Oct 1, 2010

எந்திரன் - திரை விமர்சனம்

சிறப்பு விமர்சகர் - செந்தில்குமார்



எந்திரன்...... இது முழுக்க முழுக்க ஒரு ஷங்கர் படம். அட்டகாசமாக அலட்டல் ஏதுமில்லாமல்  செய்து கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இப்படியும் தமிழில் படம் பண்ண முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறது எந்திரன் டீம். தமிழில் கிராபிக்ஸ் கலக்கல்களின் உச்சம் எந்திரன் எனலாம். அப்படிப் புகுந்து விளையாடியிருக்கிறது அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் வேலைகளை இந்தப் படத்திற்குச் செய்திருக்கும் டீம். இவற்றை நிஜமாக்கிக் காட்ட பணத்தை வாரியிறைத்திருக்கும் சன் நிறுவனத்திற்கு சிறப்புப் பாராட்டுக்கள்.

மனிதன் உருவாக்கிய ரோபோ தன் எண்ணப்படி, தன் சிந்தனைப்படி நடக்கத் தொடங்கினால் நேரும் சம்பவ அசம்பவங்களின் தொகுப்பே "எந்திரன்".

வழக்கமான "டண்டன் டடடன்.... டுமீல் டகால்" ரக ரஜினிகாந்த் இன்ட்ரோ சலசலப்புகள் இல்லை. ஆரம்பப் பஞ்ச் டயலாகுகள் அப்படி ஏதுமில்லை. இருந்தும் ரஜினிக்கு இது ஒரு ஸ்பெஷல் படம். அறுபதிலும் இருபதின் சுறுசுறுப்போடு நடித்திருப்பது நம்ம சூப்பர் ஸ்டாரின் சிறப்பு. ரோபோத் தனமான நடனங்கள் ஆகட்டும், காதல் அணுக்கள் போன்ற பாடல்களில் இவரது வசீகரத் தோற்றம் ஆகட்டும், சந்தானம் மற்றும் கருணாஸ் ஆகியோரையும் ஓரம் கட்டும் வண்ணம் இவர் செய்திருக்கும் டைமிங் காமெடிகள் ஆகட்டும்...."பிச்சு ஒதர்றார் தலைவர்".

முதல் பாதி கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்து விடுகிறது. நம்ம ஊர்ப் படங்களின் நியதிப் படி இப்படிப்பட்ட படங்களுக்கு இரண்டாம் பாதி திருஷ்டியாக "மொக்கையாக" அமையும். ஆனால், எந்திரனில் இரண்டாம் பாதி முதல் பாதியை விஞ்சுகிறது. கிளைமாக்ஸ் காட்சிக்காக படத்தை நான்குதரம் பார்க்கலாம் (சும்மா ஒரு ஹைப்பு தான், சன் பிக்சர்ஸ் மட்டும்தான் ஹைப் பண்ணனுமா? ஆனா குறைஞ்ச பட்சம் இன்னும் ஒரு தரம் பார்க்கலாம்.).

ஐஷ் நல்ல பிரெஷ் ஆக இருக்கிறார். படம் முழுக்க அவருக்கு வேலை என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்வதற்கு இல்லை. இட்ட பணியைச் செய்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை பற்றி தனியே இங்கு எழுதும் அவசியம் இல்லை. படத்தின் பாடல்கள் ஏற்கெனவே உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. பின்னணி இசை....எஸ்...நிச்சயம் படத்திற்கு அதில் பலம் சேர்த்திருக்கிறார் ரஹ்மான்.

ரசூல் பூக்குட்டியின் பங்கு படத்திற்கு என்ன என்று என் சிறு மூளைக்குத் தெரியலை.

இந்தப் படத்திற்கான டைரக்டர் ஷங்கரின் உழைப்பு பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும். ஜென்டில்மேன் படம் தொடங்கி இன்று வரை, தமிழ் சினிமாவை அடுத்தடுத்த தளங்களுக்குக் கொண்டு செல்வதில் முன்னணியில் நிற்பவர் ஷங்கர். எந்திரன் மூலமாக இந்திய சினிமாவிற்கே நிச்சயம் பெருமை சேர்த்திருக்கிறார்.

இதற்குமேல் நான் சொல்ல விரும்பவில்லை. வெள்ளித் திரையில் படத்தைத் தவறாமல் பாருங்கள்.

பின் குறிப்பு: படம் முடிகையில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு படத்திற்கு உழைத்தவர்கள் பெயர் திரையில் ஸ்க்ரோல் ஆகிறது. நூற்று ஐம்பது கோடி எங்கெங்கே சென்றது என்பதற்கான கணக்கு இது. 


ஆ....ஊ....நூத்தி அம்பது கோடி....அச்சா போச்சா... என குதிப்பவர்கள் அந்தப் பகுதியை அவசியம் பார்க்கவும்.

நன்றி: செந்தில் Enthiran movie review, endhiran movie review

1 comment:

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...