Showing posts with label சென்னை புத்தக விழா. Show all posts
Showing posts with label சென்னை புத்தக விழா. Show all posts

Jan 6, 2012

அறிவாலயத்தில் நம் புத்தகம்

சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று கோலாகலமாய்த் துவங்கியுள்ளது.

ஸ்டால்களின் எண்ணிக்கை, வருகை புரிவோர், புத்தகங்களின் விற்பனை என அனைத்திலும் இந்த முறை சென்ற ஆண்டைவிட சாதனைகள் இருக்கும் என நம்புவோம்.

நான் எழுதி சென்ற மார்ச் மாதம் வெளிவந்த கார்பரேட் கனவுகள் புத்தகம் கீழ்கண்ட ஸ்டால்களில் கிடைக்கும்.



அறிவாலயம் - ஸ்டால் எண் 308 - 309

ஸ்ரீ செல்வ நிலையம் - ஸ்டால் எண் 399



மறக்காமல் வாங்கிப் படித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

நன்றி!




35ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி

செயிண்ட் ஜார்ஜ் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
சென்னை.
வார தினங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 9 வரை.
விடுமுறை தினங்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 வரை.


Jan 15, 2011

சங்கீத சண்டமாருதம் லலிதா ராமை சந்தித்தேன்!

சிறப்புப் பதிவர்: நட்பாஸ்

கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் இருக்கிற வலைவாசிகள் எவரும் லலிதா ராமைத் தெரியாதவராக இருக்க முடியாது. சமகால இசை விமர்சகர்களில் ஆகச்சிறந்த ஒரு ஆளுமையாக அறியப்படுபவர் இவர். தமிழ் பேப்பரில், " நெருப்பென்று எழுதினாலே படிக்கும்போது விரல் சுட நானென்ன லா.ச.ரா-வா? நேற்றைய கச்சேரியில் கேட்ட சங்கீதத்தை விவரிக்க லா.ச.ரா எழுத்து எனக்குக் கூடி வந்தால்தான் உண்டு," என்று எழுதிய மகானுபவர் லலிதா ராம்.

லலிதா ராமின் எழுத்து என்னையும் உங்களையும் கவர்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை- அவர் இருபெரும் துருவங்கள் இணையும் ஒற்றைப் புள்ளி என்பதை நினைவில் வைத்துக் கொண்டால். ஆமாம், "பசித்தவன் பாலைக் கண்டது போல் உங்கள் எழுத்தை படித்துக் கொண்டே இருக்கிறேன்," என்று சாருவாலும், " ஒரு காலகட்டத்தை கண்ணுக்குக் கொண்டு வந்த எழுத்து"" என்று ஜெமோவாலும் பாராட்டப்பட்டவர் லலிதா ராம். மிஷ்கின் என்ற விபத்தைத் தவிர்த்தால் கலைஞர், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்ற மாபெரும் ஆளுமைகளுக்கும்கூட இந்த பாக்கியம் வாய்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

அப்பேற்பட்ட லலிதா ராமை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? உங்களுக்கு எப்படி இருக்குமோ தெரியாது, நேற்று காலை அவர் புத்தகக் கண்காட்சியில் தன்னை சந்திக்கலாம் என்று என்னிடம் கைபேசியில் சொன்னதும் விதிர்விதிர்த்துப் போய் விட்டேன்- ஒன்றே முக்கால் மணிக்கே அங்கே போனவன், நாலு மணி வரை ஒரு ஆவேசமான மனநிலையில் புத்தகக் கண்காட்சியை பத்திருபது ரவுண்ட் சுற்றி வந்து விட்டு, ஒவ்வொரு ரவுண்டிலும் என் தைரியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து சரியாக நான்கு மணிக்கு நாக் அவுட்டாகி அவரை சந்திக்காமலேயே வீடு திரும்பினேன்.

oo0oo

நான் அத்தனை பயந்திருக்க வேண்டாம். லலிதா ராம் அநியாயத்துக்கு இளைஞராக இருக்கிறார். கர்நாடக இசை விமரிசனம் என்றாலே சுப்புடுதானே நினைவுக்கு வருவார்? அவரளவுக்கு கிழவராக இல்லாவிட்டாலும் ராம் ஒரு நாற்பது வயதையாவது கடந்தவராக இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், நேரில் பார்க்கும்போதுதான் தெரிந்தது, அவருக்கு என் வயதில் பாதிகூட இருக்காது என்று- கல்லூரி வகுப்பைக் கட் அடித்துவிட்டு சைட் அடிக்கிற பையன் மாதிரி புத்தகக் கண்காட்சி வளாகத்தைச் சுற்றி வருகிறார் இவர். நான் இவரோடு இருந்த அரை மணி நேரத்தில் ஒரு ஐந்து ரவுண்டாவது அடித்திருப்பேன்.

ஆனால் ஒன்று, புத்தகக் கண்காட்சிக்குப் போகிறதானால் நீங்கள் லலிதா ராமைத்தான் துணைக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டும்- எல்லாருக்கும் இவரைத் தெரிகிறது, எல்லாரையும் இவரும் தெரிந்து வைத்திருக்கிறார். இது பெரிதில்லை, நம்மையும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிற உத்தம குணம் இவருக்கு இருக்கிறது.

இல்லையா பாருங்கள், கிழக்கில் அடர்த்தியாக மீசை வைத்துக் கொண்டு சூமோ வீரர் மாதிரியான உருவத்துடன் "இதை எடுத்து அங்க வையப்பா! அதை எடுத்து இங்கே வையப்பா!" என்று மிரட்டிக் கொண்டிருந்த ஹரன் பிரசன்னாவிடம் என்னை இழுத்துக் கொண்டு போகிறார், லலிதா ராம்- "இவர் யார் தெரிகிறதா?"

ஹரன் பிரசன்னா என்னை பனுவலில் வாய்மொழி காணா உணர்வுகளின் விளிம்பில் உறைந்த விழிவாசல் நிறுத்தி வைத்தார்- இந்த மாதிரி லலிதா ராம் எத்தனை பேரை பிடித்துக் கொண்டு வந்து காட்டியிருப்பாரோ என்னவோ, பாவம். நான் என் கலவரத்தைக் காட்டிக் கொள்ளாமல் ஒரு குறுஞ்சிரித்தேன்- உள்ளே ஒரே உதறல். தன்னைக் கிவிஞர் என்று சொல்லிய ஆள் இவன்தான் என்று ஹரன் பிரசன்னா என்னைக் கண்டு பிடித்து விடுவாரோ என்று நடுக்கம்.

நல்ல வேளை, "இவர்தான் களிமண்கலயம் என்ற பெயரில் ட்விட் பண்றார்," என்றுதான் அறிமுகப்படுத்தினார் லலிதா ராம். ஹரன் பிரசன்னா இறங்கப் பார்த்தவர், ஏறப் பார்க்க மேனக்கிடாமல், "நல்லா டிவிட்டு பண்றீங்க," என்று மையமாகப் பாராட்டிவிட்டு, "ஏ, அதை எடுத்து இங்கே வையப்பா!" என்று தன் வேலையைத் தொடர்ந்தார்.

அங்கே ஆரம்பித்தார் லலிதா ராம், அடுத்து "பா ராகவன் இங்கதான் எங்கேயாவது இருப்பார். உங்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்," என்று பாராவிடம் அழைத்துப் போக முனைந்தார்- "என்னைப் பாத்தா அவர் எதுக்கு சார் சந்தோஷப்படணும்?" என்று கேட்டால், புதிராக என்னைப் பார்க்கிறார், "என்ன சொல்றே?" என்கிறமாதிரி. நல்ல வேலை பாரா இல்லை, தப்பித்தேன்.

புத்தகக் கண்காட்சியில் இருக்கிற ஒவ்வொரு பெரும்புள்ளியைப் பார்க்கும்போதும் இதே கதைதான்- "அதோ அங்கே முக்தா சீனிவாசன் இருக்கார். அவரோட நீங்க பேசியாகணும்," "நாஞ்சில் நாடன் கிட்ட உங்களை அறிமுகப்படுத்தட்டுமா?', "உயிர்மைல சாரு இல்லாம போயிட்டாரே, இருந்திருந்தா அவர்கிட்ட நாலு வார்த்தை பேசியிருக்கலாம் நீங்க," (சாரு இவருக்கு வேண்டுமானால் ஆயுட்கால ரசிகராக இருக்கலாம், அதற்காக நம்மைப் பார்த்து "யார் மேன் நீ?" என்று கேட்க மாட்டார் என்று என்ன நிச்சயம்?) இப்படியே வழி நெடுக சொல்லிச் சொல்லி முடிவில் என் மனதில் எனக்கே என்னைப் பற்றி ஒரு விஐபி மாதிரியான பிரமிப்பை ஏற்படுத்தி விட்டார் அவர் ("நீங்க ஒரு ரெண்டு நிமிஷமாவது ஞாநிகிட்ட பேசணும்!")

இவ்வளவு நல்லவராக இருக்கிறார், இவரா கர்நாடக சங்கீதம் என்று வந்தால் அந்த போடு போடுகிறார், இவரா லாண்டிங் நோட்ஸ் விஷயத்தில் ஜெயமோகனையே பதம் பார்த்தார் என்று உள்ளூர வியந்தபடி அவருடன் பேசிக் கொண்டு வந்தேன், என் சந்தேகத்தை வழியில் நடந்த இரண்டு நிகழ்வுகள் போக்கின.

முதல் நிகழ்வு: என் கையில் கம்ப ராமாயணம் இருப்பதைப் பார்த்ததும் (அதை ஏன் வாங்கினேன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன்), "கம்ப ராமாயண உரை என்றால் ஆகச் சிறந்த உரை வை மு..." என்று ஆரம்பித்தார் அவர்.

"கோதைநாயகியா?" என்று ஆர்வக் கோளாறில் உளறி விட்டேன்- உளறினது அவரது பதிலைக் கேட்டதும்தான் புரிந்தது.

"இல்லை இல்லை, வை மு ராமசாமியோ கந்தசாமியோ யாரோ ஒருத்தர் எழுதினது- யூ நோ வாட் ஐ மீன்!" என்று கூர்நகம் மெல்ல வெளிப்பட்டது.

"ஆகா, நாம கோயிஞ்சாமின்னு தெரிந்து போச்சுடா!" என்று பல்பை சத்தமில்லாமல் வாங்கி என் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

இரண்டாவது நிகழ்வு: இது எனது மிக நுட்பமான அவதானிப்பு- ஒரு இடத்தில் லலிதா ராமைக் கண்டதும் ஒல்லியான உருவம் கொண்ட ஒருவர் முகம் வெளிறி, முட்டி மடங்கி அவசர அவசரமாக ஒரு ஸ்டாலுக்குள் பதுங்கினார்- "கர்நாடக இசையில் ஸ்ருதியுடன் பாடுபவர்கள் குறைச்சல் என்று சொன்னால் நிறைய பேருக்கு கோபம் வருகிறது. அப்படிச் சொல்ல, தீவிர கர்நாடக சங்கீத ரசிகனான எனக்கும்தான் வலிக்கிறது. ஆனாலும், எவ்வளவு நாள்தான் denial-ல் வாழ்வது?" என்று லலிதா ராமால் மணி கட்டப்பட்ட பூனைகளில் ஒருவராக அவர் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த இளம் வயதில் இவ்வளவு தன்னம்பிக்கையும் தீவிரமான விமரிசனப்பார்வையும் ஒருவருக்கு இருப்பது ஒரு ஆச்சரியம் என்றால், இசை தவிர மற்ற விஷயங்களில், குறிப்பாக நமது புகழ் மற்றும் அறிவுக்கூர்மையில் இவர் வைத்திருக்கிற அபரிதமான நம்பிக்கையைப் பற்றி எழுத வேண்டுமானால் நானும் லா.சா.ராவைத்தான் கூட்டிக் கொண்டு வர வேண்டும்.

எதற்கும் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: முன்னே பின்னே நீங்கள் பேசியிராத ஒருவர் உங்களை அழைத்து, "நான் யார் பேசுகிறேன் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!" என்று நாலு சான்ஸ்- சரியாக நோட் பண்ணிக் கொள்ளுங்கள்- நாலு சான்ஸ் கொடுத்தால் உடனே கண்ணை மூடிக் கொண்டு லலிதா ராம் என்று சொல்லி விடுங்கள்.

oo0oo

நான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கம்ப ராமாயணத்தை ஏன் வாங்கினேன் என்று கடைசியில் சொல்கிறேன் என்று எழுதினேன் இல்லையா? அதுகூட லலிதா ராமுக்காகத்தான்.

அவர் கர்நாடக இசை குறித்து மட்டுமின்றி விளையாட்டு குறித்தும் எழுத "கிரிக்கெட் தவிர" என்ற ப்ளாக் வைத்திருக்கிறார். வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயங்கள் குறித்து அதில் எழுதும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். நமது நண்பர் கிரி இங்கு எழுதவிருக்கிறார் என்பது உங்களுக்கு இனிப்பான செய்தி.

லலிதா ராம், ஸஸரிரி கிரி- ரெண்டு பேருமே வெயிட்டான கைகள். இவர்கள் முன் தாக்குப் பிடிக்க நம்மால் ஆகுமா? பார்த்தேன், இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்திருப்பதாகத் தெரிந்தது. நாமும் அதிலிருந்து கொஞ்சம் போல உருவி விட வசதியாக அவசரப் போலீஸ் கம்பரைக் கையில் வைத்துக் கொள்ள உத்தேசம்.

"உள்ள நீர் எல்லாம் மாறி, உதிர நீர் ஒழுக, நின்றான்" என்று நடாலின் தோல்வி குறித்த வர்ணனைகளுடன் செவ்வியல் இலக்கியத்தின் கூறுகள் கொண்ட உயர்தர பதிவுகள் வெகு விரைவில் கிரிக்கெட் தவிர என்ற தளத்தில் வரவிருக்கின்றன. நீங்கள் அனைவரும் அதை அங்கு வந்து வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்- சாருவும் ஜெமோவும் என்னை இந்த ஜன்மத்தில் பாராட்டப் போவதில்லை: நீங்களாவது வந்து பாராட்டினால் கொஞ்சம் கெத்தாக இருக்குமில்லையா?



Jan 13, 2011

சென்னை புத்தக விழாவில் நானும்...

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் என்னிடம் பர்சனலாக அவர் புத்தகம் ஒன்றின் வாயிலாக சொல்லியபடி 'வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடிக்குமுன் மேலும் புத்தகங்கள் வாங்குதல் இல்லை' என்ற மகோன்னத சபதம் ஏற்றிருந்தேன்.

ஒவ்வொரு வருடமும் இப்படி சபதம் ஏற்பதுண்டு. சாந்தி தியேட்டர் வளாகத்தில் சரவணபவன் சென்று தயிர்வடை சாப்பிட்டுவிட்டு அப்படியே வாசலில் இருக்கும் சாந்தி புக்பேலஸ் வாசல் மிதிக்கும் வரை அல்லது ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி புத்தக விழா அரங்கினுள் நுழையும் வரை அந்த சபதம் உயிருடன் இருக்கும்.

இந்த வருடம் எனக்கு புத்தக விழா செல்ல அமைந்த முக்கியக் காரணங்கள் இரண்டு. என்.சொக்கன் அவர்களின் சென்னை புத்தக விழா விஜயம் முதற்காரணம். அவரை சந்திக்க வேண்டும் என்பது என் இந்த வருட விழா அஜெண்டாவில் இருந்தது. பதிப்பாளர் அழைத்திருந்தார்.  கார்பரேட் கனவுகள் இறுதி ப்ரூஃப் தயாராக இருப்பதாகவும், முடிந்தால் புத்தக விழா அரங்கில்  வந்து சேகரித்துக் கொள்ளுமாறும் சொல்லியிருந்தார். இது முக்கியக் காரணம்.


பூந்தமல்லி நெடுஞ்சாலையில் யு.டர்ன் எடுக்கையிலே தன் முத்திரை வரிகளுடன் வரவேற்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் "புத்தகங்களால் இந்த உலகைப் படியுங்கள், உலகையே புத்தகமாகப் படியுங்கள்" என ஏதோ படித்தேன். ஆஹா படி தேன்.



உள்ளே நுழைந்து பைக்கின் கழுத்தைத் திருகிவிட்டு உள்ளே நுழைய முற்படுகையில் வழியில் நின்று வழி மறித்து நடிகர் பார்த்திபன் தொடங்கி, சாரு, மனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்துச் சித்தர், ஜெமோ, எஸ்.ரா, மாமல்லன், வாலி, வைரமுத்து என அனைவரும் வரிசைகட்டி வரவேற்றனர்.  

தமிழ் எழுத்துச் சூழலின் ஆசான் சுஜாதாவின் வரவேற்பிற்கு இணை ஏதுமில்லை என்பேன். மூன்று அல்லது நான்கு பெரிய சைஸ் பேனர்கள் அவருக்கு. வெவ்வேறு பதிப்பக உபயத்தில். அத்தனை பெரிய பேனர்கள் "லைவ்" எழுத்தாளர்கள் யாருக்கும் கூட இல்லை என்பது சுஜாதா இன்னமும் எத்தனை "லைவ்லி"யான எழுத்தாளர் என நிரூபித்துக் கொண்டிருந்தது.


வார நாளாக இருந்ததனால் வாசலில் வழியெங்கும் பதிப்பகத் தகவல் காகிதங்களைத் தருபவர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. எனவே,  படிக்காமல் கிழித்தவைகள் குறைவாகவே இருந்தது சற்றே ஆறுதல்.

கூட்டம் சுமாராக நன்றாகவே இருந்தது. வார நாளாக இருந்தாலும் அந்த மதிய வேளையிலும் எல்லா சைஸ்'களிலும்.... ச்சே ச்சே... சீ சீ... மன்னிக்கவும்... எல்லா வயஸ்'களிலும் பெண்கள் வந்திருந்தார்கள். அஃப் கோர்ஸ், ஆண்களும் கூட சிலப்பலர் வந்திருந்ததாக நினைவு.

அடுத்த வருடங்களில் டிக்கெட் வாங்காமல் உள்ளே செல்ல வகை அமைகிறதா எனத் தெரியவில்லை. இந்த முறை நம் ஜம்பத்தை பரிசோதிக்கலாம் என்று டிக்கெட் கவுண்டரில் "ஹல்லோ சார், நான் இந்த மாதிரி அந்த மாதிரி...கிட்டத்தட்ட எழுத்தாளன் மாதிரி... டிக்கெட் எடுக்கணுமா?" எனக் கேட்டதற்கு, "தம்பி, சாருக்கு வி.ஐ.பி. டிக்கெட் அம்பது ரூபாவுல குடுத்து விழா அமைப்பு நன்கொடை ஐநூறு ரூவா வாங்கு", எனக் கேட்ட குரலுக்கு, "வேண்டாங்க, நான் வளவனூர் வண்டுமுருகன், சாதா டிக்கெட்டே குடுங்க" என உள்ளே நுழைந்தேன்.

அருணோதயத்தில் பதிப்பாளர் அரு.சோலையப்பன் காத்திருந்தார். கார்ப்பரேட் கனவுகளின் ப்ரூஃப் காகிதங்களை பெற்றுக் கொண்டு கொஞ்ச நேரம் அங்கே அவருடன் அளவளாவல். சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் அணிந்துரை மகிமைகளை பதிப்பாளர் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்கள் முன்புதான் அங்கே சிலம்பொலி வந்து சென்றார் எனத் தெரிந்தது.

அருணோதயத்தில் மங்கையர் கூட்டம் சற்று அதிகமாகவே மொய்த்திருந்தது. இன்டர்நெட், மெகாத் தொடர்கள் ஆகியவற்றைத் தாண்டியும் பெண்கள் இன்னமும் மாதர் நாவல்களைப் படிப்பது அங்கே தெரிந்தது. முக்கியமாக ரமணி சந்திரன் நாவல்கள். சிலர் "தொடுகோடுகள், சாந்தினி, மதுமதி" என நாவல் பெயர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மும்பையில் இருந்து வந்திருந்த ஒரு பெண்மணி கட்டுக் கட்டாய் ரமணி சந்திரன் நாவல்கள் வாங்கியது வாய் பிளக்க வைத்தது. யாருக்கோ போன் போட்டு "பூங்காற்று இருக்கா, தீப ஓளி வாங்கிட்டோமில்ல" என உறுதி செய்துகொண்டு புத்தகங்கள் அள்ளிக் கொண்டிருந்தார்.

அங்கேயே "தென்னை மரம் வளர்ப்பது எப்படி" (என் மாமாவுக்கு), "பிழையின்றி தமிழில் எழுதுவது எப்படி" (இது எனக்கு) வாங்கிவிட்டு மெதுவாய் நகர்ந்தேன்.

சொக்கன் அவர்களை கைபேசியில் அழைக்க கிழக்கில் சந்திக்க முடிவாயிற்று. கிழக்குக் காத்திருப்பில் உலோகம் (ஜெமோ), கம்ப்யூட்டர் கிராமம் (சுஜாதா) கையில் எடுத்து பில் போடுமுன் சொக்கன் வந்தார். பில்லிங் கவுண்டர் மேஜை மீது புத்தகத்தை வைத்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு பத்து நிமிட நலம் விசாரிப்புகள், என் பக்கமிருந்து அணிந்துரைக்கான நன்றி நவிலல்கள், அவரிடமிருந்து என் எழுத்திற்கு பாராட்டுக்களும் எனக்கான டெவலப்மென்ட் குறிப்புகளும் வாங்கி மற்றும் தந்து கொண்டபின், அவர் பொன்னான நேரத்தைக் கொல்லும் மனமின்றி அங்கிருந்து நகர்ந்தேன்.

அந்த பத்து நிமிடத்தில் "கிளியோபாட்ரா" முகில் அவர்களை முதலில் அறிமுகம் செய்தார் சொக்கன். முகில் போல லேசாகவே இருந்தார்.

பா.ரா. ஏதோ தீர்க்க சிந்தையோடு ஹரன் பிரசன்னாவின் பக்கவாட்டில் அமர்ந்திருக்க அங்கும் ஒரு அறிமுகம். சம்பிரதாய வார்த்தைகளை இதயத்திலிருந்து எடுத்து "உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்" எனச் சொல்லித் திரும்பினேன்.

நானாக சென்று ஹரன் பிரசன்னாவிடம் கை நீட்டினேன். "பிரசன்னா" என்று வெளியே குரல் கேட்டது. "யாவாரம் நடக்கற எடத்துல என்ன வந்து டிஸ்டர்பன்ஸ் வேண்டி கெடக்கு ராஸ்கல்" என்று ஒரு முரட்டுக் குரல் உள்ளேயிருந்து யாருக்கும் கேட்காமல் எனக்கு மட்டும் கேட்க. "ரொம்ப நன்றி சார்" என அங்கிருந்தும் நகர்ந்தேன்.

வாங்கிய புத்தகங்களை கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு சுற்று கிழக்கைச் சுற்றினேன். நம்பக்கூடாத கடவுளை (அரவிந்தன் நீலகண்டன்) கையில் எடுத்துக் கொண்டிருந்தபோது அலுவலக அழைப்பு.

"ஹலோ, சொல்லுங்க!"

"கிரி?"

"சரியா கேக்கலை. இருங்க வெளியே வர்றேன்", கையில் புத்தகங்கள். பில் போடவில்லை. வெளியே நடக்கத் துவங்கிவிட்டேன்.

"சார்! பில்லு", குரல் கேட்டு.

"ஓ! சாரி சார்! இந்தாங்க", என போனில் பேசிக்கொண்டே பில்லிட்டு, பணம் தந்து, புத்தகங்கள் வாங்கி, பேசி முடித்து மீண்டும் "அயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்" எனச் சொல்லி, "தட்ஸ் ஓகே சார்" என்ற வார்த்தைகளும் "தெரியுண்டா உங்களைப் பத்தி", என்ற பார்வைகளும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.


கால் வலி துவங்குமுன் முடித்துவிட வேண்டும் என நடக்கத் துவங்கினேன். நடக்க ஆரம்பித்த இரண்டு நிமிடத்திலேயே எதிர்ப்பட்ட ஒரு ஜீன்ஸ், டி.ஷர்ட் இளம்பெண் கையில் தேகத்தைப் புரட்டிக்கொண்டு இன்னொரு கையில் லாப்-டாப்'புடனும் வந்து "தடார்" என்று என் மீது முட்டிக்கொண்டு நின்றார்.

"ஓ! சாரி! நம்ம சாரு சார் நாவல் படிக்கற சுவாரசியத்துல எனக்கு எதுவும் தெரியலை", என்று கடைசி பக்கத்தை படித்த வேகத்தில் மூடி வைத்துவிட்டு அப்படியே தரையில் அமர்ந்து லாப்-டாப் திறந்து சாருவுக்கு கடிதம் எழுதத் துவங்கலானார்!

நிறைய பேர் நிறைமாத கர்ப்பிணி மனைவிகளை தரதரவென இழுத்துக்கொண்டு "உயிர்மை ஸ்டால்" எங்கே எனக் கேட்டவாறு விரைந்து கொண்டிருந்தது தெரிந்தது.

இந்த முறையும் வழக்கம் போலவே வேத கோஷ முழக்கங்களுடன் சில பார்ட்டிகள் கடை விரித்து நடைபாதை வாசகர்களை கைபிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் சி.டி.களுக்கு "ஜிங்கிள் ஜங்கிள்" என சத்தங்களுடன்  தனி ஸ்டால் அமைக்க முடியும் என்று இந்த முறையும் சிலர் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.

அதன் பின் எங்கும் உள்ளே நுழையாமல் ஒரு தீவிர ஜன்னல் வணிக நடைபயிற்சி கொஞ்ச நேரம். விகடனிலும் குமுதத்திலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என் இந்த வருடப் பட்டியலில் அங்கே வாங்க ஏதுமில்லாததால் அங்கும் நுழையாது இறுதியில் தமிழினியில் நேரே "சூடிய பூ சூடற்க"வை மட்டும் பறித்துக் கொண்டு வெளியே நடந்தேன்.

மாலை நேரம் நெருங்க உள்ளே நுழையும் கூட்டம் மெதுவாக அதிகமாகிக் கொண்டிருந்தது. ஊட்டி ட்ரை ப்ரூட், பழரசம், ஐஸ் கிரீம், ப்பீ நட்ஸ் என வெளியேவும் விற்பனை கன ஜோர்.

பார்க்கிங்கில் வண்டியை எடுக்கும்போது இரு தோழிகளின் சம்பாஷனை...

"என்னடி வாங்கினே?"

"ஊட்டி ட்ரை ப்ரூட்'ல பிரியாணி தாளிக்கற சாமான்"
Related Posts Plugin for WordPress, Blogger...