Showing posts with label மனிதர்கள். Show all posts
Showing posts with label மனிதர்கள். Show all posts

May 7, 2012

கருப்பு நகரம்


வடசென்னை என்னை வளர்த்தது எனக் கூறிக் கொள்வதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமை, கர்வம் உண்டு. உலகின் உண்மையான மக்கள் வாழும் ஒருசில இடங்களில் வடசென்னைக்கு முதலிடம் உண்டு எனத் தீவிரமாக நம்புபவன் நான். வட சென்னையின் நினைவுகளை அசைபோட்டு சொல்வனம் இணைய இதழில் எழுதிய ஒரு பதிவு! சொல்வனத்திற்கு நன்றிகள்.
______________________________
“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத! அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர?”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.
ஏன், எதற்கு என்று என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் பெட்ரோலிய நிறுவனங்கள் பண்ணிய திட்டமிட்ட திடீர் ஸ்ட்ரைக்கினால் மூன்று நாளாய் எல்லா பெட்ரோல் பங்குகளும் மூடிக்கிடக்கின்றன. ”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சி”, என்று யாரோ எங்கேயோ சொன்னாற்போல் காதுகளுக்கு இருக்கவே அந்த சனிக்கிழமை மதியத்தில் பெட்ரோல் டாங்கில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச எண்ணெயை நம்பி வண்டியை எடுத்துவிட்டேன். மூலக்கடை வரை போனால் பெட்ரோலிட்டு வரலாம்.
மூலக்கடை?
மாதவரத்திற்கும் பெரம்பூருக்கும் இடையே மூலக்கடையை நீங்கள் கண்டறியலாம். சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையின் முதல் கேட்-வே ரெட்ஹில்ஸ் என்றழைக்கப்படும் செங்குன்றம். அங்கே நுழைந்து நீங்கள் சென்னையினுள்ளே நுழைந்தால் டேங்கர் லாரிகள், சிமெண்ட் லாரிகள், அரிசி மூட்டைகள் சுமக்கும் லாரிகள் என்று விதவித சரக்கு லாரிகள் நீண்டு வடம் பிடிக்கும் சாலைகள் கொண்ட வடசென்னையின் நெருக்கடியான போக்குவரத்து நெரிசலின் ஒரு சாம்பிளை உங்களுக்குக் காட்டிவிட்டு பெரம்பூருக்கோ, மாதவரத்திற்கோ, வியாசர்பாடிக்கோ உங்களை வழியனுப்பி வைப்பது இந்த மூலக்கடை என்னும் இரண்டாவது கேட்-வே.
சென்னையை ஒரு ஸ்கேல் வைத்து ரெண்டாய்ப் பிரிக்கும் ஒரு கோடு உண்டென்றால் அது பூந்தமல்லி நெடுஞ்சாலைதான். அந்தப்பக்கம் உன்னுது இந்தப்பக்கம் என்னுது என்று இங்கேதான் வடசென்னையும் தென்சென்னையும் கொஞ்சமாய் மத்தியச் சென்னையை அங்கங்கே சிதற விட்டுவிட்டு பிரிந்து கிடக்கின்றன. இதில் வடசென்னை எப்போதும் தீண்டத்தகாத ஒரு பிரதேசம். மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, புளியந்தோப்பு, வியாசர்பாடி, சர்மாநகர், முல்லைநகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர் மற்றும் இன்னபிற பகுதிகள்.
ஆப்பிரிக்கா முழுக்கவும் இருண்ட கண்டமாக இருப்பதாகவும், இந்தியாவின் சாலைகளில் புலிகள் ஓடுவதாகவும் உலக மக்களால் எப்படி நம்பப்படுகிறதோ, அதேபோல வடசென்னையில் வியர்வையில் நனைந்த எண்ணெய்த் தேகங்கொண்ட கரிய மனிதர்கள் மட்டுமே வசிப்பதாகவும், மடிப்பாக்கத்திலும் மந்தைவெளியிலும் இல்லாத குப்பைமேடுகள் எல்லாம் இங்கே மட்டுந்தான் இருப்பதாகவும் ஒட்டுமொத்த தென்சென்னையும் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை சற்றும் வீணாகிவிடுதல் கூடாது என்னும் முனைப்பில் ஒவ்வொரு அரசாங்கமும் தன்னால் இயன்றவரை இந்த ஊரை உதாசீனம் செய்கிறது. அண்ணாநகர், புரசைவாக்கம், கீழ்பாக்கம் முதலான மத்தியப் பகுதிகளை தென்சென்னைக் கால்கள் தாண்டினதாய் சரித்திரம் இல்லை.
14thwashermanpet_476399eமாதவரம், மாதவரம் பால்பண்ணை, கொடுங்கையூர், தபால்பெட்டி, பொன்னியம்மன்மேடு, எருக்கஞ்சேரி வாழ் மக்கள் துணியெடுக்க, சினிமா பார்க்க, எக்ஸ்ரே எடுக்க, சாப்பாடு பார்சல் வாங்க மூலக்கடைக்குத்தான் வரவேண்டும்.உயர்தர சைவ உணவகம் என்ற பலகை தாங்கிய இரண்டு ஹோட்டல்களும், அரை டஜன் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும், ஒரு டஜன் பழ வண்டிக்கடைகளும், இன்னமும் ஏழெட்டு டஜன் இதர கடைகளும், மூன்று தியேட்டர்களும் இங்கே உண்டு. இப்படிப்பட்ட புண்ணிய க்ஷேத்திரத்திற்குத்தான் பெட்ரோல் பங்க் தேடியொரு நீண்ட பயணம் புறப்பட்டிருந்தேன்.
ஒண்ணரை கிலோமீட்டர்தான் ஓடியிருந்த வண்டி அந்தோணி ஆஸ்பத்திரி வந்ததுமே விக்க ஆரம்பித்தது. சோக்கைப் போட்டு விடாமல் ஆக்ஸலேட்டரை முடிந்தமட்டும் முடுக்கியதில் ஷூ கம்பெனிவரை விரட்ட முடிந்தது. வேறு வழியில்லை முக்கால் தொலைவு வந்தாயிற்று இன்னும் கொஞ்சம் போனால் பெட்ரோல் கிடைத்துவிடும், உருட்டத் துவங்கினேன்.
மூலக்கடை ஜங்ஷனில் வழக்கமாக நடுரோட்டில் நிற்கும் பழக்கடைகளும், பூக்கடைகளும் ஓடாத வண்டிகள் தந்த இடத்தையும் சேர்த்து முழுரோட்டையும் ஆக்ரமித்துக் கிடந்தன. ”எங்கள் ஆண்டவனைக் கேள்வி கேட்ட மால்கம் ஸ்பீடே! மன்னிப்பு கேள்” என்ற அந்த பச்சைநிறத் தமிழ் பேனரை சச்சின் படிப்பாரா இல்லை மால்கம் ஸ்பீட் படிப்பாரா என்றெல்லாம் யோசிக்க விழையவில்லை ”பெட்ரோல் பெட்ரோல்” என்று மனனம் செய்து கொண்டிருந்த என் மனம். கிட்டத்தட்ட ஒண்ணரை கிலோமீட்டர் உருட்டலுக்குப் பின் மூலக்கடை பஸ் டிப்போ வரை சென்று சேர்ந்ததில் கயிறு பிடித்து இழுத்து மூடிக் கிடந்த பெட்ரோல் பங்கை தரிசனம் செய்ய நேர்ந்தது.
ஒரு தற்காலிக கிரிக்கெட் மைதானமாகிப் போயிருந்தது அந்த பங்க். ஏழெட்டு பயல்கள் செங்கல் வைத்து வேலிக்காத்தான் குச்சிகளை ஸ்டம்ப்களாக நிற்கவைத்து விளையாடிக் கொண்டிருந்தான்கள். முப்பதுக்கு அறுபது ஏரியாவையும் கிரிக்கெட் மைதானம் ஆக்கும் சாதுர்யம் நம்மை விட்டால் வேறு யாருக்குக் கைவரும்? வாங்க வந்த பொருளின் நினைவகன்று அவர்கள் ஆட்டத்தில் சற்றே திளைத்தேன். இருபதின் ஆரம்ப வயதுகளில் இருந்தனர் அங்கே அத்தனை பேரும். அத்தனையும் வடசென்னையின் டை’யில் வார்த்தெடுத்த அக்மார்க் முகங்கள். அவர்கள் பேச்சினூடே நான்கு வார்த்தைக்கு ஒரு வார்த்தை மற்றவனின் ஆத்தாளையோ அல்லது அம்மாளையோ அழைப்பது அவர்களின் வொகாப்லரிக்கு அங்கே அவசியமாயிருந்தது. பந்தை வீசுபவனும் மட்டையை வீசுபவனும் கூட முடிந்த இடைவெளிகளில் ஆ’வையும் அ’வையும் இங்கே அழைத்தார்கள். வீச்சு கனஜோராய் இருக்குமோ என்னவோ!
பத்து நிமிட ஆட்டத்தில் அங்கே என் காத்திருத்தல் யாருக்கும் ஒரு பொருட்டாய் தெரியவில்லை. கயிற்றை அகற்றி உள்நுழைய முற்பட்டேன்.
“கவுறு அந்துக்கும் சார், தூக்காத தூக்காத! அதான் ஸ்டைக்கு இன்னும் முடிலல்ல, இன்னாத்துக்கு வண்டி எட்த்துன்னு வர?”, சில்லி மிட்-ஆனில் நின்றவன் திரும்பியும் திரும்பாமலும் சொல்லிய நேரத்தில் தன் கைக்கு எட்டிய கேட்சை அவன் தவறவிட்டான்.
“பொறம்போக்கு! அத்தப் புடிக்கத் தெர்ல்லியா உனுக்கு”, அத்தனை பேரிலும் அவன் ஒருவன் மட்டும்தான் பெட்ரோல் பங்க் சீருடை துறந்தவனாக இருந்தான். கேப்டனாயிருக்க வேண்டும், யாரைத் திட்டினான் எனத் தெரியவில்லை.
”ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சின்னு சொன்னாங்களே?”
”யாரு சொன்னா உன்னாண்ட முட்ஞ்சிர்ச்சின்னு? எவனா சும்மாங்காட்டியும் சொல்லிருப்பான்”, என்னைப் பார்த்துக் கொண்டே தன் ஏரியாவிற்குள் நுழைந்த பந்தை பிடித்து பவுலர் ஸ்டம்புக்கு விட்டெறிந்தான், “இப்டி புடிக்கணும் தெரிஞ்சிக்கோ”, சில்லி மிடானுக்கு இன்ஸ்டண்ட் பாடம் எடுத்தான்.
”சார், ஸ்டைக் முடியல. முட்ஞ்சதும் வாங்க சார். இன்னிக்காவது கொஞ்சம் வெளாடவுடுங்க”, கறாரான ஒரு குரல் டால்பி எஃபெக்டில் வலது மூலையிலிருந்து கேட்டது.
“யாரோ சொன்னாங்கண்ணா, அதுவா விஷயம்? ஒரு அரை லிட்டர் பெட்ரோல் போடு, வீடு வரியும் போயிருவேன்”.
“உனுக்கு தந்துடுவம்ப்பா. உன்னப்பாத்து வரிசகட்டி நிப்பானே லைனா. அல்லாருக்கும் எப்டி தரசொல்ற?”, மேலே பேசாமல் மறு உருட்டலைத் துவங்கினேன்.
“அன்னாண்ட எங்க போற? ரெட்டீல்ஸ் வரியும் எங்கயும் பெட்ரோல் கெடிக்காது”
“நான் வேணா பின்னாடி காம்பவுண்ட் பக்கம் வர்றேன். கொஞ்சம் பார்த்து குடேன் நைனா?”, அவன் பாஷையில் இறங்கிப் பார்த்தேன்.
“போ சார் போ சார்”, அதற்கு மேல் மரியாதை இல்லை. புறப்பட்டுவிட்டேன்.
கள்ளச்சந்தையில் பொருள் விற்பவர்களைக் கண்டாலே வெகுண்டு எழும் புரட்சிகர மனம் இப்போது சாலையில் யாரும் ப்ளாக்கில் பெட்ரோல் விற்கமாட்டார்களா என்று தேடியது. மறுபடி நாலரை கிலோமீட்டர் வண்டியை உருட்டிக் கொண்டே எப்படிப் போவதாம்? தெரிந்தவன் அறிந்தவன் எவனும் எதிரில் வரவில்லை, வந்தாலும் ஒரு இருநூறு மில்லி கடன் கேட்கலாம். நினைத்து அரை வினாடி கடக்கவில்லை பூமி என்கிற பூமிநாதன் எதிரில் திடீர்ப் பிரசன்னம் ஆனான்.
“ஹாய்! ஹவ் ஆர் யூ?”
“நீ எப்போடா இங்க்ளீஷ் தொரை ஆன?”
“போச்சு! அதைவிடு, பெட்ரோல் இருக்கா?”
“அதையேதான் நானும் கேக்கறேன். பெட்ரோல் இருக்கா?”
“சரி விடு! போயிட்டு வர்றேன்”
“வராதே போ”
பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒட்டி உறவாடி நட்பு வளர்த்துப் பழகிய இருவருக்கும் அங்கே பெட்ரோல் லேது என்றது பேச மறுபேச்சு இல்லை. இப்போதைக்குத் தேடல்தான் அவசியம்.
“பெட்ரோல் கெட்ச்சா ஃபோன் பண்றா”, என்றுவிட்டுப் போயேவிட்டான்.
giri
ரோட்டில் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நானும் பார்த்தவர்களையெல்லாம் மதித்து மறுபார்வை பார்த்துக் கொண்டே வந்தேன். மீண்டும் பழக்கடைகளையும், சச்சின், மால்கம் ஸ்பீடுகளையும் கடந்து மூலக்கடை பேருந்து நிறுத்தத்தையும் தாண்டி ஆளரவமற்ற அந்த கேட்பாரற்ற சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.
“என்னண்ணா! பெட்ரோல் இல்லியா?”, என்றவனை நான் எல்லா சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். வாராமல் விட்ட கலைந்த ஹிப்பித்தலை, எண்ணெய் வடிந்த கரியமுகம், பான்பராக் பல், உருண்டு திரண்ட உருவம், எமதர்மனின் எருமை போல ஒரு மோட்டார்பைக். எல்லா விஜய் சினிமாக்களிலும் இவன் வில்லன் பக்கம் இருந்து கொண்டு தவறாமல் விஜய் கையால் அடிவாங்கிக் காற்றில் நாலெட்டு பல்டி அடித்துப் பறந்து விழுவான்.
“ஆமா சார்”
“என்னண்ணா சார்’ன்னுல்லாம் கூப்புடற? ரமேஷ் மச்சான்தான நீ?”
“இல்லைங்க. நீங்க வேற யாரையோ சொல்றீங்க”
”அப்டியா? அப்போ சாரிண்ணா”, அவசர அவசரமாக அவன் பேசியது மகாநதி படத்தில் துலுக்காணம் பேசுவதை நினைவுப்படுத்தியது.
“தட்ஸ் ஓகே. பரவால்லைங்க”
”பெட்ரோல் வேணுமா?”
எருமையைப் பார்த்தேன். அட பெரிய திமில் கொண்ட எருமை. “ட்ட்ட்டிங்” என உள்ளே மணியடித்தது எனக்கு. அடடா! இதுதான் நான் தேடிய பெட்ரோல் பங்க் போல.
”இருக்கா?”
“ஃபுல்லா இருக்குண்ணே! கொருக்குபேட்டைல நம்மாளுதான்! ஃபுல் டேங்க் ரொப்பினு வன்ட்டேன்”, நான் நம்பமாட்டேனோ என்று பொறுப்பாய் சாவிபோட்டு டேங்கைத் திறந்து காட்டினான். பெட்ரோல்! பெட்ரோல்! ஆ….. தகதகத்து த் தளும்பிக் கொண்டிருந்தது தங்கம் தங்கம்!
”ரைட்டு, நீ ரவி சாரோட மச்சான்தானே?”
“எந்த ரவியை சொல்றீங்க? நான் ரவியோட அக்கா பையன்”
“இல்ல, உங்கக்காவதான அம்பேத்கார் தெருல ரவிக்கு குட்த்துகுது?”
அவன் எதற்காக என்னை இத்தனை தூரம் தெரிந்தவன் போலக் காட்டிக் கொள்கிறான் என்று யோசித்ததில் அவன் கொடுக்கும் பெட்ரோலுக்குக் கேட்கப் போகும் தொகையுடன் அது தொடர்புடையதாக இருக்குமா என என்னை யோசிக்க வைத்தது.
“இல்லீங்க. அக்கா இந்த ஊர்ல இல்லை”
“சரி வுடு. பாட்டில் இருக்குதா?”
“எதுக்கு?”
“பெட்ரோல் புடிக்கணும்ல”
“ஆ ஆ… !”, வெய்யிலுக்கு வழித்துணையாய் வாங்கிய கோக்கக்கோலா பாட்டிலை உதறி உதறித் தந்தேன். அவன் வண்டியைச் சாய்த்து நிறுத்தி பக்கவாட்டு ட்யூபை பிடுங்கியெடுத்து பாட்டிலில் பெட்ரோல் பிடிக்கத் துவங்கினான். பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல் பெட்ரோல்…. மனசு அடித்துக் கொண்டது. ஏதோ இன்ஸ்டண்ட் கவிதையெல்லாம் யோசித்தது மனது. தயாரான கவிதையை எடுத்து வெளியே வீச வார்த்தைகள் வந்து விழவில்லை.
பாதி பாட்டில் வந்தவுடன், “போதும் போதும்”, என நிறுத்தினேன். ஒரு லிட்டர் வெளிமார்கெட்டில் அப்போது நாற்பத்தி சொச்ச ரூபாய். இவன் லிட்டருக்கு இருநூறு சொன்னாலும் பாட்டிலில் பிடித்த கால் லிட்டருக்கு ஐம்பதைத் தந்துவிடலாம்.
“வாய்ங்க்கண்ணா பரவால்ல”
“இல்ல, போதும் போதும்”
பாட்டிலைக் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறியமர்ந்தான். என் வண்டியை சாய்த்துவிட்டு பர்ஸை வெளியே எடுத்தேன்.
“எவ்ளோ?”
“என்னது எவ்ளோ?”
“எவ்ளோ தரணும்”
“ன்னாத்துக்கு?”
“பெட்ரோல்?”
“ண்ணா… இன்னாண்ணா? உள்ள வைண்ணா துட்ட”
என்ன இவன் கிறுக்கனாக இருக்கிறான்?
“இல்லல்ல ப்ளீஸ் வாங்கிக்கோங்க ப்ரதர். இருக்கற பெட்ரோல் கிராக்கிக்கு.. ப்ளீஸ் வாங்கிக்கணும்”
“ண்ணோவ்… துட்டுக்கா குட்த்தாங்க?”
“ப்ளீஸ் ஓசிலல்லாம் வேணாம். காசு வாங்கிக்கோங்க, இந்தாங்க”
“நீ எதுனா குடுக்குணுன்னு நெனச்சியன்னா யார்னா இப்டி பெட்ரோல் இல்லாம வண்டிய உர்ட்டினு போசொல்லோ பெட்ரோல் ஃப்ரீயா குடு. துட்ட உள்ள வைண்ணா”, வண்டியை உதைத்துக் கிளப்பிக் கொண்டு போயேவிட்டான்.

Aug 16, 2011

ஸ்ருதி யு.கே.ஜி.


கிருஷ்ணாவின் டெஸ்க் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அரை டஜன் பேர் அவனைச் சூழ்ந்திருந்தனர். மற்றவர்களும் அங்கே வந்து போய்க் கொண்டும், எட்டிப் பார்த்து "என்ன கெடைச்சிட்டாளா?", என்று கேட்டுவிட்டு, "இன்னும் இல்லை", என்ற பதிலுக்கு, "நோ வொரீஸ், நீங்க வேணா வீட்டுக்குப் போங்க", என்றும் சொல்லிய வண்ணம் இருந்தனர்.

கான்-காலில் இருந்ததால் எனக்கு என்ன ஏதென்று புரியவில்லை. இந்தப்புற அல்லோலகல்லோலம் லண்டன் வரை கேட்கச் செய்ய, "வாட்ஸ் தி ப்ராப்ளம், ஸோ மச் நாய்ஸ் தேர்?" என மறுமுனையில் "லண்டன் துரை" மார்ட்டின் வினவ, "டோன்ட் நோ, நீட் டு செக்", என்றேன்.

இப்போது காதில் செல்போனைப் பொருத்திக் கொண்டு ஏதோ பதட்டமாகப் பேசினபடி ஃப்ளோரில் இங்குமங்கும் உலாத்திக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. ஏ.சி. குளிரை மீறி அவனுக்கு வியர்த்து ஒழுகிய வண்ணம் இருந்தது. மிகத் தீவிரமாக ஏதோ பிரச்னை எனப் புரிந்தது.

மார்ட்டினிடம் "பிறகு பேசுவோமே" என மன்னிப்பு கோரிக்கொண்டு கான்-காலை கட் செய்தேன். கிருஷ்ணா நடை பயின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தேன்.

என்னைவிட இரண்டு வயது பெரியவன் கிருஷ்ணா. வேலையில் இரண்டு லெவல்கள் சீனியரும் கூட. எனினும் நான் அவனைப் பெயர் சொல்லி அழைப்பதும் அவன் என்னை சார் என்று அழைப்பதும் விசித்திரம்.

நான் வந்ததைக் கவனித்து, பேசிக்கொண்டே ஒற்றைக் கண்மூடி கெஞ்சும் தோரணையில் ஒரு விரல் காட்டி "கொஞ்சம் வெயிட் பண்ணேன்" என்றான். "சரி, இரு நான் போன் பண்ணிப் பாத்துட்டு உனக்கு திரும்ப கூப்பிடறேன்", என்று போனை வைத்தான். மீண்டும் எனக்கு ஒரு நிமிஷம் என சைகை செய்துவிட்டு போனில் யாரையோ அழைத்தான்.

"ராஜி, கிருஷ்ணா பேசறேன். ஸ்ருதி அங்க வந்திருக்காளா? இல்லை, ஒரு மணிநேரமா அவளைக் காணலை. வீட்ல பத்மா பயப்பட்டுட்டு  இருக்கா. இல்லை, பக்கத்துலதான் எங்கயாவது வெளையாடிட்டு இருப்பா. எல்லா எடத்துலயும் தேடிட்டாளாம். காணலை. சரி அங்க வந்தா எனக்கு கூப்பிடு"

செல்போனைப் பையில் எறிந்துவிட்டு என் பக்கம் திரும்பினான்.

"சின்னவளை ஒரு மணிநேரமாக் காணலியாம் சார்"

"யாரு, ஸ்ருதி'யா? ஸ்கூல்லருந்து வந்த அப்புறமா?"

"ஆமாம், வந்து ட்ரெஸ் மாத்தி ஸ்நாக்ஸ் சாப்பிட்ட வரை இருந்திருக்கா. அப்புறம் காணலையாம்"

கிருஷ்ணாவுக்கு இரண்டு குழந்தைகள். பெரியவன் ஷ்ரவன் மூன்றாம் வகுப்பிலும், சின்னவள் ஸ்ருதி யு.கே.ஜி.யும் படிக்கிறார்கள். 

"வீட்டுக்குப் போலாமே. ?"

"ஆறு மணிக்கு கால் இருக்கு"

"நாசமாப் போச்சு வேலை, அதுவா முக்கியம்?   ஃபேமிலி கம்ஸ் ஃபர்ஸ்ட், நீ பொறப்படு"

"அது ஆவாது. முப்பது நிமிஷம் முடிச்சிட்டுப் போயிடறேன். காம்பவுண்ட் உள்ளேதான் எங்கயாவது இருப்பா. வாட்ச்மேன் இருக்கான், அவனைத் தாண்டி போகலை. வெளிய போக வாய்ப்பில்லை. நோ வொர்ரீஸ் தேங்க்ஸ்!"

"எமர்ஜன்சி'க்கு வீட்டுக்குப் போக முடியலைன்னா என்ன வேலை இது"

"சரி, இரு வீட்டுக்குப் பேசிடறேன். ஒரு நிமிஷம் உட்காரேன்"

அவன் அருகில் இருக்கையில்  அமர்ந்தேன். கைப்பேசியில் எண்ணை அழுத்தி, எதிர்முனையின் பதிலின்மையில் எரிச்சலாகி கைப்பேசியை சட்டைப்பையில்  கடாசி எறிந்தான். மீண்டும் பொறுமையிழந்தவனாக அருகிலிருந்த லேண்ட்லைன் தொலைபேசியைக் கையிலெடுத்து எண்கள் சுழற்றினான். இந்தமுறை எதிர்முனை பதில்தந்தது.

"என்னாச்சு, கெடைச்சாளா? "

"_______"

"எங்க இருந்தா?", குதித்து எழுந்து நின்றுவிட்டான்.

சுற்றியிருந்த அத்தனை இருக்கைகளும் பரபரப்பாக கிருஷ்ணா முகம் கவனித்தன.

"_______"

"குடு அவகிட்ட"

"_______"

"ஷ்ருதீ .......", விட்டால் அழுதுவிடுவான் போல குரல்.

ரவி எழுந்து கிருஷ்ணாவின் இருக்கையருகே வந்து சுட்டுவிரலை தொலைபேசியின் ஸ்பீக்கர் பட்டன் அருகே கொண்டு சென்று, "கிருஷ்ண, மே ஐ?", என்றான். கிருஷ்ணா தலையசைக்க...

"அப்பா.... சொல்லுப்பா"

"எங்க போன இவ்ளோ நேரம்? அம்மா உன்ன ரொம்ப தேடிண்டு இருந்தாளாமே"

"அப்பா, பக்கத்தாத்துல என் கிளாஸ்மேட்  அஸ்வத் இருக்கான் இல்லப்பா..."

"ஆமா இருக்கான். அவனோட எங்க போன"

"எங்கயும் போலப்பா, இங்கதான் நம்ம அபார்ட்மன்ட் ஸ்டோர்ரூம்ல லவ் பண்ற வெளையாட்டு வெளையாடிட்டு இருந்தோம்ப்பா"

கிருஷ்ணாவின் விரல்கள் அனிச்சையாய் ஸ்பீக்கரை ஆஃப் செய்தன.


May 11, 2011

கோவை கிருஷ்ணமூர்த்தி

ராமநவமி'க்கு நரசிங்கபுரம் சென்றிருந்தபோது "கம்போசர் அண்ட் சிங்கர்", என்று சக பாகவத பெரியவர்களிடம் என்னை நடராஜ பாகவதர் அறிமுகம் செய்தார்.

இதென்ன வம்பாப் போச்சு என நினைத்து "அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமா, ஜஸ்ட் கொஞ்சம் ஸ்ருதியோட அங்கங்கே தாளம் பெசகி பாடுவேன் அவ்ளோதான். கொஞ்சம் நல்லாப் பாடற பாத்ரூம் சிங்கர்",  இடுப்பிலிருந்த அங்கவஸ்திரத்தை இன்னமும் இறுக்கமாக்கிக் கொண்டு அடக்கவொடுக்கமாகப்  பெரியவர்கள் முன்னிலையில் கூறிக்கொண்டேன்.

நடராஜ பாகவதர் என்னை அப்படி அறிமுகம் செய்து வைத்ததில் காரணம் இல்லாமல் இல்லை. கொஞ்சம் கொசுவத்தி சுழற்றி அது ஏன் என்று சொல்கிறேன், ஜாக்கிரதையாக என்னுடன் வாருங்கள்....

சரியாக நான்கு வருடங்களுக்கு முன் என் ஆஸ்திரேலிய மாமா தன் குடும்ப சகிதம் பாரத விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் மகனும் மகளும் அங்கே ஆஸ்திரேலியாவில் "மார்கழிப் பூவே" புகழ் ஷோபா சேகர் அவர்களிடம் பல வருடங்களாக கர்நாடக சங்கீதம் கற்று வருகிறார்கள். அங்கேயே ஆஸ்திரேலிய அரங்கேற்றம் முடிந்துவிட்டிருந்தாலும் இந்த விஜயத்தில் கோவையில் ஒரு இந்திய அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு ஆகியிருந்தது. வரலாற்று நிகழ்வு என்பதால் இந்தியா முழுவதிலுமிருந்து சொந்தபந்தங்கள் நட்பு வட்டாரங்கள் என்று வண்டி கட்டிக்கொண்டு கோவை நோக்கி கும்பல் கும்பலாகப் படையெடுத்திருந்தோம். 

கோவையில் இறங்கினதும் அரங்கேற்ற அஜெண்டா என் கையில் தரப்பட்டது. அரங்கேற்றத்திற்கு கோவை கிருஷ்ணமூர்த்தி தலைமை என்றும் சிறப்பு விருந்தினராக நடராஜ பாகவதர் கலந்து கொள்ள இருக்கிறார் எனவும் சொல்லியது அஜெண்டா. நடராஜ பாகவதர் நாங்கள் நன்கு அறிந்த எங்கள் உறவினர். கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்களை இதுவரை  நான்  சந்தித்ததில்லை. அந்த அஜெண்டாவில் மிக முக்கியமாக அதன் தலைக்குமேலே என்பெயர் முதலில் இருந்தது. இதென்னடா வம்பு என அவசர அவசரமாகப் படித்தால், "கடவுள் வாழ்த்து - கிரி" என்றது அந்த அஜெண்டா. "நீ பாடறே அவ்ளோதான்", என அன்பாக மிரட்டல் உத்தரவு வந்தாயிற்று. என் அனுமதி கேட்காம நீங்க எப்படி இதெல்லாம் பண்ணலாம் என்றெல்லாம் கேட்க நேர அவகாசம் இல்லை. நமக்கு பந்தா பண்ணும் அவசியமும் இல்லை.

மறுநாள் காலையில் நிகழ்ச்சி. எனக்கு புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களும், ஆயர்பாடி மாளிகையும், குறையோன்றுமில்லையும் கொஞ்ச கொஞ்சம் தெரியும். ஆனால் ஒரு கர்நாடக சங்கீதக் கச்சேரிக்கு முன்னால் இந்தப் பாடல்கள் ஆப்ட் ஆக இருக்காதே. இரவு பதினொரு மணிவரை யோசித்தும் என்ன பாடுவது என ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

"வக்ரதுண்ட மஹாகாய" பாடுங்க என என் கஸின் ஒருவன் சொல்ல, லேசாய்ப் பொறி தட்டியது. அங்கே இருந்த மற்ற கஸின்களுடன் கலந்து ஆலோசித்து எப்போதோ நான் பொழுதுபோகாத ஒரு வேளையில் போட்டு வைத்த ஒரு அம்மன் பாடல் டியூனுக்குள் அதே கஸின்கள் உதவியுடன் ஒரு விநாயகர் துதியைப் புனைந்து நுழைத்து ஒரு மணிநேரத்தில் சுமாரே சுமார் பக்காவாக ஒரு பாடல் தயார்.

மறுநாள் அப்பாடலை இரவல் வாங்கிய மெரூன் பைஜாமாவெல்லாம் அணிந்து நான் பந்தாவாக மேடைக்கு ஒரு ஓரமாய் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆளுயர மைக்கின் முன் நின்று வழக்கமான சுருதி, தாள பேதங்களுடன் பாடி முடிக்க, அந்த திருஷ்டிப் பரிகாரத்துடன் என் மாமன் மகளும் மகனும் பங்கேற்ற அந்த அரங்கேற்றம் இனிதே துவங்கியது. 

என் சுயதம்பட்டம் முடிந்துவிட்டாலும், நான் கொசுவத்தி சுழற்றி இங்கே சொல்ல வந்தது என் கதையல்ல..... மேலே படியுங்கள்.

நிக் என்கிற Nicholas James Vujicic பற்றி நீங்கள் ஃபார்வர்ட் மெயில்கள் மூலம் நிறைய அறிந்திருக்கலாம் அல்லது நிக் எழுதிய "லைஃப் வித்தவுட் லிமிட்ஸ்" (Life Without Limits) புத்தகம் பற்றி குமுதத்தில் என்.சொக்கன் எழுதும் வெற்றிக்கு ஒரு புத்தகம் வாயிலாக அறிந்திருக்கலாம்.



அந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கோவை கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நிக்'கிற்கும் ஏதும் வித்தியாசம் இல்லை. ஆம், தோற்றத்தில் நிக்'கை ஒத்தவர் கிருஷ்ணமூர்த்தி மாமா. இவரும் இரு கைகளும் இரு கால்களும் இல்லாமலேயே வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டு நமக்கு இன்ஸ்பிரேஷனாக இயங்கிக் கொண்டிருப்பவர்.

கோவையைச் சேர்ந்த கிருஷ்ணமுர்த்தி அவர்கள், எங்கள் உறவினர் நடராஜ பாகவதரின் நெடுநாளைய நண்பர். அறுபத்தி ஐந்து வயதாகும் இவர் அருமையான கர்நாடக சங்கீதப் பாடகர். சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர். இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகள் ஏறி கச்சேரிகள் செய்திருப்பவர். சில வெளிநாடுகளிலும் இவர் மேடை ஏறியது உண்டு. மாநில அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமை மிக்கவர்.

"நான் கடவுள்" படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் கோவை கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார் என்பது உப தகவல்.

சென்ற வாரம் "விகடன் மேடை" பகுதியில் அப்துல் கலாம் அவர்கள் அளித்த கேள்வி பதில் பகுதியிலிருந்து....

''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''



''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''

இப்படிப்பட்ட பெருமைமிக்கவர் முன்னிலையில் சுருதி பேதமோ அல்லது தாளப் பிசகோ.... ஏதோ ஒன்றுடன் பாடி முடித்த பெருமை மட்டுமே எனக்கு உண்டு.

.
.
.


Oct 14, 2010

ஓர் இரவில் ஒரு ரயிலில்...








அந்த ஒருவனை ஏற்றிவிட ஏழெட்டு பேர் வந்திருந்தனர். ஏனோ "நீங்க கலங்காதீங்க ", என்றுகொண்டே அவன் கண்கலங்கிக் கொண்டிருந்தான். அவர்களெல்லாம் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். "நீங்க எல்லாமும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்", என்றான். அவர்களில் யாரும் பெரிதாகக்  கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

பாண்டியன் தாமதமாக வந்த யாருடைய அனுமதியையும் கோராமல் சரியான நேரத்திற்குப் புறப்பட்டுவிட்டது.

அந்த ஏழெட்டு பேர் திரும்பித் திரும்பி திரும்பத் திரும்ப "பாத்துக்கோ ராஜா, பாத்துக்கோ ஆல் தி பெஸ்ட்" எனச் சொல்லிக்கொண்டு தடதடவென வண்டி ஓடுகையிலேயே இறங்கி கடைசி நேர ஏற்றக்காரர்களிடம் கெட்ட வசவுகள் வாங்கிக் கொண்டார்கள். இறங்கிய  பின்னும் கூட இரண்டு பேர் வண்டியோடு கிட்டத்தட்ட சேத்பட் வரை கையசைத்துக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

டிக்கெட் பரிசோதகர் வந்து போக, தாம்பரமும் கடந்து போக "இந்து மகா சமுத்திரத்தில்" மூழ்கியிருந்த என்னை ஏதோ குறுகுறு பார்வை தொடர்வது உள்ளுணர்த்த, திரும்பிப் பார்த்தால் நம்ம ராஜா எதிர் இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தான். என்னைப் பார்த்தவாறு லேசாய் ஒரு அசட்டுச் சிரிப்பு. நானும் சிரித்து வைத்துவிட்டு மீண்டும் புத்தகத்தில் தலை நுழைக்க, மீண்டும் பார்வை என்மேல் தொடர்வது போல்... திரும்பினால் "அதே ராஜா, அதே புன்னகை". நான் கொஞ்சம் தீவிரமாக அவனைப் பார்க்க

"படுத்துக்கலாமா சார்?"

"டேய், இது என்ன கேள்வி", என்பதாய் நான் அவனைக் கலவரமாய்ப் பார்த்தேன்.

"இல்லை, லைட் எரிஞ்சா எனக்குத் தூக்கம் வராது".

"லைட் அணைச்சா எனக்கு படிக்க வராது", என சொல்ல வேண்டும் போலிருந்தது.

"ரெண்டு நிமிஷம் சார்", என அனுமதி பெற்று புத்தகத்திற்கு முகம் தந்தேன்.

"அய்யிய்யோ.... சார்'ன்னு எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு உங்கள விட அஞ்சாறு வயசு கம்மியா இருக்கும். என் பேரு ராஜா". அவன் பேசி முடித்ததும் அவன்புறம் ஒரு வெற்றுப் பார்வையை வீசிவிட்டு மீண்டும் புத்தகத்தில்....

சரியாக நூற்றியிருபது வினாடிகள் கடந்திருக்கும் போல. "படிச்சிட்டீங்களா சார்"

புத்தகத்தை பைக்குள்  எறிந்துவிட்டு ஒன்றும் பேசாமல் லோயர் பெர்த்தில் படுத்துக் கொண்டேன். அவன் கரும சிரத்தையாக மிடில் பெர்த்தை ஏற்றி வைத்துவிட்டு, "சார் செங்கல்பட்டுல யாராவது ஏறினா உங்களை தூக்கத்துல எழுப்பிடுவாங்க. இப்பவே மிடில் பெர்த்தை ஏத்தி விட்டுட்டு படுங்க" , என டிப்ஸ் தந்துவிட்டு படுத்துக் கொண்டான்.

வேண்டா வெறுப்பாக அவன் சொன்னதை செய்து விட்டுப் படுத்தேன்.

"
இப்பல்லாம் இன்டர்நெட்டுல டிக்கெட் புக் பண்ணிடறாங்க. பொது ஜனங்களுக்கு டிக்கெட் கெடைக்கறது கஷ்டமாகிடுச்சு சார்"

நான் படுத்து பதினைந்து எண்ணுவதற்குள் தூங்கும் ரகம். "ம்ம்ம்ம்", என்று தூக்கத்தினூடே குரலாட்டினேன்.

"
தூங்கிட்டீங்களா சார்?"

பக்கவாட்டில் அவன்புறம் திரும்பி விழி விரித்து அவனைப் பார்த்து, "சொல்லுங்க", என்றேன்.


"
நீங்க என்ன நெனைக்கறீங்க இது பத்தி?"

"
எது பத்தி?"

"
இந்த இன்டர்நெட் புக்கிங் பத்தி?"

"
இன்டர்நெட்' புக் பண்றவங்களும் பொதுஜனம்தான்னு நெனைக்கறேன்"

"
நான் அப்படி சொல்ல வரலை சார்..."

"
உங்களுக்கு தூக்கம் வரலைன்னா நான் லைட் போட்டுக்கவா, கொஞ்சம் படிக்கணும்?"

"
ம்ம் சரி...இல்லை வேணாம் சார். தூங்கலாம்"

ஓரிரு நிமிட இடைவேளைக்குப் பின், "சார், மதுரைக்கு முன்னால ட்ரெயின் எங்க நிக்கும்?"
"கொடை ரோடு"
"எத்தனை மணிக்கு சார்"

"ம்ம்ம், ஒரு அஞ்சரை மணிக்குன்னு நெனைக்கறேன்"

"
தேங்க்ஸ் சார். அங்கருந்து போன் பண்ணிட்டா, அவங்களுக்கு வண்டி அனுப்ப சரியா இருக்கும் அதுதான். நான் அலாரம் வெச்சுக்கறேன்"

எத்தையோ பண்ணித்தொலை என்றவாறு நான் திரும்பிப் படுத்தேன்.

அடுத்து..... வேறென்னவாக இருக்கும்? நானும் நீங்களும் நினைத்தவாறே சிம்ம கர்ஜனை எழுந்தது. மவனே என்னமா கொறட்டை வுடறான் சார்காலை மூன்று மணி வரை ராஜ கர்ஜனை புண்ணியத்தில் தூக்கம் சுத்தமாக அவுட்.

லால்குடி அருகே வண்டி ஒரு வனாந்திரத்தில் நீண்ட நெடு நேரம் நின்றுகொண்டே இருந்ததுகடந்து சென்ற போலீஸ்காரம்மாவிடம்  செய்த விசாரணையில் முன்னே சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் இரண்டு பெட்டிகளைத் தடம் புரள விட்டதால் தாமதம்  எனத் தெரிந்தது.


லால்குடியில் காட்டுக் கொசுக்கள் கொலைப்பசியில் இருந்துத் தொலைத்த வேளையில் நாங்கள் அங்கே சிக்கிக் கொள்ள, அப்போதுதான் மடிப்பாக்கக் கொசுமார்கள் எத்தனை நல்லவர்கள் என எனக்குப் புரிந்து தொலைத்தது. ஒரு ரவுடிக் கொசுக்கூட்டம் கிட்டத்தட்ட என்னை ஜன்னலுக்கு வெளியே வலுக்கட்டாயமாக வலித்தது.

மணி ஐந்தரை. பல் கழுவி, முகம் துலக்கி, கடன் கழித்து, மிச்ச மீதமிருந்த பெப்சியை குடித்து முடித்து என நான் என்ன செய்து பார்த்தும் வண்டி அங்கிருந்து புறப்படுவதாகத் தெரியவில்லை.

அப்போது....

நம்ம ராஜா ஒரு ராஜ கம்பீர சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தான்.

"
என்ன ஸ்டேஷன் சார்?", ஆரம்பமாயின அவன் கேள்விக் கணைகள்.

"
லால்குடி பக்கத்துல ஏதோ காடு சார். வண்டி மூணு மணி நேரமா இங்கதான் நிக்குது".

"
என்னது, வண்டி லேட்டா?"

"
ஆமாங்க. இப்ப வரைக்கும் மூணு மணி லேட்டு?"

"
அப்போ மதுரைக்கு எப்போ போவும்?"

"
கொறஞ்சது மூணு மணி நேரம் லேட்டா போவும்"

"
அய்யய்யோ....."

அவன் புலம்பல்கள் அலம்பல்கள் என ஒரு அரை மணிநேரம் கடந்த நிலையில் வண்டி மெல்லப் புறப்பட்டு நகர ஆரம்பித்தது.

ஹப்பா....வண்டி புறப்பட்டது. இவன் புலம்பல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி என நான் நினைக்க இதற்கு மேல்தாண்டா ஆரம்பம் என மாறியது சூழல்.


அவன் ஸ்டாண்டர்டாக ஐந்து கேள்விகளை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் அந்த கேள்விகளை வரிசை மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏ இருந்தான்.

"
சார் கண்டிப்பா ஒன்பதரை மணிக்கு வண்டி மதுரைக்கு போயிடுமா?"

"
மதுரைக்கு முந்தின ஸ்டேஷன் எது"

"
அந்த ஸ்டேஷனுக்கு வண்டி எப்போ போவும்?"

"
இந்த வேகத்துல போனா எப்போ மதுரை வரும்?"

"
இப்போ இந்த வேகத்துல வண்டி போனா மதுரை எப்போ வரும்?"

ஒரு நிலையில் பொறுக்க மாட்டாமல், "சார் உங்களுக்கு என்ன ப்ராப்ளம்? எதுக்கு என் உயிரை எடுக்கறீங்க? ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாதா?. வண்டி மூணரை  மணி நேரம் லேட்டு. ஆக்சுவலா வண்டி ஆறேகாலுக்கு போயிருக்கணும். இப்போ ஒன்பதே முக்காலுக்கு மதுரை போகும். ஒன்பது மணிக்கு கொடை ரோடு வரும். நீங்க உங்க சமூகத்துக்கு அப்போ தகவல் சொல்லலாம். நான் இதை ஒரு பேப்பர்ல எழுதித் தரணுமா?" எனக் கடுமையாகக் கேட்டேன்.

ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே "கப் சிப்" என ஆகிவிட்டான்.

"
ஸாரி சார். எனக்கு இன்னைக்கு காலைல பதினோரு மணிக்கு நிக்காஹ்", என்றான்.


எனக்கு அப்படியே தலை கிர்ர்ரென்றது. அவன் சொன்னது தெளிவாக என் மண்டையில் உரைக்க எனக்கு இரண்டு நிமிடங்கள் பிடித்தது

"
பதினோரு மணிக்குக் கல்யாணம்"  என்பதை பதினோரு மணிக்கு எந்திரன் படம் பார்க்கப் போகிறேன் என்பது போல் கூடச்  சொல்ல முடியுமா என்ன?

"
என்னது? நிக்காஹ் உங்களுக்கா இல்லை நீங்க ஏதாவது நிக்காவுல கலந்துக்க போறீங்களா?"

அவன் போன் மணியடிக்க, "ஒரு நிமிஷம் சார்", என என் அனுமதி பெற்றுக் கொண்டு, "சொல்லுங்க அத்தா. இல்லை. வண்டி மூணு மணி தாமதமா வருது. நான் இங்க இப்போதான் திருச்சியில இருக்கேன். நீங்க ஒன்பது மணிக்கு மேல அவங்கள வண்டி அனுப்பச் சொல்லுங்க. கடைசி நேரத்துக்காவது வந்துடுவேன்னு நெனைக்கறேன். நான் என்ன செய்ய.....", என்று ஒரு பத்து நிமிடங்கள் விவர சுபரங்களைச் சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பினான்.

"
டேய்நேத்து ராத்திரி அவ்ளோ பேசின . உனக்கு கல்யாணம்னு சொல்லலையேடா நீ?", என்பதாய் நான் பார்ப்பதை அறிந்து...


"கோடியில ஒருத்தருக்குத் தான் சார் இப்படி ஆகும். வேலைல சில சிக்கல், போன வாரம் லீவ் கான்செல் ஆச்சு. அட்லீஸ்ட் நேத்து ஊர்ல இருந்திருக்கணும், வந்த வழியில ப்ளேன்  கான்சலாகி லேட்டு, சரி இன்னைக்கு காலைலயாவது ஆறு மணிக்கு போயிருக்கணும். இப்பவும் லேட்டு..."
நான் என் கைகளை கன்னத்தில் தாங்கி கைகளால் வாய் மூடி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"
பர்ஸ்ட் நைட்டுக்காவது கொண்டு விட்டுடுவான்னு நெனைக்கறேன்", என ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் சொன்னான்.

எனக்கு லேசாய்ச் சிரிப்பு வந்தது, எனினும் இன்னமும் பேச்சு வரவில்லை. "அடப்பாவி மக்கா" என பரிதாபமாக இருந்தது.

இப்போது மீண்டும் ஆரம்பித்தான்...

"
சார் கண்டிப்பா ஒன்பதரை மணிக்கு வண்டி மதுரைக்கு போயிடுமா?"
Related Posts Plugin for WordPress, Blogger...