Jan 8, 2010

பின்நவீனத்துவம்?

பின்நவீனத்துவம் என்று ஏதோ ஒன்றைச் சொல்கிறார்கள். நானும் ஆரம்ப நாள் முதல் அது என்ன என்னவென புரிந்துகொள்ள முற்படுகிறேன். தோல்வியும் ஆயாசமுமே மிச்சம். ஜெயமோகன்  சமீபத்தில் அவர் பதிவில் சில விளக்கங்கள் கொடுத்துள்ளார். இப்பவும் அதுபற்றி இந்த மரமண்டைக்கு புரிந்துகொள்ள இயலவில்லை. யாருக்கேனும் புரிந்தால் பதினைந்து வார்த்தைகளுக்கு மிகாமல் எனக்கு சொல்லுங்களேன்?

3 comments:

natbas said...

இந்த மரமண்டைக்கு விளங்கிய வகையில் இதுதான் பின் நவீனத்துவம்:

நவீனம் என்றால் கதை.

முன் நவீனத்துவ காலத்தில், அதாவது பகுத்தறிவு வளராத காலத்தில், ராமன் காட்டுக்கு போனான் என்ற கதையை உண்மையாக நம்பினார்கள். இது மரபு.

நவீன யுகத்தில், கதை வேறு, கட்டுரை வேறு- அதாவது உண்மை என்று ஒன்று உள்ளது, அதை தவிர எல்லாம் பொய் என்று நம்பினார்கள். எனவே, ராமன் காட்டுக்கு போனானென்றால், அதற்கான சான்றுகள் என்னென்ன என்றுகேட்டார்கள்.

பின்நவீனத்துவவாதிகள், ஐயா, இட்டுக் கட்டிய காரணத்தினால், கதை கட்டுரை எல்லாம் ஒன்றுதான் என்கிறார்கள். ராமன் காட்டுக்கு போனானா? அதை கதை என்று சொன்னால் அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம், அதே போல், அதை உண்மை என்று நம்புகிறவர்கள் அதில் உள்ள கதையை கவனிக்காமல் விடக்கூடாது என்று சொல்கிறார்கள்.

எல்லாம் தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்- இன்னும் குழப்பம் இருந்தால், அன்பரே இந்த Postmodernism Generatorஐ கையாண்டு பாருங்கள்- உள்ளங்கை நெல்லிக்கனியாக எல்லாம் தெளிந்துவிடும்.

Bhaski said...

தீர்மானமாக சொல்லமுடியது. தெரிந்தவரை சொல்கிறேன்

உண்மையின் தேடல், நாம் ஏன் இங்கு இருக்கிறோம் போன்ற கேள்விகளை சீரியஸாக அணுகியது நவீனத்துவம். கொஞ்சம் அதைப்பற்றி முதலில் சொன்னால்தான் பிந்நவீனத்துவத்தை அணுக முடியும்

நவீனத்துவம்
ஒரு விஷயம் எப்படி உள்வாங்கப்படுகிறது கலைஞனால் எப்படி வெளியிடப்படுகிறது என்பது மிக முக்கியம் என்கிறது நவீனத்துவம். அதாவது சொல்ல வந்த விஷயம் (சப்ஜெக்ட்) கூட அந்த அளவுக்கு முக்கியம் இல்லை அதன் தாக்கம் தான் அதனினும் முக்கியம்.

சரி/தவறு என்ற மேலாண்மை நவீனத்துவத்தில் நிராகரிக்கப்படுகிறது. நாவலின் கதைசொல்லிகளின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு இடமாகக் கூட சித்தரிக்கிறது. அக்காலத்தில் இது ஒரு புரட்சிகரமான நிலை.

இதையெல்லாம் வைத்து வாழ்க்கையின் அர்த்தமின்மையை சொல்கிற போக்கு நவீனத்துவத்தில் காணலாம். ஆனால் இதை ஒரு மானுடச் சோகமாக கொள்கிறது நவீனத்துவம். பின்-நவீனத்துவம் இதையே கொண்டாடுகிறதுஉண்மைத் தேடல் போன்ற சமாச்சாரங்களை எல்லாம் கிண்டல் செய்கிறது.

ஏனென்றால் நவீனத்துவத்தின் சோகத்தில் ஒரு ஆப்டிமிஸம் இருக்கிறது. சிதைந்த, அர்த்தமற்ற வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் அழகையும் தரவல்லது கலைஞனின் கலையே என்ற (வெளிப்படையில் சொல்லப்படாத) ஆசை. இதை 'நப்பாசை' என்று சொல்கிறது பிந்நவீனத்துவம்.

ஞானத்தைப் பெருக்கிக்கொள்வது விடைகள் காண அல்ல. குழப்பங்களில் திளைக்கப் பழகு என்கிறது பின் நவீனத்துவம். ஒரு ஒருமித்த நோக்குள்ள உண்மைத்தேடல் என்பது கேச வளத்துக்கு பாதகமானது - என்று பகடியாக சொல்லுகிறது.

இதுவரை நான் சொன்னது வெறும் ஐஸ்பெர்க்கின் நுனி தான்.
கேச நலனுக்கேற்பே மேலே படித்து தெரிந்துகொள்ளவும். மேலும், நான் சொல்வது முற்றிலும் தவறு என்று பலர் சூடம் ஏத்தி பலர் சத்தியம் செய்வார்கள். அதுவும் சரிதான். "நான் சொல்ற மாதிரியும் சொல்லாம், அவுங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்". அதான் பின்-நவீனத்துவத்தின் ஜீவ-நாடியே

natbas said...

நல்லா சொன்னீங்க.

ஆனா, கேச நலம்னா என்ன? ஷாம்பூ விளம்பரங்களுக்கு வெளியே கேள்விப்பட்டதே இல்லையே?

மரமண்டைய தப்பா நினைக்காதீங்க, மெய்யாலுமே தெரியாது.

Related Posts Plugin for WordPress, Blogger...