Jun 24, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - முன்னுரை


"என்னைப்பற்றி" ஏற்கெனவே தனியே எழுதியிருப்பதால் தனியே இங்கே அதிகம் பேசாமல் உள்ளே நுழைகிறேன்.

இந்த பி.பீ.ஓ. வாழ்க்கைக்குள் நான் எப்படி ஒட்டிக் கொண்டேன் என்பது எனக்கே இன்னமும் விளங்காத விஷயம். ஏழெட்டு இடங்களில் வேலை பார்த்துவிட்டே இங்கே  வந்து சேர்ந்தேன்.

நயாகரா சிண்ட்ரோம் என்பார்கள், அதுபோலத்தான் போகிறது வாழ்க்கை. அது இழுத்த இழுப்பிற்குச் போய்க் கொண்டிருக்கிறேன். முந்தைய இடங்களில் வேலை பார்த்த போது கம்பெனி பஸ்களிலும்,  கம்பெனி கார்களிலும் அலுவலக அடையாள அட்டையை கழுத்தில் சுமந்து பயணம் செய்யும் வாலிப வாலிபிகளைக் காணும்போது சற்றே ஏக்கமாக இருக்கும். இது போல நாமும் பட்டை கட்டிக் கொண்டு உயரமான பஸ்களிலும், கார்களிலும் வேலைக்குப் போக வேண்டும் என்று. அவர்கள் கண்களில் தெரிந்த தூங்காத இரவுகள், உண்ணாத பொழுதுகள் மற்றும் இன்னபிற கஷ்டங்களை நான் அப்போது பார்க்கவில்லையோ என்னவோ.

இங்கே வாழ்க்கை கஷ்டமானது இல்லை. ஆனால் உங்களை எளிதில் மூழ்கடித்துத் தொலைக்க வைக்கும் திறமை இந்தத் துறைக்கு உண்டு. நீங்கள் இங்கே கிடைக்கும் அத்தனை அற்ப சந்தோஷங்களிலும் மூழ்கி உண்மையான சந்தோஷங்களைத் தொலைத்துக் கொண்டே இருப்பீர்கள். எனினும் வாழ்க்கை செல்கிறது.

நான் இந்தக் கார்ப்பரேட் ஓட்டத்தை இன்னமும் முழுசாய்க் கற்றுக் கொள்ளவில்லை. என் போன்றவன் கற்றுக் கொள்ள இயலுமா எனவும் தெரியவில்லை. இருந்தாலும், வந்த புதிதிற்கு இன்றைக்குத் தேவலை எனலாம். வந்த புதிதில் இங்கு எல்லாமே எனக்குப் புதிதாக இருந்தது. 

பல்லவன் பஸ் ஏற பதினைந்து நிமிடம் நடந்தவனுக்கு, வீட்டு வாசலில் கார் வந்து நின்று ஆபீஸ் அழைத்துச் சென்றது. "டேய், நீ வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா" என என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

வென்டிங் மெஷின் வைத்து அதில் இலவசமாக காபி, டீ, சாக்லேட் பானம்  தருவது எனக்கு பலரிடம் பகிர்ந்து கொள்ளும் செய்தியாக இருந்தது. எங்கே நுழைய வேண்டுமானாலும் சரி, வெளியேற வேண்டுமென்றாலும் சரி ஒரு ஆக்சஸ் அட்டை வேண்டும் இங்கு, கழிப்பறை உட்பட. அடக் கடவுளே என்று இருந்தது முதல் சில நாட்களுக்கு.

வயது பதவிகளைத் தாண்டி இங்கே எல்லோரையும் பெயர் சொல்லியழைக்கும் கலாச்சாரம். சாரும் கிடையாது, "மிஸ்டர் மிசஸ்" அது கூட கிடையாது. நேரிடையாக "முதல் பெயர்" சொல்லி அழைத்தல், இது பற்றி நான் முன்னரே கேள்விப் பட்டிருந்தாலும் பழகிக்கொள்ள நாள் பிடித்தது.

என்னைச் சுற்றி எல்லோரும் மிக புத்திசாலிகளாகத் தெரிந்தார்கள். எல்லா கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில் இருந்தது. அறிவுக்கும் திறமைக்கும் வித்தியாசம் கொஞ்சம் தாமதமாகத்தான் எனக்குப் புரிந்தது.

இப்படியாக நான் திறந்த வாயை மூடிக் கொள்ள எனக்கு குறைந்தது இரண்டு மாதங்கள் பிடித்தன.

இந்தச் சூழல், வாழ்க்கை எனக்குப் பழகி விட்டது. இங்கே நான் காணும் சக மனிதர்கள்? இந்த அனுபவங்கள்? 


அவர்களை....அவற்றைப் பற்றிய என் நாட்குறிப்புகள்தான் இந்தத் தொடர்.

தொடங்கலாமா?
.
.
.

1 comment:

Rajesh Pandian M said...

கண்டிப்பாக...

Related Posts Plugin for WordPress, Blogger...