Mar 30, 2010

சுறா - பாட்டு இல்லீங்க்ணா புட்டுங்கண்ணா




சுறா - இசை விமரிசனம்!



காலத்தின் கட்டாயம் இந்தப் படப் பாடல்கள் ஹிட்டாகப் போவது உறுதி. கலாநிதி மாறன் & கோ'விடமிருந்து வெளிவரும் எதுவுமே ஹிட் என்பது எழுதாத சட்டமாயிற்றே!


சரி...பாடல்களைப் பற்றி.....








இளைய தளபதி விஜய் 

"தமிழன் வீரத் தமிழன், தலைமை தாங்கும் ஒருவன், நெற்றிக்கண் திறப்பான், துயரம் நேர்ந்த இடத்தில் தோள் கொடுப்பான்... என்று வழக்கம் போல் அண்ணன் புகழ் ஏற்றும் ஒரு பாட்டு...

படத்தில் சரேலென வரப்போகும் ஒரு ரொமாண்டிக் டூயட் - "சிறகடிக்கும் நிலவு". ஏதோ ஒரு பழைய பாடலை நினைவூட்டுகிறது...

"தஞ்சாவூர் ஜில்லாக்காரி, முந்தானைத் தோட்டக்காரி"  (ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ  நா.முத்துக்குமார்?) - இது இன்னொரு டூயட். 

மேலும் ஒரு சுய விளம்பர டூயட்: "நான் நடந்தால் சரவெடி..." -  no comments!

"காக்கைக்கொரு கூடு உண்டு...ஏழைக்கு இங்கே வீடு எங்கே உண்டு" என ஏழை பாழைகளைப் பார்த்து காலாகாலமாய் நம் கதாநாயகர்கள் கிண்டல் செய்துவரும் இன்னொரு பாட்டு "வெற்றிக் கொடி ஏத்து!" (இந்த வகைக் கிண்டல்களை இன்னும் நம் மக்கள் புரிந்து கொள்ளாதது துயரம்) - இந்தப் பாடல் ஓபனிங் பாடலாக இருக்கக் கூடும். பாடலை எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர். ரஜினின்னு எல்லோருக்கும் இப்படி எழுதியாச்சு...நம்ம விஜய்க்கும் எழுதுவோன்னு...???

இன்னும் ஒரு பாட்டு இருக்கு...(வங்க கடல் எல்லை ) அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு கெடைக்கலை. 

மத்தபடி, நீங்க கேளுங்க கேளுங்க....கேட்டுட்டே இருங்க....!! எப்டியோ போங்க!

தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு ஓர் கடிதம்

அன்புள்ள தளபதி அய்யா அவர்களுக்கு,

வரலாற்று சிறப்பு மிக்க பெரம்பூர் மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டதில் பேரானந்தமும் பேருவகையும் கொண்ட லட்சக் கணக்கான வடசென்னை மக்களில் நானும் ஒருவன். பெரம்பூர் மேம்பாலப் பணி முடிந்ததன் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பு ஊரறிந்தது. தங்கள் திருப்பணி மென்மேலும் தொடரவும், கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் என்றும் முன்னிலை வகிக்கவும் வேண்டும் என்பதே என் போன்றோரின் ஆவல்.

சுற்றி வளைக்காது சொல்ல வந்ததை சொல்கிறேன், கடந்த வெள்ளி மற்றும்  சனிக்கிழமைகளில் பெரம்பூர் மேம்பாலம் திறக்க வருகை புரிந்த உங்களையும் கலைஞர் அய்யா அவர்களையும் வரவேற்க வட சென்னையே தயாரானது....தெருக்கள் தோறும் பேனர்கள், வீதிகள் தோறும் வரவேற்பு வளைவுகள்... டவுட்டன் பகுதியிலிருந்து பெரம்பூர் பேருந்து நிலையம் நோக்கி என் பைக்கில் பயணித்தேன்....நான் இந்த இருபது வருடங்களில் கண்டிராத வண்ணம் சாலைகள் செப்பனிடப்பட்டு அத்துணை குண்டு குழிகளும் மறைக்கப் பட்டு, சாலையின் இருமருங்கிலும் நடைமேடைகள் வெள்ளை கருப்பு நிறப்பட்டை அலங்காரங்கள் அணிந்து, நான் பயணிப்பது வடசென்னை சாலை ஒன்றில்தானா  என எனக்கே ஐயம் ஏற்பட்டது. இத்துணை விரைவாக நான் என் இலக்கை வட சென்னையில் அடைந்ததில்லை. ஏன் இந்தப் போலிப் பூச்சு, யாருக்காக, யாரால் அரங்கேற்றப் படுகின்றன இந்த நாடகங்கள்? 

எங்கிருந்து திடீரென முளைத்தது இப்பணியினைச் செய்யச் செலவிடப்பட்ட நிதி? நீங்களிருவரும் வாராது போயிருந்தால், பாலம் திறக்கப் படாதிருந்தால் என்னவாகியிருக்கும் இந்தப் பணம்? இதை மறுபக்கமிருந்து யோசித்தால், தமிழகத்தின் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் இப்படி சாலைகளிட்டு இழைக்க நிதி இருக்கத் தானே செய்கிறது. அது எங்கே எப்படி இறைக்கப்படுகிறது? என் கேள்விகள் ஒருவழிப் பயணம் செய்யும் பதில்களற்ற கேள்விகள் என்பதை  நானறிவேன். 

குறைந்தபட்சம் இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கும் உரிமையை நான் எடுத்துக் கொள்கிறேன்.

1) நாங்கள் நிதமும் பிரயாணம் செய்யும் அனைத்து சாலைகளையும் "டவுட்டன் முதல் பெரம்பூர் மேம்பாலம் வரை" செப்பனிடப்பட்ட சாலையை மாதிரியாகக் கொண்டு எந்த ராணுவ அவசரத்தில் துரித கதியில் இந்தச் சாலை சரி செய்யப் பட்டதோ அதே துரித கதியில் சரி செய்து தாருங்கள்.

2) அல்லது, நாங்கள் பயணிக்கும் அதே வகை சாலையில் செப்பனிடும் வேலையேதும் மேற்கொள்ளாது நீங்களும் என்றும் எப்போதும் பயணம் செய்யுங்கள். நீங்களும் மக்கள் தொண்டர்கள்தான் அல்லவா? நம் பயணங்கள் இனி ஒன்றாய்த் தொடரட்டும். 

அன்புடன்,
கிரி

தொடர்புடைய என் முந்தைய இடுகைகள்:

வட சென்னையும் அதன் சாபக்கேடும்..


Mar 29, 2010

தமிழும் தமிழனும்!

என் சக வலைப்பதிவர் பாஸ்கரின் தளத்தின் சிறப்புப்பதிவர்கள் பக்கத்தில் நான் எழுதிய பதிவு இங்கு உங்கள் பார்வைக்கு!
________________________________________________________________________


(நண்பர் கிரி அண்மைக் காலமாகத்தான் வலையுலகில் தன் ஆக்கங்களை வெளிப்படுத்தத் துவங்கி இருக்கிறார். அவரது ஆண்டாள் என்ற பதிவு, எப்படி எழுத வேண்டும் என்பதற்கு எனக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறது. அதே போல் காணாமல் போன காதல்…: நான் விரும்பிப் படித்த பதிவு. 

உண்மையைச் சொன்னால், நல்ல கற்பனை வளமும் மொழித் திறனும் அமையப் பெற்ற அவரது திறமை  சிறந்த ஒரு கருப்பொருளுக்காகக் காத்திருக்கிறது என்று தோன்றுகிறது. அதற்கான பயிற்சி போல் தற்சமயம்  சில பதிவுகளை செய்துக் கொண்டிருக்கிறார்…

இந்த ஒப்புக்கு சப்பாணி வலைதளத்தில் கொஞ்சம் மென்மையான பதிவைக் கண்டு ரசிக்கும் ஆசையில் அவரிடம் ஒரு சிறப்புப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டேன்:
தந்திருக்கிறார், படித்துப் பாருங்கள்) :-

இடம்: GRT கிராண்ட், தி,நகர்
நிகழ்ச்சி: Indiblogger.in ஏற்பாடு செய்திருந்த “Indi Blogger Meet”
ஒரு கேள்வி பதில் விவாதப் பகுதியில் Zee தமிழ் தொலைக்காட்சியின் திரு.பாலபாரதி அவர்களை நோக்கிய கேள்விகள்:
“Sir, do you think…
“ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்…..எனக்கு ஆங்கிலம் புரியாது, நீங்க உங்க கேள்விகளை தமிழ்ல கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்”
நூற்று ஐம்பது பேர் கூடியிருந்த அந்த அரங்கில் பின் திசையிலிருந்து சில வட இந்திய சலசலப்பு எழுந்து அடங்கியது.
“அதாவது சார், இந்த changes பத்தி நீங்க என்ன சொல்ல வர்றீங்க”, அந்த மாடர்ன் யுவதியிடமிருந்து தடுமாற்றத்துடன் கூடிய தமிழ் வந்து விழுகிறது.
“இல்ல, நீங்க என்ன கேக்கறீங்கன்னு சரியா சொல்லுங்க”
அரங்கின் பின் வரிசைகளிலிருந்து, “changes…. மாற்றங்கள்…. மாற்றங்கள் பற்றி என்ன நினைக்கறீங்க”
“இத பாருங்க, இதையெல்லாம் தமிழ்ப் படுத்தணும்னு இல்லை. பஸ்ஸ பஸ்சுன்னே சொல்லலாம் பேருந்துன்னு சொல்ல அவசியம் இல்லை. ஆட்டோவை ஆட்டோன்னே சொல்லுங்க “தானி”ன்னு சொல்லுங்கன்னு நான் கேட்கலை”
மேலும் பத்துப் பதினைந்து நிமிடங்கள்  தடுமாற்றமுடன் வந்த தமிழ்க் கேள்விகள், தமிழ் பதில்கள் எனச் சென்றது அந்தக் கூட்டம்.
இங்கே கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்த பாலபாரதி அவர்கள் சில விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை,
– அவர் பங்கேற்றது தமிழ் இலக்கியக் கூட்டம் ஏதுமில்லை. தமிழ் வலைப்பதிவர்களுக்கு மட்டுமேயான கூட்டமும் அல்ல, அது “Indibloggers Meet”.
– அங்கே கூடியிருந்த பதிவர்களில் முக்கால் பங்கு ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், இருபது சதம் பேர் தமிழ் அல்லாத பிற மொழி பேசுபவர்கள்.
– கேள்வி கேட்பவர்கள் அவர்களுக்கு இசைவான மொழியில் கேள்வி கேட்க அனுமதிப்பதே சபை நாகரீகம். அனுமதி மறுத்த தருணத்திலேயே தமிழ் பேசத் தெரியதவர்களுக்கான வாய்ப்பை நீங்கள் மறுக்கிறீர்கள்.
நம் மொழியை மட்டும் பேச நமக்கு அனுமதியுண்டு. ஆனால் அது எல்லா இடங்களிலும் செல்லாது. அவ்வாறு செய்தல் நம்  மொழிப் பற்றினை வெளிக்காட்டுவதில்லை. நம் பிடிவாதத்தை மட்டுமே சபைகளில் பதிவு செய்கிறது. மேலும், நம் மொழி சார்ந்தவர்கள் குறித்த ஒரு பொதுக் கருத்தையும் அது விதைக்கிறது.
பாலபாரதி அவர்கள் தன்னை நோக்கி கேட்கப்பட்ட ஆங்கிலக் கேள்விகளையும், தன் தமிழ்ப் பதில்களையும் மொழிபெயர்க்க யாருடைய உதவியையேனும் நாடியிருக்கலாம். தமிழனுக்கு எங்கே போனாலும் எதற்கு “தனி மரியாதை ” கிடைக்கிறது என நினைக்கிறீர்கள், இவர் போன்றவர்களால்தான்…நிச்சயமாக!
ஜெயமோகனின் “நயத்தக்கோர்” என்ற இந்தப் பதிவு இந்த நிகழ்வுடன் நேரிடைத் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும், நாம் செல்லும் இடத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என எளிமையாக விளக்குகிறது.
பாலபாரதி போன்றவர்கள் கருத்தில் கொள்வார்களா?

Mar 25, 2010

இது என் நூறாவது பதிவு!

கடந்த நான்கு மாதங்களில் எழுத்திற்கு இத்தனை இடைவெளி விட்டதில்லை நான்.

அலுவலகத்தில் என்னைத் தொடர்ந்து வாசிப்பவர்கள், "என்ன சார், கவுண்டமணி ஆர்டிகிளுக்குப் பிறகு ஒண்ணும் எழுதலையா?" எனக் கேட்கிறார்கள்.

"ஏதோ ஸ்பெஷலா உங்க நூறாவது போஸ்ட் இருக்கப் போகுது", நண்பர் எஸ்.எம்.எஸ்ஸில் உசுப்பேத்துகிறார்.

தொண்ணூற்றி ஒன்பது இடுகைகள் எழுதிய பின், நான் எழுதப் போகும் நூறாவது இடுகை பற்றி நினைத்தபோதே எனக்கு லேசாய் ஏதோ சாதித்த கர்வம். சரி, ஏதேனும் ரொம்ப ஸ்பெஷலாக எழுதுவோம் என கடந்த ஒரு வார காலமாய் தலையைச் சொறிந்தவாரே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

முதல்முறையாக ஒரு "சிறுகதை"?
கலக்கலாக ஒரு "கவிதை"?
சொந்தக்குரலில் ஒரு "பாடல்"?
புது முயற்சியாக ஒரு "தொடர்கதை"?
ஏதேதோ எழுதுகிறேன், கிழித்துப் போடும் அவசியமின்றி அவை கணினியின் recycle-bin-ற்கு செல்கின்றன.

இடையில் சென்னை வலைப்பதிவர்கள் பங்கேற்ற Indiblogger கூட்டத்தில் "நான் அடுத்து எழுதப் போவது என் செஞ்சுரி போஸ்ட்", என்கிறேன். கூடியிருந்த இருநூறு பேரும் பலத்த கரகோஷம் எழுப்பி என்னை மேலும் முடுக்கி விடுகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சேர்த்துவைத்து இன்று காலையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தன் கிடாரைக் கொண்டு என்னை ஓங்கி ஒரு அடி அடித்தார், ஆனந்த விகடனில் "நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி" எனும் பேட்டியில்.

நான்காம் வகுப்பு படிக்கையில் அப்பா இறந்தது, படிப்பிற்காக இரண்டரை வருடங்கள் உறவினர்கள் வீடுதோறும் ஊர் ஊராக அலைந்து படித்தது, பின்னர் திருநெல்வேலியில் ஆறு வருடங்கள் பள்ளிப்படிப்பு, நெல்லை சேவியர் கல்லூரிப் படிப்பு, சென்னை லயோலாவில் விஸ்காம், பகுதி நேர ரெக்கார்டிங் ஸ்டுடியோ வேலை, பியானோ படிப்பு, சொந்தமாக ஸ்டுடியோ நிறுவியது, "சின்ன பாப்பா பெரிய பாப்பா" தொடருக்கு இசை, சுக்ரன் / டிஷ்யூம் படங்கள் மூலம் திரையில் அறிமுகம் என பன்னிரண்டு பாராக்களில் அவர் பயணம் குறித்து சொல்லியிருக்கிறார்.

விஷயம் அந்த பன்னிரண்டு பாராக்களில் இல்லை, பதிமூன்றாவது பாராவை உங்களுக்காக இங்கே தந்திருக்கிறேன், படித்துப் பாருங்கள்!


"நான் விஜய் ஆண்டனி ஆனது எப்படி?" என்று கேட்டதால், "இப்படித்தான் ஆனேன்" என்று சொல்லவே இவற்றை எல்லாம் ரீ-வைண்ட் செய்தேன். மற்றபடி எதையும் சாதித்துவிட்டதான பெருமிதம் ஒரு சதவிகிதம்கூட என்னிடம் இல்லை. ஒரு 'நாக்க முக்க'வும், ஒரு 'ஆத்திசூடி'யும், ஒரு 'அழகாய் பூக்குதே'வும் போட்டுவிட்டு நான் ஏதோ பெரிய ஆள் என நினைக்கவில்லை. உள்ளத்துக்கும் உலகத்துக்கும் உண்மையாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி!




அவ்வளவே.....! இங்கு முத்தாய்ப்பாய் எழுத எனக்கு ஒன்றுமில்லை. அவரே நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டார்.

Mar 19, 2010

ங்கொக்காமக்கா நான் சாகலை!

தந்தியை விட வேகமானது வதந்தி! இது மொபைல் போன் காலத்திற்கு முன்னால் சொல்லப்பட்ட சொல்.

மொபைல் போன் கையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் நேற்று நம் தமிழர்கள் நடிகர் கவுண்டமணியை sms-ல் கொன்று கொண்டே இருந்தார்கள். நமக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததே, அது உண்மையா, இல்லையா? ஊர்ஜிதம் செய்தபின் இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்ற பக்குவம் இங்கு யாருக்கும் இல்லை.

அவருக்கு ஆன்ஜியோக்ராம் சோதனை நடந்ததாகவும், விரைவில்  பைபாஸ் அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் குணமடைவார், வதந்திகளை நம்பவேண்டாம் என அவர் மகள் சொல்லியிருக்கிறார்.

 
தன் விதவிதமான நகைச்சுவை கதாபாத்திரங்களால் தமிழ்த்திரையுலகை மூன்று தசாப்தங்கள் ஆண்ட, சமீபத்தில் ஜக்குபாய் மூலம் ஒரு நல்ல come-back தந்த அந்தக் காமெடி அரசன் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

Mar 17, 2010

உபயோகம் கொள்(ளை)






டெக்னோ உலகில் உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்?

இணைய மென்பொருள்கள்? - உண்டு
விண்டோஸ் பற்றிய புதுப் புது தகவல்கள்? - இருக்கு
ஆன்லைன் ஆப்லைன் கேமிங் குறித்த தகவல்கள்? - இருக்கு சார்!
போட்டோஷோப் உபயோகிக்க டிப்ஸ்? - தருகிறார்கள்.
ட்விட்டர் / பேஸ்புக் உபயோகக் குறிப்புகள் - நிறைய உண்டு
MAC ./ Linux தகவல்கள்? - படிக்கலாம் அய்யா!
மொபைல் மென்பொருட்கள் பற்றி? - விரிவான தகவல்கள் தரப்படும்

எல்லாம் எங்கேன்னு கேட்கிறீர்களா? makeuseof இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.

இன்னும் வேறு என்ன வேண்டும் உங்களுக்கு...  இணையம், மென்பொருட்கள், கம்பயூட்டர் சம்பந்தப்பட்ட தகவல்கள்?

இணைய தகவல் தொழில்நுட்பத்தில் என்ன புதுசு, டெக்னோ உலகில் சுடச்சுட என்ன செய்தி உலவுகிறது, புதியதாய் என்ன சாப்ட்வேர் அல்லது அப்ளிகேஷன் வந்துள்ளது அதன் மதிப்பு மரியாதை என்ன என அக்குவேறு ஆணிவேராக அலசலாம்.

தினமும் குறைந்தது ஐந்து டெக்னோ இணையதள அறிமுகங்கள் கிடைக்கின்றன. கல்வி சம்பந்தப்பட்ட தளங்கள் குறித்த பரிந்துரைகள் தருகிறார்கள், அப்பாவுக்கு கிரீட்டிங் கார்டு செலக்ட் செய்ய சிறந்த தளங்களைப் பட்டியல் இடுகிறார்கள், சிறப்பாகப் புகைப்படம் எடுக்க டிப்ஸ் தருகிறார்கள், எக்ஸ்செல்லில் கிராப் போடும் முறை குறித்து விரிவாக விளக்குகிறார்கள்....இப்படி பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

இத்தளத்தைத் தொடர்ந்து படித்து வருவதால் சில டெக்னோ புலிகளிடமே சவடால் விடுமளவு நமக்கு அறிவு வளர்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

என் பரிந்துரை: இந்த தளத்தை google reader போன்ற RSS feed reader மூலம் தொடர்ந்து வருதல் நலம்.

இணையதள முகவரி: http://www.makeuseof.com/
RSS இணைப்பு: http://feedproxy.google.com/Makeuseof

Mar 15, 2010

இந்த வார டெக்னோ டிப்ஸ்

WiFi தொழில்நுட்பம் பற்றி......


Courtesy: http://mytamilpeople.blogspot.com


தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.

இந்த Wireless Network - WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. கீழ்கண்ட படம் ஒரு WiFi Network - ஐ விளக்குகிறது,




Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில் Two Way Radio Communication என அழைக்கலாம். இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless Access Point அல்லது Router-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.

இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz - 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;

802.11a - இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM)  என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.

802.11b - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

802.11g - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

802.11n - இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g - ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output
(MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network - க்கு ஒரு பெயர் உண்டு, அதை - SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router - இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel - ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.

மற்றும், நம்முடைய Wireless Router - களை Secure Mode - லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.

WiFi Protected Access - WPA, Wired Equivalency Privacy - WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்.


You may follow the author's (Ravindar) Tech blog in English @ http://technologynewscorner.blogspot.com/

Mar 14, 2010

குறுக்கே ஓர் நேர் வழி!

காட்சி 1:
இடம்: சென்னையின் ஒரு RTO அலுவலகம்.
"சார், என்னோட 4 வீலர் லைசென்ஸ் எக்ஸ்பயர் ஆகிடுச்சி, புதுப்பிக்கணும்"


சிலப்பல வாரங்கள் மற்றும் சிலப்பல கவனிப்புகளுக்குப் பின்:
"நன்றி சார்"


காட்சி 2:
சில வாரங்களுக்குப் பின்...
இடம்: அதே RTO அலுவலகம்.
"சார், என்னோடது கார் லைசென்ஸ். நீங்க மோட்டார் சைக்கிளுக்கு ரெனியு பண்ணி குடுத்திருக்கீங்க".
"அப்படியா", ஒரு வியப்பான பார்வையைத் தொடர்ந்து, "உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமா?"
"நான் கடந்த முப்பது வருஷத்துக்கும் மேலே கார் ஓட்டிட்டு இருக்கேன் சார்".
"ஓ, அப்படியா? ஒரிஜினல் லைசென்ஸ் எங்க எடுத்தீங்க?, ஓகே, கோயமுத்தூர்லயா ? அப்போ அங்க இருந்து ஒரு NOC வாங்கிட்டு வந்துடுங்களேன்".


காட்சி 3:
கோவை RTO அலுவலகம்.
"இதெல்லாம் இங்க வரணும்னே அவசியம் இல்ல சார். இதுல எங்களுக்கு செய்ய ஒண்ணும் இல்லை. நீங்களே அங்க போயி கொஞ்சம் அழுத்தி (!!) சொல்லுங்க, அவங்க சென்னைலயே பண்ணி குடுத்துடுவாங்க".


காட்சி 4:
மீண்டும் அதே சென்னை RTO அலுவலகம்.
"சார் உங்களுக்கு சொன்னா தெரியாதா? நாங்க அப்படியெல்லாம் கண்டமேனிக்கு உங்களுக்கு ரெனியு பண்ண முடியாது சார்"
"சார், என்கிட்டே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் கூட இருக்கு"
"அதுக்கு எங்கள என்னை பண்ண சொல்றீங்க"
(மனசுக்குள்ளாக: "வேற வழியே இல்ல! பிரம்மாஸ்திரத்த உபயோகிக்க வேண்டியதுதான்) "உங்க RTO-வை நான் பார்க்க முடியுமா?"
"என்ன, புகார் குடுக்கப் போறீங்களா?, சரி போங்க, அந்த ரூம்லதான் இருக்காரு.


காட்சி 5:
RTO தலைமை அலுவலர் அறை.
காட்சியமைப்பு: கிட்டத்தட்ட பாட்ஷா படத்தில் கல்லூரி முதல்வரிடம் ரஜினி "உண்மையை" சொல்லும் காட்சியமைப்பு.


"அவங்க என்ன சொல்றாங்களோ அதே  மாதிரி பண்ணிடுங்க சார், இதுல நான் தனிய சொல்ல ஒண்ணும் இல்லை"
"சரி, ஒரு போன் பண்ணிக்கறேன் சார்.... " ஆங், மாமா நான் _____ பேசறேன், _______ RTO ஆபீஸ்ல இருக்கேன், இது மாதிரி அது மாதிரி நெலைமை"
மறுமுனையில், "நம்ம பேர சொன்னீங்களா மாப்பிள்ளை?"
"இல்ல மாமா".
"சொல்லுங்க, அந்த ஆபீசர் நம்ம ஊரு மனுஷன்தான்.பண்ணி குடுத்துடுவாரு"
"சார், RTO சார், நான் நம்ம சட்டப்பேரவை ___________வோட வீட்டு மாப்பிள்ளை"
"என்ன... என்ன சொன்னீங்க....ஒரு நிமிஷம் இருங்க", போனை எடுத்து. "யோவ், அந்த _________ இருக்காரா, வர சொல்லுய்யா.....
....என்னையா, நமக்குத் தேவையா? நாளைக்கு சட்டசபைல நம்ம ஆபீஸ், என் பேரு எல்லாம் உருளும்யா. நேரத்துக்கு என்ன பண்ணணுமோ பண்ணுங்கய்யா!"


நீதி: சந்து பொந்துகளில் புகாமலும், சம்திங் கொடுக்காமலும் நேர் வழியில் செல்ல நீங்கள் நினைத்தால் அது ஜனநாயகத்தைப் பொறுத்தவரை மிகவும் சுற்றுவழிதான்.

Mar 10, 2010

எந்திரன் தகவல்கள்



(இதையும் படிங்க:  எந்திரன் - எளிமையின் திருவுருவம்)


சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு நான் ஏதும் எழுதியதில்லை என நிறைய பேர் குறைப்படுகிறார்கள் (அப்படியா?). அவர்களுக்காக...
இயக்குனர் ஷங்கரின் தளத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன்  (Robot Movie) படம் பற்றிய சமீபத்திய செய்திகள் (Updates).
1) படத்தின் கடைசி ஷெட்யூல் வேலைகள் இன்று தொடங்குகிர்றன.
2)
இன்னமும் ஒரு பாடல் ஒளிப்பதிவிற்காக ஆடியோ வெளியிடும் தேதி தள்ளிப் போகிறது. தேதி இன்னமும் முடிவாகவில்லை.
3) இசைப்புயலுடன் சேர்ந்து ஆஸ்கருக்கு பெருமை சேர்த்த ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஆடியோகிராபி வேலைகளை செய்கிறார்.


4)
கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை நிர்ணயிப்பவை இவை என இயக்குனர் ஷங்கர் பட்டியலிடுகிறார்:

   -
கடைசிப் பாடலின் ஒலி மற்றும் ஒளிப்பதிவு.
   - படத்தின் சில காட்சிகளில் வரப்போகும் 3D காட்சியமைப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள்.
   - பெரும்பாலான Graphic காட்சிகள் முடிந்துவிட்டாலும் சில சிக்கலான CG வேலைகள் மிச்சம் இருக்கின்றன (200 ஷாட்கள்)
   -
எடிட்டிங், பின்னணி இசை
   -
ஹிந்தி மற்றும் தெலுகு மொழிகளில் தமிழில் வெளியாகும் அதே நேரத்தில் வெளியிடும் வண்ணம் டப்பிங் வேலைகள்.
இவை முடிந்துவிட்டால் படம் வெளியாகத் தடையேதுமில்லை.
கடைசியாக...... எந்திரன் இந்த வருடம் வெளிவருமா?
ஆம் என அழுத்திச் சொல்கிறார் ஷங்கர்!





Mar 9, 2010

சிறப்பு ரயில்களின் சிறப்பு


நீங்கள் வழக்கமான பாண்டியன், நீலகிரி என பயணிக்காமல் கடைசி நேர அவசரத்தில் டிக்கெட் கிடைத்தது என சிறப்பு ரயில்களில் பயணம் செய்பவர் என்றால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

வார இறுதிப் பயணமாக எங்கள் அலுவலகக் குழுவை சேர்ந்த இருபது பேர் கோடைக்கானலை சுற்றிவிட்டு நேற்று மாலை சென்னை ரயிலைப் பிடிக்க கொடை ரோடு ரயில் நிலையம் வந்தோம். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக ரயில் நிலையம் வெறிச்சோடி இருந்தது. மருந்திற்கும் ரயில்வே ஊழியர் ஒருவரும் தென்படவில்லை. தண்ணீர் வாங்க வேண்டுமென்றாலும் மெயின் ரோடுக்குச் செல்லவேண்டும், கடைகள் ஒன்றும் உள்ளே இல்லை. ஆறு முப்பது மணிக்கு எங்களுக்காக நாகர்கோவில் சிறப்பு ரயில் வரவேண்டும்.மணி ஆறாகி இருந்தது, 

ஒரு சர்வதேச சுற்றுலாத் தலத்தை, மாநிலத்தின் தலைநகர் மற்றும் நாட்டின் தென்கோடியோடு இணைக்கும் அந்த ரயில் நிலையத்தில் எந்த அறிவிப்புப் பலகையும் இல்லை. எந்த பிளாட்பாரத்தில் வண்டி வரும், சரியான நேரத்திற்கு வருமா, எங்கள் S9, S10 பெட்டிகள் எந்த இடத்தில் வந்து நிற்கும் என்ற கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வ அறிவிப்பு ஏதுமில்லை. கேட்ட கேள்விக்கு டிக்கெட் விற்றுக்கொண்டிருந்த அன்பர், ஸ்டேஷன் மாஸ்டரை பார்க்கச் சொல்லி உள்ளே அனுப்பினார். 

ஸ்டேஷன் மாஸ்டர் அறையை அடையாளம் காண ஒரு பெயர்ப்பலகை இல்லை. திடீரென அங்கு  பிரசன்னமான கொடியசைக்கும் ஊழியர் அங்கு இருந்த அறை ஒன்றின் உள்ளே சென்று வந்து, "டிரெயின் இருபது நிமிஷம் லேட், இப்போதான் மதுரை வரப்போவுது டிரெயின்,  ஸ்பெஷல் டிரெயினுக்கு எல்லாம் எங்களால சரியா சொல்ல முடியாது,  பெட்டி பொசிஷன் மதுரைய தாண்டினாதான் எங்களுக்கு தெரியும்", என்றார்.  
கொஞ்சம் கழித்து அவரிடமே விசாரித்ததில், மதுரையைத் தொடர்பு கொண்டுவிட்டு, "கடைசில நில்லுங்க, அங்கதான் S9, S10 எல்லாம் வரும் என்று உத்தேசமாகச் சொன்னார். எட்டு இளம் பெண்கள், ஐந்து வயதான அம்மாக்கள், ஆறு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை  என சென்றிருந்த எங்களுக்கு ரயில் நிற்கப் போகும் அந்த இரண்டு நிமிடங்களில் எல்லோரும் ஏறிவிடுவோமா  என பதட்டமாக இருந்தது.வண்டி அரைமணித் தாமதத்திகுப் பின் வந்து ஏறக்குறைய அவர் சொன்ன இடத்தினருகே பெட்டிகள் நின்று ஒருவழியாக எல்லோரும் வண்டியேறிப் பெருமூச்சு விட்டோம்.

உங்கள் நன்மைக்கு சில டிப்ஸ்!

1) நீங்கள் ரயிலில் வழக்கமாகப் பயணிப்பவர் இல்லை ரயில் பெட்டிகளைக் கண்டுபிடிப்பது எனக்கு சுலபம் இல்லை என்பவர் எனில், இது போல் சிறப்பு ரயில்களில் பதிவு செய்யாதீர்கள். முக்கிய ரயில்களில் பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள். 

2) கடைசி நேரத்தில் உங்களுக்கு சிறப்பு ரயிலில்தான் டிக்கெட் கிடைத்தது எனில், இது போன்ற வனாந்திர ரயில் நிலையங்களைத் தவிர்த்து அருகில் இருக்கும் சந்திப்புகளில் (Junction) இருந்து பயணம் செய்யுங்கள்.

எங்கள் குழுவில் ஓரளவு விவரப் புலிகள் இருந்ததனால் மற்றவர்களை வழி நடத்த இயன்றது. ரயில்களில் புதியதாய் பயனிப்பவர்களாக இருந்தால்? . 


Mar 5, 2010

ஒலி விளக்கே!??

பழைய மகாபலிபுரம் சாலை என அறியப்பட்ட, தகவல் தொழில்நுட்ப விரைவு வேகச் சாலை எனப்படும், ராஜீவ் காந்தி சாலையாக பெயர் மாற்றம் பெற்ற சாலைக்கு விரைவில் அன்புத் தளபதி சாலை எனப் பெயர் மாற்றம் ஏற்படுமோ எனத் தோன்றுகிறது.

வழி நெடுக டைடல்பார்க் தொடங்கி சோழிங்கநல்லூர் வரை ஒவ்வொரு நூறு மீட்டர் இடைவெளியிலும் நம் துணை முதலமைச்சர் வகை வகையாய் சிரித்தபடி போஸ் கொடுத்த வண்ணம் இருந்தார். எத்தனை கட்-அவுட்டுகள் எத்தனை பேனர்கள். யப்ப்ப்பப்பா! ஒவ்வொரு பேனரிலும் ஒவ்வொரு அடைமொழி. "அன்புத் தளபதியே", "எங்கள் துணை முதல்வரே", "குறிஞ்சி மலரே", "எங்கள் ஆசானே", "இளைய சூரியனே", "இளஞ்சூரியனே", "எங்கள் சூரியனே", "உதய சூரியனே", "எங்கள் ஒலி விளக்கே" (ஒலிக்கும் ஒளிக்கும் வித்தியாசம் தெரியாத இவர்களை என்ன செய்ய?), "பாசத் தலைவனே"...மீதம் எனக்கு மறந்து விட்டது. மு.க.ஸ்டாலின் என்ற அவர் உண்மைப் பெயர் ஒரு இடத்திலாவது இருக்க வேண்டுமே...ஊகூம்....!!

தலைவர்களுக்கு தங்கள் இருப்பை மக்களிடம் காட்டிக் கொள்ள அவசியம் இருக்கிறது, தொண்டர்களை முடுக்கி விட்டு விளம்பரம் அமைக்கச் சொல்கிறார்கள். அவர் தொண்டர்களுக்கோ தங்கள் தலைவனிடம் தங்கள் இருப்பைக் காட்டும் அவசியம் இருக்கிறது, விளம்பரம் அமைக்கிறார்கள். எப்படியோ, பொது மக்களுக்கு அங்கே இங்கே இடைஞ்சலாக இருந்தாலும், இந்த பேனர் நடும் தொழிலை நம்பி இருப்பவர்களுக்கு ஏதோ பிழைப்பு ஓடுகிற்து.

அது சரி.... தளபதி அவர்கள் பிறந்த நாள் கொண்டாடி நான்கு நாட்கள் கடந்த பின்னரும் இந்த தட்டிகள் நீக்கப்பாடாமல் இருப்பதை நம் நகராட்சி மாநகராட்சிகள் கண்டு கொள்ளாதது ஏன்?  இப்போது இருக்கும் சட்டப் படி பேனர்கள் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாதாயிற்றே!

இருங்க இருங்க...."டேய்...இப்படியெல்லாம் கேள்வி கேட்டா சன் நியூஸ் சேனல்-ல உன் அந்தரங்கம் வெளிய வரும்", என ஏதோ குரல் கேட்கிறது.  யப்பா கனவான்களே,  என் நினைவுக்கு தெரிஞ்சி எனக்கு அப்படி ஏதும் அந்தரங்கம் இல்லையே நைனா!!

Related Posts Plugin for WordPress, Blogger...