May 5, 2013

திருவக்கரை

மனைவியாரின் வீட்டில் நிரம்ப நாள்களாகவே, ”திண்டிவனம் பக்கத்துல ஒரு கோயில் இருக்கு; ஒரு நேர்த்தி உங்களுக்காக இருக்கு, போகணும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்ம ஆல்ட்டோ கார் வாங்கினதிலிருந்து ஏதும் நீண்ட பயணம் எதையும் நாமும் மேற்கொள்ளவில்லை. “எதாவது லாங் ரைட் போனாதான் ஓய் எஞ்சின் கொஞ்சம் செட் ஆகி, அது மைலேஜை ஒரு லெவலுக்கு செட் ஆக்கும்”, என்று எண்திசைகளினின்றும் வந்த அறிவுரைகள் நினைவுக்கு வர, தை மாத  மதியப் பொழுதொன்றில் தடாலடியாக திண்டிவனம் கோயிலுக்குப் புறப்பட்டோம்.

மாமனாருக்கு ஃபோன் அடித்து, “அது எந்தூரு மாமா?”

“திண்டிவனம் பக்கத்துல திருவக்கரை”

“திண்டிவனத்துலருந்து எவ்ளோ தூரம்”

“தெரியலை மாப்பிள்ளை. அங்கபோயி கேட்டுட்டுதான் போகணும்”

கூகுளிருக்கக் கவலையேன் என கணினியை ஆன் மாடினேன். “என்னங்க, அந்த மவுஸ் நேத்து கீழ விழுந்து லைட்டே எரிய மாட்டெனுதுங்க”, பின்னணிக் குரலினார் மனைவியார். எலி செத்த கணினியில் அந்தூரு எந்தூரு என்று சரிவர கூகுள முடியாமல், ஆனது ஆகட்டும், “வழியிருக்கு வாயிலே”, என்று இறங்கினோம். 

இந்தமுறையும் அச்சரப்பாக்கம் கணேஷ்பவனை சரியாக லொகேட் மாட முடியவில்லை. கோகுலுக்கு ஃபோன் செய்தால் ”எத்தினி தபாடா சொல்றது உனுக்கு”, என்று கெட்ட வார்த்தையில் வைவான் மனிதன். வேண்டாமென ஃபேஸ்பாமிவிட்டு அச்சரப்பக்கத்தைத் தாண்டினோம். 

அதிஷா சமீபத்தில் எழுதியிருந்த பதிவில் நம் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலை எங்கும் பத்து கிலோமீட்டருக்கு ஒன்று என்று பரப்பப்பட்டிருக்கும் “கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள்” பற்றிக் குறிப்பிட்டிருந்தார். காபியும் சுமார்தான் என்பது அவர் விமர்சனம். ஆனது ஆகட்டும் எம்ப்ளது கிலோமீட்டர் ஓட்டினதில் காபி காபி என்று அரற்றிய நாக்கிற்காக கிடைப்பதைக் குடிப்போம் என்று அச்சரப்பாக்கம் தாண்டினதும் வந்த ”நைண்டிநைன் டிகிரி காபி”  என்ற கும்பகோணம் அக்மார்க் பலகை பொறித்த கடையில் நிறுத்தினோம்.

பாரம்பரிய வாடையில் பித்தளை டம்ளர், டபராவில் வைத்து காபி தந்தார்கள். டிகாஷனும் பெரீஈஈஈஈஸாக நிறுத்தி வைத்த பித்தளை காபி ஃபில்டரில் வைத்து இறக்குகிறார்கள். “என்னாங்கடே படம் வேண்டிக் கெடக்கு. டேஸ்டுதான் முக்கியம்டே”, என யோசித்தவாரே குடித்தோம். அடடே! நன்றாகவே அக்மார்க் டிகிரி காபியாக இருந்தது. 

அதிஷா குறிப்பிட்டபடி வழிநெடூக கலர்கலர் கொடிகட்டின ரியல் எஸ்டேட் யாவாரிகளும் தென்பட்டார்கள். “இங்கல்லாம் யாரு வந்து லேண்ட் வாங்குவா” என்றும் .... “இன்னும் கொஞ்ச வருஷத்துல என்னாமா அப்ரீஷியேட் ஆகப் போவுது பாரு”, என்றும் வண்டியில் கொஞ்ச நேரம் சுவாரசிய விவாதம் நடந்தது.

காபி குடித்த தெம்பில்தான் நம்ம பாக்கெட்டில் சாம்சங் கேலக்ஸி அண்ட்ராய்டரார் ஒருத்தர் இருக்கிறார் என்று நினைவுக்கு வந்தது. அவர் ஏதும் உதவுகிறாரா என்று நோண்டினதில், சரியாக இங்கிருந்து ஐம்பத்தி மூணு கிலோமீட்டரில் திருவக்கரை இருக்கு என்று வழிகாட்டி மேப் எல்லாம் போட்டுக் காட்டி அருள்பாலினார்.  

திண்டிவனம் பைபாஸ் நுழையுமுன் எதற்கும் சந்தேகம் வேண்டாம் என்று வண்டியை நிறுத்தி ஒரு ஷேர் ஆட்டோ ட்ரைவரிடம் வழிகேட்டதில், ஸ்ட்ரைட்டா ஊருள்ள நொழையாம பைபாஸ்லயே போங்க, பத்து கிலோமீட்டர் தாண்டினா கூட்டேரிப்பட்டு ஜங்ஸன் வரும், அங்க லெஃப்டு எடுக்கணும். அங்கருந்து மயிலம் வழியா பத்து கிலோமீட்டர் போனா ரைட் ஸைட்ல திருவக்கரை கோயிலுக்கு பெரிய வளைவு வெச்சு வழி போவும் அங்க ரைட் திரும்புங்க. அங்கருந்து அஞ்சு கிலோமீட்டர்ல கோயில். அடடே! இவரல்லவோ கூகுளாண்டவர் என்று நினைத்துக் கொண்டேன்.


ஆட்டோ அன்பர் சொன்னபடி வடம்பிடித்ததில் மேலும் முப்பது நிமிடங்களில் கோயிலை அடைந்தோம்.


இரண்டாயிரம் வருடங்கள் பழமையான கோயில் இது என்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு நிறைய சிறப்புகளையும் சொல்கிறார்கள்.

தொண்டை மண்டலத்தில் (காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தமிழகத்தின் வடபகுதி) முப்பத்தியிரண்டு சிவத்தலங்கள் குறித்து தேவாரத்தில் குறிப்புகள் உள்ளன. அந்த முப்பத்தியிரண்டில் இந்தத் தலம் முப்பதாவது தலம்.

தேவர்களைத் துன்புறுத்திய வக்ராசுரனை பெருமாள் வதம் செய்ய அவன் தங்கையை காளி வதம் செய்கிறாள். வதம் செய்யும் நேரத்தில் வக்ராசுரனின் தங்கை கர்ப்பவதியாக இருக்க, அந்தக் குழந்தையைக் கொல்லாமல் தன் காதுகளுக்குக் குண்டலமாக அணிந்து இங்கேயே அமர்கிறாள் காளி.



இங்கே சந்திர மௌலீஸ்வரர் முக வடிவு கொண்டு காட்சி தருகிறார். அதாவது, பொதுவாக சிவன் சன்னதியில் லிங்க வடிவையே நாம் காண்போம். இங்கே கிழக்கு, வடக்கு, தெற்கு என்று மூன்று திசைகளிலும் மூன்று முகங்கள் கொண்டு காட்சி தருகிறார் பெருமான். நேபாளத்திற்குப் பிறகு இத்தகைய தோற்றம் இங்கேதான் உண்டு என்று குருக்கள் சொன்னார்.

இது நம்ம க்ளிக்

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல் பெற்ற தலம் இது.

சனீஸ்வரர் தெற்கு நோக்கி காக வாகனத்துடன் காட்சி தருகிறார்.

சிவன் கோயிலுக்குள்ளே வரதராஜ பெருமாளுக்கும் தனியே பெரிய சன்னதி உண்டு.

மூல்வர், நந்தி, கொடிக்கம்பம் - இவை மூன்றும் நேர்க்கோட்டில் அமைந்தவை அல்ல. இது ஒரு வக்ரம் என்கிறார்கள், ஆனால் அதன் தாத்பர்யம் புரியவில்லை.



கோயிலின் பின்னணியில் இந்த மலை தென்பட்டது. உடைந்த கற்குவியல்களாலான ஒரு மலை. அதென்ன என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது அது பக்கத்தில் கல்குவாரிகளில் உடைபடும் பெரிய கற்களிலிருந்து சிதறும் சிறிய (தேவையற்ற) கற்களின் குவியல் என்று. கர்மசிரத்தையாக அது ஒரு மலையாக உருவாகி நிற்கிறது.

பாலகுமாரனின் “கவிழ்ந்த காணிக்கை” கதையில் வரும் கவிழ்ந்த நந்தி இந்த ஊரின் எல்லையில்தான் எங்கோ இருக்கிறதாம். அந்தத் தகவல் முன்னமே நினைவில் இருந்திருந்தால் அங்கேயும் ஒரு விசிட் அடித்திருக்கலாம்.

எனிவே, அடுத்தமுறை சந்திரமௌலீஸ்வரர் கூப்பிடாமலா போவார்!


3 comments:

கவியாழி said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

R. Gopi said...

மயிலமும் போய் வந்திருக்கலாமே?

Unknown said...

நல்ல பதிவு.. :)

Related Posts Plugin for WordPress, Blogger...