Dec 21, 2014

இப்பல்லாம் யார் சார்.....

முன்குறிப்பு:இந்தப் பதிவு உண்மையிலேயே ஒரு சீரியஸ் பதிவு. சத்தியமாக சமூக அக்கறையுடன் எழுதப்பட்டது. 

--   --

நிஜ வாழ்வில் புருஷன் பொண்டாட்டி சண்டை, மாமியார் மருமகள் பிரச்னை, டேமேஜர் எம்ப்ளாயி பிரச்னைகளுக்கு இணையாக இந்த சாதி சார்ந்த அடிதடிகள் இணையத்தில் வாழ்வாங்கு வாழும் போல...! எத்தனை வருடம் ஆனாலும் கதை, திரைக்கதை, வசனம் என்று எதுவுமே மாறாத அதே வறட், வறட் பதிவுகள்... அதே அதே பின்னூட்ட அடிதடிகள். ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஆயாசமாய் இருக்கிறது.

இணையம் வந்த புதிதில் இந்த சாதி சார்ந்த அடிதடிகள் எல்லாம் எனக்கு விசித்திரமாக இருக்கும். பார்ப்பனீயம், ஆரியம், திராவிடம், அடிவருடி, வந்தேரிகள் (றி?) மற்றும் இன்னபிற வார்த்தைகளை நாள்தவறாமல் வாசிக்கத் தொடங்கின போது கொஞ்சநாள் நன்றாகவே பொழுது போனது. பின்னர் நாளாக நாளாக ‘என்னாங்கடா டேய்’ எனும் ரேஞ்சுக்கு எரிச்சலானது. கொஞ்சம் உக்கிரமாகி நாமும் சற்றே “உர்ர்ர்ர்ர்ர்”, எனப் பொங்கவும் செய்ய ஆரம்பித்து, கொஞ்சம் கொலைவெறியுமாகி, பின்னர் நிறுத்தி நிதானமாக யோசித்து, நம் ரத்தக் கொதிப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம்மால் நாய் வாலையெல்லாம் நிமிர்த்த முடியாது என்று தீர்மானித்து மறுபடியும் சைலண்ட் வாட்சர் ரேஞ்சுக்கு எல்லாவற்றையும் மேய்வதோடு நிறுத்தும் நிலைக்கு வந்தாயிற்று.

பை தி வே, வெறுமனே ஆரியம், அடிவருடி, பார்ப்ஸ் என பொங்குபவர்கள், எதிர்ப் பொங்குனர்கள் எனக்கு ஓகே. நேரம் எப்போதாவது எச்சாய்க் கிட்டும் சில பொழுது போகாத தருணங்களில் பதிவுகள், பின்னூட்டப் பொங்கல்களைப் படித்து ரசிக்க ருசிக்க அவர்கள் உதவுகிறார்கள்.

ஆனால் பாருங்கள், சாதியற்ற சமூகத்தை சமைக்க இந்த ட்விட்டரும், ஃபேஸ்புக்கும், தத்தமது ப்ளாகுமே (blog) போதும் என கங்கணம் கட்டிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் குதிப்போருக்கு ஆற்றுவதற்கு நிறையவே பிசிக்கல் வொர்க் இருக்கிறது என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன். சீரியஸாகச் சொல்கிறேன். உட்கார்ந்த இடத்தில் பொங்கினால் ஒன்றும் உதவாது. உங்கள் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு வாருங்கள். களமிறங்கி ஆற்றோ ஆற்று என்று ஆற்ற கடமைகள் ஆயிரம் உண்டு உமக்கு.

நிறைய விஷயங்களை நீங்கள் பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும். லேபர் வார்டிலேயே ஆரம்பித்தால் இன்னமும் க்ஷேமம்.


தமிழ்சார் ட்விட்டர், ஃபேஸ்புக், ப்ளாக் உலகத்தையும் தாண்டி உள்ள பரந்து விரிந்த உலகில் (கிட்டத்தட்ட சமீபத்தில்) நடந்த சம்பாஷனைகள் நான்கினை இங்கே தருகிறேன். உங்களுக்கு எவ்வளவு வேலை காத்துக் கிடக்கிறது என்பது சரியாய்ப் புரியும்.

இந்த நான்கு காட்சிகளுமே நான் வேலை பார்ப்பது போன்றதொரு நிறுவனத்தில் நடந்ததே:

காட்சி 1: புதிதாய் வேலைக்குச் சேர்ந்த பெண்ணிடம் விவரங்கள் சேகரிக்கும் நேரம்.

அலுவலர்: உங்க முழுப்பெயர் என்னம்மா? people file;ல அப்டேட் பண்ணனும் சொல்லுங்க.

புதியவர்: XYCABZ....

அலுவலர்: < ஆர்வ மிகுதியில் > நீங்க கேரளாவா?

புதியவர்: இல்லையே.

அலுவலர்: ஓ... ரைட். உங்க பேர்ல மலையாள வாடை அடிச்சதால கேட்டேன்.

புதியவர்: இல்லை சார் நாங்கல்லாம் ABCDFG < தன் சாதியின் பெயரை சொல்கிறார் >

அலுவலர்: மைண்ட் வாய்ஸ் - நான் கேட்டனா முருகேஷா?

காட்சி 2: 
அதே அலுவலகம். அதே அலுவலர். அதே போன்றதோர் புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவர்.

அலுவலர்: அதே முதற்கேள்வி...

புதியவர்: ஆனந்த்  XXXYYY.

அலுவலர்: சாரி, உங்க surname இன்னொரு தடவை சொல்லுங்க.

புதியவர்: XXXYYY

அலுவலர்: pardon me. சரியாப் புரியலை. can you spell it?

புதியவர்: X X X Y Y Y - we are vaishyaas sir....

அலுவலர்: அதே கடைசி மைண்ட் வாய்ஸ்.

காட்சி 3: 

நகரின் மத்தியில் தன் நண்பரின் வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. அது குறித்த தகவல்களை சகாக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அன்பர்.

அன்பர்: நல்ல குடும்பமா வாடகைக்கு இருந்தா சொல்லுங்கப்பா.

அன்பரின் நண்பர்: பேச்சிலர்ஸ்ன்னா ஓகேவா சார்?

அன்பர்: இல்லப்பா வேணாம். ஃபேமிலியாத்தான் பாக்கறான் என் ஃப்ரெண்டு. May be XYCABZ < ஒரு சாதியின் பெயர் > பசங்களா இருந்தா ஓகே. பசங்க நல்லவங்களா இருக்கணும் பாரு.
பிகு: அன்பர் XYZABZ சாதியைச் சேர்ந்தவர் இல்லையாம்.
பிகு 2: விதி படத்தில் வரும் இடைச்செருகலான பாக்யராஜ் ஜோக்தான் நினைவுக்கு வந்தது.


காட்சி 4: மதிய உணவு வேளை. பக்கத்து மேஜை.

அன்பர் 1: ஆம்லெட் எடுத்துக்கங்கப்பா.

அன்பர் 2: இட்ஸ் ஓகே சார்., சாப்புடுங்க.

அ1: தட்ஸ் ஓகே.... எடு. நான் இன்னும் கை வெக்கல.

அ2: இல்ல சார். நான் ஆம்லெட் சாப்பிட மாட்டேன்.

அ1: வெஜிடேரியனா நீ?

அ2: யெஸ்

அ1: ???ரா? (ஒரு சாதியின் பெயர்....)

அ2: நீங்க பன்னிக் கறி திம்பீங்களா?

அ1: சீச்சீ

அ2: அப்போ நீங்க ???மா? (ஒரு மதத்தின் பெயர்)

(ஐந்து நிமிடத்திற்கு ஒரு tug of war லெவலுக்கு இருவருக்கும் பிடிகொடா விவாதம். ஐம்பத்தியிரண்டு சாதிகளையும் அவர்களின் உணவு முறைகளையும் அங்கே அந்தட் டேபிளில் விரித்துப் பரப்புகிறார்கள்)

இடையில் என்னைப் போன்றதொரு வேலைவெட்டி இல்லாத (இணையத்திலும் இருக்கும்) அன்பர் உட்புகுகிறார்

அன்பர் 3: யோவ்.... உங்களுக்கு வேற வேலையே இல்லையா? இப்போ எதுக்குய்யா சாதி பேர் சொல்லி ஒரு விவாதம்?

அன்பர் 1 & 2 (கூட்டாக): மிஸ்டர் புலவர், உங்க வெங்காய வெள்ளைப்பூண்டு பேச்சையெல்லாம் ஃபேஸ்புக் ஷேரிங்கோட நிறுத்திக்கோங்க. சும்மா இங்க வந்து உங்க டகுளு (!!??) வேலையெல்லாம் காட்ட வேணாம்.

அன்பர் 3: ங்ஙே.....

என்னருகே அமர்ந்திருந்த அன்பர் 4: கிரி, இந்த ஜாதியெல்லாம் ஒழிக்க முடியாதில்ல? 

நான்: (ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவாறு மோர்க் குழம்பு சாதத்தில் மூழ்கியிருக்க....)

அன்பர் 4: முடியாதுன்றீங்களா?

நான்: (கண்களில் கண்ணீர்ப் பெருக.... நாயகன் கமல் குரலில்): த்த்த்தெரியலியேப்பா......
Related Posts Plugin for WordPress, Blogger...