Feb 23, 2013

விஷரூப விமர்சக அண்ணேய்ய்ய்ய்ய்




//ஏதாவது ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரியிடம், நம் தாக்குதலில் நூறு ஆப்கானியர்கள் இறந்துவிட்டார்கள் என்று சொன்னதும் வெறும் நூறுதானா என்று எகத்தாளமாகக் கேட்பதையும் காட்டியிருக்கவேண்டும்.

ஒவ்வொருமுறை குண்டு வீசிவிட்டு பாவ மன்னிப்பு கேட்பதில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. பாவம் செய்வதற்கு முன்பாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்ள வழியுண்டா… அப்படி இருந்தால் இன்னும் உற்சாகத்தோடு தாக்க ஏதுவாக இருக்கும் என்று பாதிரியாருடன் ஒயின் அருந்தியபடியே ஒரு அமெரிக்க ராணுவ ஜெனரல் சிரித்துப் பேசி மகிழ்வதாக ஒரு காட்சி எடுத்திருக்கவேண்டும்.//

என்னா சார் ரொம்ப ஷாட்டா கமலுக்குப் படம் எடுக்க சொல்லிட்டீங்! ஐம்பது வருஷ சினிமா அனுபவம் மிக்கவருக்கு ஏத்தாப்ல நீங்க வழக்கமா நெம்ப நீளமா பக்கம் பக்கமா படமெடுக்க சொல்லித் தருவீயளே?

வீ ஆர் அப்செட் யூ நோ? தர்ரோலி டிஸபாய்ய்ண்ட்டட் மிசுட்டர்! டோண்ட் டூ திஸ் மிஸ்டேக் அகைன் ஓகே? வீ நீட் மோர் எண்டர்டெயின்மெண்ட். மனுசனுக்கு ஒடம்பு பூரா சொறிஞ்சி சொறிஞ்சி ஆயின்மெண்ட் பூசற அளவுக்கு உங்கள வுட்டா யாரு எண்டர்டெயின்மெண்ட் தர்றாங்க சொல்லுங்க?

// இஸ்லாமியர்களிடத்திலும் அல்கொய்தாவின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இருந்திருப்பார்களே. அதையும் காட்சிப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா…//

ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கமல் கேரக்டரே ஒரு முஸ்லிம் கேரக்டர்தான்யா. படத்தை பிச்சுப் பிச்சு கொறை கண்டறிய மட்டும் பாப்பீரா? 

//கமல்ஜி ஒரு இந்திய ராணுவ/உளவு வீரர். அல்கொய்தாவுக்கு ஆயுதப் பயிற்சி தரும் போர்வையில் நிஜாம் அகமது காஷ்மீரி//

தம்ப்ரீ..... அது விஸாம் அஹ்மத் கஷ்மீரி.....   ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர். 

//அந்த பாகிஸ்தானியை அடித்து கொல்வார்கள்//

அண்ணை.... உண்மையச் சொல்லுங்கோ.... படம் பாத்தீரா. இல்லை வஹாபு பார்ட்டி மாதிரி அட்ச்சி வுட்ற விமர்சனமா அது? தியேட்டர் காப்பி டிவிடி பிரிண்ட் சரியில்லியா? என்னண்ணே, என்னண்ட சொல்லிருந்தா ப்ரீவ்யூவுக்கே கூட்டிட்டுப் போயிருப்பனே. 

அது அராபியர் ஓய். அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அம்பத்தி சொச்ச நூறு மைல் டிஸ்டன்ஸ் உண்டு.

// (இப்போது அவருக்குப் பெயர் விஸ்வம்)//

தெளிவு. அட்ச்சி வுட்ட விமர்சனம் இது. விஸ் என்று அழைக்கப்படும் விஸ்வநாத், அது எப்பிடிய்யா விஸ்வம் ஆகும்? மாகாதேவன்னு உம்பேரு, அதை மகராஜன்னு சொன்னா பொறுப்பீரா?  (இந்தாளு என்னை மாமல்லன் ஆக்காம வுடமாட்டாரு போல) 


//சுமார் ஒன்றிலிருந்து இரண்டு அடி மட்டுமே உயரம் (ஆழம்) கொண்ட மைக்ரோவேவ் ஓவனை எடுத்துவந்து சுமார் மூன்று அடிக்கு மேல் உயரமாக இருக்கும் அந்த வெடிகுண்டுக்கு மேலாக ஃபாரடே ஷீல்டுபோல் கவிழ்க்கிறார்.//

குக்கர் ஒண்ணரை அடி இருந்தா, ப்ரெஷரை அரெஸ்ட் பண்ற வெயிட்’டும் ஒண்ணரை அடி இருக்கணுமா அண்ணை? ஓ நிம்பள் வீட்டு ப்ரெஷர் குக்கருக்கு வெயிட் (விசில்) அஞ்சு அடி இருக்கும் போல.

//இந்து – முஸ்லீம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் இந்தியனாக ஒருவர் செய்ய வேண்டியது என்ற தெளிவு இருக்கவேண்டாமா? இத்தனைக்கும் நமக்கு மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கிறது.  பிரிட்டிஷார் நம் நாட்டை அடிமைப்படுத்தியபோது இந்துக்களும் முஸ்லீம்களும் தோளோடு தோள் சேர்ந்து நின்று போராடியிருக்கிறார்கள். அதுபற்றி ஒரு படம் கூட நம்மால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.......

......வலிமை மிகுந்த ஒரு எதிரியை எளிய மக்கள் கூட்டம் எதிர்க்கும் போது பின்பற்ற வேண்டிய ஆக்கபூர்வமான போராட்டமுறை எது என உலகுக்கே கற்றுத் தந்தவர்கள் நாம். ஆனால், அதைப் பற்றி ஒரு படம்கூட நம்மால் இதுவரை உருப்படியாக எடுக்கப்பட்டிருக்கவில்லை. நம்முடைய கலையை, வரலாற்றைப் பதிவு செய்வதை விட்டுவிட்டு //

நீங்க வளக்கமா ஒரு கொடூர திரைக்கதை வரைவீங்களே, அதே இஸ்டைல்ல இன்னொண்ணு வரஞ்சி குடுங்க சார். கமல் சாருக்கு நான் ரெகமெண்ட் பண்ணி, ஆனது ஆவட்டும் எத்தனை கோடி செலவானாலும் எடுத்துப்புடுவம்.

//இன்றைய நிலையில் ஓர் இந்தியக் கலைஞன்  செய்ய வேண்டிய காரியம்//

எப்ப ஓய் நீர் கமலை கலைஞன்னு ஒப்புத்துக்கிட்டீர்? ஏன் ஓய் இந்தத் தடுமாத்தம்? உம்ம ரூட்லருந்து கீழ எறங்கி அடையாளம் தொலைக்காதீர் ஓய். இப்போ கலைஞன்’னு சொல்வீர், அடுத்து எதான பாராட்டுவீர், பெறகு ரசிகர் ஆவீர். வேணாம் ஓய்..... எங்களுக்குன்னு கெடைச்ச ஒரே பவர்ஸ்டார் ரெவியூவர் நீர்தான். உம்மையும் நாங்க எழக்கத் தயாரில்லை.

//கமல் படம் எடுக்கக் கற்றுக் கொண்டுவிட்டிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், நல்ல படம் எடுக்க எப்போது கற்றுக் கொள்வார்?//

பார்றா.... நான் சொல்லல்லை.... விஸ்வரூப ட்ரான்ஸ்ஃபார்மேஷன் எஃபெக்டு நம்ம அண்ணைக்கும் ஒட்டிக்கிச்சி. ப்ளீஸ் அண்ணே! வேண்டாம் ப்ளீஸ்!

Feb 15, 2013

அரசியல்ல இதெல்லாம்....

தண்டையார்பேட்டை ரோடு நுழையுமிடத்தில் மூலக்கடை மாசமொருமுறை அல்லோலகல்லோலப்படும். ஏதேனும் கட்சிக்காரக் கூட்டம் ஒன்று அங்கே நடக்கும். பொதுசனங்கள் சனநாயகத்தை நொந்துகொண்டு மாற்றுப் பாதையில் செல்லவேணும்.

கழகங்களுக்குத்தான் மூலக்கடை. தோழர்கள் தபால்பெட்டி பஸ் ஸ்டாப் தாண்ட மாட்டார்கள். ஒருத்தர் மைக் பிடிக்க நாலு பேர் வினைல் நாற்காலியில் அமர்ந்திருந்தால் ரோட்டில் நடப்போரும், பஸ் ஸ்டாப் கடக்கும் பஸ்சிலிருந்து அந்த க்‌ஷணம் எட்டிப் பார்ப்போரும்தான் தோழர்தம் பேச்சைக் கேட்பவர்கள்.



மூலக்கடையில் ஆளுங்கட்சிக்காரரோ அல்லது எதிர்க்கட்சியோ,  அம்மையோ அப்பனோ யார் எந்த நாற்காலியில் இருக்கிறார் எனப் பார்த்து இதமாகவோ அல்லது வரட்-வரட் என்றோ சொறிந்து விடும் கூட்டமாய் இருக்கும் அது.

தோழர்களுக்குத் தெரியாதவொரு உத்தி கழகங்களுக்குத் தெரியும். பேச்சு எட்டுமணிக்குத் தொடங்கும் என்றால் ஆறரை மணிக்கு ரெகார்ட் டேன்ஸ் போட்டுவிடுவது. ”கட்டிப்புடி கட்டிப்புடிட்ட” ரக ரெகார்ட் டேன்ஸுக்கு ஒதுங்கும் நூற்று சொச்சத்தில் ஐம்பதாவது இறுதிவரை தேறுமில்லையா?

மூலக்கடையில் அன்று ஷேர்ஆட்டோ பிடிக்க கொடுங்கையூர் ரோடைப் பார்த்து நடந்து போய்க் கொண்டிருந்தபோது அந்த அம்மணியின் ஆக்ரோஷக் குரல் கேட்டது.

“ஏ விருந்தாளிக்குப் பிறந்தவனே!”, எதிர்க்கட்சித் தலைவரின் வாரிசை விளிக்கிறார். 

”?????வளையில் தேங்காய்ப் பொறுக்கிக் கொண்டிருந்த ஏ... ???????யே! உனக்கு எங்கிருந்து வந்தது இத்தனை சொத்து?”

இத்தனை அநாகரிகமாகவா பேசுவர்?

“விருந்தாளிக்குப் பிறந்தவனே! விருந்தாளிக்குப் பிறந்தவனே! ”, என்று மூச்சுக்கு மூன்று முறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

என்னவொரு சுவாரசியம்! இன்னும் எவ்வளவு தூரம் போகிறார் பார்க்கலாம் அங்கேயே நின்றுவிட்டேன்.

“இந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்காரே அவர் ஒரு நெடுமுடிக் கிள்ளிப் பரம்பரையைச் சேர்ந்தவர் தெரியுமா உங்களுக்கெல்லாம்?”

எதிரிலிருந்த மக்கள் நிசப்தத்தில் உறைந்தனர். என்னாடா சொல்லுது இந்தம்மா?

”நெடுமுடிக் கிள்ளீ’ன்னா புரியுதில்ல?”

நிசப்தம்

“நெடு’ன்னா என்ன?”

நிசப்தம்

“நெடு’ன்னா என்னா?”

நிசப்தம்

“நெடு’ன்னா பெரிய’ன்னு அர்த்தம்”

“கிள்ளி’ன்னா?”

நிசப்தம்

“கிள்ளி’ன்னா புடுங்கி’ன்னு அர்த்தம்”

கூட்டத்திற்கு ஏதோ புரிந்து சிரிப்பலை தொடங்கியது.

“முடி’ன்னா என்னான்னு நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்ல”

ஆரவாரக் கூச்சல்.

பேச்சு நாகரிகத்தை இப்படிப் பேசிப்பேசி வளர்த்து விட்டவர்களுக்கு எழுத்து நாகரிகத்தை இன்று அதன்பாணியில் கோடி காட்டியிருக்கிறது பாரம்பரியப் பத்திரிக்கை ஒன்று.

சனநாயகம்! வாள்க! 

Feb 10, 2013

விஸ்வரூபம்

விஸ்வரூபம் படம் தமிழகத்தில் வெளிவந்து நான்கு நாள்கள் நிறைந்து விட்டபடியால் நான் எழுதும் விமர்சனம் அரதப்பழசான விஷயத்தை அலசும் காரியம் என்பதை அறிவேன்.

ஆளாளுக்கு படத்தைச் சிலாகித்து, பாராட்டி, சீராட்டி, ஆஹாகரித்து எல்லாம் செய்து முடித்து விட்டிருக்கிறார்கள். சில மேதாவி சுகுமாரர்கள் வழக்கம்போல் படம் நல்லால்லை என்றும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். படத்தை எங்கே குறை சொல்லலாம் என்று மைக்ரோஸ்கோப் கொண்டு செல்லும் மஹாதேவ சுகுமாரர்களும் உண்டு. அவர்கள் திருத்தியெழுதப் போகும் விஸ்வரூபக் கதையை நினைத்தால்தான் பகீர் என்கிறது. 

விஸ்வரூபத்தின் கதையொன்றும் புதிதேயில்லை. ப்ராஜக்ட் ஒன்’னில் ஆப்கனில் தீவிரவாதிகளின் கூடாரத்திற்குள் அவர்களுள் ஒருவனாகப் புகும் இந்திய ஏஜண்ட் கமல், அங்கிருந்து அவர்களின் அமெரிக்க மாஸ்-மர்டர் திட்டம் அறிந்து ப்ராஜக்ட் டூ’வில் அமெரிக்காவில் அம்மாஞ்சி நடன மாஸ்டர் அவதாரமெடுக்கிறார். பின்வரும் காட்சிகளில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் தரத்தகு..... அவர் மனைவிக்கே அவருடைய மறுபுறம் தெரியாது என்பதான வழமையான விஷயங்கள் உண்டு. ஆப்கன் தீவிரவாதத் தலைவனும் அமெரிக்காவில் வந்து சேர டிஷ்யூம் டிஷ்யூம்... டமால் டுமீல்.... விஸ்வரூபம் 2 தொடரும் என்று படம் நிறைகிறது.

படத்தின் விஷயம் கதையில் இல்லை. மேக்கிங் ஆஃப் தி மூவி’தான் ஒட்டு மொத்தப் படமுமே.  தமிழ்த் திரையுலகின் தன்னிகரற்ற இண்டெலெக்ட் தான்தான் என்பதை ஆணித்தரமாக கமல் நிரூபித்திருக்கிறார். நேற்று படம் பார்த்துவிட்டு வந்தவன் இன்னமும் பிரமிப்பு நீங்காமல் இருக்கிறேன். மேக்கிங் ஆஃப் விஸ்வரூபம் பற்றி விமர்சனத்திலெல்லாம் குறிப்பிடுதல் சரிவருமா எனத் தெரியவில்லை. தனிப் பதிவே எழுதலாம். ஆனால் அதற்கு இந்தப் படத்தை இன்னமும் பலமுறைகள் பார்க்கவேண்டிய தேவை இருக்கும்.

இத்தனை பிரம்மாண்டத்தை தொண்ணூற்றைந்து கோடி பட்ஜெட்டில் எடுத்த கமல் ஒரு நல்ல காஸ்ட் மாஸ்டர்தான். கார்பரேட் குருக்கள் பாடம் கற்கலாம்.

படத்தைப் பார்த்த பலர் எக்ஸலண்ட், வொண்டர்ஃபுல், மார்வெலஸ், மஸ்ட் வாட்ச் என்றெல்லாம் புளகாங்கிதப்பட்ட போது கொஞ்சம் பயமாகவே இருந்தது. இத்தனை எதிர்பார்ப்போடு படம் பார்க்கப் போனால் சிலநேரங்களில் அநியாயத்திற்கு ஏமாற்றம் தேறும். ஆனால் விஸ்வரூபம் நம்மை ஏமாற்றவில்லை. அவசியம் தரமானதொரு தியேட்டரில் பார்க்கவேண்டிய படம் விஸ்வரூபம்.

படத்தின் பின்னணி இசை படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ். படத்திற்குத் தக்கவாறு பின்னணி இசைத்து ஃபீல் கூட்டியிருக்கிறார்கள் ச-ஈ-லா. பாடல்களில் அந்த முதல் நடனப்பள்ளிப் பாடல் தவிர்த்து எவையும் தனிப்பாடலாக படத்தில் இல்லை என்பது பெரிய ஆறுதல். அதனால் படம் எங்கேயும் ஜெர்க் அடிக்காமல் அதன் வேகத்தில் செல்கிறது.

வசனங்களில் படம் நெடூக க்ரேஸித்தனமான நுணுக்கமான காமெடிகள் உண்டு.

உம்:
ஏய்.... ம்ம்ம்ம் எல்லா விஷயத்தையும் ஒண்ணு விடாம கக்கு
அய்யய்யே! அதெல்லாம் வேணாங்க, நானே க்ளீனா எல்லாத்தையும் சொல்லிடறேன்.

அப்புறம்..... அப்புறம் ஒளிப்பதிவு, எடிட்டிங், லொகேஷன், நடிகர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் தியேட்டரில் போய் படம் பாருங்கள்.

Feb 2, 2013

கடல்

உன்னாலே உன்னாலே, மங்காத்தா இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

ஆரம்பம் தொட்டு, கடைசி காட்சிக்கு முந்தின காட்சி வரை அங்கங்கே தூவி விட்டாற்போல் சில சுவாரசிய காட்சிகளும், மற்றபடி படம் நெடூக இழுவையாக சீட்டில் உட்கார முடியாதபடி இருக்கும் படங்கள் இரண்டுமே. இறுதியில் “நச்”சென்று இறங்கும் க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வந்தால்.... “அரேரே படம் சூப்பரப்பூ”, என்று நம் மூக்கின் மீது மைக்கை வைக்கும் தொலைக்காட்சி நிருபரிடம் நாம் சொல்லிவிட்டு நடையைக் கட்டலாம். இந்த வரிசையில் சூப்பர்ஸ்டாரின் அருணாசலத்தையும் சேர்த்துக் கொள்வேன் நான்.

”கடல்” க்ளைமாக்ஸுக்கு முந்தின காட்சிவரை ஒரு கச்சிதமான மணிரத்னப் படம். க்ளைமாக்ஸ் காட்சியில் க்ராஃபிக்ஸ் ப்ரம்மாண்டத்திற்கு யோசித்த யோசனையை படத்தை எப்படி முடிக்க வேண்டும் என்ற டிஸ்கஷனில் ”கடல்” படத்தில் பணிபுரிந்த ஜீனியஸ்கள் விவாதித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. 

திரைக்கதையில் இருக்கும் கனெக்டிவிடி ப்ரச்னையும், படத்தில் எந்தக் காட்சியிலும் நம்மால் ஒன்ற முடியாமல் செய்யும் யதார்த்தத்திலிருந்து  ரொம்பவே விலகிய நாடகபாணியில் படம் பயணிப்பதும் அடுத்தது. 

மாற்றான் படத்தில் கே.வி. ஆனந்த் செய்த அதே தவறு இந்தப் படத்தில் மணி செய்ததுவும். வில்லத்தனம் நன்கு செய்யத் தெரிந்த வெயிட்டான நடிகரை படத்தில் சேர்த்தாலே படம் பாஸ்மார்க். அர்ஜூன் போல “எனக்கெல்லாம் வில்லன் வேஷம் செட்டாவாது சார். வுட்றுங்க”, எனச் சொல்பவர்களை வில்லத்தனம் பண்ண வைத்தது படத்தின் பெரிய ப்ரச்னை.

க்ளைமாக்ஸில் அரவிந்த்சாமியும், அர்ஜூனும் படகில் பண்ணும் ஏற்ற இறக்கக் காட்சிகளில் நாம் கீழே இறங்கணுமா, மேலே ஏறணுமா எனப் புரியாமல் பேந்தப் பேந்த விழிக்கிறோம்.

படத்தின் ப்ளஸ் என நிறைய இருக்கிறது. ஒளிப்பதிவு (இது மணி படத்தில் என்று சொதப்பியிருக்கிறது?), ஒளிப்பதிவில் கடல், back water சார்ந்த காட்சிகள் மட்டுமல்லாமல், நிறைய இடங்களில் கேமரா ஆங்கிள் கலக்குகிறது (உம்: அரவிந்த்சாமி மீண்டும் ஊர்வந்து இறங்கும் காட்சி), தென்பாண்டித் தமிழில் ஜெயமோகன் வசனம்-, சில சின்னச் சின்னக் காட்சிகளின் நுணுக்கம்... (உம்: ரத்தக்களரியாக அரவிந்த்சாமி வேனில் நடிக்கும் நடிப்பு, பொன்வண்ணனைக் கீழே சாய்த்துக் கத்தியெடுக்கும் காட்சியில் கவுதம் கார்த்திக்கின் “உஃப் உஃப்” நடிப்பு,  ஏலே கீச்சான், மூங்கில் தோட்டம், அடியே தவிர்த்த பிற பாடல்களை படத்தில் ‘பல்ஜ்’ ஆக்காமல் காட்சிகளினூடே சேர்த்திருப்பது.... 

இப்படிப் படம் நெடூக நிறைய இருந்தாலும் இவை படத்தின் முழுமைக்கு பலம் சேர்க்கவில்லை.

மணிரத்ன, ஜெயமோஹ, ரஹ்மானிய த்வேஷர்களுக்கு ஒண்ணரை டன் லட்டைத் தந்திருக்கிறார் மணி.


Related Posts Plugin for WordPress, Blogger...