Dec 28, 2023

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 3

 காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 3


Most happening day: காசி விஸ்வநாதர் கோயில், காசி விசாலாட்சி கோயில், அன்னபூரணி கோயில் சென்ற திவ்ய அனுபவங்கள் ஒருபுறம், சாரநாத் சென்ற இனிய அனுபவம் மறுபுறம்.


காசியில் வரவேற்பு: காலை நாலரைக்கு பனாரஸ் ( காசி, வாரணாசி, பனாரஸ் - மூன்றுமே ஒரே ஊர்தான் ) வந்திருக்க வேண்டிய ரயில் மூன்று மணிநேர தாமதத்தில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. 


வந்தவர்கள் அனைவருக்கும் உ,பி. அரசின் சார்பில் பலமான சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்பட்டது. மாநில பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அமைச்சர் அனில் ராஜ்பர் எங்களை வரவேற்க வந்திருந்தார். உள்ளூர் பாஜக அபிமானிகளும் ரயில் நிலையத்தை தங்கள் வரவால் நிரப்பியிருந்தனர். சிவப்புக் கம்பளமிட்டு, மாலை சூட்டி, பூக்கள் தூவி என நம் வாழ்வில் காணா ஒரு தடபுடல் வரவேற்பு. அரசின் விருந்தினர் என்றால் யார் என்பது இந்தப் பயணத்தில் ஓரளவு விளங்கியது.


காசி மாநகரில் அடுத்த இரு தினங்களுக்கான எங்கள் திட்டப் பயணத்திற்கு என எட்டு எலக்ட்ரானிக் பேருந்துகள் காத்திருந்தன. காசியில் வந்து இறங்கி விட்டோம் என்பதை உலகிற்கு அறிவிக்க பனாரஸ் ரயில் நிலைய வாசலில் நின்று சில செல்ஃபிக்கள் எடுத்து அவற்றை சோஷியல் மீடியாக்களில் போஸ்ட் செய்துவிட்டு எங்கள் காசி பயணத்தைக் துவக்கினோம்.


முதலில் காலை உணவு. இரண்டு நாட்கள் ரயிலில் ரொட்டி - சப்ஜி தின்று களைத்த நாவுகளுக்கு இட்லி-பொங்கல்-இடியாப்பம்-சட்னி-சாம்பார் அமிர்தமெனக் கிடைத்தது. பின் ஹோட்டல் அறை நோக்கி ஒரு சிறு பயணம். குளியல் முடிந்த பின் புறப்பட்டு காசி விஸ்வநாதர் கோயிலை அடைந்தோம்.


கோயில் நுழைவாயிலில் ஒரு விவிஐபி வரவேற்பு எங்கள் குழுவுக்கு - தந்தவர்கள் கோயிலின் வேத பண்டிதர்கள் அறுவர். கோயிலின் உள் நுழைவாயிலின் உள்ளே நுழைந்ததும் மற்றுமொரு வேத பண்டிதர்கள் குழு வேத முழக்கத்துடன் மலர் தூவி எங்களை வாழ்வாங்கு வாழ வாழ்த்தி கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். சிறப்பு தரிசனம், வெகு சிறப்பாக.


தரிசனம் முடித்து மணிகர்ணிகா காட் படித்துறையில் அமர்ந்து மணிகர்ணிகா அஷ்டகம் சொன்னது நல்லனுபவம்.


என் அப்பா வழிப் பாட்டியின் பெயர் விசாலாட்சி. அம்மாவின் அம்மா பெயரும் விசாலாட்சி. இவர்களுள் முதல் விசாலாட்சிப் பாட்டியை நான் பார்த்ததில்லை. அம்மாவிடம் இதை பெரும்குறையாக ஒருதரம் சொன்னபோது காசி விசாலாட்சியை தரிசித்தால் உனக்கு அந்தக் குறை தீரும் என்று சொன்ன நினைவு. அம்மாவின் வார்த்தை இன்று பலித்தது மெய்யாகவே. குட்டியூண்டு கருப்பு தேவதை. நம்மூர் தெருமுனை விநாயகர் கோயில் பிரகாரங்களின் அளவிற்கே கோயிலின் மொத்த அளவுமே. நம்மூர் நகரத்தார் பராமரிக்கும் கோயில் - தென்னிந்திய கட்டிடக் கலையை ஒட்டிய கோபுர அமைப்பு.. சுற்றி வர ஒரு நிமிடம் போதும். பெரும் கெடுபிடி, கூட்டங்களும் இல்லாத சிம்பிள் தேவதை.


அடுத்து அன்னபூரணி. விஸ்வநாதருக்கு இணையாக மக்கள் கூட்டம் கூடும் கோயில். சிவபெருமான் கூறியதன்படி பார்வதி தேவி அன்னபூரணியாக உருவெடுத்து வந்து வாரணாசியின் பசி தீர்த்ததாக ஒரு வரலாறு உண்டு. மற்றொரு நம்பிக்கையின்படி சிவனுக்கே அன்னம் படைத்த பூரணி இவள் என்போரும் உண்டு. இதன் காரணமாக, காசியில் அன்னபூரணி தட்டு வாங்கி அதில் அரிசி படைத்து வணங்க வாழ்க்கையில் அன்னத்திற்கு குறை இராது என்பது நம்பிக்கை, குறிப்பாக நம்மூர் மக்களுக்கு. காசியில் தடுக்கி விழுந்தால் அன்னபூரணித் தட்டுகள் மேல்தான் விழ வேண்டும். தமிழிலேயே நாலு நூரு றூபா, மூணு நூரு றூபா என்று விற்கிறார்கள்.


விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி என மூன்று கோயில்களும் கிட்டத்தட்ட ஒரே வளாகத்தினுள் நடை தூரத்திலேயே இருந்தன.


மதியம் ஒரு ராயல் தென்னிந்திய அன்னதானம் விஸ்வநாதர் அருளினார். நல்ல சாம்பார், அருமையான கூட்டு, பொரியல், அற்புதமான ரசம் + அப்பளம் + மோர் - வேறென்ன வேண்டும்? 







உணவுக்குப் பிறகு சாரநாத் சென்றோம். கோயில் பகுதியில் இருந்து ஒரு எட்டு கிமீ தொலைவு பயணம். சாரநாத் அனுபவம் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதுகிறேன்.


காசி மாநகரின், நகர மக்களின் traffic sense நம் சென்னை மாநகர மக்கள்தம் traffic sense'க்கு சற்றும் குறைவில்லாதது. அது குறித்தும் தனியே எழுதலாம் தான். எனினும் நம் பயணமும், அதன் நோக்கமும் அதை கவர் செய்யவல்ல என்பதால், 

இப்போதைக்கு... (தொடரும்) 


Dec 26, 2023

காசி தமிழ் சங்கமம் - நாள் 2

 






நாள் 1


இரண்டாம் நாள் முழுக்க ரயில் பயணத்திலேயே கடந்தது.

 

காலை ஒன்பது மணிக்கு வந்தடைய வேண்டிய நாக்பூரை ஒரு மணிநேரம் தாமதமாகவே வந்தடைந்தது ரயில். ஆகவே, சற்றே தாமதமான காலை உணவு. ஆனால், அதற்கு முன்னதாக சுமாரான ஒரு நல்ல தேநீரும், நல்லதாய் நாலு வெரைட்டி பிஸ்கட் பாக்கெட்டுகளும் உபசரிப்பில் ஒரு பகுதியாய்க் கிடைத்த புண்ணியத்தில் பசி தாங்க இயன்றது.

 

 பயணத்தில் சந்தித்த சிலர் பற்றி:

 

நிர்மால்யா: பிரபல எழுத்தாளரும், அகாதமி விருது பெற்றவருமான நிர்மால்யா இந்தப் பயணத்தில் இருந்தார்.     அவர் வந்திருந்ததை ஓவியர் ஜீவா ஃபேஸ்புக்கில் சொல்ல, நிர்மால்யா இருந்த இடத்திற்கே சென்று அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு வந்தேன்.

 

பேராசிரியர் லஷ்மி: இந்து கல்லூரியில் பேராசிரியரும், எழுத்தாளருமான லஷ்மி. இன்றைய கல்விமுறை குறித்து இவரிடம் நிறைய உரையாட முடிந்தது.

 

ஆசிரியர் பாரதி சதிஷ்ராஜ்: ஏற்காட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரும், எழுத்தாளருமான சதிஷ் ராஜ். இளரத்தம் தாங்கிய, புதிய சிந்தனைகளுடனான ஒரு துள்ளல் மனிதரை அரசு ஆசிரியராகப் பார்த்த மகிழ்வை என்னவென்று சொல்ல. தான் சார்ந்த வேதியியல் துறை சார்ந்து புனைவுகளும், அபுனைவுகளும் எழுதுகிறார். இவரை வாசிக்க வேண்டும்.

 

மதுரை முரளி, இதயம் கிருஷ்ணா, கவிதாயினி கோமளா என இன்னமும் பல கவிதை ஆசிரியர்களும் வந்திருந்தனர்.

 

நாஞ்சில் நாடன் முதல் கண்மணி குணசேகரன் வரை, அகாதமி விருது முதல், கவிஞர் இசை வரை விரிவாகப் பேசும் ரவிக்குமார் எனும் சீனியர் சிட்டிசன் ஒருவர் என் அடுத்த இருக்கையில் இருந்தார். வளரும் எழுத்தாளர்கள் + சினிமாக் கனவில் அதற்கு எழுதிக் கொண்டிருப்பவர்கள் சிலரும் வந்திருந்தனர்.

 

இங்கே இவர்கள் தாண்டி ஆச்சர்ய சந்திப்புகள் சில: சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள், சின்னஞ்சிறு தமிழ் ஸ்காலர்கள், எம்.ஏ.தமிழ் மாணவர்கள். மிகவும் ஆச்சர்யம் தந்த சந்திப்பு பண்பரசன் என்ற அரசியல் ஆய்வாளர் ஒருவர்.

 

இவர்கள் நான் அமர்ந்திருந்த பெட்டியின் ஒரு பகுதி மக்கள். மற்றோர் அறிமுகம் அடுத்த நாட்களில் கிடைக்கும் என நம்புகிறேன்.

 

நிற்க, காலையில் நாக்பூர் ரயில் நிலையத்தில் மஹாராஷ்டிரா பாஜக அன்பர்கள் காத்திருந்து இனிய தேநீர் உபசரிப்புடனான வரவேற்பு தந்தனர். இட்லி, வடை, சட்னி என ஒரு ஓகே ஓகே காலை உணவு. சப்பாத்தி-சாவல்-சப்ஜி என மதிய உணவு, அதே-அதே இரவுணவு. இடையே ஒரு தேநீர். இதோ தூங்கப் போக வேண்டும். காலையில் எழுந்தால் காசி வந்திருக்கும்.

 

காசி தமிழ் சங்கமம் - நாள் 1

இந்த வருடம் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் பங்கு கொள்ள வாய்ப்பு அமைந்தது. இன்று இரண்டாம் நாள் பயணத்தில் இருக்கிறோம். 

காசி தமிழ் சங்கமம் (KTS) - இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் என அறியப்படும் வாரணாசியில் சென்ற வருடம் முதல் நிகழ்ந்து வருகிறது காசி தமிழ் சங்கமம். மத்திய அரசின் ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்னும் முன்னெடுப்பின் கீழ் இந்த சங்கமம் நிகழ்வு வருகிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள்/கைவினைஞர்கள், நிபுணர்கள், வணிகர்கள், ஆன்மிகம், எழுத்தாளர்கள் என்ற ஏழு பிரிவுகளில் இந்த வருடம் மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. சுமார் 60000 விண்ணப்பங்கள், அவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட 1500 பேர் இந்த வருடம் பயணப்படுகிறோம். 

ஆறாவது பிரிவான எழுத்தாளர்கள் பிரிவில் எனக்கு ஒரு இருக்கை கிடைத்தது. ஐஐடி மெட்ராஸ் முயற்சியில் மத்திய அரசின் சார்பில் மத்திய கல்வித்துறை இந்நிகழ்வை நடத்துகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. பயண ஏற்பாடுகளைச் செய்கிறது. அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள். 

இதோ இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாம் நாள் காலையான இப்போது வரை ஏற்பாடுகள் பிரமாதமாக உள்ளன. நிகழ்வுக்கான நம் விண்ணப்பப் பதிவை உறுதிசெய்து தகவல் அனுப்பியதில் தொடங்கி, ரயில் பயணச்சீட்டு உறுதி செய்ததில் இருந்து, ரயில் நிலைய வரவேற்பு / வழியனுப்பல், ரயிலில் இதுவரை உணவு உபசரிப்பு என so far so good.


எழுத்தாளர் என்ற அடையாளத்தில் செல்வதால், பிரிவு சார்ந்த கல்வி நிகழ்வுகள் அல்லது அமர்வுகளில் பேச / வழங்க ஒரு சிறு தயார் நிலையில் செல்கிறேன். எப்படி வாய்ப்பு அமைகிறது எனப் பார்க்கலாம். மற்றபடி காசி உலாத்தலும், ஒரு பிரதான திவ்யதேச தரிசனம் செய்துவிட்டு என் பர்சனல் லிஸ்டில் பெருமகிழ்வுடன் ஒரு பெரிய டிக் அடித்துக் கொள்வதுவும் தான் இந்தப் பயணத்தில் என் எதிர்பார்ப்பு என்று தான் புறப்பட்டு வந்தேன்.

இதுவரையிலான பயண நேர அறிமுகங்களில் பலப்பல பின்னணிகளில் இருந்து வந்திருக்கும் மக்களை சந்தித்தது தான் இந்தப் பயணத்தின் முக்கியப் பயனாக இருக்கும் என்று ஒரு மதியம் + மாலை நேர பயணத்தில் புரிகிறது. அவர்களில் சிலர் பற்றி நாளை பார்ப்போம்.

பயணத்திட்டம் இப்படி இருக்கிறது. முதல் இரு தினங்கள் காசி நோக்கிய ரயில் பயணம்.

மூன்றாம் மற்றும் நான்காம் தினங்கள் காசியில்:

நாள் 3:
காசி விஸ்வநாதர் கோவில், காசி உலாத்தல், சாரநாத் பயணம், கங்கை படகு சவாரி, படித்துறைகள், கங்கா ஆரத்தி.

நாள் 4:
உள்ளூர் கோவில்கள், பாரதி இல்லம், ராம்நகர் கோட்டை, லால்பகதூர் சாஸ்திரி அருங்காட்சியகம், பாரதமாதா கோயில். 
மதியம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் கல்விசார்ந்த நிகழ்ச்சி 
கலாச்சார மாலை  

நாள் 5:
பிரயாக் சங்கம், அயோத்தியில் தங்குதல்.

நாள் 6:
அயோத்தி சுற்றிபார்த்தல், வாரணாசிக்கு திரும்புதல், தமிழ்நாட்டிற்கு திரும்புதல்

நாள் 7 & 8: பயணம். 

நன்றி: https://kashitamil.iitm.ac.in/ 







Oct 21, 2018

அம்ரித்சர்


இங்கே எந்த விபத்தும் நிகழ்வதற்கு முன்னர் இந்தியர்களான நமக்கு வாய்த்தது என்று பட்டியல் இட்டால்...

1) இந்தியாவில் தனி உயிருக்கு என எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. 

2) தனிநபர் உயிர் பாதுகாப்பினை உறுதி செய்ய என்று இங்கே  வரையறுத்த முறையான சட்டதிட்டங்கள் இல்லை, அல்லது இருப்பில் உள்ள சட்டதிட்டங்களை அமலாக்கப் போதிய வரையறைகள், வழிகாட்டுதல்கள் இல்லை 

3) அப்படிப்பட்ட வரையறை, வழிகாட்டுதல்கள் இருக்கின்றன என்றாலும் அவை கடைபிடிக்கப் படுகின்றனவா என்பதை உறுதி செய்ய இங்கே தணிக்கைகள் ஏதும் இல்லை. ஆகவே, அவற்றைச் செயற்படுத்த வேண்டிய அதிகாரிகளுக்கு எந்த பயமும் இல்லை

இப்போது அந்த விபத்து அல்லது அசம்பாவிதம் நிகழ்ந்து விடுகிறது.


எந்த விபத்தும் நிகழ்ந்த பின்னால் இந்தியர்களான நாம்  செய்வது என்ன என்று பார்த்தால்...

முதல் தகவல் அறிக்கை என்று நாம் தயாரிப்பது: 

அ) விபத்து எந்த மாநிலத்தில் நடந்தது 

ஆ) அங்கே ஆளும்கட்சி யார்?

இ) ஒரு பொது நிகழ்வில் இந்த விபத்து நிகழ்ந்தது எனில், அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது யார்? 

ஈ) அவர்களது கட்சி, மொழி, சாதீயப் பின்னணி என்ன?

அவை தெரிந்த பின்....

1) வழக்கம் போல அரசானது யார் மீது இந்தப் பழியைத் திருப்பலாம் என்பதனை தன் செயற்பட்டியலில் முதல் உருப்படியாக வைத்திருக்கும். அதன் பின்நிகழ்வுகளைச் சொல்லத் தேவையில்லை ( நிகழ்வு என்று அதைத் தாண்டி ஒன்றும் இருக்காது)

2) ஆளும் - எதிர்க்கட்சி ஆதரவாளர்களிடையே இரண்டு நாள்களுக்கு இணையத்தில் இரண்டு பிரிவாகப் பிரிந்து அடிதடி நிகழும். 

3) சாதி ரீதியான பின்னணி இதற்கு ஏதும் உள்ளதா என்பது நிச்சயம் ஆராயப்படும். அப்படி ஏதும் இல்லை என்றாலும் கிடைக்கும் ஏதேனும் ஒரு நூல் பிடித்து அப்படி ஒரு சாயம் பூசலாகுமா என்று சில ரத்தம் தோய்ந்த பற்கள் காத்துக் கொண்டிருக்கும். இந்த நூல் கிடைத்தால் அவல் மெல்வதற்கான அவகாசம் மேலும் இரண்டு நாள்கள் நீட்டிக்கப்படும்

4) இந்நிகழ்வை மறந்துவிட்டு அதன் பின் அடுத்த நிகழ்விற்காகக் காத்திருப்போம்


என்ன நேர்ந்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்:

1) மக்கள் திரளாகக் கூடும்போது உயிர்ப் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கத்தக்க அபாயகரமான பகுதி என்று தெரிந்தும் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் அங்கே நிகழ்த்தியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்

2) மாநில அரசு நிர்வாகம்: இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பை அறிந்தும் அனுமதி தந்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்

3) மத்திய ரயில்வே நிர்வாகம்: ஆண்டாண்டுகாலமாக இந்நிகழ்வு இங்கே தொடர்ச்சியாக நடக்கிறது என்கிறார்கள். 
அ) ரயில்வே நிர்வாகத்தின் பக்கமிருந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் - அனுமதி வழங்குவது 
ஆ) அனுமதி வழங்கச் சாத்தியமற்ற நிகழ்வு எனின், எந்த நிர்தாட்ச்யண்யமும் இன்றி அனுமதி மறுப்பது

4) கீழ் காணும் ட்வீட்டைப் பாருங்கள். என்ன ஒரு அயோக்கிய அசட்டுத்தனத்துடன் நாம் வளர்க்கிறோம் என்று பாருங்கள்.  ஆக, இந்த முட்டாள்தனத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாகிறது. 




அரசாங்கமானது தனிநபர் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் கொள்வதில்லை. 
என் உயிரின் பாதுகாப்பையும் மற்றவர்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும் - நான் என் போக்கில்தான் இந்த நாட்டில் உலா வருவேன் என்று மக்கள் வாழ்கிறார்கள்.

ஒன்றா அரசாங்கம் மக்களின் லகானைப் பிடிக்க வேண்டும். அது நிகழச் சாத்தியமற்ற ஜனநாயகத்தில் மக்கள்தான் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு முன் வீடு திரும்பும் வழியில் ஒரு S வடிவ வளைவில் வண்டியைத் திருப்பிக் கொண்டிருந்தேன். இடதுபுறமிருந்த ஒரு சிறுசந்தில் இருந்து ஒரு இளைஞர் சாலையைத் தன்பாட்டிற்குக் கடந்து வலதுபுறச் சாலைக்குச் சென்றார்.  தான் சாலை கடப்பதை சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அறிவிக்கும் முகமாய், தன் வலது கையை மட்டும் சாலையின் புறமாய்க் காட்டியவாறே ஒற்றை நொடியில் கடந்துவிட்டார். 25 அல்லது 30 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த நான் வண்டியை நிறுத்தி, வளைத்துத் தடுமாறி அவரைக் கடந்து வந்தேன். எந்தப்புறம் வண்டி வருகிறது என்று தெரியாதவொரு ஒரு குருட்டு வளைவில் தான் சாலையைக் கடக்கிறோம் என்ற நினைப்பு அவரிடம் எள்ளளவும் இல்லை. இது அப்படியே அவர் ரத்தத்தினில் ஊறிய இந்தியத்தனம் என்று சொல்வதைத் தவிர வேறேதுமில்லை.

இது மாறும் வரையில் இப்படிப்பட்ட அம்ரித்சர் நிகழ்வுகளைத் தவிர்ப்பது சாத்தியம் இல்லை.

Jul 3, 2018

பூஜா - ஷோயப் - ஏர்டெல்

நீங்கள் ஒரு கடையில் விற்பனையாளராகப் பணி புரிகிறீர்கள் எனக் கொள்வோம். வாடிக்கையாளர் ஒருவர் உங்களிடம் ஏதோ ஒரு பொருளைக் கேட்க வருகிறார். பொருள் குறித்த விவரத்தைக் கேட்ட பின் (உதா: கடலைப்பருப்பு ஒரு கிலோ என்ன விலை? ), உங்கள் சட்டைப்பையில் நீங்கள் குத்தி வைத்திருக்கும் உங்கள் பெயர்ப் பட்டையைப் பார்க்கிறார்.

"ஓஹோ! இதான் உன் பேரா? நீ இந்த இனத்தை / சாதியை / மொழியைச் சேர்ந்தவனா?", என்று கேட்டுவிட்டு உங்கள் முகத்தில் சப்பென்று ஒரு அறை விடுகிறார்.

சரி, வேண்டாம். "உன்னோட பேசிப் பொருள் வாங்க எனக்கு விருப்பம் இல்லை. வேற யாரையாவது வரச்சொல்லு", என்கிறார்.

இதைக் கவனித்துக் கொண்டிருக்கும் உங்கள் முதலாளி அங்கே கடையில் அந்த வாடிக்கையாளர் மனதுக்கு உகந்த பெயர் கொண்ட இன்னொரு பணியாளரை அழைத்து, "இந்தாப்பா, அவருக்கு என்ன வேணும்னு பாரு", என்கிறார்.

நீங்கள் விலகிக் கொள்கிறீர்கள். அந்த இன்னொரு பணியாளர் வழியே அந்த வாடிக்கையாளருக்குத் தேவையான சேவை கிடைக்கிறது.

இப்போது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?

இங்கே இரண்டு விஷயங்கள் நடந்துள்ளன - ஒன்று, நீங்கள் தாங்கிக் கொண்டிருந்த பெயருக்காக உங்கள் முகத்தில் அல்லது மனதில் விழுந்த அறை. இரண்டு, அங்கே ஏதும் நடவாதது போல உங்கள் முதலாளி நடந்து கொண்ட விதம்.


விஷயம் இதுதான்:

அண்ணன் "அன்புடன் பாலா" தன் ட்வீட்டர் பக்கத்தில் இந்த ட்வீட்டை பகிர்ந்திருந்தார்.

https://twitter.com/impoojasinghh/status/1012566117720739840

பூஜா சிங் என்பவரை துபாயில் பணிபுரியும் ஒரு நபர் ஃபேஸ்புக் சாட் வழியே மூன்றாம் தர வார்த்தைப் பிரயோகங்களில் அழைக்கிறார். அழைக்கிறார் என்றால், கிட்டத்தட்ட அழைக்கிறார். அதனை பூஜா சிங் அந்த நபர் பணி புரியும் நிறுவனத்திற்கு அளிக்கும் இணையவழிப் புகார்தான் அந்த ட்வீட்.

இதன் நதிமூலத்தைப் பிடித்துப் போனீர்கள் என்றால், பத்து நாட்களுக்கு முன் பூஜா சிங் - ஏர்டெல் இடையே நிகழும் ட்வீட்டர் வழி சம்பாஷணை ஒன்று கிடைக்கிறது.

< பொறுப்புத் துறப்பு: மதிப்பிற்குரிய பூஜா சிங் அவர்களை அநாகரிக ட்ரோல் செய்வோர், இணையவழிப் பாலியற் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோரை நான் எவ்வகையிலும் ஆதரிக்கவில்லை . அப்படிப்பட்ட கண்டிக்கத்தக்க ஒரு விஷயம்தான் அந்த துபாய் அன்பர் செய்த செயல்  > 

சரி, விஷயத்துக்கு வருவோம்:

பூஜா தன் ஏர்டெல் இணைப்பின் பழுது குறித்த புகார் ஒன்றை ஏர்டெல்லின் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்கிறார். 

@airtelindia pathetic Airtel DTH customer service.I raised complaint for reinstallation of DHT.but assigned service engineer miss behaved with me. His words are "Tum Phone Rakho Dobara call mt krna " his number is+91 79-85195094.   This is how Airtel is looting it's customer.

இதற்கு ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை ஊழியர் ஷோயப் ( Shohaib ) என்பவர் ஏர்டெல் சார்பாக ட்வீட்டரிலேயே பதில் தருகிறார். 

Hey, I most definitely appreciate you reaching out here! We’ll take a closer look into that & get back shortly with more information. Thank you, Shoaib

அதற்கு பூஜா தரும் மறுவார்த்தை.... 

Dear Shohaib, as you’re a Muslim and I have no faith in your working ethics because Kuran may have different version for customer service, thus requesting you to assign a Hindu representative for my request. Thanks

அதற்கான ஏர்டெல்லின் எதிர்வினை:

Hi Pooja! As discussed, please let me know what days & time frames work best for you so we can talk. Further, please share an alternate number so that I can assist you further with this. Thank you, Gaganjot

அதாகப்பட்டது, மாற்று இனத்தவர் அளிக்கும் சேவையில் தனக்கு உவப்பில்லை - ஏனெனில் அவர் பின்பற்றும் மார்க்கம் கொண்ட  வாடிக்கையாளர் சேவை குறித்த புரிதல் தனக்கு உகந்ததில்லை. எனவே நான் பின்பற்றும் மதத்தைச் சேர்ந்த ஒருவரை எனக்குச் சேவை புரிய அனுப்பி வை, நீ போகலாம் - என்கிறார் பூஜா.

ஏர்டெல் நிறுவனமும்  அங்கே ஏதும் நிகழாதது போல ககன்ஜோத் என்பவரைக் கொண்டு அதற்குப் பின்னான சேவையை பூஜாவிற்குத் தொடர்கிறது.

இது நிகழ்ந்து பத்து தினங்களுக்கு மேலாகிறது. 

ஏர்டெல் சேவை ஊழியர் ஷோயப் இன்றும் கருமசிரத்தையாக டிவிட்டரில் வரும் புகார்களுக்கு பதிலளித்தவாறுதான் இருக்கிறார்.

You must find the courage to leave the table if respect is not longer being served என்று ஒரு வாசகத்தை இருதினம் முன் வாட்ஸாப் ஸ்டேட்டஸ் ஒன்றில் வாசித்தேன்.

பணியிடங்களில் நாம் ஒவ்வொருவருமே அவ்வப்போது ஏதேனும் அவமானங்களைச் சந்தித்தவாறேதான் நம் பணி வாழ்க்கையைத் தொடர்கிறோம். அடுத்த வேளைச் சோறு, பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணம், வீட்டுக்கடன் என்று ஏதேனும் நினைவிற்கு வந்து தொலைத்து இந்த வகை அவமானங்களை எல்லாம் மென்று விழுங்கச் செய்து விடுகின்றன.

Customer is the purpose of our business என்று சொன்னவர் நம் மகாத்மா அல்லவா? ஆனால் அதற்காக அந்த வாடிக்கையாளரின் உள்ளார்ந்த  purpose என்னவாக இருந்தாலும் அதனை நிறைவேற்றி வைத்தல்தான் சிறந்த சேவை என்று புரிந்து வைத்திருக்கிறது ஏர்டெல் என்று இதனை எளிதில் விட இயலவில்லை.

இந்த மாதிரியான வாடிக்கையாளர் வேண்டுதல்கள் எதிக்ஸ் பிரகாரம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால், சட்டப்படி பூஜா கேட்டதில் ஏதும் தவறில்லை என்று ஒரு கூட்டம் கூவுகிறது.

"அது ஏர்டெல் எடுத்த முடிவு அல்ல. ஒரு வாடிக்கையாளர் சேவை அதிகாரி (ஷோயப்) வேறு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இன்னொரு அதிகாரிக்கு அந்தப் புகார் கணினியால் மாற்றித் தரப்பட்டது", என்கிறது ஏர்டெல். 

சட்டப்படி இது தவறு இல்லை என்பதால் இங்கே நம்மால் சட்டப்படி ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிராக ஏதும் செய்ய முடியாது இல்லையா?

ஆனால் நம்மைப் போன்ற சில விசித்திர விலங்குகள் கடைபிடிக்கும் எதிக்ஸ் எழவின் படி இது தவறுதானே? அதற்கு என்ன செய்ய?

இனி ஏர்டெல் கடைப்பக்கம் ஒதுங்கக்கூடாது என நினைக்கிறேன்.

கையில் இருக்கும் ஏர்டெல் டேட்டா டாங்கிள் ஒன்றையும் திருப்பித் தந்து விடுவதாய் முடிவு செய்திருக்கிறேன்.

காரணம், ஷோயப் அடைந்த வலியை  நான் உணர்ந்தேன். ஏர்டெல் நிறுவனத்தின் கையாலாகாத தனத்திற்கு எதிராய் உடனடியாக அவரால்தான் ஏதும் செய்ய இயலவில்லை - நாமெனும் எதுவும் செய்வோம் என்பதுதான்.

Jai Hind!
Related Posts Plugin for WordPress, Blogger...