Apr 5, 2014

ஃபுல் மீல்ஸ்

வெள்ளிக்கிழமை.

ஹரி, நாகா இருவருக்கும் ஃபோன் செய்து இரவு உணவுக்கு வெளியே போகலாம் என உறுதி செய்து கொண்டேன். மாசம் ஒருக்கா இப்படி நாங்கள் மூவரும் சேர்ந்து தின்னப் பிரயாணிப்பது வாடிக்கை.

ஹரி ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார், “பத்து மணிக்கு ஹோட்டல்ல இருக்கணும் கிரி. இல்லைன்னா நம்ம ஓயெம்மார்’ல தின்றதுக்கு ஒண்ணும் கெடைக்காது”.

ஒரே அலுவலகம் என்றாலும் அவர்கள் வேலை பார்க்கும் கட்டடம் எங்களதிலிருந்து அரை கிமீ தூரத்தில் இருப்பதால், அவர்களை அங்கிருந்து பிக்கப் - ட்ராப் செய்வது என் கடமை. என் வேலை நேரம் இரவு பத்து மணிக்கு முடியும். அவர்களுக்கு காலை மூன்றுவரை கனடாக்காரனிடம் மேய்படும் வேலை.

வழக்கம்போல் எல்லோருக்கும் கழுத்தைப் பிடிக்கும் வேலை இருந்து தொலைக்க, ஓயெம்மார் சங்கீதாவை அடையும் போது நேரம் சரியாக பத்தரை.

“தோசை, சப்பாத்தி, பூரி இருக்கு சார்”, என்றார் பேரர்.

”ரைஸ் வெரைட்டி எதும்”

“இல்லை சார். தோசை, சப்பாத்தி, பூரி”

சுர்ரென வந்தது கோபம் எனக்கு, “இருக்கற பசிக்கு ஆந்த்ரா மீல்ஸ் அஞ்சு சாப்டுவன்யா. யானப்பசிக்கு சோளப்பொரியா”, என்றெல்லாம் மனசில் நினைத்துக் கொண்டு....

“பூரி’ன்னா சோலா பூரியா இல்லை சின்ன பூரியா?”

“கொஞ்சம் இருங்க சார். பூரி இருக்கான்னும் செக் பண்ணிக்கறேன்”, நகர்ந்தவர் நாற்பத்தி நாலாவது செகண்டில் திரும்ப வந்து, “சாரி சார்! பூரியும் இல்லை. ஆனா, பரோட்டா இருக்கு”


“போலாம் ஹரி. சரவணபவன் போலாம்”, எழுந்து விட்டேன்.

“அங்க பதினொண்ணுக்கு கடை அடைச்சிடுவாங்க. சீக்கிரம் வண்டி எடுங்க”

வண்டியை விரட்டி, டோல் பூத்தைக் கடந்து, யூ அடித்து, சரவணபவன் நுழைந்து, பார்க்கிங்கில் வண்டியைச் சாத்திவிட்டு முதல்மாடி ஏறி இருக்கை பார்த்து அமர - நேரம் சரியாக பத்து மணி ஐம்பது நிமிடங்கள்.

“வணக்கம் சார்! இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா இருக்கு சார். என்ன வேணும்?”

“ரைஸ் வெரைட்டி?”

“பத்தரைக்கு எல்லாம் க்ளோஸ் சார்”

“ஷ்ஷபாஆஆஆஆஆ”

“சரி. மூணு தட்டு இட்லி கொண்டு வாங்க மொதல்ல. தோசை சப்பாத்தி பின்ன சொல்றோம். அப்புறம்....”

“சொல்லுங்க சார்!”

“சார் இங்க பாருங்க. இந்த ராஜீவ் காந்தி சாலைல ஐடி கம்பெனி, பிபீஓ மக்கள் மாதிரியான ராக்கோழிங்கதான் ஜாஸ்தி. வெள்ளிக்கிழமைன்னா நாங்க கொஞ்சமாக் குதூகலமாகி வெளிய சாப்பிட வருவோம். கொஞ்சம் வெள்ளிக்கிழமையாவது ஒரு பதினொண்ணு, பன்னண்டு வரைக்கும் ரைஸ் வெச்சா என்ன? சரவணபவன்ல சோறு திங்கணும்னு தேடி வர்றமே. கொஞ்சம் கருணை காட்டப்படாதா? நாங்க சாப்ட்டுட்டு இந்த அர்த்தராத்திரில திரும்ப ஆபீஸ் போய் வேலை பாக்கற ரகம்”

“எங்க மேனேஜர் கிட்ட இது பத்தி சொல்றேன் சார்”

இரண்டாவது நிமிஷம் அம்மாஞ்சி தோரணையில் ஒருவர் வந்து, “எஸ் சார். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?”

“சார் இங்க பாருங்க. இந்த ராஜீவ் காந்தி சாலைல ............................... ...................... ..................................................... ....... ................ .......................... . ........................ ................ ............. ..................................................... ....... ................ .......................... . ........................ ................ ..................................................... ....... ................ .......................... . ........................ ................ ............. ..................................................... ....... ................ .......................... . ........................ ................ ............. ............ வேலை பாக்கற ரகம்”


"ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க, நாங்க ராத்திரி பத்தரையோட க்ளோஸ் பண்ணிடறோம். அதுக்கு மேல அரை மணி நேரம் டிஃபன் ஐட்டம் அவ்வளோதான்”

இட்லி வந்து மேஜையில் அமர்ந்தது. கொலைப்பசி போல, இட்லி வந்து அமர்ந்த முப்பத்தியேழாவது மில்லி செகண்டில் ஹரியும், நாகாவும் இட்லியை பிய்க்கத் துவங்கியிருந்தனர்.  நான் மேனேஜர் பக்கமாகக் கழுத்தைத் திருப்பத் தேவைப் பட்டதால் வந்தமர்ந்த இட்லி வெண்ணிறமா கருநிறமா என கன்ஃபர்ம் செய்து கொள்ளவியலாத நிலை.

“ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க, இப்படித்தான் ஒரு கப்புள் வந்தாங்க. ஹஸ்பண்ட் வொய்ஃப். அந்தம்மா புழுங்கலரிசி கேட்டாங்க, அவரு பச்சரிசி கேட்டாரு. மணி என்ன தெரியுமா? பத்து முப்பத்தி அஞ்சு. ஜஸ்ட் அபவ் ஃபைவ் மினிட்ஸ் ஆஃப் அவர் டெட்லைன். சரி’ன்னு ரைஸ் இருக்கான்னு செக் பண்ணிட்டு கொண்டு வந்து கொடுத்தோம். அந்த அம்மா ரைஸ அப்படியே தள்ளிவெச்சுட்டாங்க. சூடு இல்லைன்னுட்டாங்க”

இட்லியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேன். என் தட்டில்தான் இருந்தது வெண்ணிறமாகவே. ஹரியும் நாகாவும் அவரவர் இட்லியை முடித்துவிட்டு என் இட்லித் தட்டை விரகதாபத்துடன் பார்ப்பது தெரிந்தது.

“ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க, ராத்திரி சாப்பாட்டுக் கடை ஏழு மணிக்குத் தொடங்கறோம். ஏழு மணின்னா அதுக்கான ப்ரிபரேஷன்ஸ் ஆறரைக்குத் தொடங்கியாகணும். யூ கென்னாட் எக்ஸ்பெக்ட் அஸ் டு.... யூ நோ. இருந்தாலும், அந்தம்மாவுக்காக வேண்டி ஐ டுக் தி ரைஸ் அண்ட் கெப்ட் இட் இன் ஸ்டீம். சூடு பண்ணிக் குடுத்துட்டோம்”

இட்லிய்யை ஹரியோ, நாகாவோ லவட்டியிருப்பார்களோ? ச்சே ச்சே, ரெண்டுபேரும் கடைந்தெடுந்த ஜெண்டில்மேன்கள் அதெல்லாம் செய்யமாட்டார்கள்.

”ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க! நான் இந்த ஹோட்டல்ல இருவது வருஷமா வேலை பாக்கறேன். நேரடியா ஒண்ணும் மேனேஜர் ஆகிடலை. மொதல்ல பில்லிங் க்ளர்க்கா வேலை ஆரம்பிச்சு, சூபர்வைசர் ஆகி, அஸிஸ்டண்ட் மேனேஜராகி, அப்புறம் இப்போ மேனேஜர் ஆகியிருக்கேன், எட்டு மாசந்தான் ஆச்சு. அஸிஸ்டண்ட் மேனேஜரா எட்டு வருஷம் இருந்தேன். என்னோட முன்னூறு ஏஎம் இருந்தாங்க போட்டிக்கு. நமக்கு மேனேஜர் வாய்ப்பு வந்தது. எப்படி?”


”ஒரு பரோட்டா, ஒரு நெய் ரோஸ்ட்”, ஹரியும் நாகாவும் இரண்டாவது ரவுண்டு ஆர்டர் கொடுக்கப் போய்விட்டார்கள். “எனக்கும் ஒரு நெய் ரோஸ்ட் கொண்டு வந்துடுங்க”, இது நான் - அட்வான்ஸ் ஆர்டர்.

“ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க! கஸ்டமர்ஸ் ஆர் அவர் பாஸ். ஆம் ஐ ரைட்? இதைத்தான் எங்க மொதலாளியும் சொல்லுவார். அண்ணாச்சி இருக்காரே. அவர் எப்பவும் சொல்லுவார். கஸ்டமர் ஈஸ் அவர் பாஸ்’ன்னு. அவர் எப்பவும் தமிழ்லதான் பேசுவாரு பாருங்க. நாம கஸ்டமரை பாஸாப் பாக்கறோம். ஆனா சிலர் ஹோட்டல்காரந்தானே’ன்னு ஏளனமா நம்மளை ஓட்டறாங்க.ஸ்டில் தே ஆர் அவர் கஸ்டமர்ஸ்.அண்ட் அஃப்கோர்ஸ் தே ஆர் அவர் பாஸ்”

தலையைத் திருப்பாமல் கையால் இட்லியைத் தொட்டு... அது சூடாகத்தான் இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டேன். இப்போது வெதுவெதுப்பாக ஆகியிருந்தது”

“ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க! பகல்ல அறுநூறு மீல்ஸ் ஓடும். ராத்திரின்னா அறுவது ஓடுனா யதேஷ்டம். யதேஷ்டம்னா தெரியும்ல உங்களுக்கு? ஓகே நீங்க இட்லி சாப்பிடுங்க சார். ஆறியிருக்கப் போவுது. அந்த அறுவது மீல்ஸை ஆறு தவணைல உலைல வெக்க முடியாது பாருங்க. ஆறிப் போனா பரவால்லை சார். ஒரு சாப்பாடு நமக்காக எடுத்து வெய்ங்கன்னு ஃபோன் போட்டு சொல்லுவாங்க (சட்டைப் பையைத் தட்டிக் கொள்கிறார்). அவங்களுக்காக எடுத்து வெச்சிடுவேன். நீங்களும் வேணும்னா நம்ம நம்பர் எடுத்துக்கங்க. எழுநூத்தி எண்பது நானூத்தி எண்பது நாப்பத்தஞ்சி அம்பத்தாறு. எனி டைம், பேர் நோட் பண்ணிக்கங்க (பெயரட்டையைத் தட்டிக் காண்பிக்கிறார்).

”ஓகே சார்”

“யுவர் குட் நேம் சார்”

“கிரி.... பிபீஓ கிரி’ன்னு கூப்பிட்டா சொல்றேன்”

“கிரி.... இது போதும் சார். வாட் எ டைனமிக் நேம் (!!!!) ஐ கேன் ரிமெம்பர். யூ எஞ்சாய் அவர் இட்லி. தேங்க்யூ மிஸ்டர் கிரி”

முதலாவது மாடியிலிருந்து குதித்துவிடும் உத்வேகத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு கண்ணீர் மல்க இட்லியைத் தின்று முடித்தேன். 

“என்ன கிரி! ஃபுல் மீல்ஸ் எப்டி இருந்துச்சு?”, ஹரியோ நாகாவோ யாரோவொருத்தர் கேட்டார்கள்.

பிகு: கை கழுவப் போன இடத்தில் அதே அம்மாஞ்சி சார் என்னை வழி மறித்து அவர்கள் நிறுவனத்திற்கான மின்சார உபயோகம் குறித்துப் பேசியதை நான் இங்கு எழுத நேர்ந்தால் நீங்கள் என்னை நேரில் வந்து அடிக்கத் தலைப்படும் என்பதால்....

                                                       .....சுபம்....


Related Posts Plugin for WordPress, Blogger...