Nov 11, 2010

கோவை சம்பவ எதிரொலிகள்

குழந்தைகளைக் கடத்திக் கொன்ற (அல்லது அதற்காக கைது செய்யப்பட்ட) மோகன்ராஜ் என்கவுண்டர் கொலை செய்யப்பட தகவலை சன் செய்திகளில் செய்தியோட்டத்தில் படித்த பொது, "இது எதிர்பார்த்த ஒன்றுதான்", என்ற சாதாரண மனநிலையில் இருந்தேன். அடுத்த வேலையைப் பார்க்கத் துவங்கிவிட்டேன். அலுவலகம் செல்லும்போது அலுவலக  காரில் நண்பர்களிடம் பெரிதாக ரீயாக்ஷன் ஏதும் இல்லை.

அலுவலகத்தில் சிலரிடம் பேசியபோது அங்கே உணர்ச்சிப் பிழம்புகள் பல எழும்பிக் கொதித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

"இவனுங்கள ஜன சந்ததியில நடுரோட்டுல போட்டிருக்கணும் சார்"

"இன்னொருத்தன் இருக்கானா செத்துட்டானா?" என்பதாக இருந்தன விவாதங்களும் கேள்விகளும்..

தினமலர் இணையதளத்தைத் திறந்தபோது மதியம் ஒரு மணியளவிலேயே கிட்டத்தட்ட எழுநூறு பேர் பின்னூட்டம் இட்டிருந்தார்கள். அவர்களில் 99 சதம் பேர்  போலீசைப் பாராட்டியிருந்தனர்.

என் அலுவலகத் தோழி ஒருவரும் தினமலரில் இவ்வாறு பின்னூட்டமிடத் தவறவில்லை.
நல்ல வேலை செய்துள்ளது கோவை போலீஸ். குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தாயின் தந்தையின் மனத்திலும் நிறைவைத் தந்துள்ளது இந்த முடிவு. இது போன்றவர்களுக்கு அரசின் பணம், நேரம் ஆகியவற்றை இது போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு செலவு செய்வது ரொம்ப வேஸ்ட். அதை நிறுத்தியமைக்கு நன்றி. இன்னொருத்தனையும் போட்டுத் தள்ளும் சேதி சீக்கிரம் கிடைக்க போலீசை வேண்டுகிறேன். கோவை போலீசுக்கு நன்றி!...
மங்குனி அமைச்சர் தன் தளத்தில் மக்களிடம் கேட்ட கருத்தில் நூற்று சொச்ச பேர் "என்கவுண்டர் சரிதான்" எனத் தீர்ப்பளித்தனர் (!??).

மங்குனி அமைச்சர் பதிவும் எதிரொலியும் ஒரு உதாரணம்தான். பத்திரிகை சார்ந்த தளங்கள், வலைப்பதிவர்கள் என கிட்டத்தட்ட அனைத்து திசைகளிலிருந்தும் இந்த என்கவுண்டருக்கு பேராதரவு.

ம.அமைச்சர் பதிவில் தமிழ்மலர் என்பவர் எழுப்பின சில கேள்விகள் தர்க்க ரீதியானவை. ஆனால் அவை கடுப்பாத்திரத்தில் இருந்த மக்களின் நையாண்டி மற்றும் கீழ்த்தர எதிர்வினைகளால் காணாமல் அடிக்கப்பட்டன.

"நீ என்னதான் சொல்ல வர்ற?" என என்னைக் கேட்பவர்களுக்கு.


ஒரு சக மனிதனாக - அக்குழந்தைகளிண் பெற்றோர்களாகக் கூட வேண்டாம் - அக்குழந்தைகளுடன் சேர்ந்து பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஒரு சக மனிதனாக நினைத்து ஒரு சில நிமிடம் யோசித்துப் பார்...  "காவல்துறை செய்தது சரி என சொல்லவில்லை.. ஆனால் சில விஷயங்களில் இது போன்ற தண்டனைகள் நிச்சயம் தேவைதான். --சில விஷயங்களில்" இவ்வாறு யுவகிருஷ்ணாவின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார் ஒருவர்.

இது போன்ற உணர்ச்சி மயமான கேள்விகளுக்கும், இந்திய நீதித்துறையின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்த மனிதர்கள் தாமே முன் வந்து எழுதும் முடிவுரைகளுக்கும்   தர்க்க ரீதியான விளக்கங்கள் மூலம் பதிலளிக்க இயலாது.

ஆனால், உலகின் தலை சிறந்த ஜனநாயக நாடாக நம்மை நாமே மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவின் மீதும், இந்திய  நீதித் துறையின் மீதும்  தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவனாக என்னைக் கேட்டால், இந்த என்கவுண்டர் முற்றிலும் தவறு.

ஸ்ரீதர் நாராயணன் தன் தளத்தில் சொன்னதை இங்கே நான் மறுபடி சொல்கிறேன்...

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கப்படும் தனிமனித முடிவிற்கும் ஒரு அரசாங்கத்தின் செயலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசாங்கத்தின் செயல்கள் ஒரு சமூகத்தையே பாதிக்கக் கூடியது. நமது சட்ட அமைப்பின் மேல் நமக்கே நம்பிக்கையில்லாமல் போய்விட்டதை உரக்க சொல்லி பெருமைபட்டுக் கொள்வது நல்லதா? நிச்சயம் நல்லதில்லை.
பா.ராகவன் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்...

யதார்த்த வாழ்வுக்கும் மசாலா சினிமாவுக்குமான இடைவெளிகள் குறைந்துகொண்டிருக்கின்றன. அற்புதங்கள் அந்தந்தக் கணமே நிகழ்ந்துவிட வேண்டுமென்ற அவசரம் எங்கும் தெரிகிறது.
கடைசியாக.... இந்தப் பதிவிற்கு என்னென்ன நக்கல் நையாண்டி ஆத்திர எதிர்வினைகள் வருமோ தெரியவில்லை. யுவகிருஷ்ணா'வின் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்திற்கு ஒரு அனானியின் எள்ளலைப் பாருங்கள்..



"ஸஸரிரி" கிரி 10:21 PM, November 09, 2010  

உணர்ச்சிக் கொந்தளிப்பில் ரீயாக்ட் செய்யும் எல்லோராலும் புரிந்து கொள்ளத்தக்கப் பதிவல்ல இது.

நான் என் காதாரக் கேட்ட சில கமெண்டுகள்:

மனுஷனுக்குத்தான் நீதி முறைப்படி தண்டனை தரணும், இவனைப்போல மிருகத்துக்கு இதுதான் சரி. / அவனுக்கு ஒன்றரை வயசு கொழந்தை இருக்குன்னா அதை அவன் யோசிச்சிருக்கணும். / இவனைப்போல எவனும் பின்னால பண்ணக்கூடாதுன்னா இதுதான் சரி.

இப்படி சென்றுகொண்டே இருக்கிறது மக்களின் உணர்ச்சி வாதங்கள்.

தமிழ்மலர் என்பவர் 'மங்குனி அமைச்சரின்' பதிவில் சில கேள்விகள் எழுப்பியிருக்கிறார். அவர் கேள்விகளின் அடிப்படையை நான் அறியாவிட்டாலும் அவர் கேட்பதில் உள்ள தர்க்க ரீதியான சில கேள்விகளுக்கு விடை காணுமுன் இந்த என்கவுண்டர் நடந்துவிட்டனவோ என்றும் ஐயப்பட வேண்டியுள்ளது.

எது எப்படியோ, "உன் வீட்டுல இப்படி நடந்திருந்தா நீ இப்படி தர்க்க ரீதியா கேள்வி கேட்டுட்டு நின்னுட்டு இருப்பியா?" என்பதான கேள்விகளுக்கு நம்மிடம் நிச்சயம் விடையில்லை.

//உணர்ச்சிக் கொந்தளிப்பில் ரீயாக்ட் செய்யும் எல்லோராலும் புரிந்து கொள்ளத்தக்கப் பதிவல்ல இது.//

வாங்க அரிஸ்டாட்டில் உங்களுக்கு ரொம்ப புரிஞ்சிருக்கு போலருக்கே.

டே! யோக்கியன் வாரன் சொம்பை எடுத்து உள்ள வைங்கோ!!!




 ரொம்ப நன்றி அனானி!
.
.
.

4 comments:

வெட்டிப்பேச்சு said...

தயை செய்து எனது பதிவினைப் பாருங்கள். உங்களது கருத்து வேண்டி.

பதிவின் தலைப்பு: 'கொண்டு வரச்சொன்னால் கொன்று வரலாமா?'
http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_10.html

மக்களின் உணர்ச்சிகளை மட்டுமே இந்த செய்தியில் பார்க்க முடிகிறது. அத்தனை யும் மதிக்கத் தக்கதே. இருப்பினும் தெளிவான சிந்தனையை இழக்கலாகாது என்பது எனது எண்ணம்.

natbas said...

கோயமுத்தூரில் சகலரும் சொல்வது இது - "வெட்டி நாயம்!!' தேவைக்கதிகமாக மிகையாக நியாயம் பேசிக் கொண்டிருந்தால், கேலியாக இப்படி சொல்லி விட்டு எழுந்து போய் விடுவார்கள்.

ரொம்ப பிராக்டிகலான மக்கள். பேசுமளவுக்கு இயற்கை வளம் எதுவும் கிடையாது. ஆனாலும் உழைப்பு மற்றும் முனைப்பு இதைக் கொண்டே ஒரு பெரிய அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவர்கள்.

கோவையில் குண்டு வெடித்த போது நான் அங்கிருந்தேன். இன்றும் அவர்கள் சொல்வது, நாம அப்படி பதிலடி குடுத்தமில்ல, இனி எவனுக்காவது குண்டு வெக்கிற தைரியம் வருமா? என்பதுதான்.

குற்றவாளிகளை சிறையில் அடைப்பது மக்களின் பாதுகாப்புக்காக மட்டுமல்ல. அவர்களின் பழி வாங்கும் உணர்வை நிறைவேற்றித் தருவதற்காகவும்தான். இந்த விஷயத்தில் இப்படி நடந்திருக்கிறது.

உண்மைத்தமிழன் பதிவில் ஒருவர் கேட்டிருந்தார், நாவரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் வெளியே வந்து விட்டாரே என்று. அதே போல் பூவரசியோ யாரோ இப்படி தப்பித்து வந்து விடுவாரே என்றும் கேட்டார்கள். இன்றைக்குக் கூட பாருங்கள் ரதோர் பெயிலில் வந்து விட்டார்.

சட்டம் இப்படி இருக்கையில், மக்கள் சந்தோஷப்படாமல் என்ன செய்வார்கள், சொல்லுங்கள்?

நான் நியாயப்படுத்தவில்லை. உள்ள நிலைமையை சொல்கிறேன். கடவுள் நம்பிக்கை போய் விட்டது. சட்டத்திலும் நம்பிக்கை போய் விட்டது. என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

மாவோயிஸ்டுகள் போலீசைக் கொல்லும்போது அருந்ததி ராய் யாரைத் திட்டுகிறார்? அந்த மனித உரிமைதான் இங்கும் வேலை செய்கிறது.

தார்மீக நியாய உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல் சட்டப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால், மெட்ராஸ் பாஷையில் சொல்வதானால், "வேலைக்காவாது! போய்க்கினே இரு!"

--------

நாமெல்லாம் ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறவர்கள். நான் படிக்கும் காலத்தில் இதே மாதிரி டெல்லியில் இரு குழந்தைகள் பலியானார்கள். ஒரே பரபரப்பு, அப்புறம் கொலையாளிகள் கைதாகி தூக்கிலிடப்பட்டதும் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.

இறந்த குழந்தைகளின் பேரை மறந்து போயிருப்போம். ஆனால் அன்று கொடூரமானவர்களாக பொதுமக்களால் ஏசப்பட்ட இருவர் யார் தெரியுமா?

பில்லா, ரங்கா!

natbas said...

மறுபடியும் சொல்கிறேன். தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

மாவோயிஸ்ட்கள், தீவிரவாதிகள் விஷயத்தில் என்ன சொல்கிறோம்? அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும், சரியா? அவர்கள் அப்பாவிகளைக் கொன்றாலும் மனித உரிமை பேசுகிறவர்கள் இப்படிதான் சொல்கிறார்கள்.

இந்தக் கொலைக்கு சந்தோஷப்படுகிறவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்புறம் தீர்வு சொல்லுங்கள்.

போலீஸ் செய்தது தப்பு அதில் சந்தேகமே இல்லை. ஆனால், இந்தக் கொலையால் இனி ஒரு குழந்தையை கடத்த நினைப்பவன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பான், என்று மக்கள் நினைத்தால் அதைத் தவறு என்று சொல்ல முடியுமா?

இது உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம். போலீசைத் திட்டுங்கள், சட்டத்தைத் திட்டுங்கள், அரசியல்வாதிகளைத் திட்டுங்கள். பத்திரிக்கைகளைத் திட்டுங்கள்.

தங்கள் குழந்தைகள் உயிரை நினைத்து பயப்படும் பொது மக்களைத் திட்டாதீர்கள். நிச்சயமாக அவர்கள் சந்தோஷப்படுவது சுட்டுக் கொல்லப்பட்டான் என்று அல்ல. இந்த மாதிரி செய்பவனுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றுதான்.

இந்த நிலைக்கு யார் காரணம் என்று யோசிப்போம்.

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

நன்றி. தாமத ரெஸ்பான்சிற்கு மன்னிக்கவும். என் பதில் என்று ஏதும் இங்கில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...