Jan 24, 2013

ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய


டேபிளைக் கடக்கையில் டாமினிக் அழைத்தான்.

”ஆழ் யூ கோயிங் டு டாக்டர்ழ்’ஸ் டெஸ்க்?”

“யெஸ் டாமினிக்”

”கென் யு ட்ழாப் திஸ் தேர்ழ்?”

ஃபைலை வாங்கிச் சென்று சீனியர் பாஸ் மேஜை மேல் வைத்துவிட்டு, அவர் கையொப்பமிட்டு அடுக்கி வைத்திருந்த நேற்றைய ஃபைல்களை அள்ளிக் கொண்டு சீட்டுக்கு வந்தேன்.

உட்கார்ந்த மறுநிமிடம் சீனியர்  பாஸ் இண்டர்காமில் அழைத்தார். "ஹூ ட்ராஃப்டட் திஸ்  லெட்டர்?"

”எது டாக்டர்?”

“நீங்க கொண்டு வந்து இப்போ வெச்சீங்களே அது”

"இட்ஸ் டாமினிக் டாக்டர்" 

"ஜஸ்ட் கம் டு  மை கேபின்"

"போச்சு! போச்சு! இந்த மனுஷன் சாதாரணமாவே சன்னதம் ஆடுவாரு இதுல சலங்கை வேற கட்டி விட்டாச்சா? இவரு டாக்டருக்குப் படிச்சாரா இல்ல இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சாரா? ஒவ்வொரு லெட்டரா இப்படி நோண்டி நுங்கெடுத்து நம்மைப் படுத்தறாரு!"

இப்போதே நமக்கு ஆங்கிலம் ததிங்கினதோம். அப்போது இந்தத் ததிங்கினத்தோமே அரைகுறை.

"என்னய்யா பொலம்பல்? ", பக்கத்து சீட் ஈஸ்வரி கேட்டார். 

"நம்ம புதுப்பய எழுதின லெட்டர் தலைவர் டேபிள்ல வெச்சிருக்கேன் என்ன பிரச்னைன்னு தெரியலை கூப்பிடறார்"

"ய்யே! அந்த டாமினிக் ஆங்கிலோ இந்தியன்யா. என்னாமா இங்கிலீஷ் பேசறான். தப்பெல்லாம் எதுவும் இருக்காது. எப்படி லெட்டர் எழுதனும்னு அவன் எழுதின லெட்டரை வெச்சு உனக்கு பாடம் எடுப்பாரு, போ"

எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.

என் நம்பிக்கையை வீணாக்காமல் டாமினிக் அந்த லெட்டரை சொதப்போ சொதப்பு என்று சொதப்பி வடித்திருந்தான். இதற்கு மேல் தப்பு செய்ய இடமே இல்லை என்று எழுத்து, சொல், இலக்கணம், இத்யாதி, இத்யாதி என்று 360 டிகிரியிலும் தவறுகள்.

அப்போதுதான் முதல்முறையாக ஆங்கிலத்தில் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடைவெளி என்பது உண்டு என்பதைப் புரிந்து கொண்டேன்.

"ஜஸ்ட் த்ரோ இட் டு ஹிஸ் ஃபேஸ் ஐ சே. யூ கென் ரைட் பெட்டர் தேன்  திஸ்" 

அது பாராட்டா இல்லை இடுப்பில் இடிப்பா என்று புரியாமல் காகிதங்களைப் பொறுக்கி வந்தேன்.  

ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியும் சிலருக்கு ஆங்கிலத்தில் நான்கு வார்த்தைகள் சேர்ந்தாற்போல் தவறின்றி எழுத வராது. சிலர் மிக அருமையாக ஆங்கிலத்தில் கட்டுரைகளை  எழுதுவார்கள். ஆனால் அவர்களுக்கு சகஜமாக அல்லது சரளமாக  இன்னொருவர் எதிரில் ஆங்கிலத்தில் பேச வராது. முதல் வகையினராக  நம் டாமினிக் போன்றவர்கள்.   இரண்டாம் வகையினருக்குப்  பிரதான உதாரணமாக  அரசுத்துறையில் பணிபுரியும் சில நிர்வாக அலுவலர்களைச் சொல்லலாம்.

இரண்டு விஷயங்களிலும் கைதேர்ந்தவர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.


அட ஆங்கிலத்தை விடுங்கள்! அது அன்னியன் போட்டுவிட்டுப் போன மொழி!

தமிழில் உரைநடை, கவிதை எழுதுபவர்களும் இந்த வகையினர் தான். இது கை வருபவர்க்கு அது பிடிபடாது அது எழுதுபவர்களுக்கு இது சரிவராது அல்லது பிடிக்காது எனவும் சொல்லலாம்.

இரண்டையும் மனசைக் கவருமாறு எழுதவல்லவர்கள் வெகுசிலரே.

அந்த வெகுசிலரில் முக்கியமானவர் கவிஞர் நா.முத்துக்குமார். உரைநடை கவிதை இரண்டையும் பிரமாதமாகக் கையாளத் தெரிந்தவர். இவர் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் மற்றும் அ'னா ஆ'ன்னா  புத்தகங்களுக்கு ஆம்நிபஸ் தளத்தில் முன்னரே விமர்சனம் எழுதியிருக்கிறேன். என்னை அந்த இரண்டு புத்தகங்களையும் வாங்க வைத்த பெருமை “கண்பேசும் வார்த்தைகள்” புத்தகத்திற்கு உண்டு.

அந்தப் புத்தகத்திற்கு ஆம்னிபஸ்சில் நாம் எழுதிய விமர்சனம் ===>>> இங்கே

பிகு: இந்தப் பதிவின் தலைப்பு நா.முத்துக்குமார் எழுதிய “கண்பேசும் வார்த்தைகளி’ல் வருவது :))

2 comments:

சீனு said...

தெளிவான எழுத்து நடை... :-)

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...