Nov 18, 2012

தேவனின் கோயில் ஆலயமணியின் ஓசை

இந்தக் கல்யாணங்களில் ரிசப்ஷனுக்குக் இசைக் கச்சேரி நடத்தும் பார்ட்டிகளின் ஸ்ட்ராட்டெஜி எல்லாம் விசித்திரமானவை.  கல்யாண நிகழ்ச்சிக்கும் தாங்கள் பாடுவதற்கும் ஏதும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை என்று முழுமையாக நம்பிக் களமிறங்குபவர்கள் அவர்கள்.

கல்யாண வீட்டில் வந்து “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா” பாடுவார்கள். தங்களுக்குப் பாடவரும் ஒரு சிக்கலான பாடல் என்பதால் கல்யாண வீட்டிலேயே “சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை” என்பார்கள். 

தங்கள் ஆர்கெஸ்ட்ராவின் ட்ரம்மர் கற்ற சகல வித்தைகளையும் காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக,  ”சுடரோடு எரியாது திரி போன தீபம்; உயிர் போன பின்னாலும் உடல் இங்கு வாழும்.... பாடவா உன் பாடலை...................”, பாடுவார்கள். 

“சின்னவீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா” என்று அந்தந்த சீசனில் களைகட்டும் வெவஸ்தை கெட்ட அசிங்கங்களும் ஆர்கெஸ்ட்ராகளின் லிஸ்டில் கண்டிப்பாக உண்டு.

இந்த லிஸ்டைப் போட்டால் போட்டுக் கொண்டே போகலாம். அதை விட்டுவிட்டு நாம் இவர்களின் துவக்கப் பாடலுக்கு வரலாம்.

துவக்கப்பாடல் எப்போதும் பக்திப் பாடலாக இருந்தாக வேண்டும் என்பது நியதி. அந்த நியதியை எப்படிக் கடைபிடிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது விஷயம்.

பொதுவாக நிறையபேர் பாடும் பாடல்கள் இரண்டு - பக்திப் பாடல் ஆல்பத்தில் வந்த எண்பதுகளின் பாடலான ஆயர்பாடி மாளிகையில் அல்லது அதே எண்பதுகளில் இளையராஜா இசையில் ”தாய் மூகாம்பிகை” படத்தில் வந்த பக்திப் பாடலான ஜனனி ஜனனி.

ஆயர்பாடி மாளிகையில் அப்படியே சாஃப்டாக முடிந்துவிடும். பெரிய படுத்தல்கள் எல்லாம் இல்லாத பாடுபவர் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லாத சௌகர்யமான பாடல். ஜனனி ஜனனி பாட தேர்ந்த ஆரம்பகர்த்தா தேவை. “சிவசக்த்யா யுக்தோ யதிபவதி” என்று தொடங்கும் அந்த ஆரம்ப ஸ்லோகத்தை (!!)  ராஜாவுக்குப் பிறகு யாரும் இதுவரை சரியாகப் பாடிக் கேட்டதில்லை நான். 

அந்த ஸ்லோகம் யாருக்குச் சுமாரே சுமாராக வருகிறதோ அவர் தொடக்கத்தில் முன்னிருத்தப்படுவார். அதைத் தொடர்ந்து பல்லவி தொடங்கும் வேளையில் மூக்கால் குரலை வெளி அனுப்பினால் அது இளையராஜா என்று நம்பும் மற்றொருத்தர் பாடலைத் தொடங்க கச்சேரி இனிதே துவங்கும். இந்த மூக்கும் திறன் கொண்ட எவருக்கும் “அடடா, அச்சு அசல் இளையராஜா கொரல் இல்ல”, என்று எதிரில் அமர்ந்திருக்கும் ஒன்றிரண்டு ரசிகமகாஜனங்கள் புளகாங்கிதமடைந்து ஓப்பன் டு தி ஃபேஸ் பாஸிடிவ் கமெண்ட் கொடுக்கும். அதைக் கண்டு, கேட்டு அந்த மூக்கரும் புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.

கொஞ்சம் பிரபலமான ப்ரொஃபஷனல் ட்ரூப்புகள் தேர்ந்த பாடகர்கள் கைவசம் இருந்தால் “தேவன் கோவில் மணியோசை” பாடுவார்கள். சீர்காழி பாடிய ரொம்பவும் ரிஸ்கான பாடல். கல்யாணங்களில் ரொம்பவே அரிதாகக் கேட்கக் கிடைக்கும்.

பலராலும் பாடப்படும் இன்னொரு பாடல் உண்டு. அது “பாலும் பழமும்” படத்தில் வரும் “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்”. பக்திப் பாடல் என்ற தகுதியைப் பெறுவதற்கு “ஆலயம், மணி”  இந்த இரண்டு வார்த்தைகள் நம்ம ட்ரூப்புகளுக்குப் போதுமானதாக இருப்பது வினோதம்தான்.

எல்லாப் பாட்டும் போரடித்துப் போனால் என்று எடுத்துக் கொள்ள ஒரு பாடல் உண்டு. அது, “தேவனின் கோயில் மூடிய நேரம்”, என்ற பாடல். உங்களில் பெரும்பாலானவர்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். அறுவடைநாள் படத்தில் ராஜா இசையில் சித்ரா பாடிய பாடல். இந்தப் பாடலை பள்ளிப் பருவத்தில் எப்போதோ கேட்டிருந்தாலும் 2003’ஆம் வருடத்திற்குப் பின்னர் ட்ரூப்புகளில் நானும் பாடுகிறேன் என்று களமிறங்கிய பின்னரே நிறைய கேட்டேன்.

ட்ரூப்பில் பாடும் பெண்டிர் எப்போதும் தனியாவர்த்தனகர்த்தாக்கள். ஆண் பாடகர்கள் நான்கு பேர் இருந்தால் பெண் பாடகிகளின் அவைலபிலிடி ஒன்றுக்கு மேல் இருக்காது. கச்சேரி வழக்கமாக முடிய இரவு பத்துமணி ஆவதும், அதன் பின் அவர்கள் வீடு புறப்படுவதும் ”ஓகே” என்று ஒப்புக்கொண்டு நம்பி அனுப்பும் பக்குவம் கொண்ட அரிதான வீடுகளிலிருந்து வருபவர்கள் அவர்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்களின் திறமை இரண்டே விஷயங்கள்தான். ஒன்று தாளத்தோடு பாடுவது; இரண்டு பாடலின் ஆரம்பம், இடையே, முடிவில் என்று எந்த இடத்தில் எடுக்க/நிறுத்த வேண்டுமோ அதை சரியாக அறிந்து வைத்திருப்பது. மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி, உச்சஸ்தாயி, ஸ்ருதி பிசகல்கள், சங்கதிகள் என்ற விஷயங்களுக்குள் எல்லாம் இவர்களில் பெரும்பாலானோர் நுழைய மாட்டார்கள். எனவே இவர்கள் பாடும்போது இந்த தேவனின் கோயில் போன்ற பாடல்களின் முதல் இரண்டு வார்த்தை உங்களுக்குப் புரிந்துவிட்டால் நீங்கள் பெரிய ஜீனியஸ். (சக ஆர்கெஸ்ட்ரா பாடகியர் இந்தப் பதிவை தப்பித் தவறியும் படிக்காமல் இருக்கக் கடவது)

ரொம்ப நாட்களுக்கு இது ஏதோ பக்திப் பாடல்தான் போல என்று நினைத்திருந்தேன். ஒருமுறை டிவியில் அறுவடைநாள் படம் தொடங்கும்போது இந்தப் பாடலுடன் தொடங்க, கொஞ்சம் சித்ரா குரலில் அந்தப் பாட்டை  முதல்முறை முழுசாய்க் கேட்டேன். இதென்ன கோயில் மூடினாற்போலெல்லாம் பாட்டில் வருகிறது. கோயில் திறந்தால்தானே பக்தி என்று வரிகளை உன்னிப்பாய்க் கவனித்தேன். கொடுமையே கொடுமையே என்னும் அளவிற்கு இந்தப் பாடலிலும் தேவனையும் கோயிலையும் விட்டால் பக்தியுடன் எந்த ஸ்னானப்ராப்தியும் இல்லாத பாடல் இது. சுமைதாங்கி, இடிதாங்கி என்றெல்லாம் பாடல் நடுவில் வருகிறது.

என் ட்ரூப் ஓனர் சரவணகுமாரிடம் கேட்டேவிட்டேன், “என்ன மச்சி, தேவன், கோயில், ஆலயம், மணி இப்படி எல்லாம் வார்த்தை வந்தா அது பக்திப் பாட்டு ஆகிடுமா? என்னடா உங்க லாஜிக்கு?”

“சிம்பிள் லாஜிக் மச்சி. மங்களகரமான வார்த்தைகளை வெச்சு கச்சேரி தொடங்கறோம். அவ்வளவுதான். அதுக்கு மேலே என்ன லைன் வருதுன்னு ரெண்டு வருஷம் கச்சேரில பாடின பிறகுதானே உனக்கே விளங்கிச்சு. இங்க ஒருநாள் கேக்கறவனுக்கு என்ன விளங்கப் போவுது?”

என்னத்த சொல்ல? என்னமோ பண்ணுங்கடா என்று அதன்பின் இந்த விஷயத்தில் நான் கேள்வியே கேட்பதில்லை.

லேட்டஸ்ட் சொல்வனம் இதழில் சுகா எழுதிய தேவனின் கோயில் பதிவைப் படித்த பின்னர்தான் இந்தப் பாடலுக்கு கச்சேரியைத் துவங்குவதற்கு எத்தனை பெரிய தகுதி இருக்கிறது எனப் புரிகிறது. சில விஷயங்களில் உங்களுக்குள் ரசனையை விதைக்கவும் யாரேனும் தேவைப்படுகிறார்கள்.  இரண்டு நாட்களாக இந்தப் பாடலுடனேயே உழன்று கொண்டிருக்கிறேன்.

என்ன எழுதினாலும் எத்தனை எழுதினாலும் சுகா கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தேக்கி வைத்த ரசனையைக் கொண்டு எழுதியதைப் போல் என்னால் எழுதிவிட முடியாது. எனவே அவர் வரிகளிலேயே இந்தப் பாடலைப் பற்றி படித்து விடுங்கள்.

அடுத்ததாக “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” பாடலானது பக்திப் பாடலுக்கான அந்தஸ்து உடையது என்று என் மனசு ஒப்புக்கொள்ள யார் பதிவு எழுதுவார்களோ தெரியவில்லை

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

குறிப்பிட்ட எல்லா பாடல்களும் அருமை...

நேரம் கிடைத்தால் உங்க மனது ஒப்புக்கொள்ளுமாறு ஒரு பதிவு எழுதி விடலாம்...

நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...