Oct 15, 2017

ஸாட்நேம் சுப்பி ஸார்

அகிலுக்குப் பள்ளிக்கூடத்தில் கோடை விடுமுறைத் தொடக்கத்திலேயே இந்த ஆண்டுக்கான புத்தகங்கள் தந்துவிட்டார்கள். தமிழ்ப் புத்தகம் மட்டும் அச்சேறி வராததால் பள்ளி தொடங்கியபின் தருவோம் எனப் புத்தகப் பட்டியற்சீட்டில் குறித்துத் தந்தனர்.

பள்ளி துவங்கி இரண்டுநாள் ஆகியிருந்த நேரம் அது. அன்று பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கியதும் உற்சாகமாகத் தன் பையைத் திறந்து புதுப் புத்தகத்தைக் காட்டினான்.

"புக் குடுத்துட்டாங்கப்பா!", சின்னச்சின்ன விஷயங்களுக்கும் உற்சாகத்தின் உச்சிக்குச் செல்ல குழந்தைகளிடம்தான் கற்க வேண்டும்.

"ஆனா வெற்றிக்கு புது புக் தரவேயில்லப்பா", தன் வகுப்புத் தோழனைச் சுட்டினான் அகில்.

நான் என்ன என்று கேட்பேன் என்று உணர்ந்தோ என்னவோ உடனடியாக… "இந்த வருஷத்துல இருந்து ஹிந்தி போட்டுருக்கோம்", என்றார் அவன் அம்மா.

"ஓஹோ...", என்று முடித்துக் கொண்டேன்.

மேலே கேட்டால் "தமிழ் கட்டாயப் பாடமில்லை. இரண்டாம் வகுப்பு வரை படித்த தமிழே வாழ்க்கைக்கும் போதும். என்ன பஸ், ட்ரெய்ன், நேம்போர்டுல்லாம் எழுத்துக் கூட்டிப் படிச்சா போதாதா? ஐந்திலிருந்து ஃப்ரெஞ்ச் சேர்க்க வேண்டும்" என்றெல்லாம்தான் பதில் வரும், சர்வநிச்சயமாய்.

#StopHindiImposition எனும் ஹாஷ்டேகை அவர் முகத்திற்கு முன் நீட்ட முடியாதது வெட்கமாகத்தான் இருக்கிறது.

பிறகு எதுக்குங்க வெற்றிச்செல்வன்'னு அழகா பேரு வெச்சீங்க எனக் கேட்டால், "ஸாட்நேம் சுப்பி ஸார்" பாணியில் "வீட்ல அநிருத்'னுதான் கூப்பிடறோம் சார்", என்ற பதில் கிடைத்திருக்குமோ என்னவோ...!?

Oct 2, 2017

அணியும் பணியும்....

நன்றி: http://www.stage3.in

மனசை முள் கொண்டு கீறினாற்போல ஒரு விஷயம்.

கௌதம் மேனனின் "அச்சம் என்பது மடமையடா" கே.டிவியில் ஓடிக்கொண்டிந்தது. பாடல்களுக்காகவே இந்தப் படத்தை FDFS பார்க்க நினைத்தவன், படம் வெளியானபோது டெக்ஸாஸில் இருந்ததால் அது இயலாமற்போனது. பிறகு வாழ்க்கை பிசிபிசி ஆகி படமே மறந்துவிட்டிருந்தது.

இன்று நான் பார்க்கத் தொடங்கிய போது "ராசாளி" பாடல் பாதியிலிருந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பாடல் முடிந்த இரண்டாவது நிமிடம்  "அவளும் நானும்" பாடல் தொடங்கியது. அவளும் நானும் நிறைந்த அடுத்த நிமிடம் "தள்ளிப் போகாதே" தொடங்குகிறது. தொலைக்காட்சிக்காரர்கள் கத்தரி ஏதும் இடையில் வீசி நடுவில் வரும் காட்சிகளை அவ்வளவு தூரம் வெட்டி வீசவில்லை என நம்புகிறேன்.

அதன் பின் நான் பார்த்த முப்பது நிமிடங்களில் எந்தப் பாடலும் இல்லை. படத்தின் மிச்சப் பாடல்கள் இரண்டும் அதற்கு முன்னதாக அதே போல back to back ஓடினவோ என்னவோ. 

கெளதம் புதுமை இயக்குனர்தான். பாட்டு இல்லாமல் படம் எடுப்பார். ஒட்டுமொத்தப் படத்திலும் இசையே இல்லாமல் (இசையமைப்பாளரும் இல்லாமல்) படம் எடுப்பார். 

அறுபதுகளுக்கு முன் வந்த நம் திரைப்படங்களில் இப்படி back to back பாடல்கள் இருக்கும். ஆனால் அந்தப் படங்களில் மொத்தம் பதினைந்து இருபது பாடல்கள் கொட்டிக் கிடைக்கும். எழுந்தால், நின்றால், நடந்தால், விழுந்தால் பாடல்கள் ஆரம்பித்துவிடும்.  

இந்தப் படத்தில் என்னவோ அப்படி ஏதும் உறுத்தாமல் பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக அழகாகக் கோர்க்கிறார் கௌதம். படத்தின் மொத்தப் பாடல்களையும் படத்தின் முன் பாதியிலேயே முடித்து விட்டு படத்தின் பின் பாதியில் வேகத்தடைகள் ஏதுமின்றி படத்தை ஓட்ட நினைத்திருக்கலாம் கௌதம்.

இங்கே கீழே நான் காப்பி பேஸ்ட் அடித்திருப்பது சென்ற வருடம் ஜூன் மாதம் இப்படப் பாடல்கள் வெளியான புதிதில் நான் பேஸ்புக்கில் எழுதியது. இன்று படம் பார்க்கும்போது மீண்டும் மனசை முள்ளால் கீறினது போல வலித்துக் கொண்டே இருந்தது.

தன் திரைப்படப் பாடல்களுக்கு இத்தனை முக்கியத்துவம் தரும் கௌதம் இந்த "அணியும் பணியும்" விஷயத்தை எப்படி மிஸ் செய்தார் என்பதுதான் இங்கே எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். 

இதை சிலாகித்து மொழி பெயர்ப்பவர்களும் துரிதஸ்கலிதர்களாக "Team and Humility: என்றே முழி பேர்க்கிறார்கள். வலி மிகுகிறது. 


அணியும் பணியும்....


அச்சம் என்பது மடமையடா படத்திற்காக ரஹ்மான் கொடுத்திருக்கும் பாவேந்தரின் “அவளும் நானும்” பாட்டைக் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன் - இன்னும் இல்லையெனில் < https://www.youtube.com/watch?v=g-dWqptsFfE > இந்த இணைப்பில் கேளுங்கள்.
இந்தப் பாடல்தான் நான்கைந்து நாளாக என்னுள் சுழன்று கொண்டிருக்கிறது. என்னைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது.
கடந்த மூன்று நாளாய் தினம் காலை எழுந்ததும் என் facebook ஸ்டேடஸ் இந்தப் பாடலின் இரண்டு வார்த்தைகளில் துவங்கியது. அவை எல்லாம் சிலாகிப்புகள். பாவேந்தரின் வரிகள் குறித்த என் வியப்பும் ஆச்சர்யங்களும். இத்தனைக்கும் மிக எளிய வரிகள்தாம்.
இன்றைய ஆச்சர்யம் இந்தப் பாடலின் இடையே "அணியும் பணிவும்" என்று விஜய் யேசுதாஸ் பாடுவதே. பாடலில் இரண்டு இடங்களிலும் "பணிவும்" என்றே பாடுகிறார் விஜய் யே.
இந்தப் பாடல் ரஹ்மானின் concept என்பதால் உச்சரிப்பு அவர் சொல்லிக் கொடுத்ததாய்த்தான் இருக்கும்?
"நானும் அவளும் அணியும் பணிவும்" என்றால் என்ன அர்த்தம் வரும்?
Team and Humility? Team and Modesty?
"நானும் அவளும் அவையும் துணிவும்" என்ற வரிகளில் பெரிய கார்ப்பரேட் பாடம் உள்ளது என்று இருதினம் முன் ஸ்டேடஸ் போட்டிருந்தேன்.
நானும் அவளும் "அணியும் பணிவும்" என்ற வரிகளில் அதேபோல் இன்றைய கார்ப்பரேட் கலாசாரத்தை அன்றைக்கே புட்டு வைத்தார் பாவேந்தர் எனலாமா ஆன யோசித்தாலும் ஏதோ இடிக்கிறது.
அணி என்பதற்கு அலங்காரம் என்ற பொருளும் இருப்பதால் "எவ்ளோ மேக்கப் போட்டுக்கினு ஜம்முன்னு இருந்தாலும் அடக்கவொடுக்கமா இருக்கணும் கண்ணு" என்ற பொருள் வருகிறதோ என்றும் யோசித்துவிடடேன்.
பாவேந்தர் கவிதைத் தொகுப்பு என்னிடம் இல்லாததால், இணையத்தில் தேடியதில் இரண்டு இடங்களில் "அணியும் பணியும்" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அடடே! இது சரியாக வருகிறதே.
"நானும் அவளும் அணியும் பணியும்" - Team and Work. இதுதான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இது சரியான வரி என்றால் இதை எப்படி சரிபார்க்காமல் பாடலைப் பதிந்து வெளியிட்டிருக்கிறார்கள்? இடையில் ஒருத்தருக்குமா "அணியும் பணிவும்" என்ற வரிகளில் ஏதும் சந்தேகம் வந்திருக்காது?
இசை தந்தவர்? அவரது உதவியாளர்கள்? பாடலுக்கு உழைத்திட்ட இதர இசைக்கலைஞர்கள்? பாடியவர்? படத்தின் இயக்குனர்?
மிகவும் ரசித்துத் தின்று கொண்டிருந்த ஒரு அபார விருந்தின் இடையே பல்லிடுக்கில் சிக்கிய கல்லாய்....!!!
இதனிடையே இந்தப் பாடலுக்கு யூட்யூயில் ஓடும் ஆங்கில வரிகளில் இதனை Anaiyum Panivum என்று குறிப்பிடுகிறார்கள்.
ஆஹ்ஹா....!!

Sep 25, 2017

அரண்மனையும் அண்ணாச்சியும்


குஷ்பு குளித்த குளம் என்று பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றி ஒரு பதிவு எழுதியிருப்பார் ஜெயமோகன்.  


கேட்பாரற்றுக் கிடந்த பேய் உலாத்தும் என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த அந்த அரண்மனையின்பால் சினிமாக்காரர்கள் பார்வை பட்டதும் எப்படி மாறிப்போனது அந்த அரண்மனை என்பதான பதிவு,

இதோ மேலே உள்ள இந்தக் கட்டிடத்தைக் கடந்த பல வருடங்களாக இந்த ஓயெம்மாரில் பார்க்கிறேன். இப்படி வண்ணவொளி விளக்குகள் மின்ன மின்னவெல்லாம் இல்லை. அழுது வடிந்த ஒரு பழைய கட்டிடமாய் இருந்தது, கேட்பாரற்று. உஸ்ஸ் உஸ்ஸ் என்று அழைத்து அவிழ்த்துக் காட்டிடும் மோகினிப் பேய்களெல்லாம் இருந்திருக்குமோ என்னமோ? 

இப்போது ஓவியா திறப்பு விழாவில் கலந்து கொள்ள இன்று சரவணா ஸ்டோர்ஸாக எழுந்து நிற்கிறது. நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு நேர் என்றால் நேர் நேர் எதிரே இந்தக் கட்டிடம்.

காலையில் அலுவலகம் போனதும் மூன்றாம் வரிசையில் இருக்கையில் அமர்ந்திருந்த நண்பன் எழுந்து நின்று கேட்ட முதற்கேள்வி - "என்ன சார்? எத்தனை மணிக்காம்?". 

"போகப் போறியா?", என்ற என்னிடம் ,"போவும்போது கண்டிப்பா சொல்றேன் சார்".

"சொல்லு சொல்லு. மறக்காம சொல்லு. நான் தப்பித்த தவறி கூட அந்தப்பக்கம் வந்துடக் கூடாது பாரு", என்று வேலையில் மூழ்கிப் போனேன்.

மதியம் ஒரு மணிக்கு யதேச்சையாக நினைவு வர, நான் பணிபுரியும் ஆறாம் தளத்தின் சாளரத் திரைகளைத் தூக்கிவிட்டு எட்டிப் பார்த்தால் எதோ ஆரவாரம் நடந்து முடிந்து அடங்கிய கோலத்தில் இருந்தது அந்தப் புதிய கட்டிடம்.

இருக்கைக்குத் திரும்பி வந்து நண்பரிடம், "என்னய்யா போய் வந்தாச்சா?", என்ற கேள்விக்கு நான்கு புகைப்படங்களை எடுத்துக் காட்டினார். "ஜென்ம சாபல்யம் சார்", என்றார்.

இதோ இது இன்னொரு அலுவலகத் தோழி ஒருத்தரின் ஃபேஸ்புக் பதிவு.


அண்ணாச்சி பிரேக் ஈவனை தான் எதிர்பார்த்ததற்கு மிகமிக முன்னதாகவே அடைந்து விடுவார் என்பதில் எனக்குக்  கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

மாலையில் வேலை ஓய்ந்து வெளியே வரும்போது தடதடத்து வந்து நின்ற ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிய எட்டுப் பத்து பேர் சாலையைக் கடக்கும் முன் இந்தப்புறம் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

அந்தா அங்கதாண்டா மேடை போட்டிருந்தாங்க. இந்தா இங்கதாண்டா தலைவி மைக் புடிச்சி நின்னாங்க என்று அவர்களுள் ஒருவன் ஒருத்தன் கூவிக் கொண்டிருந்தான்.

அங்கே நின்றிருந்த காரைச் சுட்டிக்காட்டி இதுதான் ஓவியாவோட ட்ரைவர் ஓட்டினு வந்த காரு என்று சொல்லியிருந்தால் எதிர்க்கேள்வி ஏதும் கேட்காமல் தொட்டுக்க கும்பிட்டுவிட்டு அவர்கள் அனைவரும் அங்கப்பிரதட்சணம் வந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.


Sep 15, 2017

வீழ்வேன் என்று நினைத்தாயோ?




இணையதளங்களில் உங்களுக்கு என்று ஒரு கணக்குத் துவங்கப் போகிறீர்கள் என்றால் உங்கள் பெயருக்கு அடுத்ததாக அங்கே உங்களைப் பற்றிய சுயகுறிப்பு (பயோடேட்டா) ஒன்றை வரையச் சொல்கிறார்கள் எல்லா தளத்தினரும். இந்த சுயகுறிப்புகளை எல்லாம் தேடிப்பிடித்து வாசிப்பது என்பது என் பொழுது போக்குகளுள் ஒன்று, குறிப்பாக டிவிட்டரில்.  குறிப்பாக நம் தமிழ் மக்கள்தம் குறிப்புகள் வாசித்தல் அலாதியிலும் அலாதி அனுபவம்.

"| இளையராஜா ரசிகன் | ரயில் பயணம் | ஜெயகாந்தன் | நா.முத்துக்குமார் | கலைஞர் | பரோட்டா சால்னா |" என்று சிலர் எளிமையாக முடித்துக் கொள்வர்.

பொதுவாக பத்து பேர்களில் ஒருவரேனும் "தன்மானத் தமிழன்" என்று இருப்பார். தெலுகு நமக்கு வாசிக்க வாராது என்பதால் "மானங்கெட்ட தெலுங்கன்" என்று எம் கொல்ட்டி மக்கள் யாரும் தெலுகு ட்வீட்டர்லு உலகில் எழுதிக் கொள்கிறார்களா எனத் தெரிவதில்லை.

"தாறுமாறான தல ரசிகன்", "கொலைவெறி பிடித்த தளபதி ரசிகன்" இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தம் பயோடேட்டாவாகக் கொண்டோர் நிறைய தென்படுவர்.

"விவசாயியின் மகன், VB script எழுதுகிறேன்", "காவிரிப்படுகையில் பிறந்தவன்; காசுக்கு தண்ணீர் விற்கும் உலகில் உழல்கிறேன்" என்ற பொருள் தரும் குறிப்புகள் அங்கங்கே இடரும்.

"வெளிய சிரிக்கிறேன்; உள்ள அழுகறேன்", என்போரை அடிக்கடிப் பார்க்கலாம். < எதுக்கு அழுகணும்? ஃபிரிட்ஜ்ல போயி உக்காரலாமே? >

"ரொம்ப கெட்டவன்", "ரொம்ப ரொம்ப கெட்டவன்", "மோசமானவன்"  "கேவலமானவன்",  என்று பயமுறுத்துவோரும் உண்டு.

இந்த மேற்படி இனத்தவருக்கு டஃப் கொடுக்கும் பெண்ணினம் உண்டு.  "ராட்சசி", "அடங்காதவள்", "திமிர் பிடித்தவள்", "கேடு கெட்டவள்" மற்றும் இன்னபிற.

அச்சுப் பிச்சுப் பெண்கள் என்றோர் இனம் உண்டு.  "அம்மா அப்பாவின் செல்லக்குட்டி", "அப்பாவின் தேவதை", "டெய்ரி மில்க் சாப்டுட்டே இருப்பேன்", "பிங்க் கலர்ன்னா ரொம்ப புடிக்கும்", என்றெல்லாம் போகும்.

இதையெல்லாம் தாண்டினால் தமிழ்ச் சூழலில் தடுக்கி விழுந்தால் நமக்குத் பார்க்கக் கிடைப்பது "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ", என்ற வசனம். இது பாரதியார் எழுதியது என்று நான் சொல்லித் தெரியும் அவசியம் இங்கே யாருக்கும் இல்லை என்று நம்புகிறேன்.

அதென்னவோ நம்மவர்கள் எல்லோருக்கும் அந்த வசனத்தை பாரதி தமக்காகவே எழுதியதாகக் காதில் ஒலிக்கிறது போலும். 

இந்த பாரதியின் வசனத்தை நான் முதன்முதலில் கேட்டது "மகாநதி" திரைப்படத்தில். படத்தின் இடையில் வரும் ஒரு பாடலுக்கு முன்னதாகவும், படம் முடியும் வேளையிலும் கமல்ஹாசன் இந்த வசனத்தை வாசிப்பார். அதற்கு முன் தமிழ் கூறும் நல்லுலகில் பொதுவெளியில் இந்த வசனத்தை நான் எழுத்திலோ ஒலியிலோ பார்த்து / கேட்டதில்லை.

கூகிள் ஆண்டவரிடம் இந்தப் பதத்தைத் தந்து கொஞ்சம் என்னான்னு பாரு நைனா என்றால் இப்படி இமேஜ் இமேஜாகக் கொட்டித் தீர்க்கிறார்.



"நீங்க கொஞ்சம் ஷட்டப் பண்ணுங்க"களுக்கு இடையே "வீழ்வேன் என்று நினைத்தாயோ"க்களுக்கும் டிசர்ட்டுகள் வருவது சந்தோசம் தருகிறதுதான் என்றாலும், நம் மக்களுக்கு இந்த வார்த்தைகளின் அர்த்தம் நிஜமாகவே விளங்கித்தான் இதையெல்லாம் பயோவில் எழுதுவதையும், சட்டையில் பொறித்துக் கொள்வதையும் செய்கிறார்களா என்று எனக்குப் புரியவில்லை.



என் புரிதலில், "உன்னா மேரி யா.மொய்தீன் கடைல மட்டன் பிரியாணி துன்னுட்டு டயபடீஸ் வந்து, அந்து நொந்து வெந்து நட்டுனு போற டம்மி பீஸ் இல்லடா நான். எனக்கு சாவு இல்ல, இந்த ஒலகம் அழிய வரியும் என் கவிதை வாழும்டா என் சிப்ஸு", என்கிறார் பாரதி. இல்லையா?

ஆனால் நம்ம மக்கள் என்னவோ, "ஹாஃப் உள்ள உட்டாலும் ஸ்டெடியா ஸ்டெய்ட்டா நிப்பன் கேட்டியா?", என்ற ரேஞ்சுக்கு இதைப் புரிந்து வைத்திருப்பதாக எனக்குப்படுகிறது.

...இப்பாடலை ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும்என்னுள் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதன்எழுகிறான்உடனே இவ்வுளகில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டக்க வேண்டும் என்றெண்ணம் பீறிட்டெழும்.....
இப்படியும் ஒருத்தர் இந்தப் பாடல் குறித்துச் சொல்கிறார். 

இது ஒரு பக்கம் இருக்க.... ...அலுவலகத்தில் ஹைதராபாத்தில் இருந்து தோழர் ஒருவர் சென்னைக்கு வந்திருக்கிறார். நம்ம பண்ருட்டிக்காரர்தான். ஹைதையில் எட்டு வருடம் ஜாகையை நிறைவு செய்துவிட்டு வந்திருக்கிறார். அதிதீவிர அஜீத் ரசிகர். விவேகம் படம் வெளியான நாள்முதல் தினப்படி பட வசூல் குறித்த செய்தியை அவர் வாசிக்க அதை நாங்கள் கேட்க எனத்தான் எங்கள் காலைச் சிற்றுண்டி துவங்கும்.

நேற்று ட்வீட்டர், வாட்சாப் என்று என்னத்தையோ நான் மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் இடறிய யாரோ ஒருத்தரின் பயோடேட்டா, "நான் வீழ்வேன் என்று நினைப்பாயோ" என்று சொல்ல நம்ம ஹைதை நண்பரிடம், "தம்பி இந்த வீழ்வேன் என்று நினைத்தாயோ" வசனத்தை யார் ஒரிஜினலாச் சொன்னதுன்னு தெரியுமா என்று கேட்டேன்.

"அஜீத் தான் ஜி. பில்லா-டூ  படத்துல சொல்லுவாரே", என்றார்.

Sep 13, 2017

பேலியோ

பாரா'வின் இந்தப் பதிவைப் படித்தேன்.

ரொம்பவும் பயமாக இருக்கிறது.

http://www.writerpara.com/paper/?p=11717

May 30, 2017

திராவிடநாடு


கடந்த பதினைந்து தினங்களில் கிட்டத்தட்ட நான்கு அழைப்புகள் அல்லது எஸ்.எம்.எஸ்.கள் அல்லது வாட்சாப் தகவல்கள் அல்லது ஈமெயில்கள்.

"நான் திரும்பவும் நம்ம கம்பெனியிலேயே சேரணும். அதுக்கு உங்க உதவி வேணும்", இவைதான் அவை நான்கும் பரைந்தவை.

நான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் முன் இப்போது வேலை செய்யும் இதே நிறுவனத்தில் பி.எம்.ஓ. பணியில் இருந்தேன். இல்லையில்லை ப்ரைம் மினிஸ்டர் ஆபீஸ் எல்லாம் இல்லை. இது "ப்ராஜக்ட் மேனேஜ்மேண்ட் ஆபீஸ்". 

அட்மின் வேலை என்று சுருக்கமாகச் சொல்லலாம். அல்லது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் வேலை என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். எவர் என்ன வேலை சொன்னாலும் - காலால் இட்டதைத் தலையாற் செய்து முடிக்கும் எடுபிடி வேலை என்றும் கூப்பிட்டுக் கொள்ளலாம்.

கிட்டத்தட்ட டி.ராஜேந்தர்-தனமான வேலை. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, பாடல்கள், நடனம், தயாரிப்பு, இயக்கம், போஸ்டர் ஓட்டுவது, டிக்கெட் விற்பது என்று எல்லாம் செய்யவல்ல டி.ஆர். போல ஒரு ரோல்.

எம்.ஐ.எஸ்., சீட் அலகேஷன், ப்ரொக்யூர்மென்ட், ஹெட்கவுண்ட்,  பீப்பிள் என்கேஜ்மென்ட், அக்சஸ் மேனேஜ்மென்ட், இன்போஸெக், காண்ட்ராக்ட் மேனேஜ்மென்ட் என்று எதுவென்றாலும் எங்கள் ப்ராஜெக்டில் ப.தி.கொ.போ.   பெரிய தலை முதல், நேற்று வேலைக்குச் சேர்ந்த சிறுசு வரை எல்லோரும் என் மேஜையில் வந்து நிற்பார்கள்.

இதில் எல்லாவற்றிலும் முக்கியச் சேவையாக நான் புரிந்து வந்தது எங்கள் ப்ராஜெக்ட்டிற்கு ஆள் சேர்க்கும் (ரெக்ரூட்மென்ட்) உன்னதப் பணியை. மூன்றாண்டுகளில் சுமார் 400 பேர் எங்கள் ப்ராஜெக்டில் சேர்ந்தார்கள் என்பதுதான் முந்தைய பத்தியில் நான் பெருமையாய்ப் பட்டியலிட்ட எல்லா வேலைகளையும் விட பெரியதாய் நான் சொல்லிக் கொள்ளத்தக்க விஷயம். 

ப்ராஜெக்டில் பணிபுரிபவர்கள் தத்தமது நண்பர்கள், சகோதர சகோதரிகள், உறவினர்களுக்கு வேலை விண்ணப்பிக்க என் உதவியைக் கோருவதும், தகுதி உடையோருக்கு அவ்வப்போது இயன்ற உதவிகள் உரிய நேர்காணல் வழியே நடப்பதுவும் வாடிக்கை. வேலையை விட்டு வெளியே சென்றவர்கள் கம்பெனிக்கே திரும்ப வர நினைக்கும்போது அவர்களுக்குக் கதவைத் தட்டத் தோன்றுகையில் முதலில் நினைவுக்கு வருபவன் பெரும்பாலும் நானே.

இப்போது எங்கள் ப்ராஜக்டிலேயே நான் வேறு வேலைக்குத் தாவி விட்டாலும், இன்னமும் சிலர் வேலை அமர்த்தல் சார்ந்த உதவிகளுக்கு என்னை நாடுவது குறையவில்லை.

அப்படி எனக்கு வந்தவைதான் முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட நான்கு விண்ணப்பங்களும். நால்வரில் ஒருவர் மட்டும் என் அணியில் ( Team ) பணி புரிந்தவர். மற்றோர் அனைவரும் எங்கள் பழைய ப்ராஜெக்டில் இருந்தவர்கள், அல்லது அங்கிருந்து இதர ப்ராஜக்டுகளுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டு அதன் பின்னர் பணியை ராஜினாமா செய்துவிட்டுப் போனவர்கள்.

1) ரொம்ப நாளா ஒரே சம்பளம் ஜி. இன்க்ரிமென்டே போடலை. அதான் கோவத்துல பேப்பர் போட்டுட்டேன்.

2) நான் இப்போ வேலை பார்க்கற இந்த கம்பெனி இடம் பெயர்ந்து மும்பைக்குப் போகுது சார். எல்லாரையும் அங்க வர சொல்றாங்க. அது நமக்கு சரி வராது.

3) இந்த கம்பெனியில சேர்ந்து மூணு வருஷம் ஆச்சு சார். ஒரு ப்ரோமோஷனும் வரலை. அதுதான் அங்கேயே திரும்ப வந்துடலாமான்னு பார்க்கறேன்.

4) எங்க குடும்ப பிசினஸ் பாத்துக்கலாம்னுதான் பேப்பர் போட்டேன். ஆனா இப்போதைக்கு அப்பா மறுபடி வேலைக்குப் போகச் சொல்லறாரு.

இப்போதைக்கு வேலை தேடுவதற்கும், திரும்ப வர நினைப்பதற்கும் இவைதான் அவர்கள் நால்வர் சொல்லும் காரணங்கள். 

ஒரு வேகத்துல பேப்பர் போட்டுட்டேன். எங்க போனாலும் நான் வேலை பார்த்த லைன்ல இப்போ வேகன்ஸியே இல்லை - இது முதலாமவர்.

மார்க்கெட் ரொம்ப டல்லா இருக்கு போல ஜி. வெளியில எங்கயும் வேலைக்கு ஆகலை - இரண்டாமவரும், மூன்றாமவரும்.

நான்காமவர் எதற்காக போனார், என் திரும்ப வருகிறார் என்பதன் உண்மை அவருக்கு மட்டுமே தெரியும்.

இவர்களில் என் அணியை விட்டுப் போனவர் ஒரு அவசர முடிவில் வெளியே போனவர். 

ஒரு ப்ராஜக்ட் கைவிட்டுப் போன நேரத்தில், இரவுநேர வேலையில் இருந்த ஐவரில், நால்வரை வேறு அணிக்கு மாற்ற வேண்டும்; ஒருவரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை வந்தபோது - இவர் நல்ல வேலையாள் என்பதால் இவரைத் தக்கவைத்துக் கொண்டு மற்ற நால்வரை வேற்று அணிக்கு மாற்றினோம். அணி மாறினவர்களுக்கு பகல்நேர வேலை கிடைத்தது. அதிஷ்டம் எனலாம்.

உன் திறமைக்கு அங்கீகாரம்தாம் நாங்கள் உன்னைத் தக்க வைத்தது என்று என்ன சொல்லியும் அன்பர் சமாதானம் அடையாமல் "அவங்களை போலவே எனக்கும் டே ஷிப்ட் வேணும் ஜி" என்றார். எங்களால் தர இயலாத நிலை. வேலையை விட்டுப் போகிறேன் என்றார். சற்று பொறுத்தால், நேரம் பார்த்து ஆவன செய்கிறோம் என்றோம். அவர் கேட்கவில்லை.

இரண்டே மாதத்தில் இங்கே என்றால் இங்கேதான் வேலை வேண்டும் ஐயா என்று அரை டஜன் வாட்ஸாப் தகவல் அனுப்புகிறார் இன்று.

இதில் முதலாமவர் அவர் வீட்டின் ஒரே சம்பாத்தியர், பெண். ஒரு வீம்புக்கு வேலையை விட்டுப் போனவர் இன்று வெளியிலும் வேலை கிடைக்காமல், அவர் கடைசியாக வேலை பார்த்த ப்ராஜக்டிலும் திரும்பச் செல்ல முடியாமல் தவிக்கிறார். இவருக்கு மட்டுமாவது உதவ இயலவேண்டும் என்பதுதான் என் இப்போதைய முனைப்பு எல்லாம்.

தாற்காலிகப் பிரச்னைகள் தரும் அழுத்தத்தில்,  ஏதோ உந்துதலில்,   ஏதோ ஒரு உணர்ச்சிவயத்தில் தாம் இருக்கும் இடம் விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு எல்லாம் என் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்....

...இந்தக் கட்டுரையை மறுபடி ஒருமுறை படித்துவிடுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...