Mar 9, 2013

சமையல் 140

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முன் தொகுத்தது இது. பப்ளிஷ் பட்டனை அமுக்க இப்போதான் நேரம் கிடைத்தது :)


Mar 6, 2013

ரிடர்ன் ஆஃப் தி தாசர் பாடல்கள்


ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது!

சத்யாவை எனக்கு அவரது தாசர் பாடல்கள் தளம் மூலமாகத்தான் அறிமுகம். நட்பாஸ் ஒருமுறை தாசர் பாடல்கள் தளத்திலிருந்து ஒரு பதிவை (ட்விட்டரில் (அ) ரீடரில்) பகிர்ந்திருந்தார். அன்று முதல் தாசர் பாடல்கள் தளத்தின் தொடர் வாசகனானேன்.

தாசர் பாடல்களுக்கான சத்யாவின் விளக்கவுரை வாசித்ததும் ஏற்படும் மனநிறைவை வார்த்தைகளால் விளக்க முடியாது. பக்தியும் பரவசமும் அற்ப வார்த்தைகளுள் அடங்கிவிடுவதில்லை.

”சத்யா இங்க ட்விட்டர்ல இருக்காரா?”, என்று கேட்டு அவரை அங்கும் தொடர்ந்தேன். சத்யாவின் தாசர் பாடல்களுக்கு அடுத்து அவரது கிசும்பு நகைச்சுவை ட்வீட்களில் ரெகுலராக திளைப்பதும் இன்னொரு ஆனந்தம். சத்யாவின் எள்ளல் ட்வீட்கள் ஸ்பெஷல் என்றால், சுய எள்ளல் ட்வீட்கள் செம்ம ஸ்பெஷல்.

திடீரென்று, ”அடுத்த ஆறு மாசத்துக்கு தாசர் பாடல்கள் தளம் இயங்காது”, என்று போர்டு போட்டார் சத்யா, சென்ற ஜனவரி பதினான்கு அன்று மறு தொடக்கம் செய்திருக்க வேண்டிய தாசர் பாடல்கள் தளம் ரீ-ஸ்டார்ட், மக்கர் என்ற ரீதியிலேயே ஓடிக்கொண்டிருந்தது.

இடையில் 365process பதிவுகளை ஆரம்பித்தார் சத்யா. தினம் ஒரு ப்ராஸஸ் தகவல். ப்ராஸஸ் பதிவுகளுக்கான சத்யா வெளியிட்ட தினசரி விளம்பர ட்வீட்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் உருவானது என்றால் அது மிகையில்லை. 

ஆம்னிபஸ் தளம் தொடங்குகிறேன் என்றதும், “என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோப்பா”, என்று இங்கும் குதித்தார் சத்யா. எங்களில் மற்ற எல்லோருக்கும் அவரவர் பதிவு என்றோ, அன்று காலையில் உட்கார்ந்து கடைசி நேரத்தில் எழுதுவதே வழக்கம். ஆனால் சத்யா தன் ஸ்லாட் புதன்கிழமை என்றால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறுகளிலேயே பதிவை மின்னஞ்சலில் எங்கள் பார்வைக்கு அனுப்பி எங்களை வெறுப்பேற்றுவார்.

கார்பரேட் கம்பேனிகளில் வொர்க்-லைஃப் பாலன்ஸ் என்று ஒரு விஷயத்தைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். அதுபோல பர்சனல் லைஃப் - சோஷியல் லைஃப் பாலன்ஸ் பற்றி சத்யாவை ஒரு பதிவு எழுதச் சொல்ல வேண்டும்.

சென்ற வாரம் 365process தளத்தின் 365 பதிவுகளையும் நிறைவு செய்துவிட்டு இதோ இப்போது தாசர் பாடல்கள் தளத்தை மறுதிறப்பு செய்திருக்கிறார் சத்யா. இனி தொடர்ச்சியாக அங்கே எழுதுவார்.

ராம நாமம் என்னும் பாயசம் என்ற இந்தப் பதிவைப் படித்ததும் அதே பழைய பரவசம் என்னுள், மறுபடியும்.

ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்:

Mar 5, 2013

அப்பா! இது அடுக்காது சாமி!



மேலே காணும் புகைப்படத்தைப்  பாருங்கள்.

இருண்டு கிடக்கும் இந்தப் படம் சென்னை பல்லாவரத்தையும் துரைப்பாக்கத்தையும் இணைக்கும் முக்கியச் சாலையில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மற்றும் இப்பகுதிகளைச் சுற்றியுள்ள இன்னபிற பகுதிவாழ் மக்கள் கீழ்கட்டளை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், சோழங்கநல்லூர், திருவான்மியூர், ஈசிஆர், மற்றும் சென்னையின் கிழக்குக் கோடியின் பிற பகுதிகளை அடைய இந்தச் சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். 

இடது புறம் தெரியும் ஒற்றைவிளக்கு மடிப்பாக்கத்திற்கு உள்ளே செல்லும் ஒற்றைச் சாலைமுனையில் அமைந்தது. அது ஹைவேஸ் விளக்கு அல்ல. தூரத்தில் தெரியும் ஒளிப்பொட்டுகள் எதிரில் வரும் வாகனங்கள்.

இந்தச் சாலை அமைக்கப்பட்டு வருடங்கள் ஐந்து ஆன பின்னரும் கூட பத்து கிலோமீட்டர் நீள சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குக் கூட விளக்கு வசதியில்லை.

சென்னையின் ஐ.டி.எக்ஸ்ப்ரஸ் ஹைவே என்றழைக்கப்படும் ராஜிவ்காந்தி சாலைக்குப் பயணப்படும் பல்லாவரம், மடிப்பாக்கம், வேளச்சேரி வாழ் பொதுசனங்கள் பயன்படுத்தும் சாலைக்கே இந்தக் கதி. எனக்குத் தெரிந்த இருண்ட பிரதேசத்தை, நான் தினமும் பிரயாணம் செய்து அல்லலுறும் பகுதி என்பதால் இந்தப் படத்தை இங்கே தருகிறேன்.

இதனைக் காட்டிலும் ஒளியின் தேவைமிக்க சாலைகள், தெருக்கள், வீதிகள் நம் சிறுநகரங்களிலும், சின்னஞ்சிறு கிராமங்களிலும் ஆயிரம் இருக்கக்கூடும்.

ஓகே, இப்போது கீழே காணும் இந்தப் படத்தைப் பாருங்கள்.


ஜெகஜ்ஜோதியாக ஒளிரும் இந்தப் படம் சென்னை பம்மல் பகுதியில் இருக்கும் சங்கர் நகர் சாலையின் தோற்றம்.

நல்ல அகலமாக இருந்த இந்தச் சாலையானது திடீரென்று இடையே டிவைடர் போடப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு குறுகல்கள் ஆக்கப்பட்டது. இத்தனைக்கும் இது பஸ்களும் லாரிகளும் அதகளப்படுத்தும் பிரமாத பிரதான சாலையொன்றுமில்லை. சங்கர் நகருக்கு நாளொன்றுக்கு சேர்த்துப் பார்த்தால் பத்து பஸ்கள் இப்படியும் அப்படியும் போகின்றன. மற்றபடி பொதுஜன நடமாட்டம் மட்டுந்தான் இந்தச் சாலையில்.

இந்தச் சாலையின் இடதுபுறம் முன்னமே சக்திவாய்ந்த விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்க, சாலையின் நடுவே இரண்டுபுறமும் தொங்கும் அதிவீரிய வெள்ளை விளக்குகள் மேலும் சேர்க்கப்பட்டுள்ளதையும் படத்தினில் பாரீர்.

சாலையின் இடதுபுறம் ஒரு விளக்கு, நடுவே இரண்டு விளக்குகள். இந்தியா நிஜமாகவே ஒளிர்கிறதா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது. இங்கே வீணடிக்கப்படும் மின்சாரத்தை மிச்சம் பிடித்தால்.... மிச்சத்தை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்.

பல்லாவரத்தையும் பம்மலையும் இணைக்கும் குன்றத்தூர் சாலையே இன்னமும் டிவைடர் அமைக்கப்படாமல், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் கேளாது, பாராது இருக்கும் நிலையில் திடீரென்று இந்த உள்ளூர்ச் சாலைக்கு ஏன் இந்த கவனிப்பு?

சக அலுவலக cab-mate அன்பர் ஒருத்தர், இந்தச் சாலையில் வசிப்பவர் சொன்னது.

“அது ஒண்ணும் இல்லை சார். இந்த ரோடோட அந்த எண்ட்ல “மீனாட்சி பாலிடெக்னிக்” தாண்டினப்புறம் ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஃப்ளாட் டெவலப் ஆகிட்டு இருக்கு. நூத்துக்கணக்குல வீடுங்க வருது. அவைங்க இங்க கவனிச்சு அங்க கவனிச்சு, கைக்காசையும் கொஞ்சம் செலவழிச்சு இந்த ரோடை டெவலப் பண்ணியிருக்காங்க. கட்டுறதெல்லாம் இப்பிடி எதான வெளிச்சம் போட்டுக் காட்டினாத்தானே விக்கும். அட பத்துரூவா வளையல் விக்கவே லைட் அடிக்கற ஒலகம் சார் இது. நூத்தி சொச்ச வீடு விக்கறவரு இந்த லைட்டு கூட அடிக்காட்டி எப்டி? ”

அப்பா சாமி! இதெல்லாம் ரொம்ப ஓவரு டோய் என்று நினைத்துக் கொண்டேன்!

ஒருபக்கம் ஐடி எக்ஸ்ப்ரஸ் ஹைவே வாழ் மக்களுக்கே கண்ணில் வெண்ணெய் வைத்துவிட்டு இப்படி ஃப்ளாட் ப்ரமோட்டர்களுக்கு ரோடும், விளக்கும் போட்டுத்தரும் இந்த ஜனநாயகம் இன்னமும் கூட மின்சாரமே பார்க்காமல் இருக்கும் நம் இந்தியக் கிராமங்களுக்கு என்னத்தை கிழித்துவிடப் போகிறது?

Mar 3, 2013

A Good Day to Die Hard



அண்ணன் ப்ரூஸ் வில்ஸ் நடித்த படம்ன்னு அலுவலக நண்பர்கள் சத்யத்திற்கு என்னை இழுத்துப் போனார்கள்.

”ப்ரூஸ் வில்ஸ்....  ரைட்டு ஃபேஸ் ஆஃப்’ல நடிச்சவர்தானே?”, என்ற என்னிடம்

“யோவ் அந்த படத்துல நடிச்சவரு நிகலஸ் கேஜுய்யா”

“ஆ கரெக்ட்! மென் இன் ப்ளாக்ல க்ரிஸ் டக்கர் கூட நடிச்சவரு!’

“நாசமாப் போச்சு. அது க்ரிஸ் டக்கரில்லை. வில் ஸ்மித். கூட நடிச்சவர் ப்ரூஸ் இல்லை. டாம்மி லீ ஜோன்ஸ்”

“சரி வுடுய்யா! பவர்ஸ்டார் படமே தியேட்டர்ல பாத்தாச்சு. நமக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. இதையும் பாப்போம். சொல்லுங்க, இது எந்த மாதிரி படம்”

“யோவ்வ்வ்வ்வ் கிண்டலா? இது அக்மார்க் அட்வென்ச்சர் மூவி”

சத்யம் செரீன் ஸ்க்ரீனில் படம் ஆரம்பிக்க ஒருநிமிடம் முன்னே  போய் அமர்ந்தோம்.

சும்மா சொல்லக் கூடாது. நூறு நிமிடங்கள் பரபரபரபரவென்று ஓடுகிறது படம். என்னைப் போன்ற தீவிர இலக்கிய ரசிகர்களுக்கு எட்டாத பக்கா மசாலாதான் படம் என்றாலும் படத்தின் முக்கால்வாசி சீட்டின் நுனியில் உட்கார்ந்துதான் பார்த்தேன் நான்.

அமெரிக்காவிலிருந்து மகனைக் காக்க ரஷ்யா பயணப்படுகிறார் ப்ரூஸ். அங்கே ஸீஸியம்... ஓ சாரி, வேறேதோவொரு அணுக்கதிர் தொடர்பான ஏதோ ஒன்று அதற்கான அது, இது என வில்லன்களின் பின்னணிச் சதிகள். சிஐஏ ஏஜண்டான ப்ரூஸின் இளரத்த மகன், வில்லன், இன்னொரு வில்லன், காமெடி வில்லன், டான்ஸாடும் வில்லன், இன்னொருவனின் மகள் என்று அரைடஜன் கதாபாத்திரங்கள். உலகில் சுபிக்ஷத்தை நிலைநாட்டும் சாகசங்கள் முடிந்து அப்பாவும் மகனும் அமெரிக்கா திரும்பி சுபமாய் நிறைகிறது படம்.

விஷயம் இதிலில்லை. ஆரம்பக் காட்சிகளில் ப்ரூஸ் ரஷ்யா வந்து இறங்கினதும் நடக்கும் கால்மணிநேர சேஸிங்’தான் நாம் தரும் நூற்று இருபது ரூபாய்க்கு ஜீரண மருந்து. படத்தின் டைரக்டர் கமல் ரசிகராயிருக்கவேணும். அடிப்பொளி என்று அந்த சேஸிங் காட்சியை எடுத்திருக்கிறார். அடுத்த படங்களுக்குத் தன் ரசிகரிடம் பாடம் கற்கலாம் கமல்.

மேலும் படத்தில் குறிப்பிட வேண்டிய விஷயம் ப்ரூஸ் வில்ஸ் பேசும் sarcasa வசனங்கள். தியேட்டர் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. நமக்கு அதில் பாதிதான் புரிந்தது வேறு விஷயம்.

நேரமிருந்தால் ஒரு நல்ல தியேட்டரில் போய் பார்த்து விடுங்கள். நல்ல எண்டெர்டெயினர்.


Mar 2, 2013

பாட்டுக்குப் பூட்டு

இங்கே பெரும்பாலானவர்களுக்குத் தெரிஞ்ச விஷயம், ஒண்ணரை வருஷம் முன்ன ஒரு ஆர்வக் கோளாறுல “பாடுகிறேன்”னு ஒரு தளம் ஆரம்பிச்சேன் நான். 

சொக்கன் 365பா’ன்னு தினம் ஒரு பாசுரம் பத்திப் பேசினப்போ அந்த 365பா’ங்கற டைட்டிலில் மயங்கி நானும் தினம் ஒரு பா’ட்டு பாடுவோம்னு ஆரம்பிச்சது. கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளே எறங்கிட்டோம்னு கொஞ்சம் தாமதமாத்தான் புரிஞ்சுது. ஒரு பாட்டு பாடி, பதிஞ்சு, எடிட் செஞ்சு, வலையேத்தி, ப்ளாக்’ல பகிர குறைந்தது ஒண்ணரை மணிநேரம் தேவைப்பட்டது. இது மூணாந்தரமா பாடிப் பதிஞ்ச பாடல்களுக்கு. அதிசயமா சில நேரம் பாட்டு நல்லா வந்து அமையறாப்போல இருக்கும். கொஞ்சம் ரெண்டாம் தரத்துக்குப் பக்கம்னு வைங்களேன். அதுக்கு இன்னும் ஒரு அரை/ஒரு மணிநேரம் கூட தேவைப்படும். அட, இவ்ளோ நல்லா வந்துருச்சே அதை இன்னும் மெருகேத்தலாம்ங்கற முனைப்புக்கு அந்த எக்ஸ்ட்ரா நேரம் தேவைப்படும்.



கரோக்கிங்கற இசை சேர்ப்போட பாடி வலையேத்தணும்னா இன்னும் மெனக்கெடணும்.

எப்படியோ 245 நாள்கள் 245 பாட்டு வரை பாடி முடிச்சேன். புதுவீடு வந்தப்புறம், ஆபீஸ்ல வேலைநேரமெல்லாம் மாறினப்புறம் தொடர்தல் முடியாமலே போச்சு. சரின்னு பாடி வலையேத்தறதை நிறுத்தினேன். நிறைய ஆனந்தப் பெருமூச்சு தமிழ் வலையுலகத்துல கேட்டுச்சு. இருந்தாலும் நம்ம பாட்டு ப்ளாக் இன்னமும் ஓபனாத்தான் இருந்துச்சு.

இப்போ, போன வாரம் அந்த சைட்டுக்கு மூடுவிழா நடத்திட்டேன். காரணம் ரெண்டு விஷயம்.

காரணம் 1: நான் பாடினதை நானே ரிவைண்ட் பண்ணிப் பாத்தேன். அதுக்கு மேலே ஒண்ணும் கேக்காதீங்க.

காரணம் 2: விஜயன் துரை’ங்கற அன்பர் எழுதின இந்தப் பதிவு: 

கேட்க ...ரசிக்க ..சில வலைப்பூக்கள்


நம்ம சைட்டுக்கு எந்த கேடகரி’ல எடம் ஒதுக்கியிருக்காரு பாருங்க. இதை மட்டும் லலிதா ராம் படிச்சாருன்னா அனகாபுத்தூர் தேடிவந்து என்னைய மிதிப்பாரு.

ஆக, என்ன சொல்ல வர்றேன்னா..... ..... அல்லாரும் சந்தோசமா இருங்க.

பிகு1: தளத்தை மூடும்போது ஆர்வக்கோளாறுல நான் வேறேதோ முயற்சி பண்ண, அதனால அன்பர்கள் சிலருக்கு அந்த பாட்டு சைட்டை விசிட் பண்ணச்சொல்லி அழைப்பு மெயில்கள் போயிருக்கு போல. நிச்சயம் நீங்களே அதை இக்னோர் பண்ணியிருப்பீங்க. பழகின பாவத்துக்கு இக்னோராதவங்க இக்னோரிடுங்கன்னு கேட்டுக்கறேன்.

பிகு2: என் பாட்டுக்கு ட்விட்டர்ல டான்ஸ் ஆடின கொரங்குக் கூட்டத்துக்கும் யார்னா தகவல் சொல்லிடவும். 
Related Posts Plugin for WordPress, Blogger...