Jan 7, 2011

வெள்ளிக் கதம்பம்


சபரிநாதன் சிரிக்கிறான்!

நன்றி: hinduonnet

யாரேனும் நிர்பந்தித்தாலேயன்றி புதுவருட தினத்தன்று கோயில் புகும் வழக்கம் எனக்கில்லை. இந்த வருடம் ஏதோ நானே நானாக மடிப்பாக்கம் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருந்தேன். 

அன்னதானத்திற்கு ஏரிக்கரை முனையிலிருந்தே மக்கள் வரிசை கட்டி நின்றிருந்தனர். கோவில் இருக்கும் அந்த வீதியில் எந்த வீட்டின் காம்பவுண்டினுள்ளும் நீங்கள் அனுமதியேதும் கோராமல் உள்ளே சென்று உங்கள் பாதணிகளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு வரலாம் என்று இருக்கிறது ஏற்பாடு. ஆஹா, எங்கள் பழைய கிராம வாழ்க்கையை நினைவு கூர்ந்தேன்!

கோவில் அருகே செல்லச் செல்ல ஒரே நெருக்கடியும் கூச்சலும் குழப்பமும் என இருந்தது சூழல்.அங்கே என்ன நடக்கிறது என யார் யாருக்குப் புரிந்தது எனத் தெரியவில்லை. தடுப்புக் கயிறுகளை நீக்கிவிட்டும், தூக்கிவிட்டும் இங்குமங்கும் மக்கள் போய்க் கொண்டிருந்தார்கள். சுடச்சுட அன்னக்கூடைகளும் குழம்பு பாத்திரங்களும் சாக்குகளில் கட்டி மக்களுக்கு மத்தியிலேயே "சைட் சைட்" என்ற கூவல்களுடன் கடத்திச் செல்லப் பட்டன.

மக்களை ஒழுங்குபடுத்த என அங்கு நின்றிருந்த தன்னார்வத் தொண்டர்களின் விசில் ஒலி அந்தப் பகுதியை நிறைத்திருந்தது. விசில் ஊதுவதையும் அவ்வப்போது யாரையேனும் ஏசுவதையும் தவிர்த்து அவர்களால் வேறேதும் செய்ய இயலவில்லை. மக்களைக் கடந்து கோவிலுக்குள் செல்வது பெரும் பிரயத்தனமாக இருந்தது.

உள்ளே கீழ் தளத்தில் ஒவ்வொரு பிராகாரத்திலும் மக்கள் முண்டியடித்து கடவுளர்களையும், பூஜாரிகளையும் இம்சித்துக் கொண்டிருந்தனர். வழக்கமான வழியிலல்லாது பின்புறம் இருந்த படிக்கட்டுகள் வழியே மேலேறிச் செல்லச் சொன்னார்கள்.  

அய்யன் அமர்ந்திருந்த கோவிலின் முக்கியப் பிரகாரம் அத்தனை ஆர்ப்பாட்டமின்றி பத்து இருபது பேர்கள் மட்டும் அங்கு இருந்தது சற்றே ஆறுதல்.

பதினெட்டுப்படி வழியே அவனைக் காணும் பாக்கியம் இல்லாததால் பக்கவாட்டில் சுவரில் முகம் புதைத்து எட்டிப் பார்க்கும் நிலை. பொன்னிறமாய் மின்னினான் ஐயப்பன். அழகிய எழில்மிகு குறுநகை அவன் முகத்தில். 

எதை நினைத்துச் சிரிக்கிறானோ? 

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!


அவசிய மென்பொருட்கள் 75 

நண்பர் சசி அவர்கள் வந்தேமாதரம் இணையத்தில் 75 அவசிய மென்பொருட்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்.  பிரவுசர்கள், ஆண்டி வைரஸ் மென்பொருட்கள், இமேஜ் எடிட்டர்கள், விடியோ டூல்கள், டார்ரென்ட் டூல்கள் மற்றும் இன்னபிற அவசிய மென்பொருட்களுக்கான தரவிறக்க இணைப்புகளுடனான அவசிய பதிவு இது.

நண்பர் சசி அவர்களின் பதிவின் இணைப்பு இங்கே



பிடித்த கவிதை







"பழுத்த மஞ்சள் இலைகளை
ஒடித்துப்போடுகிறாள் வனத்தை
சுத்தம் செய்வதாக திரியும்
பாவனைப்பெண்.
பச்சை இலைகள் துயர்மிகுந்த
தலையசைப்புடன்
விடைகொடுக்கின்றன.
இளைப்பாற இலைதேடும்
வண்ணத்துப்பூச்சிகள்
வீழ்ந்து மரித்த மஞ்சள்
இலைகள் மீது வந்தமர்கின்றன.
பாவனைப்பெண்ணின் உடல்
கணப்பொழுதில்
நிறமிழந்து மண்ணில்
சரிகிறது.
அவள் உடலுக்குள்ளிருந்து
வெளியேறுகின்றன
அடர் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்."




(நன்றி: நிலா ரசிகனின் வெயில் தின்ற மழை
 உயிர்மை வெளியீடு, விலை Rs.50, இணையத்தில் வாங்க )




நடுநிசி நாய்கள்:


கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் நடுநிசி நாய்கள் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மெரட்டுதுபா டிரைலர் என்றனர் மோகனும் செந்திலும்! எனக்கென்னவோ ஏற்கனவே பார்த்துக் கடந்த படங்களின் கலவையாகவே படுகிறது.

மிரட்டும்படி உள்ளதா? சொல்லுங்களேன்!


.
.
.

1 comment:

Philosophy Prabhakaran said...

நடுநிசி நாய்கள்: படம் முழுவதும் செக்ஸ் தாண்டவமாடும் என்று தெரிகிறது... ரத்தச் சத்தமும் முத்தச் சத்தமும் அதிகமாக இருக்கிறது... ஏதாவது உலகப்படத்தில் இருந்து உருவியிருப்பார்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...