிநாதன் முக்கியமானவராக இருக்கிறார் என்று பேசியது அரவிந்தன் நீலகண்டனின் பிம்பத்துக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் பதிவின் துவக்கத்தில் சொன்ன மாதிரி, கடன் வாங்கிய காசில்தான் விழாவுக்கே போயிருந்தேன்.  போகும்போதே என்ன ஆனாலும் புத்தகத்தை வாங்கிவிடக் கூடாது என்று முடிவு செய்துகொண்டுதான் போயிருந்தேன்- என் நிலைப்பாட்டுக்குரிய கடப்பாடுகள் நியாயமானவை என்று நான் இப்போதும் நினைக்கிறேன். இதுவரை பேசியவர்கள் இலக்கியம், இசை, ஓவியம், நடனம், நாடகம், நாட்டாரியல் மற்றும் காண்பாரியம் குறித்து வெங்கட் சாமிநாதன் தன் கருத்துகளை விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக முன்வைத்தார் என்று பேசியிருந்தார்கள்.  அவரது பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்றும் சொல்லியிருந்தார்கள்.  ஆனால் வெங்கட் சாமிநாதன் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் புத்தகத்தை வாங்கக் கூடாது என்ற என் முடிவை மாற்றிக் கொள்ளப் போதுமானதாக யார் பேசியதும் இருந்திருக்கவில்லை- இவர்களின் உரை அறிவு சார்ந்த ஒன்றாக மட்டும் இருந்திருந்த காரணத்தால்.

வெங்கட் சாமிநாதன் கால காலத்துக்கும் மதிக்கப்பட வேண்டிய மனிதராக இருந்துவிட்டுப் போகட்டும், அவரது எழுத்து நம் பண்பாட்டின் வெவ்வேறு நரம்புகளைத் தாக்கித் தூண்டி எழுச்சியுறச் செய்திருக்கட்டும். ஆனால் அதனால் எனக்கென்ன வந்தது? கைக்காசு போட்டு ஒரு புத்தகத்தை வாங்கப் போதுமான காரணங்களா அவை? நான் என் காசை செலவு செய்தாலும் செய்யாவிட்டாலும் எதுவும் மாறப் போவதில்லை. எனவே ஒரு மாதிரி விண்டோ ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோதுதான் தன் முடிவுரையைப் பேச அகிலன் வந்தார்.

இந்தப் புத்தகம் பதிப்பாகக் காரணமாக இருந்தவர்களில் இவரும் சனாதனன் என்பவரும் இலங்கைத் தமிழர்கள். அண்மையில் இலங்கையில் நடந்த யுத்தத்தில் இங்குள்ள தமிழர்கள் அக்கறை காட்டவில்லை என்ற ஏமாற்றத்தின் காரணமாக சனாதனன் தமிழகம் வருவதில்லை என்றிருக்கிறாராம். அகிலன் ஒரு மிக எளிமையான விஷயத்தைச் சொன்னார். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாடு குறித்து பட்டப்படிப்பு படிக்க முடியும் என்ற நிலை உண்டு- அகிலன் அங்கு படித்த காலத்தில் இலக்கியம் நீங்கலாக, தமிழ் நாடகம், நடனம், இசை, நாட்டாரியல் என்று எந்த நுண்கலையைத் தொட்டாலும் அதில் வெங்கட் சாமிநாதன் நீங்கலாக வேறு எவரும் பொருட்படத்தக்க வகையில் எந்த ஆய்வு நூலையும் எழுதியிருக்கவில்லை என்றார் அவர். படித்தால் அவர் எழுதியைதான் படிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது என்று அகிலன் சொன்னதும், எனக்கு ஏறத்தாழ தமிழர்கள் அனைவரும் ஒரு நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக தோன்றியது. வெங்கட் சாமிநாதன் தனியொருவராக அதன் மரபுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முயன்றிருக்கிறார். தமிழ் மரபின் தொன்மையை தமிழ் அறிவுச் சூழலின் மையத்துக்குத் தன் வாதங்கள் மற்றும் விவாதங்கள் வழியாக கொண்டு வர ஐம்பதாண்டுகளாக பாடுபட்டிருக்கிறார் வெங்கட் சாமிநாதன். அவர் குறித்த வாதங்கள் விவாதங்களைத் தொகுத்து அவற்றின் வழியாக வெங்கட் சாமிநாதனை அறிவதே பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதாக முடிவு செய்தோம் என்றார் அவர்.

உண்மையாகவே சொல்கிறேன், அவரது பேச்சு என்னுள் ஒரு மனவெழுச்சியைத் தூண்டுவதாக இருந்தது- பாக்கெட்டில் ஒரு பகடை உருண்டது. முன்னூறு ரூபாய் காலி. ஒரு நிமிடம்தான் நினைத்துப் பார்த்தேன்-  அகிலனையும், இங்கே வருவதில்லை என்று முடிவு செய்திருக்கும் சனாதனையும் வெங்கட் சாமிநாதனைக் குறித்து ஒரு புத்தகம் போடத் தூண்டியது எது? மொழி. மொழி அவர்களுக்கு தவிர்க்க முடியாத வாழ்வாகவும் வீழ்ச்சியாகவும் இருக்கிறது. மொழியும் அதன் வரலாற்றைத் தன்னுள் அடக்கித் திரண்டிருக்கும் மரபும். இதைக் காக்க வெங்கட் சாமிநாதன் நேர்மையுடன் இயங்கியிருக்கிறார். அதை பெருமைப்படுத்தி இவர்கள் பணத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்து ஒரு புத்தகம் போடுகிறார்கள், அதன்முன் என் காசு பிச்சைக் காசு, இல்லையா?

மொழியும், அதன் பண்பாடும் மரபும் நம் யாருக்கும் தனியுடைமை அல்ல. நம் சார்புகள் எவையாய் இருந்தால் என்ன? நாம் எங்கிருந்தால் என்ன, என்ன சாதியாய், என்ன சமயமாய் இருந்தாலென்ன? நம் மொழியே வேறாக இருந்தால்தான் என்ன?- இப்புத்தகம் வெளிவர உழைத்த திலிப் குமார் ஒரு குஜராத்தி என்கிறார்கள் (பெண்ணைப் பெற்ற அப்பா போல் அவர் அரங்கில் இங்குமங்கும் நடந்து எல்லாரையும் கவனித்துக் கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது).

இதுதான் நாம்.  இதை நேர்மையுடன் சுட்டிக்காட்டியதால்தான் வெங்கட் சாமிநாதன் மீது இன்றும் கவனம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இறுதியில் பேசும்போது வெங்கட் சாமிநாதன் சொன்னார், வீட்டில் அமர்ந்து பேசுவது போன்ற நெருக்கம் அவர் பேச்சில் இருந்தது. "நியாயமாகப் பார்த்தால் நான் எழுத்தாளன் அல்ல. என் எழுத்து இவ்வளவு கவனம் பெற்றிருக்கக் கூடாது. என் முதல் தொகுப்பு எங்கோ ஒரு சிற்றூரில் இருந்த விவசாயத் துறை சார்ந்த மூவரால் பதிப்பிக்கப்பட்டது. இப்போது இது இங்கே டெல்லியில் ஒருவர், வெளிநாட்டில் ஒருவர், சென்னையில் ஒருவர் என்று வெவ்வேறு நபர்களின் தனிப்பட்ட முயற்சியால் தொகுக்கப்பட்டு இங்கு இந்த விழா நடக்கிறது. ஒரு அகாதெமி அல்லது பல்கலைக் கழகம் போன்ற அமைப்பு செய்ய வேண்டிய வேலை இது.  ஆனால் எனக்கு இப்படி நடக்கிறது. இந்த மாதிரி கவனம் பெறுவது என்பது மிக அதிசயமான ஒன்று - மூன்று கைகளுடன் ஒரு குழந்தை பிறப்பது எவ்வளவு அதிசயமான ஒன்றோ அதைப் போன்றதுதான் நான் இந்த தமிழ் சூழலில் கவனிக்கப்படுவதும்," என்றார் அவர். தன் பொதுபுத்தி பற்றி அவர் சொன்னதை ஏற்கனவே சொல்லி விட்டேன்.

தனி மனிதர்கள் எதற்காக இப்படி வெங்கட் சாமிநாதனை கவனிக்கிறார்கள்? அவரிடம் அப்படி என்ன இருக்கிறது? அது அவரது பார்வைதான் என்று நினைக்கிறேன்.  நேர்மையாய் வெளிப்படும் அவரது தனிக்குரல்.  "இந்த ஐம்பது ஆண்டுகளில் நான் எழுதியதில் ஏதாவது பயனிருக்கிறது என்று நினைக்கிறேனா? நான் எதையாவது உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் என்று நினைக்கிறேனா? நான் எழுதியதில் எதற்காவது வால்யூ இருக்கிறது என்று நினைக்கிறேனா என்று கேட்டால் எதுவும் இல்லை என்றுதான் சொல்வேன்," என்று சொல்லி விட்டு நிறுத்தினார் வெங்கட் சாமிநாதன்.

"ஆனாலும் ஒன்று இருக்கிறது  என்று சொல்வேன். ஒரு சிறு வால்யூ. அதை நான் உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் என்று நினைக்கிறேன். நேர்மையாக, நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள். உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஒருவன் மட்டும் நேர்மையாக இருந்தால், அவனை ஏதாவது செய்யலாம்.  ஆனால் நாம் ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நேர்மையாக இருந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. நேர்மையாக இருங்கள்," என்றார் அவர்.  இந்த சத்தியம்தான் அவர் தனியொரு மனிதனாக இயங்கியபோதும் அவரைக் காப்பாற்றி வெவ்வேறு மனிதர்களின் முயற்சியின் மூலமாக அவரை நம் கவனத்தில் தொடர்ந்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

உண்மையில் வெங்கட் சாமிநாதன் மூன்று கைகளுடன் பிறந்த குழந்தைதான். இந்த தமிழ் சூழலில்,  அமைப்பின் ஆதரவைப் பெறாமல் தனி மனிதர்களின் முயற்சியால் அவரது தவிர்க்க முடியாத கேள்விகள் தொடர்ந்து கவனத்தைப் பெறுகின்றன. அதனால் அவரும் ஒரு பேராளுமையாக நிலை பெறுகிறார். இந்த நிகழ்வுக்கு தமிழகத்தின் சீர்கேட்ட சூழலை அவர் காரணமாக சொன்னாலும் உண்மை அதுவல்ல. 

வெங்கட் சாமிநாதனின் முதல் புத்தகத்தை தம் முயற்சியில் பதிப்பித்த முதல் மூவர். இப்போது இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கும் மூவர். ஆமாம், இந்தக் குழந்தை மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை. ஆனால் இதுவல்ல அதிசயம் - அது ஐம்பது ஆண்டுகளாக ஒற்றை நாக்கில் பேசி வருகிறது, அதுதான் அதிசயம்.
.
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...