Sep 30, 2010

மிச்சமிருந்த இருட்டு...






ஊமையாக நின்றது வெளி
நிச்சலனமென நித்திரை
ஒளியில் ஒளிந்தது
ஒற்றைக் காற்று

பார்வைக்குப் பக்கம்
பக்கமில்லை தூரம்

தகதகக்கவாவெனக் கேட்டு
தத்தி தாவிய தட்டான்
தூரத்து மரமொன்றில்
வெட்டுமொலி மரங்கொத்தி

கேணித்திட்டு போல்
வாளி நிறைய நிலா
கயிற்றுக் கட்டிலாய் மேகம்
மிச்சமிருந்தது இருட்டு...

Sep 29, 2010

எந்திரன் - கலெக்ஷன் எப்பூடி?


ஒரு கனடா நாட்டு பண்பலையின் கணக்கீட்டின்படி எந்திரன் திரைப்படத்தின் முதல் மூன்று நாட்களின் வசூல் இருநூறு கோடியைத் தாண்டுமாம்.


வாயைப் பிளக்காதீங்க..... அது எப்படின்னு பாருங்க....

- மொத்தம் உலக அளவுல எந்திரன் படம் 2250 பிரிண்ட் போகுதாம்.
- ஒரு நாளைக்கு ஒவ்வொரு தியேட்டர்லயும் நாலு ஷோ (மொத மூணு நாள் அஞ்சு ஆறு ஷோ 
  கூட உண்டு)
- ஒரு தியேட்டருக்கு தோராயமா ஐநூறு சீட்.
- முதல் மூணு நாள்ல தோராயமா ஒரு டிக்கெட்டு நூத்தி அம்பது ரூபா.

ஆக... 2250 பிரிண்ட் x 4 ஷோ x 500 சீட் x Rs. 150 = 67,50,00,000 = Rs. 67.5 கோடி ஒரு நாளைக்கு.

Rs. 67.5 கோடி  x 3 நாட்கள்  = ரூ. 202.5 கோடி. 

எப்பூடி.....!!!

தகவல் நன்றி: நண்பர் பிரபாகரன்
.
.
.

Sep 21, 2010

பாஸ் (எ) பாஸ்கரன்


காமெடி என்றால் காமெடி அப்படி ஒரு காமெடி... ஆரம்பத்திலிருந்தே காமெடிதான். திடீரென கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் ஆவது போல ஒரு தோற்றம்... உடனே அடுத்த காமெடி வந்து விடுகிறது. 


திடீரென பரபரப்பாக ரொம்பவே சீரியஸ் ஆவது போல்....அடுத்து முன்னைக்கு நாற்பது மடங்கு அதிகமாக காமெடி. 


அடிக்கடி அடிக்கடி "நண்பேன்டா" "நண்பேன்டா" என வசனங்கள்....


காமெடியாகட்டும் சீரியஸ் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் அது "செவென்-அப்" சிப்புவது போல் சிலிர்க்கிறது.


பாஸ் (எ) பாஸ்கரன்..... நல்ல மொழி ஆளுமை, நகைச்சுவைத் திறன், தேர்ந்த இலக்கிய வாசிப்பு என........


"ஏய் தம்பி....நில்லு நில்லு... பாஸ் (எ) பாஸ்கரன் பத்தி சொல்லுன்னா நீ என்ன இலக்கியம், வாசிப்புன்னு பீலா வுடற...?"


என்னது...அட, நீங்க என்ன பா.எ.பா படத்தைப் பத்தி நான் இங்க எழுதறேன்னு நெனச்சீங்களா? 


ச்சே ச்சே... இல்லீங் சாமி! நம்ம நட்பாஸ் (எ) பாஸ்கரன் ஆதி நாள் தொட்டு சிரத்தையா என் தளத்துல பின்னூட்ட ஊக்கு வெச்சு குத்தற.... ஓவ் ஸாரி...  பின்னூட்ட ஊக்குவிப்புகள் செய்யறதப் பத்தி நான் சொல்லறேன். இப்போ மேல படிங்க...



..... நல்ல மொழி ஆளுமை, நகைச்சுவைத் திறன், தேர்ந்த இலக்கிய வாசிப்பு என........

ஏய்...டுபுக்ஸ்....கொஞ்சம் நிறுத்தறியா...


ஹலோ ஹலோ....சேனல் மாத்தாதீங்க... வர்ற வெள்ளிக்கிழமை சாய்ங்காலமா பாஸ் என்கிற பாஸ்கரன் பாக்கறேன். அதன் பின்னால விமரிசனம். ஓக்கேவா... ?
.
.
.

Sep 17, 2010

உன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)

"அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகறது இப்போ ரொம்ப கஷ்டம். அதுக்குன்னு வடபழனி, திருவல்லிக்கேணியில நாலு லட்சம் பேரு மேன்சன் எடுத்து தங்கி தவம் செஞ்சிட்டு இருக்காங்க. நீ மொதல்ல பாட்டு எழுதற வழி பாரு. இந்த டைரக்டர் ரொம்ப இல்லன்னாலும் கொஞ்சம் பிரபலம். நமக்கு ஒருவகைல வேண்டப்பட்டவரு. நான் சொன்னா ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு. கதவை தட்டிப் பாப்போம்" என என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறான் மணி.

மணி எங்கள் ஊர்க்காரன். என்னைவிட இரண்டு பள்ளி வருடங்கள் பெரியவன். பள்ளி காலத்திலேயே நான் கவிதைகளில் புகுந்து விளையாடுவேன். பின்னர் கல்லூரியில் அது கொஞ்சம் மெருகேறி இன்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்ட அளவிற்கு இன்று எங்கள் ஊரில் நான் பிரபலம்.


சினிமாவில் என் எழுத்து, பாடல் ஒலிக்கவேண்டும் என்று என் சுற்றமும் நட்பும் வேண்டி விரும்பி சென்னையில் சினிமாவில் ஏதோவாக இருக்கும் மணி வசம் என்னை ஒப்படைத்து, கடந்த இரண்டு மாத காலமாக அங்கு இங்கென்று திரிந்து இப்போது இந்த டைரக்டர் வாசற்படியில் காத்திருக்கிறோம்.


"வணக்கம் சார்!"

என்னுடன் அமர்ந்திருந்த எல்லோரும் எழுந்து அவருக்கு மரியாதை சொன்னார்கள். நானும் சம்பிரதாயம் மாற்றும் எண்ணமில்லாது எழுந்து நின்று அவரை வணங்கினேன். எல்லோரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு எங்கள் வணக்கங்களை அறை மூலையிலிருந்த குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு விடுவிடுவென படியேறிச் சென்றார்.  

இங்கு அமர்ந்திருந்த இந்த அரை மணிநேரத்தில் ஐம்பது முறை என்னை மேலும் கீழும் நோட்டமிட்ட அந்த குறுந்தாடிக்காரன், அவர் பின்னே சென்றவனைத் தட்டி அழைத்து, "டைரக்டர் மூடு இன்னைக்கி எப்படி?", எனக் கேட்க உதடு பிதுக்கி, தோள்களைக் குலுக்கி "ஒன்றும் சரியில்லை", என சைகையில் பதில் வந்தது.

என்னை அழைத்து வந்திருந்த மணி, "நீ ஒண்ணும் கவலைப்படாதே", என அவன் பங்கிற்கு தலையசைத்து சைகை செய்தான். இங்கே எல்லாம் சைகை மொழிதான் எனப் புரிந்தது.

மணியிடம் பேசியதில் அவன் இங்கு இருக்கும் பல சினிமா பிரபலங்களுக்கு "பணிவிடைகள்" பல செய்பவன் எனத் தெரிந்தது. யாரிடமும் அவனுக்கு பெரிய மரியாதை இல்லை, இருந்தாலும் எல்லோருக்கும் அவன் தேவை இருந்தது.

மாடியில் இருந்து டைரக்டரின் ஓங்கிய குரலில் ஏதேதோ கெட்ட வார்த்தை வசவுகள் கேட்ட வண்ணம் இருந்தன. எனக்கு சங்கடமாய் இருக்க, குறுந்தாடி அவ்வப்போது நமட்டுச் சிரிப்பு சிரித்தவண்ணம் இருந்தான். "இவங்க எல்லாம் இப்படித்தான்", மீண்டும் சைகை மொழியில் சொல்லிக் கண்ணடித்தான்.

சில மணிநேரக் காத்திருப்பிற்குப் பின் டைரக்டரை சந்திக்க மேலே சென்றோம். சுற்றி மூன்று துணைகள் அமர்ந்திருக்க. தரையோடிருந்த அந்த சின்ன ஸ்டூலில் ரொம்பவும் சாவகாசமாக அமர்ந்திருந்தார் டைரக்டர். 

"மணி உங்களைப் பத்தி போன்ல சொன்னாப்போல. சொல்லுங்க, உங்க லட்சியம் என்ன?"

திடீரென இன்டர்வியு போல என்னை நோக்கி வீசப்பட்ட எதிர்பார்த்திராத கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறினேன்.

"சரி ஒண்ணும் பிரச்னை இல்லை, உங்களுக்கு என்ன ஊரு?", என மணியைப் பார்த்தார்.

"ராஜபாளையம் பக்கம் வாசுதேவநல்லூர் சார்", என்றேன் நான்.

"அட, நம்ம சூர்யா ஊரு. அவரு பழக்கமா உங்களுக்கு?", மீண்டும் மணியைப் பார்த்த கேள்வி. 

"இல்லை சார், பார்த்ததுண்டு பழக்கமில்லை", இது நான்.

"நமக்கு இங்க பழக்கமுண்டு சார்", நமட்டுச் சிரிப்பு சிரித்தான் மணி. மூன்று துணைகளும் ஏதோ புரிந்து விழுந்து விழுந்து சிரித்தன. 

"சரி, நீங்க எழுதின எதாவது கொண்டு வந்திருக்கீங்களா?" எனக் கை நீட்டினார். 

நான் கொடுத்ததைப் பார்த்தவிட்டு அதை பக்கத்திலிருந்த ஒரு துணையிடம் கொடுத்தவாறே, "நல்லா இருக்கு, இருந்தாலும் எனக்கு இது போல தளை தட்டாத கவிதை அவ்வளவு பரிச்சயம் இல்லை. அது இங்க நம்ம சினிமாவுக்குத் தேவையும் இல்லை. அது ஒண்ணும் பிரச்னை இல்லை, நீங்க வர்ற சனிக்கிழமை வடபழனி ராதா ரெகார்டிங்குக்கு வாங்க. யோவ் மணி, அழைச்சிட்டு வந்துடுய்யா", என்றுவிட்டு என்னைப் பார்த்து, "ஒண்ணும் பிரச்னை இல்லை பார்த்துக்கலாம்", உதடு விரித்து நீண்ட புன்னகை செய்து ஒரு வணக்கம் சொல்லி நீங்க இப்போ போகலாம் என்று சைகையால் சொன்னார்.

புறப்படுமுன், "சார், என்னோட லட்சியம் தரமான பாடல்களை தமிழ்ல கொடுக்கணும் சார், ஸ்டீரியோ டைப் பாடல்கள்ல இருந்து தமிழ் சினிமாவை மீட்கணும்", என்றேன். சொன்னது தவறோ என எனக்குத் தோன்றி மறையுமுன்....

"அப்போ நாங்க எல்லாம் தமிழ் சினிமாவை சீரழிக்கறோம், நீங்க வந்து எல்லாத்தையும் மாத்தப் போறீங்களா", ஒரு துணையிடமிருந்து எகத்தாளக் கேள்வி வந்தது.

"டேய்", என்று அந்தத் துணையை முறைத்து, "ஒண்ணும் பிரச்னை இல்லை, இருக்க வேண்டியதுதான். எல்லாரும் அப்படித்தான் வர்றாங்க. உங்களையும் உபயோகிச்சிக்க என்னோட இந்த ஸ்கிரிப்டுல இடம் இருக்கு. சனிக்கிழமை பாக்கலாம்", மீண்டும் உதடு விரித்த புன்னகை வணக்கம்.

பெர்முடாஸ் பனியனில் வந்திருந்தார் டைரக்டர்.

"இங்க பாருங்க தம்பி, சிச்சுவேஷன் இதுதான் இது ஒரு முதலிரவுப் பாட்டு. கொஞ்சம் பெப்பியா ஏதாவது யோசிங்க. மியூசிக் டைரக்டர் இன்னைக்கு வரலை. அவர் அசிஸ்டன்ட் கிட்ட டியூனைக் குடுத்து விட்டிருக்காரு, அவரோட உட்காருங்க", உத்தரவு தந்துவிட்டு உள்ளே மறைந்தார்.

என்னுடன் இரண்டு துணைகள் முகாமிட்டன. அந்த டியூனை புரிந்து கொள்ள எனக்கு மிகச் சிரமமாக இருந்தது. கொஞ்சம் நிறையவே நேரம் பிடித்தது.



"அத்தையின் மகளே மெத்தையில் நிலவே", என ஆரம்பித்து நான்கு வரிகள் எழுதினேன். அங்கங்கே தளை தட்டுகிறதா என சரி பார்த்துக் கொண்டேன். துணைகள் இரண்டும் என்னை கொஞ்சம் விசித்திரமாகப் பார்த்தன. அந்தப் பாடலின் வேகத்திற்கு என் வரிகள் பொருந்தியதாய்த் தெரியவில்லை.

"நல்லா இருக்கு சார் நல்லா இருக்கு, ஆனா இது கொஞ்சம் பெப்பி பாட்டு பாருங்க, நாம கொஞ்சம் வரிகளை இங்க அங்க மாத்தி முயற்சி பண்ணலாமே", ஒன்றாய்ச் சொல்லின டைரக்டர் துணையும், மியூசிக் டைரக்டர் துணையும்.

அத்தைப் பொண்ணு வாடி
மச்சான் என்னை நாடி
மெத்தை அது மேல
வித்தையெல்லாம் தாடீ...

இப்படிப் பாடலின் ஆரம்ப வரிகள் மாறிப்போக, இதை எழுதினது நான்தானா என நான் யோசித்து முடிக்குமுன் மேலும் இலைமறை காய் மறையாக நான் எழுதிய அனைத்தும் உடைத்துச் சொல்லப்பட்டன.

"சார், அங்கங்கே கொஞ்சம் பச்சை பச்சையாய் வருதே..." என நான் இழுக்க...,

"அட அதெல்லாம் யாருப்பா பார்க்கறாங்க, இப்போ எல்லாம் சத்தம் போதும் சார், சந்தம் பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. மொதல் பாட்டு அமைஞ்சி இருக்கு. கொஞ்சம் வளைச்சி நெளிச்சி எழுதுங்க. கொஞ்சம் பேரு வாங்கிட்டா அப்புறம் நீங்க சொல்றதுதான்", என்றது காத்திருந்த அடுத்த துணை.  சரிதான் என நினைத்துக் கொண்டேன்.

இரண்டு நாட்களில் மொத்தப் பாடலும் முடிவானது. மகேந்திரன் என்ற என் பெயர் தமிழ்மதி ஆனது. இரண்டு மாதங்களில் பாடல் வெளிவந்து, அடுத்த இரண்டு வாரங்களில் இந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் எதுவும் நான் எதிர்பாராதது. படம் வெளிவரும் முன்னரே பாடல் எழுதிய என் பேட்டி இரண்டொரு பிரபல பத்திரிக்கைகளில் வந்தும் விட்டது.

ப்படி இப்படி ஒன்றரை வருடங்களை சென்னையில் ஓட்டியாயிற்று. என் பெயருக்குப் பின்னால் இப்போது ஐம்பது பாடல்கள் எழுதிய கவிஞன் என்ற தகுதி ஒட்டிக் கொண்டுள்ளது. தமிழ் சினிமா கூறும் நல்லுலகில் இன்று நானும் ஒரு பெயர் சொல்லும் பாடலாசிரியன். என்னிடமும் இப்போது இரண்டு துணைகள் ஒட்டிக் கொண்டுள்ளன.

டைரக்டர் அழைத்திருந்தார். அவர் அடுத்த படத்திற்கு எல்லாப் பாடல்களும் நானே எழுதுகிறேன்.

அன்று அமர்ந்திருந்த அதே நாற்காலியில் இன்றும் அமர்ந்திருக்கிறேன். அதே குறுந்தாடி இன்று எனக்கு வணக்கம் வைத்தது.

மேலிருந்து குரல் கேட்டது, 

"அப்புறம், சொல்லுங்க உங்க லட்சியம் என்ன?"

"சார், தரமான பாடல்களை தமிழ்ல கொடுக்கணும், ஸ்டீரியோ டைப் பாடல்கள்ல இருந்து தமிழ் சினிமாவை மீட்கணும் சார்"


சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். குறுந்தாடி இப்போது என்னைப் பார்த்து பலமாய்ச் சிரித்தது.

.
.
.

Sep 14, 2010

போனாளே பொன்னுத்தாயி....!!

பதின்மூன்று வயதில் தமிழ்த்திரையில் முதற்பாடல். இசைஞானியின் இசையில், கே.ஜே.யேசுதாசுடன் டூயட் பாடும் வாய்ப்பு. படம் "நீதிக்குத் தண்டனை". படத்திற்கு வசனகர்த்தா கலைஞர் அவர்கள். மீசைக்கவிஞனின் பாடல் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா". எத்தனை பேருக்கு இப்படியொரு பாக்கியம் வாழ்க்கையில் இத்தனை சீக்கிரம் அமையும்?


இருபத்தைந்து வயதிற்குள் தேசிய விருது பெரும் வாய்ப்பு. பாரதிராஜா படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல். இந்தியப் பாடகிகளில் எத்தனைப்பேர் இளம் வயதில் இச்சாதனை புரிந்துள்ளனர்?


எல்லாமே சீக்கிரம்தான் ஸ்வர்ணலதாவுக்கு! மரணமும் கூட அவரை நீண்ட நாள் காத்திருக்க விட்டு வைக்கவில்லை.


பி.சுசிலா அவர்களுக்கு ஒரு எஸ்.ஜானகி போல, அடுத்த தலைமுறையில் கே.எஸ்.சித்ரா அவர்களுக்கு ஸ்வர்ணலதா. ஒரு அற்புதமான வெர்சடைல் பாடகி. தமிழில் ஒரு பாடகிக்கான அத்தனை இலக்கணங்களும் பெற்று நுழைந்த கடைசிப் பாடகி. குரல், உச்சரிப்பு, பாவம் (bhavam) என அத்தனையையும் தமிழில் ஒரேயோருவரிடம் பார்ப்பது மிக அரிது. ஸ்வர்ணலதா Queen of all sorts of music.

"மாலையில் யாரோ" போன்ற மெலடிகளாகட்டும், "முக்காலா முக்காப்லா" போன்ற மேற்கத்திய பாணிப் பாடல்களாகட்டும், ஆர்ப்பாட்டமான "ஆட்டமா தேரோட்டமா" போன்ற பாடல்களாகட்டும் அல்லது உசிலம்பட்டி பெண்குட்டி போன்ற ஐட்டம் நம்பர் பாடல்களாகட்டும் தன் தனி முத்திரையை அவற்றில் பதித்தவர் ஸ்வர்ணலதா.



தேசிய விருது பெற்ற போறாளே பொன்னுத்தாயி பாடலை ஒலிப்பதிவில் ஸ்வர்ணலதா அவர்கள் பாடி முடித்ததும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கதறி அழுதாராம். அத்தனை உருக்கமும் உணர்ச்சிப் பூர்வமும் நிறைந்த பாடல். நம்மிடையே அவர் இப்போது இல்லை என்பதை நம்பக் கடினமாகத்தான் இருக்கிறது.

இவர் பாடினதில் என் பட்டியலில் டாப் 3 - "என்னுள்ளே என்னுள்ளே, எவனோ ஒருவன், என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட" ஆகியவை. இப்படிப்பட்ட பாடல்கள் இனி ஒலிப்பேழைகளில் மாத்திரமே கேட்க சாத்தியம் என்பது தமிழ்த் திரையிசை உலகின் துரதிருஷ்டம்.

ஸ்வர்ணலதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
.
.
.

Sep 12, 2010

facebook - காமெடி கலந்த சோகங்கள்...

கிட்டத்தட்ட What the f..k is farmville என்ற என் முந்தைய பதிவு ஒன்றின் தொடர்ச்சியே இது. கீழே உள்ள இந்தப் படத்தை சற்றே பாருங்கள்.



சமீபத்தில் மறைந்த தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மறைவு குறித்த செய்தியையும் தன் இரங்கலையும் facebook'ல் தெரிவித்திருந்தார் சின்னத்திரை நடிகர் திரு.மோகன்ராம் அவர்கள்.

படத்தில் நான் வட்டமிட்டிருக்கும் பகுதியைப் பாருங்கள். இருபத்தி ஏழு பேர் இதை "லைக்" செய்திருக்கிறார்கள்.

என்னக் கொடுமை சார்!
.
.
.

Sep 10, 2010

புரசையில் சரவணா - தீதும் நன்றும்

சரவணா ஸ்டோரின் புரசை வருகை பற்றி "சூப்பர் சூப்பாராக" நம்ம சூர்யா விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.

சரவணாவின் தொழில் விரிவாக்கம் அவர்களுக்கு நன்மை. வடசென்னை மக்களை தி.நகர் வரை அலைய விடாமல் கொஞ்சம் அருகிலேயே கொள்முதல்களுக்கு அலைய வைப்பது வடசென்னைக்கு நன்மை. தி.நகரின் வழக்கமான திருவிழாக் கூட்டநெரிசலில் கொஞ்சம் குறையவிருப்பது தி.நகருக்கு நன்மை.

புரசை ஜனத்திரள் மீது மேலும் வலுக்கட்டாயத் திணிப்பு நேர்வது முதல் பிரச்னை. போக்குவரத்து போலீசார் பாவம்; போக்குவரத்துச் சிக்கல்கள் புரசைக்கு அடுத்த பிரச்னை. "அங்காடித் தெரு" பார்த்துப் பதறிய உள்ளங்களுக்கு அடுத்த பிரச்னை என்னவெனப் புரியும். மேலும் ஒரு அங்காடி, மேலும் பலப்பல ஜோதிகளும் கனிகளும்.

ஆனால் இங்கே முக்கியப் பிரச்னை என சிலர் பார்ப்பது "மதார்ஷா, ரஞ்சனாஸ், கிருஷ்ணா" என புரசைவாக்கம், டவுட்டன் பகுதிகளில் காலம்காலமாக கோலோச்சிவரும் ஜவுளி சாம்ராஜ்ய பெருந்தலைகளின் வணிகம் பற்றி. இவர்களின் வணிகத்தில் வீழ்ச்சி ஏற்படும் என்பது சிலப்பலரின் ஆரூடம்.

அந்த ஆரூடங்கள் எத்தனை தூரம் உண்மையாக வாய்ப்புள்ளது?

என் பார்வையில் ஒரேயொரு சதவிகிதம் கூட இல்லை. உண்மையில் பார்த்தால் புரசைவாக்கத்தில் இந்த பழைய பெருந்தலைகள் தவிர்த்து சின்னச் சின்ன வணிகர்கள் கூட இனி செழித்து வளர அமோக வாய்ப்பு உள்ளது.

எப்படி என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், ஒரு சின்ன ஒப்பீட்டிற்கு வரும்படி உங்களை அழைக்கிறேன்.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் வருகை (பஜாஜ் அலையன்ஸ், ஐ.என்.ஜி.வைஸ்யா, ஐ.சி.ஐ.சி.ஐ. போன்றோர்) மற்றும் அவர்கள் தந்த கவர்ச்சிகர காப்பீட்டுத் திட்டங்கள் எந்த விதத்தில் எல்.ஐ.சி. செய்து வந்த வணிகத்தை பாதித்தது? 

எந்த விதத்திலும் இல்லை என அடித்துச் சொல்கிறார் எல்.ஐ.சி.யில் பழம் தின்றுக் கொட்டை போட்ட என் தோழர் ஒருவர். உண்மையைச் சொல்லணும்னா மத்த தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் விளம்பரப் பலன்கள் பல நேரங்களில் எங்களை வந்தடைகின்றன என்கிறார் அவர். காப்பீட்டின் தேவையை அவர்கள் எங்களுக்கும் சேர்த்து மக்களுக்கு உணர்த்துகிறார்கள். காப்பீடு என வரும்போது மக்கள் தன்னாலே எங்களைத் தேடி வருகிறார்கள் என்பது அவர் வாதம்.

அதே போலத்தான்! நான் ரஞ்சனாஸ்'ல மட்டும்தான் ரவிக்கைத் துணி எடுப்பேன் என்று இருப்பவர்களை நீங்கள் கையைப் பிடித்து இழுத்தாலும் காரியமாகாது. அட, சரவணாவா? நான் இது வரைக்கும் அங்கே என் காலை வெச்சதே இல்லையப்பா, வைக்கவும் மாட்டேன் என்பவர்களை சரவணா ஸ்டோர்ஸ் கவரப்போவதும் இல்லை.

உண்மையில் தி.நகர் சென்று கொண்டிருந்த வடசென்னை மக்களை சரவணா ஸ்டோர்ஸ் புரசைக்கு வரவழைத்து அங்கிருக்கும் மற்ற வணிகர்களின் வணிகங்களையும் செழிக்கச் செய்யப் போகிறது.

வாழ்க சரவணா ஸ்டோர்ஸ்! வளர்க வடசென்னை!
.
.
.

Sep 7, 2010

ஊட்டி சந்திப்பு

 சிறப்பு விருந்தினர் பக்கம்
சண்முகநாதன்

ஊட்டி இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வாழ்வில் மிகவும் ஒரு அரிதான அனுபவம்,  என்னைப் போன்ற ஒரு கடைநிலை வாசிப்பாளனுக்கு அமைந்தது.

மற்ற நன்றி நவில்தல்களை நான் செலவிடும் முன் என் முதல் நன்றி கிரிக்கு, தன் தளத்தில்
என்னை ஒரு விருந்தினர் பக்கம் எழுத அனுமதித்தமைக்காக.

நான் சண்முகநாதன், கிரியைபோல் நானும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கணக்கியல் துறையில் பணி புரிகிறேன்..


சிறு வயது முதலே புத்தகங்களைப் புரட்டியபடி வளர்ந்த கைகள்தான் என் கைகள், எனினும் இதுதான் நான் எழுதும் முதல் கட்டுரை. எனவே, ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்தருளவும். மேலும், ஊட்டிக் கூட்டத்தில் நான் பெற்ற அனுபவத்தை நான் பெற்றுக் கொண்டது போலவே அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு திறனாய்வோ அல்லது விமரிசனக் கட்டுரையோ அல்ல. என் அனுபவப் பகிர்வு, அவ்வளவே.

ஜெயமோகன் தன் இணையதளத்தில் ஊட்டி இலக்கிய சந்திப்பு பற்றிய அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.  உடனே கலந்து கொள்ள நானும் என் நண்பரும் அனுமதி கோரியிருந்தோம். இரண்டு வாரத்தில் அதற்கான அனுமதி கிடைத்தது.

என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிகழ்வு என்னவென்றால், சந்திப்பிற்கு சில தினங்களுக்கு முன் ஜெயமோகன் அவர்களே ஒரு முறை என்னை
த்  தொலைபேசியில் அழைத்து என் வருகையை உறுதி செய்தார். பெரிய பெரிய கார்ப்பரேட்டுகள் கூடக்  கற்றுக் கொள்ள வேண்டிய எளிமையான பாடம் இது.

ஊட்டிக் கூட்டத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் திரு.அரங்கசாமி அவர்கள்தான் செய்திருந்தார்.

எங்கள் ரயில் பயணச்சீட்டு உறுதி செய்யப்படாததால் பேருந்தில் பயணம் செய்ய வேண்டி வந்தது. எனவே, நாங்கள் சற்று
த்  தாமதமாக சென்று சேர நேர்ந்தது. தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாமல் போன நிகழ்வு.

நாங்கள் உள்நுழைகையில் சிறில் அலெக்ஸ் பேசி முடித்திருந்தார். இந்திய
க்  கோட்பாடுகளைப் பற்றி ஜெயமோகன் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் சென்று அமர்ந்து அந்தக் கூட்டத்துடன் ஒருவழியாக ஐக்கியமான வேளையில் இரண்டு மணியளவிற்கு மதிய உணவு இடைவேளை.

இடைவேளைக்குப் பின் இந்திய சிந்தனை மரபில் நான்கு மையக் கருத்துக்கள் பற்றி ஜெமோ பேசினார்.

விடுதலை
பிரபஞ்சம்
ஊழ்
வாழ்க்கை சூழல்



பின்பு 5 .30 லிருந்து 7 .30 ஒரு நடை பயணம் சென்றோம். 07 .30 க்கு மேல் சங்க இலக்கிய பாடல்கள். விளக்கங்களை ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் இருவரும் அளித்தனர்.

10 மணிக்கு இரவு உணவு. பின்னர் உறக்கம் என முதல் நாள் முடிந்தது.

காலை மறுபடியும் நடைபயணம், பின்பு 9 மணிக்கு
க்  கூட்டம் ஆரம்பித்தது. கம்பராமாயணப்  பாடல்களை நாஞ்சில் நாடன் விளக்கினார். அவர் எப்படி கம்பராமாயணம் கற்றார் என்பது பற்றியும் சிலாகித்துக் கூறினார், மிகவும் சுவாரசியமாக இருந்தது. மதியம் சாப்பாடு வரை கம்பராமாயண பாடல்கள்தான்.

பின்பு வயிற்றுக்கு சற்றே உணவு ஈந்தபின் ஆழ்வார் பாடல்கள். படித்துப் பாடம் சொன்னது ஜடாயு அவர்கள். சிறப்பாக இருந்தது. காதல்தான் உச்சத்தில் இருந்தது. கண்ணனின் ரசிகைகள் வந்திருந்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஆண்டாளின் பாடல்கள்.

அதன் பின் சைவ
ப்  பாடல்கள் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் வராததால் ஜெயமோகனே விளக்கினார். உவமை குறைவாக இருந்தாலும் நன்றாகப்  புரிந்தது. எளிமையாக உச்சத்துக்கு கொண்டு சென்றது.

மாலையில் மழை குறுக்கிட்டதால் நடைபயணம் செல்லவில்லை.

பின்பு செல்வ.புவியரசன் நவீனக் கவிதைகளை விளக்கினார். பாரதி மற்றும் பாரதிதாசன் வழி வந்தவர்கள் கவிதைகளாகவே இருந்தன. கண்ணதாசன் கவிதை மற்றும் லெனின் தங்கப்பா போன்றோர் கவிதைகளை
த்  தவிர மற்றவை, என் பார்வையில்,  சுவாரசியமாக இல்லை.

இப்படி சுமார் 10 மணி நேரம் கவிதை கவிதை என கவிதை மட்டுமே. ஒரே நாளிலேயே நாங்கள் எல்லாம் செந்தமிழிலே பேசத் தொடங்கிவிடுவோம் போலத் தோன்றியது எனக்கு. அவ்வாறு இருந்தது கவிதைகளின் தாக்கம்.

ஜெயமோகன் எதை மனதில் கொண்டு சந்திப்பின்போது "மருந்தடிக்க" அனுமதியில்லை எனச் சொல்லியிருந்தார் என அப்போதுதான் விளங்கியது. நீண்ட நெடிய தமிழ்ப்பாலின் போதையைத் தொடர்ந்து சனிக்கிழமை சீக்கிரமே தூங்கச் சென்றோம்.

ஞாயிற்றுக்கிழமை 2 மணி வரைதான் கூட்டம் என்பதால் காலை 9 மணிக்கே கூட்டம் தொடங்கியது. வந்திருந்த கவிஞர்கள் தங்கள் சொந்தக் கவிதைகளில் வசித்தார்கள்.... மன்னிக்கவும் சொந்தக் கவிதைகளை வாசித்தார்கள். இளங்கோ கிருஷ்ணன், இசை, மோகன், தனசேகரன், மற்றும் முத்தாய்ப்பாக தேவதேவனும் வாசித்தார்.


எல்லா கவிதைகளும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக இளங்கோவின் காஞ்சிரம் மற்றும் மோகனின் பிணவறை காவலன் கவிதைகள் என்னை மற்றும் சபையோர்களையும் மிகவும் கவர்ந்தன.

பின்பு உணவு, முடிந்த பின் போட்டோ செஷன் மற்றும் கை குலுக்கல்கள். அவ்வளவுதான், கிளம்பிவிட்டோம் அங்கிருந்து.

இதுதான் கூட்டத்தின் சாராம்சம். ஆனால் நான் எழுத விழைவது கூட்டத்தை
த்  தவிர்த்து மேலும்....

சந்திப்பு, ஏற்பாடுகள், உபசரிப்பு.

அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள். கவிஞர்கள், பதிப்பகத்தார், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், விவசாயிகள், கணினி துறையைச்  சார்ந்தவர்கள். எல்லோருக்கும் ஒரே வித தங்கும் வசதி, ஒரே மாதிரியான உணவு, உபசரிப்பு. 



எங்கள் பயணச் செலவைத் தவிர வேறேதும் நாங்கள் செலவிடும் அவசியம் ஏற்படவில்லை. இது எல்லாம் அந்தக்  கூட்டத்தை நடத்தியவர்கள் தாங்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றும் கடமையாகச் செய்ததை நான் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும். பொதுவாக இது போன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்வதிலிருந்து ஐம்பது முதல் அறுபது வரையிலான பங்கேற்பாளர்களுக்கு வசதிகளை செய்து தருவதில் உள்ள பொதுவான சவால்கள் நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் தடைகள், தடங்கல்கள் ஏதுமின்றி இந்தச் சந்திப்பு இனிமையாக அரங்கேறியது மிகவும் நெகிழ்ச்சி தரும் விதமாக இருந்தது.



ஜெயமோகன்

இத்தனை விஷயங்களை இவர் எப்படித்தான் பழகினாரோ என எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் இவரால் விளக்கம் சொல்ல இயல்கிறது, குறிப்பாக, கேட்பவர்களுக்குப் புரிவதுபோல.

கூட்டத்திற்கு வெளியில் பழகிய நேரங்களில் மட்டும்தான் அவர் ஜெயமோகன் எனத் தெரிந்தார். மற்றபடி கம்பனையும், ஆழ்வாரையும் , அப்பரையும் மட்டும் தான் நாங்கள் அவருள் கண்டோம். அவரைப் பற்றியோ அல்லது அவர் நூல்களைப்  பற்றியோ அவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மற்றவர்கள் தான் சில மேற்கோள்களைக் காட்டினார்கள்.




அந்தப்  பகுதியிலிருந்த சில சிறுமிகள் அவரைக் காண வந்திருந்தார்கள். அவர்கள் அங்காடித் தெரு ரசிகைகள் போல. தீவிர சினிமா ரசிகர்களின், குறிப்பாக அந்தச் சின்னஞ்சிறுமிகளின் புரிதல் நிலைக்கு ஏற்றவாறு அங்கே ஜெமோ பேசியதைக் கண்டேன். என்னைப் போன்ற ஒரு அடிப்படை இலக்கிய வாசகனா? கவலையில்லை, எனக்கேற்றவாரும் அவரால் பேச முடிகிறது. ஜெமோவின் வாசகர் ஒரு வழக்கறிஞரா? அங்கும் ஒரு வக்கீல் நகைச்சுவையை மேற்கோள் காட்டி அவரால் பேச முடிகிறது.  வியப்பாய்த்தான் இருக்கிறது.


தன்மயனந்தா

இவர்தான் இந்த நாராயண குருகுலத்தின் தற்போதைய நிர்வாகி என்று நினைக்கிறேன். இவர் ஒரு மருத்துவர். பல நாடுகளின் மருத்துவ முறைகள் 
பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். நிறைய மருத்துவத் தகவல்கள் சொன்னார். இவர்தான் எங்களுக்கு காப்பி எல்லாம் கூடப் போட்டுத் தந்தார். இவர் போல் ஒரு எளிமையாவரை நான் பார்த்ததே இல்லை எனலாம். என்னை மிகவும் கவர்ந்தவர். நிறைய பேரை தன் எளிமையால் கூசச் செய்தார்.




நாஞ்சில் நாடன்

இவரின் கம்பராமாயணப் பாடல் விளக்கங்கள்தான் கூட்டத்தின் உச்சம் என்பேன். கம்பராமாயண பாடல்களுக்கு மட்டுமே தனிக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகக் கூறுமளவிற்கு இருந்தது இவரின் கம்பராமாயணப் பிரவாகம். கூட்டத்தைத் தாண்டியும் வெளியில் இவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது.பெரும்பாலும் சிறுதெய்வங்கள் மற்றும் பாரம்பரியங்கள் பற்றியே அதிகமாகப்  பேசினார்.. அதையே அவரிடம் எல்லோரும் கேள்வியாக கேட்டார்கள் என்று நினைக்கிறேன். இவரின் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது.



சுற்றுப்புறம்

அவ்வளவு அழகாக இருந்தது சுற்றுச்சூழல். எங்களுக்கு அந்த இடம் தாண்டி எதைப்பற்றியும் ஞாபகம் வரவிடவில்லை. அலுவலகம் மற்றும் குடும்பத்தை மறந்தது போல இருந்தது.. நாங்கள் தங்கியிருந்த குடிலும் அப்படிதான், மிகவும் ரம்மியமாக இருந்தது. நாங்கள் நன்றாக அனுபவித்தோம் அந்தச் சூழலை என்றுதான் சொல்லவேண்டும்.




இதில் வருந்தத்தக்க விஷயம், நாங்கள் இருமுறைதான் நடைபயணம் செய்ய வாய்ப்பு அமைந்தது. மழையின் குறுக்கீடால் அதற்கு மேல் வாய்ப்பு அமையவில்லை.

கடைசியாக....

தேவதேவன், இளங்கோ கிருஷ்ணன், இசை, மோகன் போன்ற கவிஞர்களோடு பேசவும், பழகவும், பொழுதுகளை கழிக்கவும் வாய்ப்பளித்த ஜெயமோகன் அவர்களுக்கும் மற்றும் அவர் நண்பர்களுக்கும் எனது நன்றியையும் மற்றும் அன்பையும் இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,
சண்முகநாதன்








Sep 6, 2010

ஊட்டி சந்திப்பு......

ஊட்டி சந்திப்பு பற்றிய அறிவிப்பு ஜெயமோகன் தளத்தில் வந்தவுடனேயே சண்முகநாதனிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. "என்ன சார், நான் ரொம்ப ஆவலா ஆர்வமா இருக்கேன், கலந்துக்க இருக்கேன். நீங்க எப்படி?" என்றார்.

நான் இதுவரை எந்த இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொண்டவனில்லை. இந்த முறை கலந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. அகில் வருகை, மடிப்பாக்க மாற்றம், தனிக்குடித்தனக் கொள்முதல்கள் என நாட்கள் பரபரப்பாக இருந்ததால் ஒரு புறம் முடியுமா என யோசனையாய் இருந்தது.

கூட்டம் பற்றின ஏற்பாடுகள், எதிர்பார்ப்புகள் பற்றி ஜெயமோகன் தளத்தில் இரண்டாம் கடிதம் படித்ததும், "சரிதான், இது நமக்கில்லை! கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டு எதற்கு வீணே கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும்", என முடிவு செய்து சண்முகத்திடம், "இல்லைப்பா, நீ போயிட்டு வா" என்றேன்.



தான் சென்று வந்த, கலந்து கொண்ட, பெற்று மகிழ்ந்த அனுபவத்தை விழிகள் விரிய சண்முகம் விவரித்ததும் (தொலைபேசியில்தான்), அடடே மிஸ் பண்ணிட்டோமோ எனத் தோன்றியது. சரி அடுத்த வருஷம் பார்ப்போம் என முடிவு செய்து "ஒரு விருந்தினர் பதிவு நமக்காக எழுதறது", என சண்முகத்திடம் கேட்டுக் கொண்டேன்.

தந்திருக்கிறார்.

அது....நாளை!

Sep 3, 2010

சௌந்தர்யா ரஜினி - சௌந்தர்யா அஸ்வின் ஆனப்போ.....


பதிவுலகில் அயாம்



இத்தொடர்ப் பதிவை எழுத என்னை தினந்தோறும் தொலைபேசியிலும் கடித வாயிலாகவும் தொடர்பு கொண்டு நிர்பந்தித்த தலைவர் கலைஞர் அவர்களுக்கும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் நன்றி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அங்கும் இங்கும் எங்கும்.... "கிரி"

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?



முப்பத்தி சொச்ச வருஷமா அதுதானுங்க என் பெயர். பதிவுக்காக ஒரு பூனைப் பெயரை....அயம் சாரி...புனைப் பெயரை சூட்டிக்கலாம்'னு பாக்கறேன். என்னோட பேர்லயே ஒரு புண்ணியவான் (கிரிப்லாக்.காம்) எழுதறாரு. அவரோட நல்ல பேரை நான் எந்த விதத்துலயும் கெடுத்த மாதிரி ஆகிடக் கூடாது பாருங்க, அட் லீஸ்ட் அதுக்காகவாச்சும்.

கீழ இருக்கறது எல்லாம் என் மனசுல இருக்கற யோசனைப் பெயர்கள். எது சரிவரும்'னு நீங்கதான் சொல்லுங்களேன்!?

"மாதவரம்" கிரி (என்னோட இருவது வருஷ சென்னை வாசம் அங்கதான், மாதவரம்  என் அடையாளம்)

கிரி கிருஷ்ணா (கிருஷ்ணகிரி நான் பிறந்த ஊரு)

"சங்கமம்" கிரி (சங்கமம் நான் சார்ந்த இசைக் குழுவோட பேரு)

"அகில்" கிரி (அகில் என் பையன் பேரு)


3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


அட, நான் ருச்தாவ் பஸ்தூகி, யாகிவ் சோரதேன் போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் மாகிவ் சிம்மசோ, பாலமு யாதினே ஆகிய இத்தாலிய எழுத்தாளர்களை இரண்டு ஜென்மங்களாகப் படித்து வளர்ந்தவன். முதல் ஜென்மத்தில் இருபது வருடங்களும், இரண்டாம் ஜென்மத்தில் பதினைந்துமாக ஆ மொத்தம் முப்பத்தைந்து வருட வாசிப்பு அனுபவம் எனக்கு இருக்கிறது. 

நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.... பே...பெப்பேப்பே...


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?


தமிழ்மணம், தமிழிஷ் என்கிற இன்ட்லி வாழ்க வாழ்க....!!!


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


இல்லைன்னு சொல்லலாகாதுங்க. ஏன்னா ஆம் அப்படின்னு சொல்றதுதான் சரியான பதில். ஆனா இதுவரைக்கும் இல்லைன்னு சொன்னா என்னவாகியிருக்குமோ அதுதானுங்க விளைவா ஆகியிருக்கு. 

இப்போ நான் என்ன சொல்லணும்க? ஆமாவா, இல்லையா? 




6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சம்பாத்தியம்? எதுனா வலைப்பதிவு வழியா ஒரு வழி இருந்தா சொல்லுங்க சாமி.

எங்க ஆபீஸ்ல கூட நெறைய பேரு என்னைப் பார்த்து சொல்றாங்க. அவரு வெப்சைட்டு நடத்தி சம்பாதிக்கறாருன்னு. ஓங்கி அப்பணும் போல இருக்கும். சரி என்ன பண்ண, பழகித் தொலச்சுட்டாங்க.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


ரெண்டுங்க. 

இது ஒண்ணு. 
எப்பவும் பொண்ணுங்களப் பத்தி எழுத ஒன்ணு (http://eppodhumpenn.blogspot.com).

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


ரெண்டுமே உண்டுங்க. 

கோபம் பத்தி இங்க வேணாமுங்க. ஏன்னா, இந்த பதிவுக்கு கீழ கெட்ட வசவு எதுவும் வேணாம்னு பாக்கறேன்.

துளசிதளம் (http://thulasidhalam.blogspot.com/) / Think Loud (http://arvindsdad.blogspot.com) போன்ற தளங்களை பராமரித்து வரும் சீனியர் சிடிசன்களைக் கண்டு கன்னா பின்னாவென்று பொறாமை வரும். 

நட்பாஸ் அவர்களின் வாசிப்புத்திறன் குறித்தும் பொறாமை உண்டு.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..



என் அருமைத் தம்பி ரகுபாஸ்கர் லண்டன்'ல இருந்து லெட்டர் எழுதியிருந்தான். அதுக்கும் முன்னால, பின்னால, நடுவுலன்னு எனக்கு ஊக்க மருந்து திரு.நட்பாஸ் அவர்கள். அவரைப் போல பாராட்டவும் முடியாது, திட்டவும் முடியாது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


புதுசா ஒண்ணுமில்லை சார். எல்லாமே கிட்டத்தட்ட எழுதியாச்சு. அப்படியும் வேணுமின்னா இங்கிட்டு (http://www.sasariri.com/p/blog-page.html) போயி படிச்சிக்கங்க.


கடைசியாக நானே சேர்த்துக் கொண்ட ஒரு கேள்வி.


11) பதிவுலகிற்கு வந்திராவிட்டால் என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்? (என்ன ஒரு கேள்வி?)


உருப்படியாக இன்னும் நான்கைந்து சுஜாதா புத்தகங்களையும், அலை ஓசை  முதலான இதுவரை நான் படிக்காத பத்து இருபது நல்ல புத்தகங்களை படித்திருப்பேன்.




இதைத் தொடர நான் அழைப்பது: ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ரா., நாஞ்சில் நாடன் ஆகியோர் மட்டும்.

Sep 2, 2010

ஒரு கிரிக்கெட் வீரனின் டைரியிலிருந்து...




நேற்று தொலைக்காட்சியில் உள்ளம் கேட்குமே திரைப்படம் பார்க்க நேர்ந்தது.
ஆரம்பக் காட்சியில் ஆர்யா விறுவிறுப்பான ஒரு கிரிக்கெட் மாட்சில் ஆடி 
ஜெயித்துவிட்டு வரகடுப்படிக்கும் அந்த அணிப் பயிற்சியாளன்  "ஈசியா 
ஜெயிக்க வேண்டிய மாட்ச தேவைல்லாம கடைசி பால் வரைக்கும் இழுத்து 
டென்ஷன் பண்ணிட்ட", என கோபப்படுவார்.

என் நினைவலைகள் என்னை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த 
ஒரு கிரிக்கெட் மாட்சிற்கு அழைத்துச் சென்றன.

நான் என் கோச்சிடம் திட்டு வாங்கியது எளிமையாக ஒரு மேட்சை எங்களுக்கு 
சாதகமாக நான் ஜெயிக்க வைத்துக் கொடுத்ததற்காக.

ஜெயிக்க வெச்சதுக்கு திட்டாஎன்னக் கொடுமைன்னு கேட்கறீங்களாஎல்லாம் 
இந்த பாழாப் போன மேட்ச் பிக்சிங்தான் காரணம். சரி வாங்க... மதுரைக்குப் 
போகலாம்...


தொண்ணூறுகளின் மத்தியில்...
 மதுரை.....டி.வி.எஸ்கிரிக்கெட் மைதானம். எங்கள் கல்லூரி அணிக்கும் மதுரையின் அந்தப் பிரபல கார்ப்போரேட் அணிக்கும் இடையேயான அரையிறுதிப் போட்டி ஒன்று. 


அடிக்க வேண்டிய ரன்கள் நான்கு. கடைசி மூன்று பந்துகள் மீதம் இருக்க, கையில் இருந்த விக்கெட்டுகள் இரண்டு. பவுண்டரி லைனில் நின்றிருந்த எங்கள் அணியின் மானேஜரும் பயிற்சியாளருமான  அச்சு சார் பேட்ஸ்மேனைப் பார்த்து ஏதோ சைகை செய்தார். 

ஏதோ கொஞ்சம் நல்லா போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் பழம் போல ஒரு கேட்ச் கொடுத்துவிட்டு பேட்ஸ்மேன் பெவிலியன் திரும்பினான். அடுத்து களம் இறங்க வேண்டியது நான். 

கவுண்டமணி பாணியில் "ஏய்...நான் அப்படி, நான் இப்படி" என்று உதார் விடுவேனே ஒழிய எனக்கு அப்படியொன்றும் கிரிக்கெட் ஆடத் தெரியாது. அணியில் சேர்க்க பதினோராவது நபன் கிடைக்காத நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த நான் எங்கள் கல்லூரி அணியின் பத்தோடு பதினொன்றானவன்.

"பாத்துக்கோடா தம்பி", என அச்சு சார் என்னை நோக்கி ஆரம்பிக்கும்போதே "ஒண்ணும் கவலைப்படாதீங்க சார், ரெண்டு பந்து இருக்குல்ல. ஏதாவது ஒண்ணு மீட் ஆகிடும். பவுண்டரிக்கு அனுப்பிடறேன். பைனல்ஸ்'ல நாமதான் ஆடறோம்", என்றேன்.

"அது இல்லடா தம்பி, பைனல்ஸ் நாம ஆடப்போறது இல்லை. எதிரணிதான் நுழையணும். பாத்துக்கோ", என்றார். 

"என்னது, அப்போ இது என்ன பிக்சிங்'கா?", எனக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது.


மாவட்ட ரீதியான ஆட்டங்கள், மண்டல ரீதியான ஆட்டத் தொடர்கள் என எங்கு வந்தாலும் அந்த கார்ப்பரேட் அணிக்கு அப்படி ஒரு மரியாதை. ஏனென்றால் அவர்கள் ஸ்பான்சர்ஷிப்பில்தான் மதுரை கிரிக்கெட்டே நிமிர்ந்து நின்று கொண்டிருந்த நேரம் அது. எங்கு எந்த ஆட்டம் என்றாலும் இறுதி ஆட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும், அங்கும் ஜெயிக்க வேண்டும். அது மட்டுமல்ல "அசைக்க முடியாத" அணி என்ற பெயருடன் மதுரையை வலம் வர வேண்டும்.

ஓ...!! இதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா?, எனக்கு இப்போதுதான் விளங்கியது.

"சார், என்ன சொல்றீங்க. நான் மாட்ச முடிச்சிட்டு வந்துடறேன். நீங்க கொழப்பாதீங்க"

"நீ சின்ன பையன், உனக்கு ஒண்ணும் புரியாது. நான் சொன்னத மட்டும் செய்யி நீ"

கடுப்புடன் களமிறங்கினேன். எதிரே பந்து வீச வந்தவன் "இந்தக் கால" மலிங்கா போல "அந்தக் காலத்திலேயே" இருந்தான். என்னைப் பார்த்து பூச்சியைப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்தான். "என்னத்துக்கு நீ களம் எறங்கின? எப்படியும் ஆட்டம் எங்களோடது", என்றது அவன் ஏளனப் பார்வை.

வந்ததே கோபம் எனக்கு. அவன் போட்ட அந்த "ஆப் வாலியோ" "ஆப் பாலியோ" ஏதோ ஒன்று.... அதை "ஜெய் ஆஞ்சநேயா" என்று சொல்லி சாத்தினேன் ஒரு சாத்து. விவியன் ரிச்சர்ட்ஸ் கூட அப்படி ஒரு சிக்ஸ் அடித்து நான் பார்த்ததில்லை. நான் அடித்து நானே அதைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். விர்ரென்று பறந்து பறந்து பந்து காணாமலே போனது.

பவுண்டரி லைனில் அச்சு சார் என்ன செய்வது எனப் புரியாமல் "கண்களை விரித்து" என்னை ஒரு வில்லப் பார்வை பார்த்தார். என் அணியின் ஓரிரு சீனியர் ஆட்டக்காரர்கள் "என்னடா பண்ணின?" என அங்கிருந்தே கையுயர்த்திக் கேட்டார்கள். மிச்ச மீதம் இருந்த அனைத்து ஜூனியர் ஆட்டக் காரர்களும் "ஓ"வெனக் கூவிக்கொண்டு வந்து என்னைத் தூக்கிச் சுற்ற ஆரம்பித்தார்கள்.

அந்த ஒயிட் ஆண்டு ஒயிட் அம்பயர், "இப்போ என்ன செய்யலாம், நான் வேணும்னா நோ பால் தந்துரட்டுமா", என எதிரணி கேப்டனிடம் "தத்துபித்திக்" கொண்டிருந்தான்.

ஆகவே அன்பர்களே, இந்த மேட்ச் பிக்சிங் என்பது தெருமுனை கிரிக்கெட் தொடங்கி, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரை அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ளது. ஆங்கில நியூஸ் சேனல் அனைத்தையும் அணைத்து வைத்துவிட்டு வேறு வேலை ஏதேனும் இருந்தால் பாருங்கள்.



Related Posts Plugin for WordPress, Blogger...