Jan 21, 2024

ஆண்கள்


 #ஆண்கள்:


இன்று ராஜ் டிவியில் 90களின் மத்தியில் வந்த பழைய திரைப்படம் ஒன்று. மதியத் தூக்கம் முடித்து ஹாலுக்கு வந்து நான் அமர்ந்த போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. 


 தம்பி வீட்டினுள் நுழைகிறான். வீட்டினுள் அவனது அண்ணனானவன் இவனது மனைவியை பலவந்தப்படுத்தும் காட்சியைக் காண்கிறான் தம்பி. அண்ணனானவன் இப்போது தன் பலவந்தத்துக்கு ஒரு pause போட்டுவிட்டு தம்பியை கொலையடி அடிக்க வருகிறான். தமிழ்த் திரைப்படத் தம்பியான இவன், அண்ணன் மீது அதீத பக்தி கொண்டவன். அண்ணன் அடித்துத் துவைப்பவை அனைத்தையும் கையைக் கட்டிக்கொண்டு வாங்கிக் கொள்கிறான். அடித்துத் துவைத்தல் காட்சி வீட்டுக்கு வெளியே வருகிறது. கம்பும், கட்டையும், பானைகளும், ஓடுகளும் கொண்டு அண்ணன் அடிக்கிறான். கட்டையைக் கொண்டு தலையில் ஒரே போடு, அதையும் வாங்கிக் கொண்டு சமர்த்தாக சரிகிறான் தம்பி. 


அண்ணன் pause'ல் விட்ட பணியைத் தொடர வீடு நுழைகிறான். திரும்பிப் பார்த்தால் சரிந்த சகோதரன் முதுகின் பின்னே நின்று கொண்டிருக்கிறான். சரி திருப்பித் தர வந்திருக்கிறான் என நாம் பார்த்தால், "என்னண்ணே இப்பிடியெல்லாம். வேணாம்ணே!", எனக் காலில் விழ வருகிறான். 

அண்ணனானவன் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் தம்பியின் அம்மா (??) புகைப்படத்தைக் கையிலெடுத்து அவளை அவமானம் செய்யும் சொல்லொன்றைச் சொல்லி அதை உடைக்கிறான். 


தம்பிக்கு வெறிகொண்ட கோபம் இப்போது வந்தே விடுகிறது.


"டாஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்! அம்மாவையாடா தப்பாப் பேசுன?"


டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம். அடுத்த ஐந்தாம் நிமிடம் அண்ணன் காலி. 

சுபம்.

Jan 6, 2024

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 6

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 6


பிரயாக் பயணம் மற்றும் ஊர் திரும்பும் நாள்:


அயோத்தி மாநகரில் ஆறாம் நாளும் அதி சீக்கிரமாய் விடிந்தது. நாலு மணித் துயிலெழல். ஐந்தரைப் புறப்பாடு. ஆறு மணிக்குள் காலைச் சிற்றுண்டி என. ஏழு மணிக்குள் நாங்கள் நகர எல்லையைக் கடக்க வேண்டும். நகர் முழுக்க அதன் பின்னர் சீல் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக என்று கூறப்பட்டது. 


அத்தனைக் காலையில் நாஸ்தா தின்பதெல்லாம் என் அகராதியிலும் கிடையாது என்னும் மனம் படைத்தோரும் கூட நான்கு மணித் துயிலெழல் பயனாய், தட்டில் சுடச்சுட வந்து விழுந்த இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னியை துவம்சம் பண்ண முதல் ஆளாய் வரிசையில் நின்றோம். 


குறித்த நேரத்தில் புறப்பட்டோம். குறித்த நேரத்தில் அயோத்தி எல்லையும் கடந்தோம். மதியம் பன்னிரண்டு மணி பிடித்தது பிரயாக்ராஜை அடைவதற்கு. 


எங்கள் பயணத்தில் மீண்டும் ஒரு புது நகரப் புகுதல். மீண்டும் ஒரு ஆரவார வரவேற்பு. பாரம்பரியக் கலைஞர்கள் மேள-தாள வரவேற்பு நல்கினர். ஜில்லா துணை மாஜிஸ்திரேட் எங்களுக்காக காத்திருந்து எங்களை கங்கைக் கரையில் அமைக்கப்பட்டிருந்த கலை அரங்கினுள் அழைத்துச் சென்றார். பள்ளிக் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடத்த வந்திருந்தனர். 


உள்ளூர்ப் பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்றனர் முதலில் மேடை ஏறிய பள்ளிச் சிறுமியர். பரதநாட்டிய வழி தங்கள் ஊருக்கு வருகை புரிந்த எங்களுக்கு வரவேற்பு தந்தனர் அடுத்து ஆடிய மாணவியர்.

அனைவரது நேரத்தையும் கருத்தில் கொண்டு, சுருக்கமாக கலை நிகழ்ச்சிகள் நிறைந்தன, அவற்றின் இடையே நினைவுப் பரிசு வழங்கல்கள் நடந்தேறின. பிரயாக் ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் நிகழ்ச்சியை தமிழ், ஹிந்தி இரண்டிலும் தொகுத்து வழங்கினார்.


நதிக்கரையில் வரிசையாக படகுகள் காத்திருந்தன. ஒவ்வொரு பேருந்துக் குழுவாக திரிவேணி சங்கமத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 


நீரோடும் சிற்றோடையைப் பார்ப்பதே கடினம் என்னும் நிலப்பரப்பில் இருந்து சென்ற ஒருவனுக்கு இரண்டு வற்றா நதிகள் பிரவாகம் எடுத்து வந்து சங்கமிக்கும் இடத்தினை தரிசித்ததுவும், அங்கே நின்று பேச்சின்றி சில நிமிடங்கள் மோனத்தவத்திற்குச் சென்றதுவும் அலாதி அனுபவம்.


தனிக்குழுவாக வரும் மக்கள் கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்கவைத்து புனித நீராடுகிறார்கள். நின்று நீராடும் அளவு நீர் குறைவாக சில இடங்களில் உள்ளது. சில படகுக்காரர்கள் படகுகளுக்கிடையில் கயிற்றினைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டு பக்தர்களை சங்கமிக்கும் இடம் எனப்படும இடத்தில் இறங்கச்சொல்லி நீராட வைக்கிறார்கள்.  


எங்கள் இருநூறு பேர் கொண்ட குழுவிற்கு ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கி இருந்தார்கள். நீராடி முடித்து, கொண்டு சென்றிருந்த பிளாஸ்டிக் புட்டிகளில் புனித நீர் சேகரித்து, மறுவழியில் படகேறி கலை அரங்கம் இருந்த இடம் வந்தோம். 


அதிருஷ்ட வசமாக என் பேருந்து எண் வாரணாசியிலும், அயோத்தி-பிரயாக் பயணத்திலும் ஒன்றாம் எண்ணாக இருந்ததால், நம்மால் முன்னாதாகவே காத்திருக்கும் இடங்களுக்கு வந்து சேரும் வாய்ப்பு இருந்ததால், பயணத்தின் சில நேரங்களில் ஆங்காங்கே ஆசுவாசம் செய்து கொள்ள அவகாசம் கிடைத்தது. கலை அரங்கின் பின் பகுதியில் அமைந்திருந்த சிறிய கடைவீதிப் பகுதியில் சென்று மேய்ந்து இல்லத்தரசிக்கு சில வளையல் செட்டுகள் வாங்க அப்படி நேரமும் அமைந்தது. 


அங்கிருந்து பேருந்துகளில் புறப்பட்டு சுவாமி நாராயண் மந்திர் சென்றோம். அங்கே மதிய உணவு. பின் அங்கிருந்து புறப்பட்டு ஆசாத் பூங்கா சென்றோம். அங்கே ஒரு குழுப்புகைப்படம். அது நிறைந்ததும் அங்கிருந்து நேரே எங்கள் வாரணாசி பயணம் துவங்கியது. 



பிரயாக் நகரில் இரண்டு சந்திப்புகள் சுவாரசியம் தந்தவை. 


ஒன்று கங்கைக்கரைக் கடை வீதியில்  ராஜேஷ் என்னும் நபரை சந்தித்தேன். கிட்டத்தட்ட என்னை ஒத்த தோற்றம். நுனி நாக்கு பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் தனியாகப் பேசிக்கொண்டு உலாத்திக் கொண்டிருந்தான் மனிதன். என்னைப் பார்த்ததும் இடை மறித்து, "ஹேய், நீ சவுத் இண்டியன் தானே? டமில்?", இவனிடம் பேசலாமா என்ற என் தயக்கத்தைப் பார்த்து, "பயப்படாத, நான் நம்மூர் ஆளுங்க கிட்ட எல்லாம் லூட் அடிக்க மாட்டேன். வெள்ளைக்காரன் எவனாவது வந்து மாட்டினான்னா அவன் கிட்ட பேசி ஏதாவது கறக்க முடியுதான்னு பாப்பேன்",  என்றவனைப் பார்த்து சிரித்து விட்டேன். "பின்ன, அவன் நம்ம ஊர்ல இருநூறு வருஷம் லூட் அடிச்சான் இல்ல. திரும்ப கறக்கணும் இல்ல?" என்றான். நான் அமைதியாக புன்னகைத்து நிற்க "நீ கால்ல செருப்பு போடாம போற பாரு. இந்த பக்தி எல்லாம் நான் தமிழ் மக்கள் கிட்ட தான் பாத்து இருக்கேன். புனிதத் தலத்துல உலாத்தும்போது செருப்பு போடக் கூடாதுங்கற சிரத்தை எல்லாம் சர்.சி.வி.ராமனையும், சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணனையும் இந்தியாவுக்குத் தந்த பூமிக்குத்தான் தெரியும்", என்றான். யாரப்பா நீ என்று நான் இன்னும் தயக்கத்தில் இருக்க, "சரி, நீ என்னை நம்பலைன்னு தெரியுது. என் பேரு ராஜேஷ். ஞாபகம் வெச்சிக்க இங்கதான் சுத்திட்டு இருப்பேன்", என்று கை கொடுத்து விடை பெற்றான்.


இரண்டாவது சந்திப்பு சந்திர சேகர் ஆசாத் பூங்கா வாசலில் சந்தித்த பள்ளிச் சிறுமியர் சிலர். அங்கே ஐஸ்கிரீம் வாங்கித் தின்ன நின்றிருந்த சிறுமியரை எங்களுடன் வந்திருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கேண்டிட் க்ளிக் அடித்துக் கொண்டிருந்தார். நான் அவர்கள் அருகில் சென்று நின்று, என்னையும் சேர்த்து எடுங்க பாஸ் என்றேன். "ஹல்லோ! ஹல்லோ! யார் நீங்க? இப்டி தெரியாதவங்க பக்கம் எல்லாம் நிக்கக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க", என்றாள் அவர்களுள் ஒரு குட்டிப் பெண் கறாராக. "மன்னிச்சிக்க தாயி" என்று நான் நகர்ந்து விட்டேன். ஒரு நிமிட இடைவெளியில் எங்கள் ஒட்டு மொத்த கூட்டத்தையும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு, "நீங்க தான் மோதி ஜி எங்க ஊருக்கு அழைச்சிட்டு வந்த கெஸ்ட்டா?", என்று மெதுவாக வந்தார்கள். "உங்க பேரு என்ன அங்கிள்?", "சென்னைலருந்து வந்திருக்கீங்களா", "அந்த ஃபோட்டோகிராபர் அங்கிள் எங்க அங்கிள்?", "சரி, வாங்க அங்கிள் செல்ஃபி எடுக்கலாம்", என்று நிறைந்தது எங்கள் ஐந்து நிமிட ஸ்நேஹம். 


பிரயாகில் இருந்து புறப்பட்டதும் வழியில் கைவினை அருங்காட்சியகமும் வர்த்தக மையமும் ஒருங்கே அமைந்திருந்த TFC செல்லும் திட்டம் இருந்தது. ஆனால், வழியில் நிகழ்ந்த ஒரு போக்குவரத்து நெரிசல் காரணமாக TFC திட்டம் ரத்தானது. 


பதினோரு மணிக்கு எங்கள் ரயில் பனாரஸ் நிலையத்தில் புறப்பட வேண்டும். நாங்கள் பத்து பதினைந்துக்கு பனாரஸ் அடைந்தோம். ரயில் நின்றிருந்த நடை மேடையில் எங்கள் பெட்டிகளுக்கு அருகிலேயே எங்களுக்காக இரவு உணவு காத்திருந்தது. இந்தப் பயணத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் நாங்கள் எந்த மனத்தடங்கல்களும், குறைகளும் மனதில் கொள்ளாமல் முழுதாய் உள்வாங்க இந்த உணவு உபசரிப்பு ஒரு பெரும் பங்கு வகித்தது என்றால் அது மிகையில்லை. 


உணவை முடித்து, ரயிலில் ஏறி அமர்ந்தோம். சற்று நேரத்தில் ரயில் புறப்பட்டது. ஆறு நாட்கள் எப்படிக் கடந்தன என்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். பல நண்பர்களின் அறிமுகங்கள், புதிய எழுத்தாள முகங்களின் பரிச்சயம், ஆன்மிக உலாத்தல்கள், கலை நிகழ்வுகள், கலாச்சாரக் கூடல்கள், சில மரியாதைக்கு உரிய அதிகாரிகளுடனான தனிப்பட்ட சந்திப்புகள் என அத்தனையும் சாத்தியப்படுத்திய சங்கமம் நிறைவை எட்டுகிறது என்பதை ஏற்க சற்றே கடினமாகத்தான் இருந்தது. பனாரஸ், வாரணாசி, காசி என்று ஒவ்வொரு ரயில் நிலையங்களாக பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தன. என் நினைவுகளும் கூட.












Jan 5, 2024

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 5





காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 5


ஆரவாரமான ஐந்தாம் நாள்:

நிகழ்ச்சி நிரலில் ஒரு சிறு மாற்றம் வந்து சேர்ந்தது. ஐந்தாம் நாள் பிரயாக்ராஜ் செல்வதாகவும், ஆறாம் நாள் அயோத்தியாவுக்காக எனவும் இருந்த திட்டம் அயோத்தியா முதலில், பிரயாக்ராஜ் பிறகு என்று ஆனது. அயோத்யா புதிய விமான நிலையத் திறப்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களையொட்டி எங்களுக்கு மறுநாள் அங்கே தங்க அனுமதி இல்லை என்பதால், எங்கள் அயோத்யா திட்டம் ஒருநாள் முன்கூட்டியே அமைந்தது.


எங்கள் வாரணாசிப் பயண நாட்களில் எங்களை எல்லா நிகழ்வுகளுக்கும் சுமந்து சென்றவை 25+ இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் வகைப் பேருந்துகள். இருதின வாரணாசி சுற்றல்கள் முடிந்து அயோத்யா புறப்படுகையில் அப்பேருந்துகளுக்கு பிரியாவிடை தந்தோம். வாரணாசி - அயோத்யா - பிரயாக்ராஜ் - வாரணாசி பயணத்திற்கென சாய்வு இருக்கைகள் கொண்ட ஐந்து பெரிய பேருந்துகள் காத்திருந்தன. 


அன்றைய காலைப் பொழுது வழக்கம்போல சீக்கிரமாகவே விடிந்தது. நான்கு மணிக்குத் துயிலெழுந்து ஐந்தரை மணிக்குப் பேருந்து ஏறி, ஆறு மணிக்கெல்லாம் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு அயோத்யா நோக்கிப் புறப்பட்டோம்.


வாரணாசியில் இருந்து புறப்படும் முன்னமும், அயோத்யாவில் மதிய உணவு முடித்த பின்னரும் தவிர்க்கவியலாத சில காத்திருப்புகளால் இரண்டு மணி நேர தாமதம் நேர்ந்தது. அந்தத் தாமதத்தின் பலன் எங்கள் தொடர் நிகழ்வுகளின் நேர வரையறையைச் சுருங்கச் செய்தது சற்றே சோகமான விஷயம்.


மதிய உணவுப் பொழுதிற்குச் சரியாக அயோத்தியை அடைந்தோம். வழக்கம் போல் அமிர்தமான போஜனம், அயோத்தியில் புதிதாய் உருவாகிக் கொண்டு இருக்கும் பெரிய பேருந்து நிலையத்தில் எங்களுக்காக காத்திருந்தது. தமிழகத்திலிருந்து சென்றிருந்த அறுபது சமையற்கலைஞர்கள் வாரணாசியிலும் அயோத்தியிலும் முகாமிட்டு எங்களுக்கான உணவுப் பணிவிடையை கவனித்தனர். பிரயாக்ராஜ் நகரில் மொத்த நிகழ்விலும் ஒரேயொரு பொழுது மதிய போஜனம் மாத்திரமே திட்டத்தில் இருந்ததால் அங்கு உணவுத் தயாரிப்புக் கூடம் இல்லை. அந்த ஒருவேளை உணவானது வாரணாசியில் தயாரிக்கப்பட்டு படகு வழி நாங்கள் அங்கு வந்து சேருமுன் வந்து சேர்ந்தது ஆச்சர்ய நிகழ்வு.


சரி, அயோத்திக்கு வருவோம்.


மதிய உணவிற்குப் பிறகு ராமஜென்ம பூமிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். உயர்மட்டப் பாதுகாப்பில் இருந்தது மொத்த நகரமும். நகரின் உதவி கலெக்டர் இருவர் எங்களை வரவேற்று கோயிலுக்கு எங்களை அழைத்துச் சென்றனர். மத்திய ரிசர்வ் போலீசை சேர்ந்த உயர் அதிகாரி திரு.பாலசுப்ரமணியன் மற்றும் அவரது அணியினர் எங்கள் குழுவின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பை அங்கே உறுதி செய்ததோடு, எங்களுக்கு அங்கே வழிகாட்டியாகவும் இருந்து கோயில், கட்டுமானம், சிற்பங்கள், கலையமைப்பு, தயார்நிலை என்று ஒவ்வொரு சிறு தகவல்களையும் தந்து உதவினார்கள்.


ஜனவரி 22 அன்று பிரதிஷ்டைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் கட்டுமானத்தை தூரத்தில் நின்று பார்க்க முடிந்தது. தற்போது ராமர் ( ராம் லல்லா) குடியிருக்கும் சிறுகோயிலை தரிசிக்கவும் அழைத்துச் சென்றார்கள். தனது ஜென்மபூமி இது என்பதால் பாலகராக ராமர் நின்றிருந்தார். பிரதிஷ்டைக்கு ஒரு மாதம் முன் ராமரை தரிசிக்க இயன்றது பயணத்தின் பெரும்பேறு.


ராமரிடம் கற்கண்டுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு அனுமனை தரிசிக்கச் சென்றோம். நடை தூரத்தில் சின்னஞ்சிறு குன்றின் மீது அமர்ந்திருந்தான் அனுமன். ராமனை பாலகனாய் தரிசிக்கையில் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி நேர்ந்தது என்றால், Vibe என்று இந்த காலத்துப் பிள்ளைகள் சொல்கிறார்களே, அந்த vibe ஆனது அனுமன் சன்னதியில் மிகுதியாகக் கிடைத்தது. 


காசிக்குச் சென்றால் எதையேனும் விட்டுவிட்டு வரவேண்டும் என்பார்களாம். அப்படி நாம் விடை தரும் பொருளானது நமக்கு மிகவும் தேவையும், நெருக்கமுமான பொருளாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. காசியின் இரண்டாம் நாள் நிகழ்வில் அங்கே பத்து டிகிரி குளிருக்கு மிகவும் தேவையானதுவும், நம் தலையிலேயே சுமக்கும் நெருக்கமானதுமான என் குளிர்க் குல்லாவை கை மறதியாய் எங்கோ விட்டுவிட்டிருக்கிறேன். அயோத்தி வீதிகளில் கிடைத்த அந்த ஐந்து நிமிடங்களில் அங்கே அதற்கு மாற்று குல்லா வாங்கிக் கொண்டேன். அப்படியே கருப்பிலும், காவியிலும் சட்டைகள் இரண்டு அயோத்தி நினைவாக எனக்கும், மகனுக்கும் வாங்கிக் கொண்டேன். மேலே நான் குறிப்பிட்டு இருந்த அந்த இரண்டு மணிநேரத் தாமதம் எங்கள் அயோத்தி கடைத்தெரு உலாத்தலில் கைவைத்துவிட்டது ஒரு பெரும் சோகம். ஆனால், அந்த சோகத்தை மறக்கடிக்க அடுத்த நிகழ்வு காத்திருந்தது.


மீண்டும்  அயோத்தி பேருந்து நிலையத்திற்கு சென்றோம். எங்கள் கலை, கலாச்சார மனங்களுக்கு உவப்பு அளிக்க அந்த பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருந்த பிரமாதமான கலையரங்கத்தில் இசை மற்றும் நடன நிகழ்வுகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  துணை கலெக்டர்கள் இருவரும் அங்கும் வருகை புரிந்திருந்தனர்.


அரங்கிற்கு எங்களை வரவேற்க உத்திரப்பிரதேச பாரம்பரிய இசை, நடனக் குழுவினர் வாத்தியங்கள் இசைத்து, நடனமாடி, மலர் தூவி, மாலை அணிவித்து எங்களை அரங்கினுள் அழைத்துச் சென்றனர்.


போஜ்புரி, ஆவாதி, ப்ரஜ் மொழிகளில் உள்ளூர்ப் பாடல்களும், நடனங்களும் சுமார் ஒருமணிநேரத்திற்கு எங்களை அந்த அரங்கத்தினில் கட்டிப் போட்டன என்று சொன்னால் அது மிகையில்லை. குறிப்பாக அந்த மரபு சார்ந்த கலைஞர்களின் மாசற்ற குரலும், பண்பட்ட நடன அசைவுகளும் ஆகா என்றிருந்தன. வாரணாசியில் இருந்தும், பிரயாக் நகரில் இருந்தும், மதுராவில் இருந்தும் வந்திருந்த கலைஞர்களின் ராமகாதைப் பாடல்களும், கிருஷ்ண லீலா நடனங்களும் ஒரு நிறைவான நாளை எங்களுக்குத் தந்தன. கலை நிகழ்வுகளின் கடைசி உருப்படியான கிருஷ்ண-ராதா நடனம் பதினைந்து நிமிடங்களுக்கு நீண்டு களைகட்டியது. 


ஒரு கட்டத்தில் நடனக் கலைஞர்கள் அரங்கத்திலும், பார்வையாளர்கள் மேடைக்கும் என இடம் மாறி ஒட்டுமொத்த அரங்கமும் நடனத்தில் இருந்தது. நடனக் கலைஞர்கள் தங்கள் குழுவினரின் பாடலுக்கு உதவி-கலெக்டரையும் கால்களை அசைக்க வைத்தனர்.


செவிக்கும் மனதிற்கும் உணவு தந்து முடித்ததும் பேருந்து நிலைய வளாகத்தில் காத்திருந்த இரவுணவை சுவைக்கச் சென்றோம். உணவுக்குப் பின் சற்றே பயணப்பட்டு அயோத்தியின் இரட்டை நகரம் என்று அழைக்கப்படும் பைசாபாத் நகரில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதியில் உறங்கச் சென்றோம்.

Jan 3, 2024

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 4 (தொடர்ச்சி)

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 4 (தொடர்ச்சி)

அன்றைய அரங்க அமர்வில் பேசிய மற்ற பிறர் பொதுவாக வாழ்த்துக் கவிதை வாசிக்கும் தொனியில் தங்கள் பேச்சை எடுத்துச் சென்ற போது எல்லாம் நிகழ்ச்சியின் அன்றைய ஒருங்கிணைப்பாளர் அவர்களை மட்டறுத்து தலைப்பையொட்டிப் பேசுமாறு பணித்தார். 


கோவையைச் சேர்ந்த ரவீந்திரன் அவர்கள் பேசும்போது, தான் ஹிந்தி மொழியில் வெளியான பல நல்ல புத்தகங்களை வாசிக்க மொழிபெயர்ப்பு நூல்கள் எவ்வண்ணம் உதவின என்பதனைக் குறிப்பிட்டார். தமிழின் நல்லபல புத்தகங்களும் மேலும் பல மொழிகளில் கொண்டுவரப்படத் தேவை உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 


பேச்சாளர்கள் பக்கமிருந்து பார்க்கையில், இந்திய கல்வித்துறையின் இணை இயக்குநர் ஆர்.ராஜேஷ் அவர்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. "பக்தி த்ரவிட் உப்ஜி" என்ற சொல்லாடல் வடக்கில் மிகப் பிரபலம். 


भक्ति द्रविड़ उपजी, लाये रामानंद

प्रकट करि कबीर ने, सात द्वीप नौ खंड


பக்தி இயக்கம் தெற்கில் பிறந்தது, ராமானந்தரால் அது இங்கு (வாரணாசிக்கு) கொண்டு வரப்பட்டது.

கபீர் ராமானந்தர் அதை 7 கண்டங்களில்,  சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, நீர், நெருப்பு, காற்று, ஒலி மற்றும் மனம் ஆகிய 9 காண்டங்களில் (खंड) எங்கும் நிறைந்ததாக ஆக்கினார். பக்தி இயக்கமானது தெற்கிலிருந்தே உருவாகி வடக்கு நோக்கி நகர்கையில் அந்நகர்வின் மத்தியப் புள்ளியாக காசி மாநகரம் விளங்கியது. எனவே, இந்த காசி - தமிழ் சங்கம நிகழ்வு மிகவும்  பொருத்தமான இடத்திலேயே நிகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.


மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சங்கம நிகழ்வின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு (மெமென்டோ) வழங்கப்பட்டது. 


இடையில் அங்கே கிடைத்த நேரத்தில் அங்கே நமோ படித்துறையை ஒட்டி இருந்த ஸ்டால்களில் எம் இல்லத்துப் பெண்மணிகளுக்கு புடைவைகளும், சுரிதார்களும் வாங்கிக் கொண்டேன். 


ஆர். ராஜேஷ் அவர்கள் நேஷனல் புக் டிரஸ்ட்-க்கு அழைத்துச் சென்று NBT 'யின் உதவி இயக்குநர் (தமிழ்) மதன் ராஜ் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். செம்மொழித் தமிழ் ஆய்வு மைய அரங்கில் மூத்த மொழிபெயர்ப்பாளர் திரு.கோவிந்தராஜன் அவர்களையும் சந்தித்து அவருக்கு ஒரு வணக்கம் வைக்கும் இனிய வாய்ப்பு திரு.ஆர்.ராஜேஷ் அவர்கள் வழி கிடைத்தது. 


செம்மொழி அரங்கில் நான் இருந்தபோது அங்கே கனமாய்ப் பெரிய புத்தகமாய் திருக்குறளின் ஹிந்தி வடிவத்தை ஒரு உள்ளூர் வாசகர் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அரங்கில் இருந்த அன்பர் அவருக்கு திருக்குறளின் மகத்துவத்தைக் கூற முற்பட, தனக்குத் திருக்குறள் குறித்துத் தெரியும் எனவும் அதன் ஆங்கில வடிவை முன்னமே வாசித்துள்ளாதாகவும், தற்போது அதன் ஹிந்தி வடிவை வாங்குவதற்கு இங்கே வந்திருப்பதாகவும் சொன்னார்.


மூன்று மணி முதல் கலை நிகழ்ச்சிகள் திறந்தவெளி அரங்கில் துவங்கின. தமிழகத்தில் இருந்து 200+ குழுவினர் இந்தப் பதினைந்து நாள் நிகழ்வுகளுக்காக காசிக்குப் பயணப்பட்டு வந்திருந்ததாகச் சொன்னார்கள். நாங்கள் சென்ற நாளன்று மன்னார்குடி நடராஜா நாட்டிய வித்யாலயா மாணவிகளின் பரதம் கண்டோம். உத்திரப் பிரதேச இசைக் கலைஞர்களின் மோஹன வீணை, புல்லாங்குழல், வயலின் இசைக் கச்சேரியும் நடந்தது. இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல எனும் விதம் சிறப்பாக இருந்தன. மேலும் தோல்பாவைக் கூத்து, தப்பாட்டக் குழுவினர்கள் அங்கே அடுத்த நிகழ்வுகளுக்காகக் காத்திருந்தனர். உள்ளூர் சனங்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்து கலை நிகழ்வுகளைக் கண்ணயராமல் கண்டு மகிழ்ந்ததைக் நாம் காண முடிந்தது.


ஒரு குழுப்புகைப்படம் கங்கை நதிக்கரையில் எடுத்துக் கொண்டோம். பின்னர் ஐந்து மணிக்கு எங்கள் 200 பேரையும் தாங்கி அழைத்துச் செல்லும் வண்ணம் ஒரு பெரிய cruise வகைப் படகு நமோ படித்துறையில் காத்திருந்தது. அதில் ஏறி மாலைத் தேநீர் அருந்திய வண்ணம் கங்கை ஆரத்தி காணப் புறப்பட்டோம். 


காசி மாநகரில் கங்கைக் கரையை ஒட்டி 80+ படித்துறைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவற்றில் பிரபலமாக அஸ்ஸி காட், மணிகர்ணிகா காட், தஸாஸ்வமேத காட், ரவிதாஸ் காட் என ஐந்தாறு படித்துறைகள் உள்ளன. இங்கேதான் மக்கள் பெரும்பாலும் கூடுகிறார்கள். தசாஸ்வமேத மற்றும் அஸ்ஸி படித்துறைகளில் கங்கை ஆரத்தி நிகழ்கிறது. நமோ காட் பகுதியில் இருந்து நீர்வழி சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு பயணப்பட்டு கங்கை ஆரத்தி நிகழும் இடம் வந்து, ஆற்றில் படகில் இருந்தவாறே ஆரத்தியைக் கண்டு களித்தோம்.


காசியில் மேலும் இரு படித்துறைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மணிகர்ணிகா மற்றும் அரிச்சந்திரா படித்துறைகள். வாரணாசியில் இறந்து, இப்படித்துறைகளில் தனது சடலம் எரிக்கப்பட்டால் வீடுபேறு அடைவது உறுதி என்று இந்து மதத்தில் நம்பிக்கையுள்ளது. இப்படித்துறைகளில் நாள் முழுவதும் சடலங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. திறந்தவெளி சுடுகாடாக இருக்கும் இப்படித்துறைகளில் சிதை மூட்டப்படுவதைக் காணவும் கூட சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். எங்கள் கங்கா ஆரத்திப் பயணவழி ஆற்றிலிருந்து மணிகர்ணிகா படித்துறையைக் கடக்கையில் சிதைகள் எரிவதைக் காணமுடிந்தது. 


சுற்றியுள்ள சிலநூறு கிலோமீட்டர் தொலைவில் இறப்பவர்கள் உடல்கள் இங்கே கொண்டுவந்து எரியூட்டப்படுவதும் இங்கே சகஜம். மணிகர்ணிகா படித்துறையானது காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியே இருப்பதால், நீங்கள் கோயில் நோக்கி சந்து-பொந்துக்களில் நடக்கையில், திரும்பி வருகையிலும், வண்டியில் பயணம் செய்யும் போதும் அங்கே மஞ்சள் நிறத் துணியால் முழுக்கப் போர்த்தப்பட்ட சடலங்கள் கொண்டு செல்லப்படுவதைப் பார்க்கலாம். அவற்றைக் காண்பதுவும் நற்பேறுகளுள் ஒன்றாக மக்கள் கருதுகிறார்கள்.


நமோ காட்டில் படகு ஏறிய நாங்கள், ஆரத்திக்குப் பிறகு  ரவிதாஸ் காட்டில் இறக்கி விடப்பட்டோம். எங்களுக்கான பேருந்துகள் அங்கே காத்திருந்தன. அவற்றில் ஏறி ஹோட்டல் டீ ஃபிரான்ஸ் சென்று இரவுணைவை முடித்துவிட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினோம்.



( Pic Courtesy: Some media online - other pics taken by me )









Jan 1, 2024

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 4

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 4

காசியில் ஒரு நீண்ட நெடிய நாள்: நான்காம் நாள் மிக மிகச் சீக்கிரமாகவே விடிந்தது. காலை கங்கைப் புனிதக் குளியலுடன் நாள் துவங்கியது நீண்ட நெடிய லிஸ்டைத் தாங்கியிருந்த அந்த நன்னாள். ஆறு மணிக்கு முன்னதாகவே ஹனுமான் காட் (படித்துறை) சென்றோம். வெளியே பத்து டிகிரி குளிர். இருந்தும் அனைவராலும் மகிழ்வுடன் கங்கையில் முங்கியெழ முடிந்தது. பயண நோக்கம் கலாச்சார சங்கமம் தான் எனினும், ஒவ்வொருவருக்குள் இருந்த ஆன்மிக அன்பர்களுக்கு வாழ்வின் ஒரு பெரும் கடமை நிறைந்த உணர்வு கங்கையில் மூழ்கி எழுந்த போது. உடை மாற்றும் அறைகள் வசதியாகவே இருந்தன.

முந்தைய நாளின் கோயில் பயணங்களின் போதும் சரி, இப்போது கங்கை சென்றபோதும் சரி; தமிழ் சினிமாக்களில் காட்டும் காசி மாநகரின் சந்து பொந்துக்களில் புகுந்து புகுந்து  போன அனுபவம் அலாதியானது.

முகமெல்லாம் விபூதியைத் தீற்றிக் கொண்டு ஒரு சாமியார் அங்கே அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார். தட்டில் காசு போட்ட ஒவ்வொருவருக்கும் ருத்ராட்சங்களும் வழங்கிக் கொண்டிருந்தார். நம் மக்கள் அவரருகே  நின்று அவரை வணங்கும் போஸில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அடுத்து பாரதி இல்லம். சுப்ரமணிய பாரதி ஒரு மகாகவி என உருவானதில் காசியின் பங்கு மகத்தானது. ஒரு மனிதனைத் தான் யார் என்ற அடையாளத்தை உருவாக்கவல்ல பதின்மப் பருவத்தில் பாரதி வசித்தது, மேற்படிப்பு படித்தது, சில காலங்கள் பணியும் புரிந்தது காசி நகரிலேயே. தன் தந்தையின் மறைவுக்குப் பின் பதினாறாம் வயதில் காசி சென்ற பாரதி ஐந்து ஆண்டுகள் அங்கே தங்கிய காலத்திலேயே பன்மொழிப் புலமையும், பண்டிதத் தன்மையும் பெற்றது எனலாம். அவரது வேட்டி, கோட்டு, மீசை, தலைப்பாகை என்ற அடையாளம் காசி தந்தது என்று எதிரே இருந்த காஞ்சி மடத்தின் பெரியவர் ஒருவர் சொன்னார். சென்ற வருடம் பாரதி வசித்த இல்லத்தை நினைவுச் சின்னமாக தமிழக அரசு அறிவித்து அதுமுதல் அங்கே பராமரிப்பு செலவினங்களை தமிழக அரசு ஏற்று வருகிறது. 

பத்துக்குப் பத்து இருந்த அந்த பாரதி இல்லத்தில் அடித்துப் பிடித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு எதிரே இருந்த காஞ்சி மடத்தில் சாமி கும்பிட்டு, ஒரு நல்ல காபி அருந்தி விட்டு மீண்டும் சந்து-பொந்துகள் வழியே வெளியே வந்தோம். காஞ்சி மடம் - காசி - ஆதி சங்கரர் - அயோத்தி ராமர் சார்ந்த பிணைப்புகள் குறித்து தனியே எழுதலாம்.

அடுத்து காலை உணவு. ஹோட்டல் டி ஃபிரான்சில் தான் எங்கள் உணவு ஏற்பாடுகள் மொத்தமும் காசியில். தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட அறுபது சமையற்கலைஞர்கள் எங்களுக்கான உணவுத் தேவையை கவனித்துக் கொண்டார்கள். 

காலை உணவிற்குப் பின் வந்த வேலை துவங்கியது. கங்கை நதிக்கரையில், நமோ படித்துறையில் விருந்தினருக்கான அரங்கமும், கலை நிகழ்ச்சிகளுக்காக தமிழகத்திலிருந்தும் - உத்திரப் பிரதேசத்திலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைக் குழுவினருக்கான நதிக்கரையைப் பின்னணியாகக்  அழகிய பரந்த மேடையும், பார்வையாளர்களுக்கான திறந்தவெளி இருக்கைகளும் அமைக்கப் பட்டிருந்தன. 

எழுத்தாளர்களுக்கான அரங்கில், தமிழ் மற்றும் இந்தி மொழி இலக்கியங்களில் முற்போக்கு சிந்தனைகள் ( Inclusive and Progressive Writing in Tamil & Hindi Literature ) என்ற தலைப்பில் ஒரு அமர்வு நிகழ்ந்தது. தமிழ் இலக்கியங்கள் குறித்துப் பேச கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் வருகை புரிந்திருந்தார். ஹிந்தி இலக்கியங்கள் பக்கம் பேச இந்திய வானொலி உதவி இயக்குநர் (ஒய்வு) நீரஜா மாதவ். 

மூன்றாம் பாலினர் குறித்தும் திபெத்திய அகதிகள் குறித்துமான நீரஜா மாதவ் அவர்களின் எழுத்துக்கள் ஹிந்தி இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் மூன்றாம் பாலினருக்கான மனித உரிமைகள் குறித்தான இந்திய உச்ச நீதிமன்றத்தின் 2014'ஆம் ஆண்டின் மதிப்பு மிக்க தீர்ப்பிற்குப் பின்னால் நீரஜா அவர்களின் எழுத்துக்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் (campaigns) மகத்தான பங்கு உண்டு என நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கிய திரு. சௌந்தரராஜன் அவர்கள் ( இந்திய மொழிகளின் குழு ஆலோசகர்) குறிப்பிட்டார். அக்காலங்களிலேயே திருநங்கைகள் பற்றிய கதைகள் பல மொழிகளிலும் இந்தியாவில் எழுதப்பட்டன. இது தற்போது குறைந்துள்ளது. திருநங்கைகள் பற்றி அதிகமாக எழுதப்பட வேண்டும் என்று நீரஜா குறிப்பிட்டார். 

அன்றைய அமர்வின் வெற்றியின் பின்னால்  நிகழ்வைத் தொகுத்து வழங்கிய திரு.சௌந்தரராஜன் அவர்களின் இருமொழிப் புலமை பெரும்பங்கு வகித்தது. தன்னைக் குறித்த பெரிய அறிமுகம் எதுவும் தந்து கொள்ளாமல் நிகழ்வை சிறப்பாக நடத்திச் சென்றார். இருபக்கமும் பேசியவர்களின் பேச்சின் சாராம்சத்தை மற்றோருக்கு அழகாக மொழிபெயர்த்துத் தந்தார்.

உத்திரப் பிரதேச எழுத்தாளர் ஸ்ரீவத்சவ் தென்னிந்தியர் - வட இந்தியர் என்ற சொற்பதங்கள் inclusive என்ற வார்த்தைக்கு எதிரானவை என்று குறிப்பிட்டார். 

மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் ஏ.எஸ்.ரிஜ்வீ சிறப்பு விருந்தினராக வருகை தந்து நிறைவுரை தந்தார்.

தமிழகத்தில் இருந்து சென்றவர்களில் இருவரது பேச்சு எனக்கு சிறப்பானவை எனப்பட்டது. 

ஏற்காடு நகரைச் சேர்ந்த ஆசிரியர், எழுத்தாளர் சதீஷ்ராஜ் பேசுகையில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதன் பின்னணியில் ஆண்டாண்டு காலமாய் பெண்ணுரிமை, பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா முழுவதும் எழுத்தாளர்கள் பற்பல மொழிகளிலும் தொடர்ந்து எழுதி வருவது முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார்.

சென்னையைச் சேர்ந்த பிரசன்னா பேசுகையில், செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியின் பாடலைக் குறிப்பிட்டு பாரததேவி inclusive and progressive என்றவகையில் பயணப்பட வேண்டிய தொலைவுகளைக் குறிப்பிட்டார்.

(நான்காம் நாள் அனுபவங்கள் தொடரும்)

Related Posts Plugin for WordPress, Blogger...