Feb 29, 2012

பாஸ்! அந்த கிரி நான் இல்லீங்கோ!





முதலில் ஒரு நாள் சொக்கன் டிவிட்டரில் (அல்லது ஜி'டாக்கில்) கேட்டார்.

"ஓய்! என்ன ”அபியும் நானும்” உனக்கு நல்ல படமா?"

"இல்லீங்களே! நான் அந்தப் படம் பார்த்ததே இல்லையே!"

"அப்போ எதுக்கு பாரா ப்ளாக்'ல அப்படி கமென்ட் போட்ருக்கீரு?"

"எப்படி?"

ஒரு லிங்க் தருகிறார். அங்கே "கிரி"  என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் படத்தை கிட்டத்தட்ட அல்லது முழுசுமாய்ப் புகழ்ந்து.

"ஐயா! அந்த கிரி நானில்லீங்க, வேற யாரோ!"

"ஓ! அப்ப சரி!"

சமீபத்தில் ச.ந.கண்ணன் கேட்டது, "சொல்வனத்துல நீங்க எழுதறீங்களா?"

"தொடர்ச்சியால்லாம் எழுதறது இல்லைங்க. துருவ நட்சத்திரம் வெளியீட்டு விழா பத்தி மட்டும் ஒரு கவரேஜ் எழுதினேன். ஸ்பேஸ் கெடைச்சா இன்னும் எழுதலாம்"

"அப்போ அங்கே கிரிதரன்'ங்கற பேர்ல இசைக் கட்டுரையெல்லாம் படிச்சேனே"

"அவரு ஆர்.கிரிதரன், பெரிய ஆளுங்க. நமக்குப் பேரு வெறும் கிரி'தானுங்க, துக்கடா ப்ளாக்கருங்க", என்றேன்.

இன்று டிவிட்டரில் நம்ம நண்பர் அன்பு <@antoniOanbu>   என் பெயரை மென்ஷனில் போட்டு ஏதோ என் தலையை உருட்டியபடி தன் நண்பர்களுடன் ஏதோ அளவளாவிக் கொண்டிருந்தார்.

"யே! என்னய்யா, என் தலை உருளுது?"

"How  to remove  google  web  history " என்ற தலைப்பில் கிரி-ப்ளாக் வலைத்தளத்தில்http://giriblog.com வெளியான இணைப்பைத் தந்து, "உங்க லிங்க் பத்தித்தான் பேசிட்டு இருக்கோம். பசங்க டவுட் கேக்கறாங்க", என்றார் அன்பு.

"ஐயா! அது என் ப்ளாக் இல்லீங்கோ! அவரு வேற கிரி'ங்கோ", என்று அவருக்கும் டயலாக் மறுஒலிபரப்பு செய்தாயிற்று.

ஆகவே, அன்பர்களே நண்பர்களே வம்பர்களே!

என் பேரு கிரி மட்டும்தான். இருந்தாலும் இந்த பேருல இணையத்துல நெறைய பேரு உலாத்தறதால அவங்க பேரையெல்லாம் நான் கெடுத்ததுட வேணாமின்னு என் அப்பா பேரையும் சேர்த்து "கிரி ராமசுப்ரமணியன்" அப்படின்னு இணையத்துல எழுதிட்டு இருக்கேன். இந்த பேர்ல மட்டுந்தான் எழுதறேன். ஆமாங்க மறுக்கா சொல்லிக்கறேன், இந்த பேர்ல மட்டுந்தான் எழுதறேன்.

ஆக, என் பேரு....

கிரி ராமசுப்ரமணியன்

கிரி ராமசுப்ரமணியன்

கிரி ராமசுப்ரமணியன்


சரிங்களா?

நம்ம சைட்டு ரெண்டே ரெண்டுங்க:-

இங்கே பேசறோம்:
http://sasariri.com

இங்கே பாடறோம்:
http://paadugiren.blogspot.com

பெறகு மத்த கிரி'மார்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்!
 கொஞ்சம் கிரிராஜன், கிரிதரன், கிரிகோபாலன் அப்படின்னு உங்க பேருக்குப் பின்னால உங்க பேரோட எக்ஸ்டென்ஷனையும் சேர்த்து எழுதிக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும். உங்க பேரு என்னால கேட்டுப் போகாது.

புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோ!
.
.
.

Feb 28, 2012

சைதை பொறை நிலையம்

வணக்கம், 



உங்களிடம் ஒரு தகவல் உதவி வேண்டும் .. உங்கள் கட்டுரையில் ஒருமுறை நீங்கள் கூறி இருந்திர்கள் சைதாப்பேட்டை பொறை ரொட்டி பற்றி. நான் தாய்லாந்தில் இருக்கிறேன் இங்கே அது எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை அதற்கு பெயர் சரியாக எனக்கு தெரியவில்லை. மேலதிக தகவல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் .

முருகன், தாய்லாந்து



டியர் முருகன்,

பொறை ரொட்டி உடல்நலத்துக்கு மிகவும் நல்லது.  சென்னை மக்கள் 90 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த பொறை ரொட்டிதான் காரணம்.  இந்த பொறை ரொட்டி முக்கிஎடுத்த காப்பியைத்தான் நான் ஏழெட்டு ஆண்டுகளாக அருந்தி வருகிறேன் (ஏழெட்டு வருடமாய் இன்னமும் அந்தக் காப்பி தீர்ந்தபாடில்லை).  பால் கலக்காத காப்பி.  பொறை ரொட்டி'தான் என் ஃபேசியல் க்ரீமும் கூட. என் ‘வதன அழகு’க்கும் இதுவே காரணம்.  பொறை ரொட்டி பேஸ்ட் வெறும் பேஸ்ட் மட்டும் அல்ல; அது ஒரு பலரோக நிவாரணி.  வயிற்று வலி வந்தால் இந்தப் பேஸ்ட் கொஞ்சம் தின்றால் வயிறு தன்னால் சர்வ சத்தங்களுடன் க்ளியராகப் போய்விடும்.  தீக்காயம், ரத்தக் காயம் போன்றவற்றில் போட்டால் காயம் மாயமாகி விடும்.  அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன், பொறையும் கொஞ்ச நேரத்தில் மாயமாகிவிடும்.



விலாசம்: தக்ஷிணா இண்டஸ்ட்ரீஸ், 6, விவேகானந்தர் தெரு, பாங்காக்   பஸ் நிலையம்,  பாங்காக், தாய்லாந்து.

சென்னையில் கிடைக்குமிடம்: சைதை பொறை நிலையம், 6, விவேகானந்தர் தெரு, சைதை பஸ் நிலையம், சைதாப்பேட்டை, சென்னை - 15.

E Mail: saidhaiporai@saidhaiporai.com

Feb 17, 2012

அருகர்களின் பாதையின் காலக் கணவாய்கள்


சிறப்புப் பதிவர்: நட்பாஸ்



முதலிலேயே ஒன்று சொல்லி விடுகிறேன்: ஜெயமோகன் அவர்கள் அண்மையில் எழுதி முடித்த "அருகர்களின் பாதை" என்ற தொடர் பயணக் குறிப்புகளைப் பற்றிய எண்ணங்களை மட்டுமே இங்கு பகிர்கிறேன். இதைப் படிக்கும் நண்பர்கள், "என்னடா இவன், ஜெயமோகனுக்கே எப்படி எழுதுவதென்று பாடம் எடுக்கிறான்," என்று கோபப்பட வேண்டாம். அவர் இதுவரை எழுதியுள்ள பகுதிகளில் மேற்கோள் காட்டக்கூடிய பத்திகள் பல இருக்கின்றன. சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கும் குறைவில்லை. பிரமாதமான புகைப்படங்கள் ஒவ்வொரு பதிவிலும் உண்டு. அவற்றையெல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டுவதானால் நிறைய எழுதலாம். ஆனால் அதுவல்ல முக்கியம்.

ஜெயமோகன் இலக்கியவாதி என்ற அடையாளத்தைத் தாண்டி ஒரு ஆளுமையாக இருக்கும் நாட்கள் இவை. வழக்கம் போலவே இங்கே ஒரு டிஸ்கி-  பரவலாக  அறியப்படாதவராக, பெரும்பான்மை மக்கள் மத்தியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாதவராக அவர் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட, சமூக அக்கறையுள்ள பல இளைஞர்களுக்கு ஜெயமோகன் ஆதர்சமாக இருக்கிறார். அவர்களை நினைவில் கொண்டும் ஒரு வாசகனாகவும் மட்டுமே இந்தப் பதிவை எழுதுகிறேன்- தமிழில் பொருட்படுத்தத்தக்க கருத்துகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் எழுத்தாளர் என்ற வகையில் ஜெயமோகனிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதைச் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம் :)

பயணக் கட்டுரைகளை எழுதுபவர்கள் இரு வகை.  ஒரு வகையினர் தில்லியையே ஜெயிக்கப் போவதுபோல் படுபயங்கரமாக சத்தம் போட்டுக் கொண்டு கிளம்புவார்கள்.  நாமும் ஏதோ பெரிய பெரிய விஷயங்கள் வரப் போகிறதென்று படிக்க ஆரம்பிப்போம்.  கடைசியில் பார்க்கும்போதுதான், மன்னிக்கவும், நடுவிலேயே எங்கோ நாம் நம் நினைவைத் தொலைத்த இடத்தைப் பார்த்தால்தான், நம் அபிமான யாத்திரிகர் தில்லி விமான நிலையத்திலேயே ஆறு மாதங்களாக உட்கார்ந்திருந்திருக்கிறார் என்பது தெரியும்.  அப்புறம் ஒரு நாள் ஏதோ நினைவு வந்து, "என்ன ஆச்சு?" என்று தேடும்போது ஒரு பேரிடி இறங்கும்- அவர் தன் தொடருக்கு,  "இது பயணக் கட்டுரை அல்ல" என்று கிரிமினலாஜிக்காக தலைப்பு வைத்திருப்பார்.

ஆனால் யாத்திரிகர் ஜெயமோகன் அப்படிப்பட்டவரல்ல -  முடிவெடுத்தால் எடுத்ததுதான். ஜனவரி பதினான்காம் தேதியன்று பொங்கல், முறுக்கு இத்தியாதி வகையறாக்களுடன் கிளம்பினார் அவர். அப்போது துவங்கிய "அருகர்களின் பயணம்",  பிப்ரவரி பதின்மூன்றாம் தேதி சூடான உப்புமாவும் கருப்பு டீயுமாக முற்று பெற்றது (இது புறவயப்பட்ட காலவோட்டத்தைக் கருத்தில் கொண்டு மட்டுமே நாம் அறியக்கூடிய தரிசனம்- ஆனால், அகவயப்பட்ட அனுபவத்தின் எல்லைகள் பெல்காம் உப்புமாவின் படுபாதாள வீழ்ச்சியிலிருந்து காட்கர் கிராமத்து உளுந்துகூட்டிய சோற்றின் ஆகச்சிறந்த எழுச்சி வரை விரிகின்றன : இந்த அகப்பயண வரைபடம் பிறிதொரு சமயம் இங்கு பதிவு செய்யப்படலாம்). இந்தப் பயணத்தின் துவக்கத்துக்கும் முடிவுக்கும் இடைபட்ட ஏறத்தாழ முப்பது நாட்களில் தொடர்ந்து முப்பத்து ஒரு பயணக் குறிப்புகள் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். 

நண்பர்கள் சிலருக்கு அவரைப் பிடித்திருக்கலாம், சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். நம்மில் சிலர் அவரது எழுத்தின் ரசிகர்கள், சிலர் அரசிகர்கள். ஆனால் யாத்திரிகர் ஜெயமோகனின் தொழில் தர்மம் - அர்ப்பணிப்பு - நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பயணங்கள் களைப்பானவை.  உடல்நலனுக்குக் கேடானவை. எந்த ஒரு நீண்ட பயணத்திலும் ஆயிரம் பிரச்சினைகள், கவலைகள் நம்மை நிழலாய்த் தொடரும். இவை போதாதென்று ஆயிரம் திசைகளிலிருந்து ஆயிரம் கவன கலைப்புகள் நேரிடும். அத்தனையையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து,  ஒவ்வொரு இரவும் தூங்கப் போகுமுன் கர்மசிரத்தையாக எழுத உட்காருவதென்றால் அது சாதாரண காரியமா என்ன?

(இதை எழுதும்போதுதான் நினைவுக்கு வந்தவனாக, தில்லி விமானத்தில் ஆழ்ந்த நிஷ்டை கைகூடிய நிலையில் ஆறு மாதங்களாக அமர்ந்திருக்கும் நண்பரைப் பற்றி விசாரித்தேன்- அவர் அடுத்து அமெரிக்கா கிளம்பத் திட்டமிருக்கிறாராம். போச்சுடா!)

சீரியஸாகப் பேசினால்,  ஜெயமோகன் அருகர்களின் பாதையில் செய்த பயணம் முக்கியமான ஒன்று.  சமண வரலாறு, சமண ஆலயங்கள், இந்தியப் பண்பாடு மற்றும் இந்திய மரபு ஆகியவற்றினுள் காலம் மற்றும் வெளியில் செய்யப்பட்ட ஒரு நீண்ட பயணம் இது. தற்போது பயணக் குறிப்புகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெறும்போது சமணம் குறித்த விரிவான அறிதலை நிகழ்த்துவதாக இருக்கும். அது மட்டும் போதுமா?

நான் வாசித்தவரை இந்தப் பயணம் சமணத்தை ஆலயங்களாகவும் சிற்பங்களாகவும் அதன் உறைந்த வடிவில் பேசுவதாக இருக்கிறது.  சமண வரலாறு மற்றும் தத்துவங்கள் புதிய புரிதல்களாக, புதிய திசைகளில் விரிவதாக இருந்தாலும் சமகால சமணம் குறித்து அதிகம் பேசப்பட்டிருப்பதாக நினைவில்லை.  ஆனால், இன்றைய சமண சமூக அமைப்பு பரவலான கவனத்தைப் பெற வேண்டியது அவசியமாக இருக்கிறது. 

உதாரணத்துக்கு,  1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சமண மக்கள்தொகையில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்ற அளவில் பால்விகிதம் அதன் சமன்குலைந்த நிலையில் உள்ளது. ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற விருப்பத்தால் சமணர்கள் பெருமளவில் கருச்சிதைவு செய்து கொள்வதை இந்த நிலைக்குக் காரணம் சொல்கிறார்கள். இதை விவாதிக்கும் கட்டுரை இங்கே

ஒரு புழு பூச்சிக்குக்கூட தன்னால் எந்தக் கெடுதலும் வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருக்கும் ஒரு சமூகத்தில்தான் பெண் சிசுக்கொலை இந்தியாவிலேயே அதிக அளவில் நடைபெறுகிறது. மேற்சொன்ன சுட்டியில் சில மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 850 பெண்கள் என்ற நிலை இருப்பதையும், பீகார் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் 1000 ஆண்களுக்கு 600 பெண்கள் என்ற நிலை இருப்பதையும் குறிப்பிடுகிறார்கள. கண்ணுக்குத் தெரியாமல்- சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும்- நம் மண்ணில் ஒரு ஹோலோகாஸ்ட்டே நடந்து கொண்டிருக்கிறது.  இது வேதனையான விஷயம்.

அப்படி தப்பிப் பிறக்கும் பெண்களுக்கும் நிம்மதியான வாழ்க்கை அமைவதில்லை என்று எண்ண இடமிருக்கிறது.  சமண சமய துறவிகளில் ஆண்களைவிட பெண்கள் நான்கு மடங்கு அதிக அளவில் இருக்கின்றனர்.  உயிரைக் கொள்ளை கொள்ளும் அழகிகளாக உள்ள  பதின்ம வயது பெண்கள் துறவு பூணும் புகைப்படங்களை செய்தித்தாள்களில் பார்த்து நொந்து போன அனுபவம் உங்களுக்கும் நேர்ந்திருக்கும்.

இத்தனைக்கும், அருகர்களின் பாதை, அதன் துவக்கங்களைத் தொலைத்து ஓய்ந்துவிட்ட பாதையல்ல. ஜெயமோகனின் கட்டுரைகளைப் படிக்கும்போது இந்தியாவெங்கும் புதிய ஆலயங்கள் கட்டப்பட்டு வருவதை அறிகிறோம். பழைய ஆலயங்கள் சீரமைக்கப்படுகின்றன.  உயிர்த்துடிப்புள்ள ஒரு சமூகத்தை அவரது பயணத்தில் நாம் சந்திக்கிறோம். ஆனால் அதன் மறைவான மையத்தில் பெண்களின் கண்ணீர். அருகர்களின் பாதை இன்றும் தொடர்கிறது - தவறான திசையில்.

இந்தப் பதிவை இங்கு நான் எழுத முதற்காரணம் இதுதான்.  ஜெயமோகன் அருகர்களின் பாதையை நூல் வடிவில் எழுதும்போது, அது இன்றைய சமணர்களின் வாழ்க்கை முறையை, அவர்களுடைய விழுமியங்களைத் தீவிரமான கேள்விகளுக்குட்படுத்துவதாக இருக்க வேண்டும்.  நிகழ்கால நிஜங்கள் மறக்கப்படும்போது போலி உணர்வுகள் அந்த சமூகத்தின் மையத்தில் நிலைபெற்றுவிடும். அதன் கடந்த காலத்தில் எத்தனை உயர்ந்த மகோன்னதங்கள் இருப்பினும், சமகாலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத புளகாங்கிதங்கள் அந்த சமூகத்தை அழிக்கும். இது சமணர்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும். 

சமணர்களின் பாதை இறந்தவர்களின் பாதையல்ல. இன்று இருப்பவர்களின் பாதை. இங்கு செய்யப்படும் பயணம் பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்ப்பதல்ல. இடுபாடுகளில் மறைத்து கிடக்கும் மாபெரும் சாதனைகளை நம் கற்பனைக் கண்கொண்டு கண்டு பிரமிப்பதல்ல. இந்தப் பயணம் நாஸ்டால்ஜியாவில் ஆழ்த்துவதாக இருந்துவிடக் கூடாது  சமணத்தின் மகத்தான தத்துவங்களையும் தரிசனங்களையும் எண்ணி வியப்பதோ, அதன் வானளாவிய சிற்பங்களின்முன் நம் ஆன்மிகச் சிறுமையை உணர்ந்து வணங்குவதுமோகூட அருகர்களின் பாதையாக இருக்க முடியாது. ஜெயமோகனின் பயணம் எப்போது படித்தாலும் அது வாசகனின் எதிர்காலத்தினுள்ளும் நீண்டு செல்லக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாக இருக்க வேண்டும். 

இங்கே கொஞ்சம் சென்டிமெண்ட் பேச வேண்டியிருக்கிறது.  வாழ்க்கையை ஒரு பயணமாகவும் சாகரமாகவும் பேசுவது நம் வழக்கம். தீர்த்தங்கரர்கள் என்றால் ford makers என்று விக்கிப்பீடியா சொல்கிறது. திசையற்ற சாகரத்தில் நம்மைப் போன்றவர்கள் சரியான திசையில் பயணிக்க வசதியான வாய்க்காலோ, வரப்போ, கால்வாயோ கட்டித் தருபவர்களே தீர்த்தங்கரர்கள்.

சமய நம்பிக்கை சீரழிந்த சமகால தமிழ் அறிவுச் சூழலில் இலக்கியவாதிகளே இதைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  ஜெயமோகன் என்றில்லை, யாராகவும் இருக்கட்டும். எழுத்தாளர்களுக்கு வரும் கடிதங்களில் பலவும் வாசகர்களின் இருப்பு மற்றும் ஆன்மிகச் சிக்கல்களுக்கு விடை தேடுபனவாக இருக்கின்றன. இது ஒன்றிரண்டு நல்ல கதை கட்டுரை கவிதை எழுதிய எந்த ஒரு எழுத்தாளனுக்கும் பழக்கப்பட்ட அனுபவமாக இருக்கும். தன்னை மிதவையாகவே உணரும் எழுத்தாளனும் தன் வாசகர்களுக்கு தோணியாக இருக்கிறான் என்பதுதான் இன்றைய மெய்ப்பாடு.

எனவே, அருகர்களின் பாதை ஏதோ ஏழெட்டு பேர் சென்று திரும்பிய இன்பச் சுற்றுலாவாக முடிந்து விடக் கூடாது, வரலாற்றை நினைவூட்டுவதும்கூட முக்கியமல்ல.  தனி மனிதனின் ஆன்மிக மீட்சியை உணர்த்துவதும்கூட குறைபட்ட வெற்றியாகவே இருக்கும்.  எழுத்தாளன் இன்றைய தமிழ்ச் சூழலில் டால்ஸ்டாயாகவும் தாஸ்தெவெஸ்கியாகவும் மதிக்கப்படக்கூடிய நிலையில் நிற்கிறான்.  இந்தப் பொறுப்பை உணர்ந்து அவன் எப்படிப்பட்ட பயணத்தை நிகழ்த்துகிறான் என்பது முக்கியம்.

இந்தப் பதிவு, எழுதப்பட்ட கட்டுரைகளின் விமரிசனமாக இல்லை : ஆனால், எழுதப்படப் போகும் புத்தகத்தின் முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் :)

முடிவாக, அருகர்களின் பாதையில் ஒரு முக்கியமான புகைப்படமும் மேற்கோளும்:



"இரண்டாயிரம் வருடத்துக்கு மேல் பழைமை கொண்ட கணவாய்ப்பாதை இது. சாதவாகனர் காலகட்டத்தில் இந்தப் பாதை கல்யாணுக்குச் செல்லும் முக்கியமான பாதையாக இருந்தது எனக் கல்வெட்டுகள் சொல்கின்றன. நான் என்றால் நாணயம், கட் என்றால் வழி. இது ஒரு சுங்கமுனையாக இருந்திருக்கிறது. இங்குள்ள குகைகளில் கிடைக்கும் கல்வெட்டுகள் மௌரியர் காலத்திலேயே இந்தப் பாதை பயன்பாட்டில் இருந்ததாகச் சுட்டுகின்றன. வட இந்தியாவில் இருந்து தென்னகத்துக்கு வரும் வழிகளில் இது முக்கியமானதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் இதற்குக் கீழே உள்ள பகுதிகள் எல்லாமே வளமானவை. நீர் வசதி கொண்டவை."

யாத்திரிகர் ஜெயமோகனுக்கு நன்றி கலந்த வணக்கத்துடன் கூடிய வாழ்த்துகள்!


Feb 12, 2012

பம்மல் ட்வீட்-அப்

நேற்று மாலை நம் இல்லத்தில் ட்விட்டர் நண்பர்களுடன் ஒரு ட்வீட்-அப்’ற்கு ஏற்பாடு செய்திருந்தோம். நாலரை மணிக்கு சந்திப்பதாகச் சொல்லியிருந்தாலும் நம் இல்லத்தை அனைவரும் தேடிக் கண்டுபிடித்து செட்டில் ஆக ஐந்தரை ஆகிவிட்டது. 

கார்க்கி(@iamkarki) , செந்தில்நாதன் (@senthilchn), கிருஷ்ணகுமார் (@chinnapiyan), ராஜேஷ் பத்மன் (@rajeshpadman), அர்ஜூன் (@vedhalam), நடராஜன் (@nattu_g) , சதீஷ் (@omakuchchi) , ரவி (@pachaithamizhan) , ராஜன் (@jill_online) , பிரகாஷ் (@f5here) என ஜமா களைகட்டியது.

”வருவேன்” என்று சொல்லிவிட்டு, கடைசிநேரத்தில் ‘கடுக்காய்’ கொடுத்த கிருஷ்ணகுமார் (@iKrishS), கோகுல் (@rgokul), நரேன் (@narain), அஸ்லாம் (@4mak), கிரிகேசவன் (@girikesavan), பிவிஆர் (@to_pvr) ஆகியோரைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பேசத் துவங்கினோம்.

திருமாறன் வந்திருந்தபோது நடந்த ட்வீட்-அப் அனுபவத்தில் ராஜேஷிடம் ஜாக்கிரதையாகவே இருந்து வந்தவன் கடைசியில் அவர் ஓங்கிவிட்ட ஒரு குத்தில் மூக்கை உடைத்துக் கொண்டேன். ஆனாலும் மனிதர் அசராமல் எட்டு திசைகளிலும் சச்சின் ஸ்டைலில் சிக்ஸரும் ஃபோரும் அடித்து எல்லோர் மூக்கையும் உடைத்துக் கொண்டிருந்தார், குறிப்பாக அர்ஜூன்தான் நேற்று ராஜேஷின் டார்கெட், கொஞ்சமாய் பிரகாஷும் மாட்டினான்.

லட்டு, பாதுஷா, ஸ்பெஷல் மிக்ஸர், காஃபி, 7அப் என அவ்வப்போது வயிற்றுக்கும் ஈயப்பட்டது (வராதவங்க வயிறெரிஞ்சு போங்க).

கார்க்கிக்கு கல்யாணம் இருந்ததால் (!!!) அவர் சீக்கிரமே புறப்பட்டுவிட்டார்.  அதனால் அவருடைய ப்ராண்டட் மொக்கைகளை ரசிக்கும் பாக்கியம் இழந்தோம்.

சீனியர் ட்வீட்டர்கள் செந்தில் சாரும் கிருஷ்ணகுமார் சாரும் (@senthilchn & @chinnapiyan) லேட்டாய் லேட்டஸ்டாய் வந்தார்கள். சின்னப்பையன் என்று ஹேண்டில் வைத்துக் கொண்டு இருப்பவர் 62 வயதுக்காரர் என்று சென்னை மக்கள் இன்றுதான் அடையாளம் கண்டுகொண்டோம். 

செந்தில் சாரை இப்போதுதான் முதல்முறை சந்திக்கிறேன். சொந்த அலுவலில் ரொம்பவே பிஸியாக இருந்தாலும் நேரம் கடந்தும் பிடிவாதமாக வந்துசேர்ந்த அவர் காட்டிய “நட்புக்கு மரியாதை” நம்மில் பலர் கற்றுக்கொள்ள வேண்டியது.

அர்ஜூன், நட்ராஜ், பிரகாஷ் மூவருடனும் நான் நிறையவே சந்தித்திருப்பதால் they are as usual to my eyes.

ஜில்_ஆன்லைன் - இந்த மனிதர்தான் என்று உங்கள் முன் யாரும் சூடம் ஏற்றினாலும் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் என்னும் ரேஞ்சுக்கு இருந்தார் ராஜன். இவர் அடிக்கும் ட்விட்டுக்கும் நேரில் சந்திக்கும் மனிதருக்கும் சம்பந்தமே இல்லை.

பச்சைத்தமிழரும், ஓமக்குச்சியும்கூட நிறைய பேசவில்லை. அப்சர்வேஷன் பார்ட்டிகள் :))

மற்றபடி மற்றவர்கள் நிறைய பேசினோம்... நிறைய நிறைய பேசினோம்... மறக்காமல் இலக்கியம் பேசினோம், ட்விட்டர் அடிதடிகள் பற்றிப் பேசினோம், கூகுள் பஸ் மூடப்பட்டதால் இழந்தவைகள் குறித்துப் பேசினோம், பேயோன் யார் என்ற டாப்பிக்கும் வந்தது.

இடையிடையே மடிப்பாக்கத்திலிருந்து வீட்டம்மணி அழைத்துக் கொண்டேயிருந்தார். “எப்போ வருவீர், எப்போ வருவீர்”, என்று. வீட்டில் ”சப்பாத்தி டிஃபன்” என்று முதல் அழைப்பிலும், “வீட்டுல சப்ப்ப்ப்ப்பாத்த்த்த்த்தி டிஃபன்ன்ன்ன்ன்”, என்று இரண்டாம் அழைப்பிலும்....இன்னமும் அழுத்தம் தந்து மூன்றாவது அழைப்பிலும் சொன்னதும்தான் நம் மரமண்டைக்கு, ‘அடடே, சப்பாத்தி மாவு நாமதான் உருட்டணும்போல”, என்று உரைத்தது. களை கட்டிய ஜமாவின் இடையே, “வூட்டுக்குப் போவணும்”, என்று எப்படிச் சொல்ல என கைபிசைந்து கொண்டிருந்தபோதுதான் ஒரு புண்ணியவான் தானே வந்து மாட்டினார்.

“தல, நீங்க ஒரு பாட்டு பாடுங்க....”

பழைய காலத்து வில்லன் ஸ்டைலில் உள்ளே சிரித்துக் கொண்டேன்.... ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹஹ்ஹா....

“பாடிட்டாப் போச்சி”

நன்றி: ரவி

நான் பாடி முடிக்க மக்கள் சிதறியோடத் துவங்கினார்கள்! பம்மல் ட்வீட்-அப் இனிதே நிறைவடைந்தது.


Feb 11, 2012

மடிப்பாக்கம் டு பம்மல்


வலிய வரவழைத்துக் கொண்டது போல்தான் தோன்றியது எனக்கே; இருந்தும் அந்த இருதுளி நீரைக் கண்ணிலிருந்து வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்னால். கடந்த ஒன்பது மாதங்களில் எத்தனையோ முறை அந்த வாசல் மிதித்து உள்ளே போயிருக்கிறேன். இருந்தும் கடந்த திங்கள்கிழமை காலை ஏழு மணி சுமாருக்கு அந்த வாசலில் எடுத்து வைத்த வலதுகால் அடி’தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆம்,  சென்னை பம்மலில் புதுமனை கட்டியிருக்கிறோம். புதுமனைப் புகுவிழா கடந்த திங்கள்கிழமை நல்லமுறையில் நடைபெற்றது. இந்த மாத இறுதிக்குள் மடிப்பாக்கத்திற்கு பைபை சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்க வேண்டியதுதான் பாக்கி.

நம் இணைய நண்பர்களை எம் புது இல்லத்தில் சந்திக்க இன்று சனிக்கிழமை (11/02/2012) ஏற்பாடு செய்திருக்கிறேன். மாலை நாலரை மணி சுமாருக்கு சந்திக்க எண்ணம். வருபவர்கள் இங்கே பின்னூட்டத்திலோ அல்லது என் தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும் (+91 988 480 8680). முகவரி விபரங்கள் தருகிறேன்.

ட்விட்டர் நண்பர் சுந்தரத்தமிழன் வீடு கட்டிய வரலாறை (!!!) நம் ப்ளாக்கில் எழுதுமாறு கேட்கிறார். முடிந்தமட்டில் எழுதுகிறேன். பார்க்கலாம்.

Feb 9, 2012

தமிழ் இசைக் கட்டுரைகள்


2012  புத்தாண்டு தினத்தன்று தமிழ் இணையப் பிரபலம் மாயவரத்தான் கட்டமைத்துக் கட்டவிழ்த்திருக்கும் கட்டுரை.காம் இணையதளத்தில் சரிகமபதநி என்ற தலைப்பில் நான் இசை தொடர்பான தொடர்க் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

இதுவரை வெளிவந்துள்ள ஐந்து அத்தியாயங்களுக்கான இணைப்புகள் இங்கே. தந்திருக்கிறேன். நண்பர்கள் இந்தத் தொடரை தொடர்ந்து வாசித்து தங்கள் மேலான கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

முன்னுரை

டோபாமைன் எஃபெக்ட்ஸ்

சின்னவீடா வரட்டுமா?

கற்போமா கர்னாடிக்

எதுதான் நல்ல இசை

Feb 8, 2012

இலக்கிய மருத்துவர் எழுதிய கடிதம் ஒன்று

சென்னை திருவெற்றியூரில் பிரபல குழந்தைகள் நல மருத்துவர் ஆ.ச.கந்தன் அவர்கள். தமிழ் இலக்கியத்தின்பால் பெரும் ஆர்வம் கொண்டவர், நிறைய கவிதைகள் படைத்திருக்கிறார், நையாண்டி மேளம் என்னும் கவிதைப் புத்தகத்தை எழுதியுள்ளவர், பல கவியரங்க மேடைகளுக்குப் பெருமை சேர்த்தவர். அவர் எனக்கு எழுதிய கடிதத்தைப் மிக்க பெருமையுடன் என் வலைமனையில் பதிவு செய்து வைத்துக் கொள்கிறேன்.



அன்புள்ள கிரி,


உங்கள் கார்பரேட்கனவுகள் ஒரு நவீனசாராரின் வாழ்க்கைமுறையை பதிவுசெய்தது, வெகுசுவையாகவே !

உங்கள் வலைப்பூவில் நுழைந்தபோது உங்கள் உயரம் வியப்பினை ஏற்படுத்தியது. கனிணி இலக்கியநுட்பமும் வியாபகமும் கொஞ்சம் மிரட்டுகிறது. கனிணியில் அதிக பரிச்சியம் இல்லாத எனக்கு இங்கே என்வரையிலான நுழைவாயிலும் பிரயாணமும் பிடிபடவில்லை. ஆசிரியரும் கைபிடித்து நடத்த வழிகாட்டியும் தேவைப்படும் போலிருக்கிறது


      உங்கள் தமிழ்கிரிவலம் தொடரட்டும்;
      உங்களைச்சுற்றி-
      வாசகர்'கிரி'வலம் வளரட்டும் !



 அன்புடன்
ஆ ச கந்தன்


அன்புள்ள டாக்டர்,

தங்கள் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல.

வீட்டில் கம்ப்யூட்டர், சின்ன வயசிலிருந்து படித்துப் பரிச்சயமான தமிழ் இவையிரண்டுக்கும் இடையே இணைப்பு தந்தபோது உருவானதுதான் என் வலைமனை. அங்கே எழுதியவைகளை ஒரு பேரன்பு கொண்டவர் துணையோடு தொகுத்தபோது அது புத்தகமாகிவிட்டது.

உண்மையிலேயே இவற்றைப் பொழுதுபோக்காகவே செய்துவரும் எனக்கு இவற்றில் உயரம் எனக் கண்டு பெருமைகொள்ள ஏதுமில்லை. 

கணினித் தமிழ் பழகுதல் கடினக் காரியமில்லை. நாம் நேரில் சந்திக்கையில் ஓரிரு வகுப்புகள் நானே உங்களுக்கு எடுக்க சித்தமாக உள்ளேன். சித்தம் = பாக்கியம் இல்லை. வகுப்புகளுக்குத் தனிக் கட்டணங்கள் உண்டு. 

அன்புடன்
கிரி ராமசுப்ரமணியன்
Related Posts Plugin for WordPress, Blogger...