Dec 17, 2012

உசுப்பேற்றலும் உபரி வெளிச்ச அடையாளமும்


உசுப்பேற்றுதல் என்பது ஒரு கலை. இதில் ஹீரோயிசம், தாதாயிசம் என எல்லாவற்றையும் சேர்த்து ஒருவன் உருவகப்படுத்தப்படுகிறான். புகழுக்கு மயங்காதார் உண்டோ! சுற்றி இருக்கும் நாலுபேர் நம்மைப் பற்றி ஜே போட்டுக் கொண்டே இருந்தால் கேட்பதற்கு எப்போதும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அந்த நாலு பேரின் எண்ணம் எல்லாம் பணம் அல்லது புகழாகத்தான் இருக்கும். பொழுதுபோக்காகவும் இருக்கலாம். எத்தனையோ காரணங்கள். அதாவது ஒருவனை மையப்படுத்தி, வெளிச்சத்தில் நிறுத்தி வரும் உபரி வெளிச்சத்தில் தன்னை அடையாளபடுத்திக்கொள்வது அல்லது சம்பாதிப்பது. இத்தகைய சம்பவங்களை நீங்கள் எங்கும் காணலாம். இப்படியான சம்பவத்தின் க்ளைமாக்ஸ் எப்போது ஆன்டி-ஹீரோயிசம் தான். உசுப்பேற்றியவர்கள் ஒதுங்கிக் கொள்ள ஹீரோ அகப்படுவான். இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் அது டேனி.

இல்லாதவர்கள் - ஜெயகாந்தன்



Dec 15, 2012

சிவாஜி - 3டி’யில்

நண்பர்களுடன் சிவாஜி 3டி பார்க்கப் போயிருந்தேன்.



ஒரு தூக்கக்கலக்கம் நிறைந்த மதியப் பொழுதில் நங்கநல்லூர் வேலன் தியேட்டரில் இந்தப் படத்தை முதல்முறை பார்த்ததாலோ என்னவோ ரஜினி படங்களில் சிவாஜியை சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். 

நிறைய பேருக்கு அந்த எம்.ஜி.ஆர் ஸீக்வென்ஸ் ரொம்பவும் விசிலடித்து ஆர்ப்பரிக்குமளவிற்குப் பிடித்திருந்தது. எனக்கு என்னவோ அந்த கதாபாத்திரதாரராக ரஜினி வரும்போது உப்புசப்பில்லாமல் க்ளைமாக்ஸை முடித்துவிடுவதாகத் தோன்றுவதுண்டு. ஷங்கரின் முதல்வன் படத்தின் அசத்தல் க்ளைமாக்ஸை நான் ஷங்கருக்கு பெஞ்ச்மார்க்காக வைத்துக் கொள்வது காரணமாயிருக்கலாம்.

நிற்க, சிவாஜி 3டி’க்குத் திரும்புவோம். படத்தில் 3டி வேலைகள் அசத்தலாகச் செய்திருக்கிறார்கள்.

படம் தொடங்கும்போது சூப்பர்ஸ்டார் ர....ஜி....னி.... என்னும் எழுத்துகள் நம்மை நோக்கி எறியப்படுவதில் தொடங்கி, பாடல்களிடையே வரும் பூத்தூவல்கள் நம் முன்சீட்டின்மீது தூவப்படுவது, பலூன்கள் தியேட்டருக்குள்ளேயே பறப்பதான எஃபெக்ட், எறியப்படும் கத்தி ஒன்று சரேலென்று நம் கண்ணைப் பதம் பார்ப்பதாய் பயமுறுத்துவது என்கிற 3டி எஃபெக்டுகளைவிட நாம் ரசிப்பது படத்தின் ரியாலிட்டி ஃபீலிங்.

அதாவது, படம் நம் கண்ணெதிரேயே நடப்பது போன்ற பிரமையை உருவாக்கும் காட்சி உருவாக்கம். படத்தின் காட்சியில் மனிதர்கள், பொருள்கள், கட்டிடங்கள், மரங்கள், மலைகள் என்று யாரெல்லாம் / என்னென்னவெல்லாம் வருகின்றார்களோ / வருகின்றனவோ.... அவையெல்லாம் நாம் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து படமாக்கப்பட்ட போது எந்த தொலைவில் இருந்தனவோ அதே தொலைவில் இருப்பதாய் நம் கண்களுக்குக் காட்சி தருகின்றன. என்னே ஒரு அறிவியல் முன்னேற்றம் இந்த வகை 3டி உருவாக்கம்!

மறுதிரையிடல்தான் என்றாலும், முன்னமே பார்த்த காட்சிகள்தான் என்றாலும்.... படத்தின் பன்ச் டயலாக் காட்சிகளில் தியேட்டரில் பறக்கும் விசில்களும், ரசிகர்களின் ஆர்ப்பரிப்புகளும் சொல்லிமாளாது. வெள்ளிக்கிழமை மதியக் காட்சிக்கு அரங்கம் நிறைந்து காணப்பட்டது.

3டி அசத்தல் வேலைக்காக ஒரு நல்ல தியேட்டரில் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

Dec 11, 2012

பாரதி வாரம்

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த தினம்.



இந்த வாரம் முழுவதும் ஆம்னிபஸ் தளத்தில் பாரதி குறித்த நூல்களைப் பற்றிப் பேசுகிறோம். இந்த இணைப்பில் பதிவுகளை வாசிக்கலாம்.

இன்று நண்பர் கணேஷ் வெங்கட்ராமன் எழுதியிருக்கும் “பாரதியார் கவிதைகள்’ மீதான அவரது பார்வை பாரதியார் பிறந்தநாளான இன்று வெளிவந்து சிறப்பு சேர்த்திருக்கிறது.

நேற்று மதியம் ட்விட்டரில் நண்பர்கள் நடராஜனும் நட்பாஸும் வெளியிட்ட வேண்டுகோளை ஏற்று நேற்றிரவு வீடு திரும்பிய பின் இரவு ஒன்றரை மணிவரை இந்தப் பதிவை எழுதி முடித்து எங்களுக்கு அனுப்பினார். மீண்டும் அதிகாலையில் எழுந்து சில திருத்தங்களையும் செய்து நாங்கள் துயிலெழுமுன் மீண்டும் எங்கள் மின்னஞ்சல் பெட்டியில் அந்தத் திருத்தங்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்ட அவரது பொறுப்புணர்வில் பாரதி மீதான அவரது ஆழ்ந்த ப்ரேமை எங்களுக்குப் புரிந்தது.

இந்தப் பதிவை வாசித்தால் அந்தப் ப்ரேமை உங்களுக்கும் நிச்சயம் புரியும்


Dec 3, 2012

பாரதிப் பெருவிழா


நூல் உலகம் இணையதளத்திலிருந்து வந்த கடிதம்...


அன்புடையீர் வணக்கம்,

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவாக, இன்று டிசம்பர் 2 -ம் நாள் துவங்கி பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11 முடிய, தமிழ் நூல்கள் 5 முதல் 10 சதவித தள்ளுபடி விற்பனையில் எங்கள் இணையத்தில் (நூல் உலகம் http://www.noolulagam.com ) கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும், வரும் டிசம்பர் 8-ம் நாள், சனிக்கிழமை சென்னை இராஜா அண்ணாமலை மண்டபத்தில் பாரதிப் பெருவிழா காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 11 -ம் நாள் பாரதி விழா ஈரோடு கொங்கு கலை அரங்கத்தில் நடை பெறுகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

அன்புடன்,
ஜீவா புத்தகாலயம்.




Dec 2, 2012

கானுயிர் வாரமும் ஜெமோ கடிதமும்

வனவிலங்குகள் வாரத்தையொட்டி கடந்த மாதம் ஒரு வாரம் முழுவதும் வனவிலங்குகள் குறித்த புத்தகங்களை ஆம்னிபஸ் தளத்தில் அறிமுகம் செய்தோம். 66A விவகாரத்தில் தமிழ் இணையவுலகம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த் நேரம். எனவே சத்தமின்றி , வழக்கமாகச் செய்யும் விளம்பர ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி நாங்கள் இந்தப் பதிவுகளை எழுதிக் கொண்டிருந்தோம். 

ஐந்தாறு புத்தக அறிமுகங்கள் வந்திருந்தன. அன்று ஜெமோ தளத்தில் “மிருகங்களைப் பற்றி” என்ற பதிவு வந்திருந்தது. அடடே! ஜெமோ’வும் வனவிலங்கு வாரத்திற்கு ஏதோ எழுதியிருக்கிறார் போல என்று பார்த்தால், நம் “ஆம்னிபஸ்” தளத்தின் வனவிலங்கு வாரப் பதிவுகள் பற்றி நான்கு வரிகள் எழுதிவிட்டு பதிவுகளுக்கெல்லாம் இணைப்பு தந்திருந்தார் ஜெமோ.

மகிழ்ச்சியுடன் இந்தக் கடிதம் எழுதினேன்:

அன்புள்ள ஜெ,
ஆம்னிபஸ் தளத்தில் வந்த வனவிலங்கு வாரம் தொடர்பான கட்டுரைகள் குறித்த உங்கள் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.
நாங்கள் ஆம்னிபஸ் தளத்தில் ‘வனவிலங்கு வாரம்’ கொண்டாடினதைப் பற்றி எங்கள் குழுமம் தவிர்த்து யாரிடமும் பேசவில்லை. உங்கள் பதிவு வருமுன் அதுபற்றி எங்கள் யாருடைய தளத்திலும் அதுபற்றி விளம்பரம் செய்யவும் இல்லை. எனினும் இதனையும் கவனித்துத் தாங்களாகவே தந்த அறிமுகம் மிக்க மகிழ்ச்சியையும் மேலும் நிறைய புத்தகங்கள் பற்றி எழுத வேண்டும் என்ற ஊக்கத்தையும் தருகிறது.
நன்றி கலந்த அன்புடன்,
கிரி ராமசுப்ரமணியன்

ஜெமோ அதற்கு எழுதியிருந்த பதில்:

அன்புள்ள கிரி
தொடர்ச்சியாக ஆம்னிபஸ் தளத்தை வாசித்துவருகிறேன். சிறப்பாக எழுதுகிறார்கள். ஆர்வமும் தொடர் உழைப்பும் கொண்ட முயற்சிகளுக்கு எப்போதுமே மதிப்புண்டு வாழ்த்துக்கள்
ஆம்னிபஸ் இணையதளத்தில் ஒரு பட்டியல் செய்யலாம். அதில் விமர்சிக்கப்பட்டுள்ள நூல்கள், ஆசிரியர்களுக்கு அகரவரிசைப்படி ஒருபட்டியலைக் கொடுத்தால் வரும்காலத்தில் குறிப்புகளை தேடி எடுக்க வசதி. இப்போதே நிறைய கட்டுரைகள் ஆகிவிட்டன
ஜெ

ஜெமோ போன்றோரும் நம் தளத்தைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்னும் சேதி ஒருபுறம் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. மறுபுறம் எங்கள் எல்லோருக்கும் பொறுப்பு இன்னமும் கூடுகிறது. 

ஜெமோ குறிப்பிடும் ஆர்வமும் தொடர் உழைப்பும் எங்களிடம் நிலைத்திருக்க வேணும்.

இந்தப் பட்டியல் விஷயத்தை சிரத்தையாகச் செய்யுமாறு ஆம்னிபஸ் அன்பர்கள் முதலிலிருந்தே என்னை ஓட்டிக் கொண்டுள்ளார்கள். நான்தான்  ”தோ தோ” என்கிறேன். ஜெமோ’வும் சொல்லிவிட்டார். இனியாவது செய்தாகவேணும்.

Nov 29, 2012

வர்றாரு பாரதி


நண்பர் நடராஜன் (டிவிட்டரில் @vNattu) ஒரு பாரதிப் பித்தர். எந்த அளவிற்கு என்றால், சிரத்தையாக தினமும் http://bhaarathi.blogspot.com/ என்ற தளத்தில் பாரதியின் எழுத்துகள், பாரதி பற்றிய தகவல்கள் ஆகியவற்றை தொகுப்பவர். பாரதி எழுதியவை மட்டுமல்லாமல் பாரதி பற்றிய புத்தகங்களை யாரேனும் எழுதியிருந்தாலும் அவற்றையும் சேகரிப்பவர். ஆம்னிபஸ்ஸில் இதுவரை பாரதி பற்றி வந்த புத்தக அறிமுகங்கள் எல்லாம் இவர் எழுதியவையே.

வரும் டிசம்பர் பதினொன்றாம் தேதி பாரதியார் பிறந்த தினம். அதனையொட்டி அந்த வாரம் முழுவதும் (டிசம்பர் 9 தொடங்கி - டிசம்பர் 16 முடிய) பாரதி தொடர்பான புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆம்னிபஸ் அன்பர்களுக்கு அன்புக் கட்டளை விடுத்திருக்கிறார். நாங்களும் அந்தக் ஏற்றுள்ளோம்.

காத்திருந்து வாசியுங்கள் நண்பர்களே!

உங்களிடம் பாரதி குறித்த புத்தகங்கள் இருந்தாலும் அதுபற்றிய அறிமுகத்தை / விமர்சனத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். சிறப்புப் பதிவாக வெளியிட சித்தமாக இருக்கிறோம். கட்டுரைகளை rsgiri @ gmail . com என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்புபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.


Nov 28, 2012

நிறைய பேசுபவர்கள்....


ஏதேனும் ஐநூறு வார்த்தைகள் கிறுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய பதிவு இது. படிக்கலாம், அல்லது வேறேதும் உருப்படியான விஷயமும் பண்ணலாம். உங்கள் சாய்ஸ்!

பொதுவாகச் சொல்லுவார்கள், நூலகத்தில் மூடிக்கிடக்கும் புத்தகத்தைப் போல நாம் இருக்கவேண்டுமாம். அப்போதுதான் நமக்கு மதிப்பு உண்டாம். தேவையானவர்கள் தேவையான தருணத்தில் நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை அறிய தானாகவே வருவார்களாம். 

இந்த அறிவுரைக்கு சற்றும் தொடர்பில்லாத நான் ஒரு வளவளா கேஸ். 

பார்த்திபன் வடிவேலு காமெடி ஒன்று உண்டு. பார்த்திபன் மௌனவிரதம் இருந்த நேரமாகப் பார்த்து அவரை  வாய்பேச முடியாதவர் என்று நினைத்துக் கொண்டு அவரிடம் வந்து சிக்குவார் வடிவேலு.  விரதம் கலைந்தபின், "எனக்கு சின்னவயசுல பேச்சு சரியா வராதாம். நல்லா பேச்சு வந்தா வாரம் ஒருக்கா மௌனவிரதம் இருக்க வைக்கறதா எங்க அம்மா வேண்டிக்கிச்சி", என்பார் பார்த்திபன். "உனக்கு? பேசவராது?", இது வடிவேலு. "சின்னவயசுல", என்பார் பார்த்திபன்.

என் கேஸும் அதேதான். ஏழாம் வகுப்புவரை பேச்சு என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவன் நான் என்றால் என் வட்டத்தில் யாரும் நம்பமாட்டார்கள். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், "அம்மா எங்கடா?", என்று கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க எனக்குக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் பிடிக்குமாம். 

இப்போது எனக்குப் பேச்சு வராது என்றால் அதை நம்பும் ஒரே ஜீவன் என் மனைவியார் மட்டுமே. "என்கிட்ட எங்கனா பேசறீங்களா நீங்க? ஒண்ணா மொபைலு இல்லைன்னா கம்ப்யூட்டரு. என்னைக் கட்டிக்கிட்டதுக்குப் பதிலா இது ரெண்டுல ஒன்னுத்த நீங்க கட்டியிருக்கலாம்", என்பார். நான் யாரிடமேனும் போனில் பேசிக்கொண்டிருக்கையில் பின்னணியில், "டேய், வீட்ல பொண்டாட்டி புள்ளைங்க கூட ஒரு மனுஷனை நேரம் செலவு பண்ணவிடாம என்னடா போன் வேண்டிக்கெடக்கு. வைடா போனை", என்று என்றேனும் நீங்கள் போன் செய்கையில் பின்னணியில் ஏதும் குரல் கேட்டால் மிரண்டுவிடாதீர்கள். இப்போதே எச்சரித்து வைக்கிறேன்.

சரி, வளவளா பேச்சுக்கு வருவோம். வளவளாவெனப் பேசுபவர்களை சிலருக்குப் பிடிக்கிறது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் சிலருக்குத்தான் பிடிக்கிறது. பல பேருக்குப் பிடிப்பதில்லை. அதற்கான காரணத்தைப் பார்த்தீர்களேயானால் அப்படிப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றா திறந்த புத்தகமாக இருப்பார்கள் அல்லது எதையும் அல்லது எல்லாவற்றையும் நேருக்கு நேராய் விமர்சிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இன்றைய அவசர உலகில் சத்ருக்கள் அதிகம் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

இன்னொரு பக்கம்,  "நேராப்பேசு, விமர்சனம் பண்ணு; வேணாங்கலை. வெளிப்படையாப் பேசு; கேட்டுக்கறேன். ஆனா, சுருக்கமாப் பேசு எனக்கு நெறைய வேலையிருக்கு", இப்படித் திரியும் கூட்டம் ஒன்றும் உண்டு. 

சமீபத்தில் ஒரு இணையக்குழும விவாதத்தில் சோஷல் மீடியாவின் தாக்கம்தான் நம்மை எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்ல / செய்ய வைக்கிறது என்றார் நண்பர் ஒருத்தர். வம்புமடம் போல எத்தையோ மென்று தின்று துப்பிவிட்டு டைம்லைன் கடந்தவுடன் மறந்துவிட்டுப் போய்விடவேணும். அவ்வளவுதான். 

இணைய வாழ்க்கையின் தாக்கம் அல்லது அவசரயுகத்தில் அடுத்த பஸ்ஸை/வேலையை/பிசினசை/ஏதோவொரு வாய்ப்பை/ஸ்கூல் அட்மிஷனை என்று ஒன்றைப்  பிடித்தாக வேண்டிய  பரபரப்பில் இருப்பவர்களிடம் போய் ஆயிரத்து இருநூறு வார்த்தைக் கட்டுரை ஒன்றைக் கொடுத்து, "கொஞ்சம் வாசியுங்களேன், நல்லா இருக்கு", என்றால் சப்பென்று உங்கள் கன்னத்தில் அறை விழுவது திண்ணம்.

இன்னும் ஒரு கூட்டமும் உண்டு, "என்ன வேணாப் பேசு; ஆனா எல்லாத்தைப் பத்தியும் பேசாத". அதாவது இவர்களுக்கு ஒரு மனிதர் எல்லா சப்ஜக்டுகளையும் தொட்டுப் பேசினால் பிடிக்காது.  இப்படிப்பட்ட ஒவ்வாமை கொண்ட மனிதர்களின் மனோநிலை, நிலைப்பாடு பற்றி ஏதேனும் மனவியல் ஆராய்ச்சி உண்டா எனத் தெரியவில்லை. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், ஹீரோ என்று எல்லாத் துறைகளிலும் கால்பதித்த ஒரு மனிதரை நம்மில் எத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது சொல்லுங்கள். நமக்கு கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அவர் சொல்லும் "டண்டணக்கா யே டனக்குனக்கா மட்டுந்தானே!"

ஆயிரத்து இருநூறு பக்கம் என்று சொன்னேனல்லவா? அப்படிச் சொன்னதும் நிறைய பேசுபவர்கள் இருவர் நினைவுக்கு வருகிறார்கள். என் மனம் கவர்ந்த இரண்டு எழுத்தாளர்கள் அவர்கள். இரண்டு பேருமே அவரவர் தளத்தில் நிறைய கதைப்பவர்கள். நிறைய என்றால் சும்மா நி...றை...ய.... என்று வாசிக்காதீர்கள். நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கதைப்பவர்கள். என்னவும் பேசுவார்கள். எல்லாமும் பேசுவார்கள். ஆனால் தெரிந்ததை மட்டும் பேசுவார்கள்.

ஒருவர் இலக்கிய எழுத்தாளர் + இணையத்தில் சூறாவளித்தனமாய்க் கதைப்பவர். இவரைப் பொறுத்தமட்டில் நாம் மாங்கு மாங்கென்று எழுதும் ஐநூறு வார்த்தைக் கட்டுரைகள் எல்லாம் "மிகச் சுருக்கமானவை". ஏனென்றால் இவர் கருத்தில் ஒரு நல்ல கட்டுரை என்பது ஆயிரத்து இருநூறு வார்த்தைகள் இருக்கவேணும்.

மற்றொருவர் பிரபல எழுத்தாளர் + டிவிட்டரில் ஒரு சூப்பர்ஸ்டார். இந்த இருவரில் ஒருவருக்கு சில ஆயிரம் அபிமானிகளும் பலநூறு அ'அபிமானிகளும் உண்டு. இன்னொருவருக்கு எண்ணிக்கையில் இங்கேயங்கே மாற்றமிருக்கலாம். இவர்களைப் பலருக்குப் பிடிக்கக் காரணம் இவர்கள் பேசும் பேச்சின் அடர்த்தி. சிலருக்குப் பிடிக்காமல் போகும் காரணம் இவர்கள் எல்லாவற்றையும் பேசுவதும் , நேரிடையான விமர்சனங்களை வைப்பதுவும்.

நிறையப் பேசாதவர்கள் உம்மணாமூஞ்சி என்றோ சிடுமூஞ்சி என்றோ பட்டப் பெயர்கள் மட்டும்தான் வாங்குகிறார்கள். ஆனால் நிறையப் பேசுபவர்கள் கொஞ்சம் பட்டப்பெயர்களோடு சேர்த்து நிறையவே கெட்டப்பெயர்களும் வாங்குகிறார்கள்.

அதிகமாகப் பேசாமல் இருப்பது சரிதான். அளவாகப் பேசி நல்ல பெயர் எடுத்தாலும் சரிதான்.  ஆனால் ஒன்றுமே பேசாமல், "அவரு ரொம்ப சைலன்ட்டுங்க" என்று நல்ல பெயர் எடுப்பவர்களைப் பார்த்தால்தான் நமக்கு..... நறநற!

Nov 18, 2012

எளிய தமிழில் சுஜாதாவின் ஆழ்வார்கள் அறிமுகம்


ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்.தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்-கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.



ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்என்ற இந்நூலில் பிரபல எழுத்தாளரும், வைணவருமான சுஜாதா எல்லா ஆழ்வார்களையும், ஆண்டாளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 

கிபி 650 முதல் 950 வரையிலான காலத்தைத் தமிழில் பக்தி இலக்கிய காலம் என்பர். இதில் வைணவத்தைச் சார்ந்த பாடல்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம்என்று நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன. 

இவைகளை இயற்றிய ஆழ்வார்கள் பக்தி நெறிகளையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். திருமாலை எப்போதும் மறக்காதவர்கள். திருமால் ஒருவனே பரம்பொருள் என்று நிரூபித்தவர்கள். மனித நேயத்தை வளர்த்தவர்கள். தமிழுக்கு மேன்மையளித்தவர்கள். இவர்கள் அனைவரும் பகவானின் அம்சங்கள் என்று கருதப்படுகிறார்கள். 

ஆழ்வார்களை எளிய தமிழில் அவர்கள் காலம் ,வாழ்க்கை பற்றிய சரித்திரக் குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தி பல பாடல்களின் நேரடியான பொருளைச் சொல்லும் இந்நூலின் முதல் நோக்கம் ஆழ்வார்களைப் பற்றியே பற்றியே அறியாதவர்களுக்கு அதன் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே. மேற்கொண்டு அவர்கள் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே. 

மேற்கொண்டு அவர்கள் பாடல்களின் உள்ளர்த்தங்களையும் ஸ்வாபதேசங்களையும் அறிய விரும்பினால் அவைகளை விரிவாக பல வைணவ நூல்களில் காணலாம். 



வைணவம் என்னும் மகா சாகரத்தின் கரையில் இருந்து கொண்டு அதை வியப்பாகப் பார்த்து ஆழ்வார்கள் மேல் ஒரு பிரமிப்யையும் மரியாதையையும் வாசகர்களிடம் ஏற்படுத்துகிறார் சுஜாதா.

- சத்யா ஆம்னிபஸ்சில் எழுதிய ”ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்”  புத்தக விமர்சனத்திற்கு அன்பர் பால்ஹனுமான் எழுதிய பின்னூட்டம்.

மிக்க நன்றி பால்ஹனுமான்.
.
.
.

தேவனின் கோயில் ஆலயமணியின் ஓசை

இந்தக் கல்யாணங்களில் ரிசப்ஷனுக்குக் இசைக் கச்சேரி நடத்தும் பார்ட்டிகளின் ஸ்ட்ராட்டெஜி எல்லாம் விசித்திரமானவை.  கல்யாண நிகழ்ச்சிக்கும் தாங்கள் பாடுவதற்கும் ஏதும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை என்று முழுமையாக நம்பிக் களமிறங்குபவர்கள் அவர்கள்.

கல்யாண வீட்டில் வந்து “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா” பாடுவார்கள். தங்களுக்குப் பாடவரும் ஒரு சிக்கலான பாடல் என்பதால் கல்யாண வீட்டிலேயே “சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை” என்பார்கள். 

தங்கள் ஆர்கெஸ்ட்ராவின் ட்ரம்மர் கற்ற சகல வித்தைகளையும் காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக,  ”சுடரோடு எரியாது திரி போன தீபம்; உயிர் போன பின்னாலும் உடல் இங்கு வாழும்.... பாடவா உன் பாடலை...................”, பாடுவார்கள். 

“சின்னவீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா” என்று அந்தந்த சீசனில் களைகட்டும் வெவஸ்தை கெட்ட அசிங்கங்களும் ஆர்கெஸ்ட்ராகளின் லிஸ்டில் கண்டிப்பாக உண்டு.

இந்த லிஸ்டைப் போட்டால் போட்டுக் கொண்டே போகலாம். அதை விட்டுவிட்டு நாம் இவர்களின் துவக்கப் பாடலுக்கு வரலாம்.

துவக்கப்பாடல் எப்போதும் பக்திப் பாடலாக இருந்தாக வேண்டும் என்பது நியதி. அந்த நியதியை எப்படிக் கடைபிடிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது விஷயம்.

பொதுவாக நிறையபேர் பாடும் பாடல்கள் இரண்டு - பக்திப் பாடல் ஆல்பத்தில் வந்த எண்பதுகளின் பாடலான ஆயர்பாடி மாளிகையில் அல்லது அதே எண்பதுகளில் இளையராஜா இசையில் ”தாய் மூகாம்பிகை” படத்தில் வந்த பக்திப் பாடலான ஜனனி ஜனனி.

ஆயர்பாடி மாளிகையில் அப்படியே சாஃப்டாக முடிந்துவிடும். பெரிய படுத்தல்கள் எல்லாம் இல்லாத பாடுபவர் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லாத சௌகர்யமான பாடல். ஜனனி ஜனனி பாட தேர்ந்த ஆரம்பகர்த்தா தேவை. “சிவசக்த்யா யுக்தோ யதிபவதி” என்று தொடங்கும் அந்த ஆரம்ப ஸ்லோகத்தை (!!)  ராஜாவுக்குப் பிறகு யாரும் இதுவரை சரியாகப் பாடிக் கேட்டதில்லை நான். 

அந்த ஸ்லோகம் யாருக்குச் சுமாரே சுமாராக வருகிறதோ அவர் தொடக்கத்தில் முன்னிருத்தப்படுவார். அதைத் தொடர்ந்து பல்லவி தொடங்கும் வேளையில் மூக்கால் குரலை வெளி அனுப்பினால் அது இளையராஜா என்று நம்பும் மற்றொருத்தர் பாடலைத் தொடங்க கச்சேரி இனிதே துவங்கும். இந்த மூக்கும் திறன் கொண்ட எவருக்கும் “அடடா, அச்சு அசல் இளையராஜா கொரல் இல்ல”, என்று எதிரில் அமர்ந்திருக்கும் ஒன்றிரண்டு ரசிகமகாஜனங்கள் புளகாங்கிதமடைந்து ஓப்பன் டு தி ஃபேஸ் பாஸிடிவ் கமெண்ட் கொடுக்கும். அதைக் கண்டு, கேட்டு அந்த மூக்கரும் புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.

கொஞ்சம் பிரபலமான ப்ரொஃபஷனல் ட்ரூப்புகள் தேர்ந்த பாடகர்கள் கைவசம் இருந்தால் “தேவன் கோவில் மணியோசை” பாடுவார்கள். சீர்காழி பாடிய ரொம்பவும் ரிஸ்கான பாடல். கல்யாணங்களில் ரொம்பவே அரிதாகக் கேட்கக் கிடைக்கும்.

பலராலும் பாடப்படும் இன்னொரு பாடல் உண்டு. அது “பாலும் பழமும்” படத்தில் வரும் “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்”. பக்திப் பாடல் என்ற தகுதியைப் பெறுவதற்கு “ஆலயம், மணி”  இந்த இரண்டு வார்த்தைகள் நம்ம ட்ரூப்புகளுக்குப் போதுமானதாக இருப்பது வினோதம்தான்.

எல்லாப் பாட்டும் போரடித்துப் போனால் என்று எடுத்துக் கொள்ள ஒரு பாடல் உண்டு. அது, “தேவனின் கோயில் மூடிய நேரம்”, என்ற பாடல். உங்களில் பெரும்பாலானவர்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். அறுவடைநாள் படத்தில் ராஜா இசையில் சித்ரா பாடிய பாடல். இந்தப் பாடலை பள்ளிப் பருவத்தில் எப்போதோ கேட்டிருந்தாலும் 2003’ஆம் வருடத்திற்குப் பின்னர் ட்ரூப்புகளில் நானும் பாடுகிறேன் என்று களமிறங்கிய பின்னரே நிறைய கேட்டேன்.

ட்ரூப்பில் பாடும் பெண்டிர் எப்போதும் தனியாவர்த்தனகர்த்தாக்கள். ஆண் பாடகர்கள் நான்கு பேர் இருந்தால் பெண் பாடகிகளின் அவைலபிலிடி ஒன்றுக்கு மேல் இருக்காது. கச்சேரி வழக்கமாக முடிய இரவு பத்துமணி ஆவதும், அதன் பின் அவர்கள் வீடு புறப்படுவதும் ”ஓகே” என்று ஒப்புக்கொண்டு நம்பி அனுப்பும் பக்குவம் கொண்ட அரிதான வீடுகளிலிருந்து வருபவர்கள் அவர்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்களின் திறமை இரண்டே விஷயங்கள்தான். ஒன்று தாளத்தோடு பாடுவது; இரண்டு பாடலின் ஆரம்பம், இடையே, முடிவில் என்று எந்த இடத்தில் எடுக்க/நிறுத்த வேண்டுமோ அதை சரியாக அறிந்து வைத்திருப்பது. மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி, உச்சஸ்தாயி, ஸ்ருதி பிசகல்கள், சங்கதிகள் என்ற விஷயங்களுக்குள் எல்லாம் இவர்களில் பெரும்பாலானோர் நுழைய மாட்டார்கள். எனவே இவர்கள் பாடும்போது இந்த தேவனின் கோயில் போன்ற பாடல்களின் முதல் இரண்டு வார்த்தை உங்களுக்குப் புரிந்துவிட்டால் நீங்கள் பெரிய ஜீனியஸ். (சக ஆர்கெஸ்ட்ரா பாடகியர் இந்தப் பதிவை தப்பித் தவறியும் படிக்காமல் இருக்கக் கடவது)

ரொம்ப நாட்களுக்கு இது ஏதோ பக்திப் பாடல்தான் போல என்று நினைத்திருந்தேன். ஒருமுறை டிவியில் அறுவடைநாள் படம் தொடங்கும்போது இந்தப் பாடலுடன் தொடங்க, கொஞ்சம் சித்ரா குரலில் அந்தப் பாட்டை  முதல்முறை முழுசாய்க் கேட்டேன். இதென்ன கோயில் மூடினாற்போலெல்லாம் பாட்டில் வருகிறது. கோயில் திறந்தால்தானே பக்தி என்று வரிகளை உன்னிப்பாய்க் கவனித்தேன். கொடுமையே கொடுமையே என்னும் அளவிற்கு இந்தப் பாடலிலும் தேவனையும் கோயிலையும் விட்டால் பக்தியுடன் எந்த ஸ்னானப்ராப்தியும் இல்லாத பாடல் இது. சுமைதாங்கி, இடிதாங்கி என்றெல்லாம் பாடல் நடுவில் வருகிறது.

என் ட்ரூப் ஓனர் சரவணகுமாரிடம் கேட்டேவிட்டேன், “என்ன மச்சி, தேவன், கோயில், ஆலயம், மணி இப்படி எல்லாம் வார்த்தை வந்தா அது பக்திப் பாட்டு ஆகிடுமா? என்னடா உங்க லாஜிக்கு?”

“சிம்பிள் லாஜிக் மச்சி. மங்களகரமான வார்த்தைகளை வெச்சு கச்சேரி தொடங்கறோம். அவ்வளவுதான். அதுக்கு மேலே என்ன லைன் வருதுன்னு ரெண்டு வருஷம் கச்சேரில பாடின பிறகுதானே உனக்கே விளங்கிச்சு. இங்க ஒருநாள் கேக்கறவனுக்கு என்ன விளங்கப் போவுது?”

என்னத்த சொல்ல? என்னமோ பண்ணுங்கடா என்று அதன்பின் இந்த விஷயத்தில் நான் கேள்வியே கேட்பதில்லை.

லேட்டஸ்ட் சொல்வனம் இதழில் சுகா எழுதிய தேவனின் கோயில் பதிவைப் படித்த பின்னர்தான் இந்தப் பாடலுக்கு கச்சேரியைத் துவங்குவதற்கு எத்தனை பெரிய தகுதி இருக்கிறது எனப் புரிகிறது. சில விஷயங்களில் உங்களுக்குள் ரசனையை விதைக்கவும் யாரேனும் தேவைப்படுகிறார்கள்.  இரண்டு நாட்களாக இந்தப் பாடலுடனேயே உழன்று கொண்டிருக்கிறேன்.

என்ன எழுதினாலும் எத்தனை எழுதினாலும் சுகா கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தேக்கி வைத்த ரசனையைக் கொண்டு எழுதியதைப் போல் என்னால் எழுதிவிட முடியாது. எனவே அவர் வரிகளிலேயே இந்தப் பாடலைப் பற்றி படித்து விடுங்கள்.

அடுத்ததாக “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” பாடலானது பக்திப் பாடலுக்கான அந்தஸ்து உடையது என்று என் மனசு ஒப்புக்கொள்ள யார் பதிவு எழுதுவார்களோ தெரியவில்லை

Nov 11, 2012

சிறுவர் இலக்கிய வாரம்

சென்ற வாரம் ஆம்னிபஸ் தளத்தில் ஒரு அறிவிக்கப்படாத “வனவிலங்கு” வாரமாக அமைந்தது. வனவிலங்கு என்பதைவிட, நாங்கள் அதனை “கானுயிர் வாரம்” என்று அழைத்தோம்,

இந்த சப்ஜக்டில் நான்கு நல்ல பதிவுகள் தேறின. அவற்றை நீங்கள் இந்த இணைப்பில் வாசிக்கலாம்: கானுயிர் வாரம்

வரும் பதினான்காம் தேதி குழந்தைகள் தினம். அதனை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ்ஸில் சிறுவர் இலக்கிய வாரம் என்ற தலைப்பில் புத்தக விமர்சனங்கள் வெளிவரும். மினிமம் ஐந்து பதிவுகள் இதுவரை தயாராயுள்ளன.



நீங்கள் யாரேனும் சிறுவர் இலக்கியப் புத்தகங்கள் ஏதேனும் வாசித்திருந்தால் அவற்றை மற்றவருடன் பகிரும் நல்ல மனமிருந்தால் நமக்கு (rsgiri @ gmail <dot> com) எழுதி அனுப்புங்கள். சிறப்புப் பதிவாக அவை வெளிவரும். அனுப்புபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

Nov 10, 2012

சகலகலா ஆசார்யர் எஸ் ராஜம்


நண்பர்கள் எவரேனும் வரும் நாளை (நவம்பர் 11, 2012 ஞாயிற்றுக்கிழமை)  சென்னையின் சுற்றுவட்டாரங்களில் இருந்தால் தவறாமல் மதியம் இரண்டு மணி அளவில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள தத்வலோகா ஹால் என்ற இடத்தில் ஒன்று கூடவும். அங்கே மறைந்த மாமேதை எஸ் ராஜம் அவர்கள் வாழ்வையும் வாக்கையும் சித்தரிக்கும் ஒரு ஆவணப்படத்தை இலவசமாகத் திரையிடவிருக்கிறார்கள்.

நண்பர் லலிதா ராம் தன் ஆர்வத்தாலும் உழைப்பாலும், “உருப்படியாய் ஏதாவது செய்யணும் பாஸ்!” என்று மலைத்து நிற்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக உயர்ந்து நிற்கிறார் – வீணாய்ப் போனவர்களாலும் ஒன்றுக்கும் உதவாதவர்களாலும் நொந்து நூடுல்ஸ் ஆன தமிழர்களாகிய நாமனைவரும் சமய சாதி சினிமா சீரியல் சாக்காடுகளைத் துறந்து, நாளது தேதியன்று நாளது சமயத்தில் நாளது ஸ்தலத்தில் ஒன்றுகூடி லலிதா ராமின் சிறப்பான முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Oct 12, 2012

மாற்றான் - திரை விமர்சனம் அல்ல

சமீபத்தில் படித்த சேதி:

ஐபோன்’ல புதுசா ஒரு ஆப்பு (app) வந்திருக்காம். அந்த ஆப்பை அமுக்கிட்டு அதாண்ட உங்க சாக்ஸைக் கொண்டு போனா அந்த சாக்ஸுக்கு உண்டான சோடி சாக்ஸ் எதுன்னு உங்களாண்ட அது காட்டிக் குடுக்குமாம். அதனால அவசரத்துல சோடி மாத்தி சாக்ஸ் மாட்டிக்கினு போயி “இஹ்ஹீஹ்ஹீ”ன்னு ஆபீஸ் சகாக்களாண்ட வழியற வேலை இல்லியாம்.

பெறகு இன்னொரு விசியமும் உண்டாம். ஒரு குறிப்பிட்ட சாக்ஸ் தொவைச்சிருக்குதா, இல்லியா? இதுவரியும் இந்த சாக்ஸ எத்தினி தபா தொவைச்சிருக்கீங்கன்னு அல்லாத்தையும் இந்த ஆப்பு சொல்லிருமாம்.

இதனால சாக்ஸ மாத்தாம மாத்தி மாத்தி போட்டுனு போற சாக்ஸ் மாற்றான்’களுக்கு நல்ல பிரயோஜனம் உண்டு பாருங்க. தொவைக்கறமோ இல்லியோ. அஞ்சு தபா போட்டாச்சு, ஆறு தபா போட்டாச்சுன்னு அலாரம் அடிக்கும் போல.

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! இந்த ஆப்பு கொணாந்த நீ மாக்கானா? இல்ல இதையெல்லாம் வாங்கப் போற நாங்க மாக்கான்ஸா?

நன்றி: "Do I need new socks?"

Sep 30, 2012

தி.ஜானகிராமன் வாரம்


நாளை (அக்.1) தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு ஆம்னிபஸ் தளத்தில் தி.ஜானகிராமன் புத்தகங்களுக்கு அறிமுக / விமர்சனப் பதிவுகள் வெளிவருகின்றன. 

சென்றவாரம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை ஐந்து பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். ஆம்னிபஸ் ரெகுலர் ஓட்டுனர்களே அந்தப் பதிவுகளை எழுதச் சித்தமாக இருக்கிறார்கள். எனினும், சிறப்புப் பதிவர்களின் பதிவுகளும் வரவேற்கப்படுகின்றன.

நாளை தொடங்கி அடுத்த ஞாயிறுவரை மாலை ஆறுமணிக்கு மேலாக பதிவுகள் வலையேற்றப்படும். 

காத்திருந்து வாசிக்கவும்.

Sep 29, 2012

கதம்பம் - 3

கொரியன் கொலைவெறி


நேற்று முன்தினம் நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் பெய்ர்ஸ்டோவை அவுட் ஆக்கிய க்றிஸ் கெயில் ஆடிய இந்த நடன அசைவு கீழே இருக்கும் விடியோவின் இன்ஸ்பிரேஷனாம். கொலைவெறி கொலைவெறி என்று ஐந்து கோடி ஹிட், ஆறு கோடி ஹிட் எனக் கொண்டாடும் நமக்கு 30 கோடி ஹிட்டடித்த இந்த இரண்டு மாதமே ஆன கொரியன் பாப் பாடலில் அந்தக் குதிரையசைவைத் தவிர்த்து அப்படி என்னவிருக்கிறது எனப் புரியவில்லை.





என்னத்த சொல்ல

சமீபத்தில் தொடர் நிகழ்வாகிப் போன பள்ளிக் குழந்தைகள் சந்திக்கும் விபத்துகளில், இருக்கும் அத்தனை அரசுத் துறைகளின் மெத்தனங்களையும் வார்த்தைகளில் தூக்கிப் போட்டு மிதிக்கிறோம். பள்ளிகளுக்குப் பொறுப்பில்லை என ஓலமிடுகிறோம்.

இது சென்ற வாரம் நிகழ்ந்த நிகழ்வு: சென்னை சைதாப்பேட்டை அருகே லிட்டில்மவுண்ட்’டில் 16 வயது சிறுவன் ஒருவன் தன் வயதையொத்த மேலும் இரண்டு சிறுவர்களைத் தன் தந்தையிடம் கிளப்பிக் கொண்டு வந்த மொபெட்டில் வைத்து ரவுண்டு அடித்திருக்கிறான். போதாத குறைக்குத் துணைக்கு தம் வீட்டருகே இருந்த ஆறு வயது சின்னஞ்சிறுவனையும் அதே வண்டியில் ஏற்றிக் கொண்டு வலம் வந்திருக்கிறார்கள். மெயின் ரோட்டில் விட்ட சவாரியில் அன்றைய எமனாகக் குறுக்கே வந்த அரசுப் பேருந்து மோதி அந்த ஆறுவயது சின்னஞ்சிறுவன் ஸ்பாட் டெட்.

இத்தனை சிறுவர்களிடம் நம்பி வண்டியைத் தரும் பெற்றோரை என் சொல்ல? அந்த ஆறுவயது சிறுசை அலட்சியமாக ட்ரிப்பிள்ஸ் போன வண்டியில் நான்காவதாக ஏற்றி அனுப்பிய பெற்றோரை என்ன சொல்ல?

சீயோன் பள்ளி விபத்தில் இறந்த குழந்தைக்காய்ப் பொங்கியெழுந்த நாம், இது போன்ற நிகழ்வுகளிலிருந்தும் நம் குழந்தைகளைக் காத்துக் கொள்ள எப்போது பொங்கப் போகிறோம்?

எம் புள்ள, எட்டு வயசுதான் ஆவுது, என்னாமா கார் ஓட்டுது தெரியுமா / என்னாமா பைக் ஓட்டுது தெரியுமா என்று பெருமையடிக்கும் பெற்றோர்களை இனி கேட்ட இடத்திலேயே தூக்கிப் போட்டுத்தான் மிதிக்க வேண்டும். 



மெகா சீரியல் ஜிங்காலாலா

மேட்டர்  1: 

#அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மனெ தேவுரு வரவிருக்கும் பத்து மணி ஸ்லாட் கடந்த ஒன்பது ஆண்டு காலமாக மாங்கல்யாவால் ஆளப்பட்டு வந்தது. ஆசியாக் கண்டத்தில் இதுவரை ஒளிபரப்பான சீரியல்களிலேயே மிக அதிக எபிசோடுகளைத் தாண்டியது அது. (இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேலே.) மாங்கல்யா’, தமிழ் மெட்டி ஒலியின் கன்னட வடிவம்.

ஒரிஜினல் கதை எழுநூற்று சொச்ச எபிசோட்களில் முடிந்துவிடும். ஆனால் கன்னடத்தில் மக்கள் அதை முடிக்க விரும்பவில்லை. எனவே திரைக்கதையை வளர்க்கும் பொறுப்பை சினி டைம்ஸ் ராஜ் பிரபுவிடம் அளித்தது. முடியவிருந்த ஒரு கதையை மேற்கொண்டு ஆயிரத்தி ஐந்நூறு எபிசோடுகளுக்கு வெற்றிகரமாகக் கொண்டு சென்றார் அவர்.
- ”மனெ தேவுரு” கன்னட சீரியல் வசனகர்த்தா ரைட்டர் பாரா


மேட்டர்  2: 

#அடடடடடடடடடடடடடடடடடடடடடடடடே

"நான் சீரியல் நடிகைதாங்க. ஆனா அதனால உங்களுக்கு என்ன நல்லது இருக்கு? ஒரு நிகழ்ச்சி பார்க்கறிங்கன்னா அதனால உங்களுக்கு ஏதாச்சும் கிடைக்கணும் இல்லை? மெகா சீரியலில் என்னங்க இருக்கு? நான் நடிக்கிற ஒரு சீரியல். 3 வருஷமா அதே இடத்துலதான் இருக்காங்க. கொஞ்சம் கூட கதை நகரல. நானும் நடிச்சிட்டுதான் இருக்கேன். அது எனக்கு ப்ரெட் & பட்டர். ஆனா உங்களுக்கு என்ன? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கறத‌ லேட்டாக்குறத தான் இந்த சீரியல் செஞ்சிருக்கு. வேற ஒண்ணும் செய்யல"
இதைச் சொன்னவர், இதோ இங்கே இருப்பவர். இவர் யாரென்று தெரியாதவரிடம் நான் என்னத்த சொல்ல? கார்க்கி சொல்றார் பாருங்க



கோரத் தாண்டவம்

தமிழ் இணையத்தில் தாண்டவம் படம் குறித்த அப்டேட்களை கொஞ்சம் மேய்ந்தேன். பழகிப் போன, புளித்துப் போன அடித்துத் துவைக்கும் மேதாவித்தன விமர்சனங்கள். முக்கியமாக தமிழ் ட்விட்டருலகினரின் வழமைமாறா “அந்த தியேட்டர் பக்கம் போயிறாதீய” ரக அப்டேட்கள். 


இனி நீங்க உலாத்துற ட்விட்டர் பக்கங்களுக்குத்தான் வரக்கூடாதய்யா. #முடியலை.

இன்று மேட்னி ஷோ புக் பண்ணீயிருக்கிறோம். பார்த்து வந்துவிட்டு என் பங்கிற்கு நானும்.....

வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

கொசுக்களின் ப்ளூ அட்டாக்

மழை வருகிறதோ இல்லையோ, மழைக் காலம் வரவிருக்கிறது. நம்மூரில் கூடவே கொசுக்களும் கூட்டம் கூட்டமாக வரும். (அல்ரெடி வந்தாச்சா? வெரிகுட், கைகுடுங்க! நீங்க நம்மாளு).

ஒரு உண்மை தெரியுமா? கொசுக்களுக்கு நீல நிறம் ரொம்ப அட்ராக்டிவ் நிறமாம். ஏதோ தெரிஞ்சதைச் சொல்லிட்டேன். பாத்து பதவிசா நடந்துக்கிட்டு கொசுக்களிடமிருந்து கொஞ்சூண்டு தப்பிச்சிக்கோங்க. 
.
.
.


Sep 26, 2012

வண்ணத்துப்பூச்சி வரைந்தவன்


ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை;
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மனம் புரிவதில்லை

நா.முத்துக்குமார் - இன்றைய தமிழ்த் திரைப்பாடல் உலகின் தலைசிறந்த பாடலாசிரியர்.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று வரிசைப்படுத்தினால் அதற்கு அடுத்த தலைமுறைப் பாடலாசிரியர்களில் ஒரு பெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். மிக முக்கியமானவர்.

2004’ஆம் வருடம் கோவை சென்றிருந்தபோது என் ரெண்டுவிட்ட சகோதரன் சந்தோஷுடன் ”7ஜி ரெயின்போ காலனிபடத்தில் வரும் கண்பேசும் வார்த்தைகள்பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் வெளியான வாரயிறுதி அது. அப்போதுதான் அந்தப் பாடலை முதல்முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

சந்தோஷிடம் சொன்னேன், “இந்தப் பாட்டு பாரு. சூப்பர் ஹிட் ஆகும், படமும்”.

பாடல் முதல்முறை டிவியில் பார்த்தபோது ரவிகிருஷ்ணாவின் சோகம் தோய்ந்த விரக்தியான எக்ஸ்ப்ரெஷன்களும், சுமன் ஷெட்டி தகரக்கதவில் தாளம் போடுவதுமாக ஏதோ ரெண்டாந்தர காட்சிப்படுத்தல் போலத் தோன்றியது முதல்முறை பார்த்தபோது. 

சான்ஸே இல்லை. மொக்கை பாட்டு இது. கேவலமா இருக்கு”, என்றான்.

நான் கவனித்தது அந்தப் பாடல் வரிகளை,  யார் எழுதியவை என அப்போது தெரியவில்லை என்ற போதிலும். காலாகாலமாய்க் காதல் விஷயத்தில் பெண்களைக் குறைசொல்லும் ஒரு ஆண்வர்க்கத்துப் பாடல். ஆனால், காயம்பட்ட ஒரு ஆணின் மனதிற்கு மருந்தாய் நச்என்ற அற்புத வரிகள் அவை. அந்தக் காலகட்டத்தில் என் மனம் ஏதும் புண்பட்டிருந்ததா என்ற க்ராஸ் கொஸ்சின் எல்லாம் இங்கே வேண்டாமே, ப்ளீஸ்! 

அடுத்த இரண்டுவார காலத்தில் பாடல்களுக்காய் அந்தப் படத்தை சந்தோஷ் நான்குமுறை பார்த்தது தனிக்கதை.

2006’ஆம் ஆண்டு இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரனான குருபிரசாத் என் கையில் சூப்பர் புக்ண்ணா”, என்று எனக்குப் பிறந்தநாள் பரிசாக கண்பேசும் வார்த்தைகள் புத்தகத்தைத் தந்தபோதுதான் எனக்கு நா.முத்துக்குமாரை அறிமுகம். அதுவரை மற்றுமோர் பாடலாசிரியராக நா.முத்துக்குமாரை அறிந்திருந்தவன் நான். நான் வாசித்த மனசைத் தொட்ட புத்தகங்களுள் கபேவாவும் முக்கியமான ஒன்று. கபேவா பற்றித் தனியாக நெடுங்கட்டுரையே எழுதலாம். நா.முத்துக்குமார் குறித்த என் சிலாகிப்புகளை ஒரு தொடராகத்தான் எழுதவேண்டும்.

கபேவா புத்தகத்தில் இருந்த ஒரு குறிப்பை வைத்துக் கொண்டு  பட்டாம்பூச்சி விற்பவன் புத்தகம் பற்றி அறிந்தவன்ஐந்து வருடங்களாக அதைத் தேடியலைந்தேன். இந்த வருட சென்னைப் புத்தகக் கண்காட்சியில்தான் கடைசியாக அந்தப் புத்தகம் கிடைத்தது.

நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவனுக்கு ஆம்னிபஸ்சில் எழுதிய விமர்சனம் இங்கே



Sep 23, 2012

டியர் ராஜா சார்....

டியர் ராஜா சார்,

உங்க நீஎபொவ பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கேன். என்னோடு வா வா, காற்றைக் கொஞ்சம், முதல்முறை பார்த்த, சற்றுமுன்பு’ன்னு என் மனசுக்கு நெருக்கமான பாடல்கள் பத்தியெல்லாம் பத்தி பத்தியா சொல்லிக்கிட்டு சுத்தி வளைச்சி, நீட்டிமுழக்க விரும்பலை.

யுவன் தன் ம்யூசிக்’ல பாடும்போதே ஓடற வண்டியில இருந்து குதிக்கறவன் நான். உங்களுக்கு யுவன் பாடகரா இல்லையான்னு தெரியாதா? அவருக்கு எதுக்கு ரெண்டு பாட்டைத் தூக்கித் தந்தீங்க? காலத்தின் கட்டாயமா? அதுக்கு நீங்களும் அடிமையா? முடியலை சார்.

அடுத்து, உங்க குரலுக்குன்னு கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்கன்றது இந்த உலகம் அறிஞ்ச விஷயம். ஆனா, வானம் மெல்ல மாதிரியான க்ளாஸ் ட்யூனை நீங்க பாட நினைச்சது ஏன்? எதுக்கு எட்டாத ரேஞ்ச் பத்தியெல்லாம் கவலைப்படாம அந்தப் பாட்டை நீங்க பாடிக் கெடுத்தீங்க. யெஸ், ஐ ரிப்பீட். எதுக்காக அந்தப் பாட்டை நீங்க பாடிக் கெடுத்தீங்க?

உங்க கொலைவெறி ரசிகர்கள் நீங்க படத்துக்கு ஒரு பாட்டு பாடியே ஆகணும்னு நெனைக்கறாங்க, நிஜம்தான். அதுக்கு நீங்களும் செவி சாய்க்கணும்னு நெனைச்சீங்கன்னா ”என்னைத் தாலாட்ட வருவாளா” பாட்டை கேஸட்ல எக்ஸ்ட்ராவா பாடினாப்ல, ”வானம் மெல்ல” பாட்டை ஹரிஹரனுக்கோ ஹரிசரணுக்கோ தந்துட்டு நீங்க எக்ஸ்ட்ராவா பாடி கேஸட்ல சேத்துருக்கலாம். 

எட்டு ட்யூன் போட்டுட்டு அதுல நாலு ட்யூனை மட்டும் என்னைக் கேக்க விடற நீங்க..... விதவிதமா விருந்து சமைச்சிட்டு அதைப் பாதிக்குப் பாதி தின்னவிடாம செஞ்சாப் போல எனக்குத் தோணுது.

இந்த காலத்தின் கட்டாயத்தின் பேர்லயும், கொலைவெறி ரசிகர்களுக்காகவும் செய்யப்படற காம்ப்ரமைஸ்கள் எனக்குப் பிடிக்கலை சார். என்னைப் போல லட்சக்கணக்கான ரசிகர்கள் இதே கருத்தோட இருப்பாங்கன்னு நான் வலுவா நம்பறேன்.

இப்பவும் ஒண்ணும் மோசமில்லை. நீஎபொவ படத்துல நாலே பாட்டுதான்னு நாங்க எங்களைச் சமாதானப்படுத்திக்கறோம், விடுங்க.

அன்புடன்,
உங்கள் ரசிகன்

Sep 22, 2012

பயம் - குறும்படம்

தனுஷ்குமார், கமல் மற்றும் இதர நண்பர்கள் இணைந்து “பயம்” என்னும் இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.


இந்தக் குறும்படம் முதலில் உங்கள் பார்வைக்காக இங்கே பகிர்கிறேன். இந்தப்படம் பற்றிய என் விரிவான கருத்து / விமர்சனத்தை இங்கே பின்னர் பதிவு செய்கிறேன்.

நன்றி: Friends Media Makers

Sep 21, 2012

கதம்பம் - 2



கடவுளுக்குக் காதைக் கொடு

சில வருஷங்கள் முன் ஒரு யோகா மையத்தில் சூன்ய தியானம் கற்றுக் கொள்ளப் போயிருந்தேன். நூற்று சொச்ச மாணவர்கள் தியானம் கற்க வந்திருந்தனர். தியானப் பயிற்றுவிப்பு முடிந்து, தீட்சை தந்தபின் தியானம் எதற்கு என்பது பற்றி குருநாதர் பேசத் துவங்கினார்.

கேள்வியை எங்களிடமே கேட்டு தியானத்தின் அவசியத்தி விளக்க முயன்றார் அவர். ”தியானம் எதற்காக செய்ய வேண்டும்?”, இது முதல் கேள்வி.

விதவித பதில்கள் வந்து குதித்தன. நோய் எதிர்ப்பு சக்தி, தீராத நோய்களில் இருந்து விடுதலை, மனநிம்மதி, மனக்குவிப்புத் திறன், செயல்திறன் அதிகரிப்பு என்று ஆளுக்கு ஒரு காரணம் அடுக்கினார்கள்.

”எல்லாம் சரியான பதில்களே. சரி, என் அடுத்த கேள்வி இது, கோயிலுக்குப் போனால் சாமியிடம் என்ன கேட்பீர்கள்?”

இந்தக் கேள்விக்கு இன்னும் நான்கு மடங்கு பதில்கள். ஆரோக்யம், மனநிம்மதி, படிப்பு, வேலை, பெண்ணுக்குக் கல்யாணம், பணம், குறைந்த வட்டியில் கடன், இத்யாதி, இத்யாதி.

“ஆக, கடவுளைப் பார்க்கப் போனால் அவரை விடுவதாயில்லை. இத்தைக் கொடு, அத்தைக் கொடு என்று ஒரே பிடுங்கல்தான். அப்படித்தானே?”

“................”

“கடவுளை என்றாவது உங்களிடம் பேச அனுமதித்திருக்கிறீர்களா?”, கேட்டாரே ஒரு கேள்வி?

“.................”

”அதற்காகத்தான் இந்த பதினைந்து நிமிட தியான நேரம் உங்களுக்கு. அந்த பதினைந்து நிமிடங்களாவது உங்கள் வாயை சாத்துங்கள். கடவுளை உங்களிடம் பேச அனுமதியுங்கள்”

நீலத்திமிங்கிலம்

Blue Whale எனப்படும் நீலத் திமிங்கிலத்தின் நாக்கின் எடை மட்டுமே ஒரு சராசரி யானையின் எடையைக் காட்டிலும் அதிகமாம்.


யம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


ததாஸ்து

குமரகுருவுடன் இந்த வாரமும் ராமாயண, மகாபாரத விவாதம் தொடர்ந்தது. ராமரைப் பற்றி ஏதோ கேட்கப் போக வழக்கம்போல நீண்டநெடிய வியாக்கியானம் தந்துவிட்டு குமரகுரு சடாரென்று மகாபாரதத்திற்குத் தாவினார்.

மகாபாரதப் போர் நேரம். குந்திதேவி கிருஷ்ணனைச் சந்திக்கிறாள். அவனிடம் கேட்கிறாள், “என் ஐந்து பிள்ளைகளையும் இந்தக் கொடும் சகோதரச் சண்டையில் இருந்து உயிருடன் காப்பாற்றிக் கொடுத்துவிடு கண்ணா”

“ததாஸ்து”, என்று விடுகிறான் கிருஷ்ணன். தட்ஸ் இட்!

கேள்வி கேட்ட தருணத்தில் தன் மூத்த மகனை, கர்ணனை மனதில் நினைக்கவில்லை குந்தி. ”என் பிள்ளைகளை” என்று கேட்டிருக்க வேண்டியதை குறிப்பாக என் ஐந்து பிள்ளைகளை என்று அவள் குறிப்பிட்டது தவறாய்ப் போனது. ஐந்து மகன்கள் மீண்டார்கள், கர்ணன் மாண்டான்.

“அதனால்தான் கடவுளிடம் எதுவும் கேட்கக் கூடாது என்பார்கள். உனக்கு என்ன வேண்டும் என்பது உன்னைவிட அவனுக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால் நீயாகக் கேட்கத் தெரியாமல் கேட்டுவிட்டு பின்னர் அவனைக் குறை சொல்லாதே”  என்கிறார் குமரகுரு. 

சரியான பாய்ண்ட்தான், ரைட்?


இன்னொரு முட்டாள்


ராஜபக்‌ஷே ராட்சஷன் டெல்லி வந்திருக்கிறான். அதை எதிர்த்து இந்த வாரம் சேலத்தைச் சேர்ந்த இன்னொரு முட்டாள் தீக்குளித்து இறந்திருக்கிறான். 

இவர்களுக்கு நினைவேந்தல்களும், வீரவணக்கங்களும், துக்க விசாரிப்புகளும், தர்ணாக்கள், மாவீரன் பட்டங்கள் என்று எல்லா நாடகங்களும் நடக்கின்றன. இவை இன்னமும் நடக்கும். நடந்து கொண்டே இருக்கும்.

"ஏண்டா டேய்! உனக்கு அவன் மேல கோபமுன்னா நீ ஏண்டா சாவற? அது எப்படிடா வீரம் ஆகும்? அதுக்கு எந்த _______க்குடா வீர வணக்கம்”ன்னு ஒருவனும் கேட்பதில்லை.

இந்தத் தற்கொலைகளை மறைமுகமாகக் கொண்டாடுபவர்களைக் கழுவிலேற்றினாலே ஒழிய இந்த நாடகங்கள் முடியும் என்று தோன்றவில்லை.
.
.

Sep 20, 2012

வெல்கம் ஆஃப்கன்



நேற்று நடந்த 2012 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறது.

காட்சி 1: சர்வதேச கிரிக்கெட்டின்  ஜூனியர் அணியான ஆஃப்கனுக்கு எதிரே இந்திய அணி அடிப்பின்னிப் பெடலெடுத்து 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. 
டயலாக் 1: ”அட! இதென்னய்யா பிரமாதம், பூச்சி டீமைத்தானே ஜெயிச்சீங்க”
காட்சி 2: சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஜூனியர் அணி என்றாலும் களத்தில் கலக்கோ கலக்கு எனக் கலக்கினார்கள் ஆஃப்கன் அணியினர். பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் இந்திய அணியினர் கண்களில் விரல் விட்டு ஆட்டினார்கள். எனினும் எப்படியோ சமாளித்து இறுதியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஜெயித்தது.
டயலாக் 2: “ஒரு சின்ன பூச்சி டீம் கிட்ட கூட கம்ஃபர்டபிளா ஜெயிக்காதீங்கய்யா! என்னத்த சாம்பியன் டீமோ நீங்க?

முதல் காட்சி நேற்று அரங்கேறாததால் இரண்டாம் டயலாகைப் பேசும் துர்பாக்கிய நிலைக்கு இந்திய விமர்சக ரசிகர்கள் தள்ளப்பட்டார்கள்.

ஜெய் ஜக்கம்மா!
.
.
.

Sep 19, 2012

அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை




விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை..

ஒரு ஊரிலே ஒருத்தன் இருந்தானாம். அவன் மாமியார் வூட்டுக்கு விருந்துக்கு போனானாம். அங்கே அவன் மாமியார் வித விதமா சமைச்சு வெச்சிருந்தாளாம். அதிலே கொழுக்கட்டை இருந்திச்சாம். நம்மாளு லைஃப்லே அது வரைக்கும் கொழுக்கட்டை சாப்பிட்டதே இல்லையாம். ‘ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்’ அப்படீன்னு சொல்லிட்டு கொழுக்கட்டையை ரவுண்டு கட்டினானாம்.

“மாமி.. இது பேரு என்ன சொன்னீங்க?”

”கொழுக்கட்டை”

“ஓ சரி.. முதல் காரியமா வூட்டுக்கு போயி பொண்டாட்டிக்கிட்டே சொல்லி கொழுக்கட்டை செய்யச் சொல்லணும்” அப்படீன்னு சொல்லிட்டு அது பேரு மறந்திடக் கூடாதுன்னு, “கொழுக்கட்டை.. கொழுக்கட்டை... கொழுக்கட்டை” அப்படீன்னு சொல்லிக்கிட்டே ஊருக்கு போயிட்டிருந்தானாம்.

போற வழியிலே ஒரு பெரிய கால்வாய். கர்நாடகாக்காரன் அணை உடைஞ்சு போயி நாசமாயிடுமோன்னு பயந்து போய் திறந்து விட்டுருந்த தண்ணி பின்னிப் பெடலெடுத்து ஓடிட்டிருந்துச்சாம். நம்மாளுக்கு முன்னாடி போனவன் கொஞ்சம் பின்வாங்கி, வேகமா ஓடி வந்து “அ...த்...தி...ரி...பா...ட்...சா” அப்படீன்னு சொல்லி தொபுக்கடீர்ன்னு அந்தப் பக்கம் குதிச்சு நடந்து போனானாம்.

“ஓஹோ.. இப்படி ஒரு வழி இருக்கோ?”ன்னு யோசிச்ச நம்மாளு.. “கொழுக்கட்டை... கொழுக்கட்டை” அப்படீன்னு சொல்லிட்டிருந்ததை விட்டுட்டு... “அ...த்...தி...ரி..பா..ட்..சா”அப்படீன்னு சொல்லிக்கிட்டே தாவினானாம். அந்தப் பக்கம் போய் குதிச்ச அப்புறம் ‘கொழுக்கட்டை’ன்றது மறந்திடுச்சாம். “அத்திரிபாட்சா.. அத்திரிபாட்சா..” அப்படீன்னு சொல்லிக்கிட்டே வீட்டுக்கு போனான்.

பொண்டாட்டியைக் கூப்பிட்டு, “ஏய்.. உங்கம்மா அத்திரிபாட்சா செஞ்சு கொடுத்தாங்க. ரொம்ப சூப்பர். அதே மாதிரி நீயும் அத்திரிபாட்சா செஞ்சு கொடு” அப்படீன்னானாம்.

“என்னாது... அத்திரிபாட்சாவா.. என்ன கண்ராவிய்யா அது?” அப்படீன்னு பொண்டாட்டி கேட்டாளாம்.

“அடிப்போடி..அத்திரிபாட்சா செய்யத் தெரியாமா நீயெல்லாம் எதுக்குடி ஒரு பொண்டாட்டி?”ன்னு கேட்டுட்டு கண்,மண் தெரியாம பொண்டாட்டியை பின்னிப் பெடலெடுத்துட்டானாம் (அட... கதை தானே.. அப்படியே இருந்திருக்கும்ன்னு நம்புங்க சார்!)

பொண்டாட்டிக்காரிக்கு அங்கங்கே காயம் பட்டு வீங்கியிருந்திச்சாம்.

பொண்டாட்டியோட அம்மா தன்னோட பொண்ணைப் பார்க்க வந்தவங்க இதைப் பாத்துட்டு, “அடப்பாவி.. என்னோட பொண்ணை இப்படி போட்டு அடிச்சிருக்கியே.. உடம்பு முழுக்க கொழுக்கட்டையாட்டம் வீங்கியிருக்கேய்யா”ன்னு மாப்பிள்ளைக்கிட்டே கேட்டாராம்.

“ஆங்...அதே தான்.. அதே தான்.. கொழுக்கட்டை.. கொழுக்கட்டை.. அதைத்தான் கேட்டேன்” அப்படீன்னானாம்.

அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை இது தான்.. போய் புள்ளக்குட்டிங்ககிட்ட இந்தக் கதையை சொல்லுங்கப்பா!

நன்றி: கதைசொல்லி ரமேசுகுமார், பேசுபுக்கு

Sep 18, 2012

ஒண்ணரை டன் இட்லி


சமஸ் எழுதிய சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திற்கு நேற்று ஆம்னிபஸ்’சில் ஒரு அறிமுகம் எழுதி ட்ராஃப்டில் சேர்த்துவிட்டு குடும்பத்துடன் சென்னை சேத்பட் வரை ஒரு வேலையாய்ப் போயிருந்தேன். திரும்புகையில் பல்லாவரம் ரயில் பிடிக்க எக்மோர் வந்தோம். மாலை ஆறரை மணி. அகில் மதியம் ஏதும் சாப்பிடவில்லை. காலை பத்தரை மணிக்குத் தின்ற பருப்பு சாதம்தான். இடையில் இரண்டொரு பிஸ்கோத்துகள், டீக்கடையில் வாங்கிய ப்ளெயின் கேக்குகள் இரண்டுதான் உள்ளே இறங்கியிருந்தன.

ராமகிருஷ்ணா மிஷனின் ஊதுபத்தி மணம்கமழும் பக்திப் பொருள்கள் விற்பனை மையம் கடந்து ரயில்நிலையம் உள்ளே நுழைந்தோம்.  அன்ரிசர்வ்ட் பெட்டியில் ஏறி அனந்தபுரியில் இடம் பிடிக்க மகாஜனங்கள் முண்டியடித்து நின்று கொண்டிருந்தன. வலது பக்கம் திரும்பிப் படியேறினால் உள்ளூர் ரயிலுக்கான நடைமேடைக்குப் போய்விடலாம்.

“கொழந்தைக்கு எதான சாப்பிடக் கிடைக்குதா பாருங்க. இப்படியே வாங்கி ஊட்டிவிட்டுட்டுப் போயிடலாம்”, மனைவியார் நினைவூட்டினார்.

உள்ளூர் ரயில் பிடிக்க வேண்டும் என்பதால் ஆட்டோக்காரரை அந்தண்டை அந்தமுனையில் இறக்கிவிடப்பா என்றது தப்பாய்ப் போனது. மறுமுனையில் இருக்கும் அடையார் ஆனந்தபவன் போக ஒண்ணரை கிலோமீட்டர் நடைமேடையில் வடம் பிடிக்கவேணும்.

நாலு அடி நடந்ததும் எக்மோர் ஸ்டேஷன் கனவான்கள் சிலர் பொட்டலம் பொட்டலமாகக் கடை விரித்திருந்தார்கள். பொட்டலத்தின் மேல் பண்டத்தின் பெயர், தயாரித்த தேதி ஆகியவை நீல நிற சாப்பா குத்தியிருந்தன. 

“பொங்கல் இருக்கா சார்?”

“பூரி இருக்கு சார்”

“பொங்கல்?”

“சப்பாத்தி இருக்கே”

“பொங்கல் இல்லையா?”

“சாயங்காலம் யார் சார் பொங்கல் சாப்புடுவா?”

இல்லை என்ற அபசகுண வார்த்தையைச் சொல்ல மாட்டாராமாம். “ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்”, என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

சாப்பாட்டுப் புராணத்தில் சமஸ் குறிப்பிட்ட “ரயில் பயணமும், ஸ்ரீரங்கம் இட்லிப் பொட்டலமும்” அத்தியாயம் அங்கே நினைவுக்கு வந்தது. ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கிடைக்கும் பிரசித்தி பெற்ற இட்லிப் பொட்டலம் பற்றின பதிவு அது. அத்தனை மிருதுவாய் இல்லாவிட்டாலும் அகில் வயிற்றில் இறங்குவதாய் இட்லி இருந்தால் போதும்.

, “இட்லி இருக்குமா?”

”இருக்கு சார்”

“ரெண்டு குடுங்க”

“நாப்பது ரூவா”

“என்னது? ரெண்டு இட்லி நாப்பது ரூபாவா?”

“ரெண்டு பாக்கெட்டுங்க. ஒரு பாக்கெட்ல நாலு இருக்கும்”

“ரெண்டு வராதா?”

“வராது”

“சரி, ஒரு பாக்கெட் குடுங்க”

வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த காத்திருப்பு அறைக்குள் நுழைந்தோம். பிரித்துப் பிய்த்தால் ரப்பர் போல் இருக்கிறது இட்லி. தட்டையாய் பிய்க்கவியலாமல் கெட்டியாய் நான்கையும் சேர்த்து வளைத்துப் பிடித்தால் “ரிங் பால்” செய்துவிடலாம் போல கனமான ரப்பர்.

இதை மட்டும் அகில் வாய்க்குக் கொண்டு சென்றால் தெனாலிராமனின் பூனையாய் ஆயுளுக்கும் இட்லியைத் தொடமாட்டான் அவன்.

மேலே படத்தில் பொங்கும் சூர்யா கணக்காய் ”ஓங்கியடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா”, என்று விற்றவன் முகத்திலேயே அந்த இட்லிகளை எறியச் சென்றவனிடம்,  “பேக் பண்ணி வருது. நாங்க வாங்கி விக்கறோம். இதுல உங்களுக்கு கம்ப்ளெயிண்ட்டுன்னா புகார் மனு இருக்கு, எழுதித் தந்துட்டுப் போங்க. நாங்க ஆபீஸருக்கு அனுப்பிருவோம். அவங்க நடவடிக்கை எடுப்பாங்க”, என்றது எந்திரம்.

அந்த புகார் மனு எங்கே போகும் என்று தெரியாதா நமக்கு? இந்த மனசாட்சி இல்லாத ராட்சஷனுங்க பவுசு காலங்காலமாத் தெரிஞ்சும் இவனுங்க கிட்ட வாங்கினது நம்ம தப்பு என நொந்துகொண்டு திரும்பினேன்.

ஆமாம், இப்படியெல்லாம் வயிற்றில் அடிப்பவர்களுக்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை? 


Related Posts Plugin for WordPress, Blogger...