Dec 31, 2010

வெள்ளிக் கதம்பம் - கோவை பயண நினைவலைகளுடன்...



சாய்ராம் (எ) பால நரசிம்மன்


டிசம்பர் சீசனில் மஹா பாகவத சிகாமணிகள் பங்குபெறும் கச்சேரிகளுக்கு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில்.... கோவையின் ஒரு கோடியில் இருந்து கொண்டு சத்தமே இல்லாமல் சங்கீதத்தை (தன்னுள்ளே) வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் கலைஞனைப் பற்றி.......

சாய்ராமுக்கு எப்போதும் உள்ளே இசை ஓடிக் கொண்டிருக்கிறது. இவனுடன் இருக்கும் நேரங்களில் இவன் பேசுவதைவிட இவன் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் ஆலாபனையைத்தான் நீங்கள் செவிபடக் கேட்க இயலும்.

"சங்கீதமே அமர சல்லாபமே" என இரண்டு வரிகள் நாம் பாடினால் "நட பைரவி" என்கிறான். இல்லையில்லை "சர்கம்" என்றால் "நான் ராகத்தைச் சொன்னேன்" எனச் சொல்லி அசர வைக்கிறான்.

இத்தனைக்கும் முறையாக இசை பயின்றவனில்லை சாய்ராம். எல்லாமே கேள்வி ஞானம்தான். கேள்வி ஞானத்திலேயே கமகங்களில் சொக்க வைக்கிறான்.

"கண்டிப்பா கிளாஸ் சேர்ந்து படி சாய்ராம்", என்றால் "என்னோட மானசீக குரு டி.எம்.கிருஷ்ணா இருக்கார் இப்போதைக்கு" என்கிறான். வெறித்தனமாக டி.எம்.கிருஷ்ணா பாடல்களை சேகரித்து வைத்திருக்கிறான். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வால்பேப்பராக ஜொலிக்கிறது. ஸ்க்ரீன் சேவரிலும் அவரே.



இரண்டு நாட்கள் முன் கோவையில் சாய்ராமை சந்தித்தது என் அதிர்ஷ்டமே. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவன் ஃபேஸ்புக்கில் நிறைய நட்புகள் சங்கீதம் சம்பந்தப்பட்டவர்களே.

திருவையாறில் தன் தாய்மாமாக்கள் இருவருடன் தங்கி சங்கீதம் பயின்றவாறே தஞ்சையில் பொறியியல் படிக்க வேண்டும் என்பது சாய்ராமின் இப்போதைய கனவு.


2010'ன் த்ரீ இடியட்ஸ் !


முதல் மூன்று இடங்களுமே ஒருத்தருக்கேதான். அது ஃபேஸ்புக்!

கீழே இந்த இரண்டு படங்களையும் பாருங்கள். முதல் படம் உலக மக்கள் ஒன்றரை வருடம் முன்பு எந்த சோஷியல் நெட்வொர்க்கின் பிடியில் கட்டுண்டு இருந்தார்கள் என்றும், அடுத்த படம் இப்போது இந்த மாத நிலவரப்படி எங்கே கட்டுண்டு இருக்கிறார்கள் என்றும் சொல்கிறது.

அந்த ஃ பேஸ்புக் நீல நிறத்தில் சாயம் பூசியிருக்கும் நாடுகள் அத்தனையும் ஃ பேஸ்புக் பைத்தியம் பிடித்துத் திரிகின்றன.






படங்களுக்கு நன்றி: நண்பர் அகங்கார வீரகடியன்

ரசித்த கவிதை!
இந்த வாரம் நான் ரசித்த கவிதை சத்தியமாக கோவைப் பெண்களின் கொஞ்சு தமிழ்தான் கொங்கு தமிழ்தான். தமிழகத்தின் அழகுத் தமிழ் என்றால் அது கொங்கு தமிழ்தான் என எங்கும் உரத்துச் சொல்வேன். கொங்கு தமிழை அங்கே சில பெண்கள் கொஞ்சிப் பேசிக் கேட்கையில்.... "செவிகள் ஆயிரம் வேணுமடா முருகா!".

சரி சரி... enough ஜொள்ளு அண்ட் ஓவர் டு பிசினெஸ்!



சில சினிமாக்கள்!


இப்படியெல்லாம் படங்கள் சென்னையில் ஓடுகின்றன என்று தினத்தந்தி / தினகரனின் சினிமா பக்கங்களை புரட்டினால்தான் தெரிகிறது. இங்கே சாம்பிளுக்கு ரெண்டு....இப்படி படம் பேரு கேள்விப் பட்டிருக்கீங்களா நீங்க?

அந்தத் தயாரிப்பாளர்கள் பெயரைப் படித்தாலே கண்ணில் ரத்தம் வருகிறது! பாவம் அவர்கள்!




மடிப்பாக்கம் மல்லி இட்லி!


கூட்ரோடைத் தாண்டி பஸ்ஸ்டான்ட் நோக்கி நீங்கள் உள்ளே வந்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு சொல்லிக் கொள்ளும்படி இருக்கும் ஒரு ஹோட்டல் துர்கா பவன்.

சென்ற முறை இட்லி பார்சல் வாங்கி வந்து அதை கடிக்கவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வீட்டம்மாவிடம் இட்லியாலேயே நான்கு வீச்சுகள் வாங்க வேண்டியதாயிற்று.

இருந்தும் என்ன இங்கே லோக்கலில் அவர்களே மோனோபோலி போல. அம்மா, வீட்டம்மா இருவரும் மாதவரத்திற்கும் பெரம்பூருக்கும் படையெடுக்க மீண்டும் துர்கா பவன் வாசல் மிதிக்கலாயிற்று. 

"போன வாரம் இட்லி வாங்கி இப்படி ஆகிப் போச்சு சார்", என என் சோகக் கதையைச் சொன்னால்...

"அது ஆறிப் போன பின்ன சாப்டுருப்பீங்க சார். சூடா சாப்டுடணும்", எனக்கே அட்வைஸ்.

சரி, மெனுவில் என்ன இருக்கிறது எனப் பார்த்தால் "மல்லி இட்லி" என்று ஏதோ மின்னிற்று.


"இட்லிக்கும் மல்லி இட்லிக்கும் என்ன வித்யாசம் சார்"

"ஒர்ரூவா சார்"

"அதில்லீங்க, எப்டி இருக்கும்"

"இது கும்முன்னு நல்லா சாஃப்டா இருக்கும்"

"அப்போ அது தட்டையா கெட்டியா இருக்குமில்ல"

"அப்டி இல்ல சார். அது சாஃப்டா இருக்கும். இது நல்லா சாஃப்டா இருக்கும்", நல்ல சமாளிப்பு.

"சரி நாலு கட்டுங்க".

வீடு வந்து தின்றேன். அடக் கஷ்டமே! சாதாவே தேவலாம் போலிருக்கு. இது ரப்பர் போலல்லா இருக்கு! இதுக்கு மல்லி இட்லி என்று வேறு ஒரு பேரு!

"அது சரி! மார்கழி மாசம். இது மல்லிக்கு சீசனில்லை. பொழியற பனிக்கு கொஞ்சம் நசிஞ்சு புசிஞ்சிதான் சார் இருக்கும் மல்லி", ஹோட்டல்காரரின் குரல் தன்னால் என் காதில் ஒலித்தது.
.
.
.


6 comments:

Giri Ramasubramanian said...

வாங்க நண்பர்! அப்படியே உங்களுக்கும் நம்ம வாழ்த்துக்கள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே...

இளங்கோ said...

அடுத்த தடவை நல்ல இட்லிகள் கிடைக்க ஆண்டவன் அருளட்டும் :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

Giri Ramasubramanian said...

@ பிரஷா
ரொம்ப நன்றி! உங்களுக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்!

@ இளங்கோ
எஸ்! ஆண்டவன்தான் அருள வேண்டும். மிக்க நன்றி!

natbas said...

எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள் நண்பரே...

இந்த ஆண்டு எழுத்திலும் பணியிலும் வாழ்விலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்...

Anonymous said...

கிரி,
இனிய நல் புத்தாண்டுவாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...