Jun 21, 2011

அன்புள்ள அப்பா - திடீர்த் தொடர்

courtesy : http://ecoki.com


 "Be kind to thy father, for when thou wert young, Who loved thee so fondly as he? He caught the first accents that fell from thy tongue, And joined in thy innocent glee." -- Margaret Courtney 

கடந்த ஞாயிறன்று உலக அப்பாக்கள் தினம் உலகெங்கும் பரவலாகக் கொண்டாடப்பட்டதா எனத் தெரியவில்லை. எனினும், இணைய உலகில் உலாவரும் (கிட்டத்தட்ட) ஒவ்வொருவரும் குறைந்தது பத்து முறைகள் ஒருவருக்கு ஒருவர் 'தந்தையர் தின' வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இது போன்ற அப்பா, அம்மா, நண்பன், காதல் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நாளினைக் கொண்டாடுவது நம் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு ஸ்டைல் போல ஆகி வளர்ந்து விட்டாலும், இது தேவை-தேவையில்லை எனும் விவாதங்களும் அந்தக் கொண்டாட்டக் கடைபிடிப்புகளுக்கு இடையே நடந்து கொண்டே இருக்கின்றன. 

என்ன இருந்தும் அம்மா, நட்பு, காதல் தினங்களுக்குக் கிடைத்த மரியாதை தந்தையர் தினத்திற்குக் கிடைக்காததைக் கண்கூடாகக் காண முடிந்தது. இதில் வருந்தவோ, வியக்கவோ ஏதுமில்லை. அப்பாக்களின் கதை என்றுமே இங்கே சொல்ல மறந்த கதைதான். பெண் பிள்ளைக்கும் அப்பாவிற்குமான அன்பை இங்கே கதைகள், சினிமாக்கள் மற்றும் தொலைகாட்சி விளம்பரங்கள் பதிவு செய்திருக்கின்றன. அப்பா - மகன் இடையேயான அந்த உறவு பற்றின பதிவுகள் இந்தத் தளங்கள் அனைத்திலும் எப்போதேனும்தான் தென்படுகின்றன. 

என் பதினான்காம் வயதினில் என் அப்பா எங்களை விட்டுச் சென்றார். அதன் பின் எனக்கு எல்லாமுமே அம்மாதான். சின்ன வயது முதலே அம்மாக்கோண்டு என வளர்ந்த நான் அப்பாவின் அன்பைப் பெற என் அந்தச் சின்ன வயது வரை என்றுமே விழைந்ததில்லை. அதனால் அவர் மறைந்த பின்னரும் கூட பெரிதாய் எதையும் இழந்ததாய் நான் உணர்ந்ததில்லை, இது உங்களுக்குக் கேட்கக் கொஞ்சம் வியப்பாகத் தோன்றினாலும் இதுவே நிஜம்.

எனக்கென ஒரு மகன் வந்தபின் இப்போதுதான் எப்போதேனும் என் தந்தையை நினைத்துக் கொள்கிறேன். மற்றபடி, சில ஆண்டுகளுக்கு முன் நல்லவேலையில் செட்டில் ஆகாமல் திண்டாடிக் கொண்டிருந்த தருணங்களில் மாத்திரம் 'பெரிய படிப்பு' படிக்காமல் போன இயலாமையை எண்ணி மனதால் வைவதற்கு 'சின்ன வயதில்' விட்டுச் சென்ற தந்தை தேவைப்பட்டார் எனக்கு. இப்போது நல்ல உத்தியோகத்தில் இருக்கையில் அவற்றை நினைத்தால் எனக்கு நானே புன்னகைத்துக் கொள்கிறேன்.

என் அப்பாக் கதை இப்படியிருக்க, என் நண்பர்கள் வட்ட்டத்தில், உறவுகள் வட்டத்தில் என நான் சந்தித்து வரும், கேள்வியுறும் அப்பா - மகன் உறவு ரீதியிலான நிகழ்வுகள் எல்லாம் ஜஸ்ட் மேலோட்டமாகப் பார்த்தவாறு எல்லோரும் கடந்து செல்பவை. ஆனால், நான் சந்தித்த அந்த அனுபவங்களில்  கண்டிப்பாகப் பதிவு செய்யவேண்டிய சுவாரசியமான நிகழ்வுகள் உண்டு, பெரும் காவியங்கள் கூட பதிவு செய்யாத உணர்ச்சிமிகு சம்பவங்கள் உண்டு, காரணம் ஏதுமற்று ஒருவருக்கு ஒருவர் புரிதல் ஏதுமின்றி பிரிதல் நிலையில் வாழும் அப்பா - மகன் கதைகள் உண்டு, அன்பே உருவாக 'ரோல் மாடல்கள்' போல இருக்கும், கொஞ்சம் சினிமாடிக், அப்பா-மகன்களும் கூட உண்டு.

அந்த அப்பா - மகன்கள் பற்றின என் பார்வையைப் பதிவு செய்யும் ஒரு சிறு முயற்சியே இந்த சின்னத் தொடர்.

தொடங்கலாமா?
.
.
.


5 comments:

Shanmuganathan said...

அன்புள்ள கிரிக்கு எனது மனமார வாழ்த்துக்கள்......
நானும் எனது அப்பாவும் இது வரையில் ஒரு புரிதல் இல்லாமல் இருப்பவர்கள்தான்... இந்த தொடர் அப்பா மகன் உறவில் பல சுவாரசியங்களை கொண்டுவரும் என்று நம்புகிறேன்... தொடர் வெற்றி பெறவும் தொடர்ந்து வெற்றி பெறவும் பிரார்த்திக்கும்...
சண்முகநாதன்

natbas said...

திரு ஷன்முகநாதன் அவர்களை வழிமொழிகிறேன்

வாழ்த்துகள் கிரி, பயனுள்ள முயற்சி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்

sathishvasan said...

வாழ்த்துகள் கிரி, பயனுள்ள முயற்சி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்

Giri Ramasubramanian said...

@ sathishvasan

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி!

Giri Ramasubramanian said...

@ Shanmugam
@ Natbas

கே.கே. நகரிலிருந்து வந்திருக்கும் உங்கள் இருவரின் ஊக்கத்திற்கும் நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...