Jul 20, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦4

பேய்க் கதைகள்



பி.பீ.ஓ'வில் வேலை செய்யத் தொடங்கிய பின் எனக்கு முதன்முதலாய் நேர்ந்த பேய் பார்த்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முன், இங்கே வேலை பார்க்கும் நாங்கள் எல்லோரும் எப்படிப் பேய்த்தனமாக வேலை பார்க்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலை எட்டு மணிக்கு வேலைக்குப் போய், மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்பும் ஜென்மங்கள் இல்லை நாங்கள். அமெரிக்கர்களுக்கு, ஆஸ்திரேலியர்களுக்கு, ஐரோப்பியர்களுக்கு என வகைவகையாக நாங்கள் வேலை பார்ப்பதால், எங்கள் வேலை நடு ராத்திரியில் தொடங்கி நண்பகலில் முடியும். அல்லது நடுப்பகலில் தொடங்கி நள்ளிரவில் முடியும். இல்லையென்றால் முன்னிரவில் தொடங்கிப் பின்னிரவில் முடியும். இரவைத் தரிசிக்காமல் எங்களால் வேலைக்குப் போகவோ அல்லது திரும்பவோ முடியாது.

நாங்கள் வேலைக்குப் புறப்படும்போது ஊரே தூங்கிக் கொண்டிருக்கும். அல்லது நாங்கள் வீடு திரும்பும்போது வீடே தூங்கிக் கொண்டிருக்கும். 

சில நேரங்களில் இதை நினைத்து சுயபச்சாதாபம் தலைதூக்கி நெஞ்சாங்குழி அடைக்கும். வழியில் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லி ஒரு பெப்சியோ கோக்கோ அருந்தும்வரை அது இருக்கும்.

ப்போது எனக்கு ஆஸ்திரேலிய நேரத்தில் வேலை. காலை மூன்று மணிக்கு நான் முதலில் காரில் ஏற வேண்டும். எனக்குப் பின் வியாசர்பாடியில் வெங்கட், பின்னர் திருவல்லிக்கேணியில் நான்கைந்து பேரை ஏற்றிக் கொண்டு அலுவலகம் செல்வோம். வழக்கமாய் வரும் உதயாதான் அன்றும் வண்டியை உருட்டிச் சென்றான். 

பெய்தும் பெய்யாமலும் யோசனையுடன் சாலைகளை நனைத்துக் கொண்டிருந்தது மழை. "சங்கீத சாகரம்" யேசுதாசைப் பாட வைத்துவிட்டுப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார் "யாழ்" சுதாகர்.

ஓரிரு டீக்கடைகளில் நாயர்கள் ஸ்டவ் பற்ற வைத்துக் கொண்டிருந்தனர். போதிய இடைவெளியில் அவ்வப்போது நாடார்கள் தங்கள் எம்-80௦'க்களில் கோயம்பேடு நோக்கிப் பறந்து கொண்டிருந்தனர். எங்கேனும் சில சுவர் ஓரங்களில் சிலர் போஸ்டர்களை ஒட்டிக்கொண்டோ கிழித்துக் கொண்டோ இருந்தார்கள். 

இவை தவிர்த்து வழக்கத்திற்குச் சற்றும் மாறாமல் சந்து, வீதி, தெரு, சாலை என எதை எல்லாம் கடக்கிறோமோ அங்கெல்லாம் மக்கள், மாக்கள், வீடு, விடுதி என எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கிறது.

வெங்கட் வீட்டின் சந்து முனையை அடைந்து "பாம் பாம் பாம்", புதிதாய்ப் பொருத்தியிருந்த ஹாரனை அந்த அகால வேளையில் பரீட்சை செய்து பார்க்கிறான் உதயா. ஒரு நாய் எங்கள் வண்டியை வினோதமாய்ப் பார்த்து விட்டு அந்தச் சந்தினுள் ஓடுகிறது. சந்து முனையில் காத்திருக்கிறோம்.

அந்தச் சந்தில் நான்கைந்து வீடுகள் கடந்தால் வலது புறம் மாடியில் விளக்கு எரிகிறது. "ரெண்டு நிமிஷம் வந்துடறேன்", விரல்களால் வெங்கட் சைகை செய்கிறான்.   நான் அரைத் தூக்கத்தில் கார் கதவைத்  திறந்து வைத்துக் காத்திருக்கிறேன்.

திடீரென அந்த சூழலே ஏதோ பரபரப்பானதான தோற்றம். ஏதோ சத்தங்கள் அடங்கின, வேறேதோ சத்தங்கள் புதிதாகத் தொடங்கின. உதயாவின் கண்கள் உன்னிப்பாகின. நானும் சத்தம் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்க்கிறேன். 

வெங்கட்டின் வீட்டின் எதிர்த் திசையில் வீடுகள் ஏதுமில்லை. ஒரேயொரு மரம் மட்டும் அடர்ந்து பறந்து நிற்கிறது. இருட்டில் சரியாகத் தெரியவில்லை என்றாலும் அது புளிய மரமாக இருக்கக் கூடும் என யூகம் செய்து கொள்கிறேன்.



உள்ளே ஓடிய அந்த நாய் தன்னுடன் எங்கிருந்துதான் அத்தனை நாய்களை சேர்த்துக் கொண்டதோ, திடீரென அங்கே ஒரு டஜன் நாய்கள் பிரசன்னாமாயின. அத்தனை நாய்களும் ஒரே நேரத்தில் நேர்த்திசையில் அந்த புளிய மரத்தை நோக்கியவாறே நிற்கின்றன.

எனக்கும் சரி உதயாவுக்கும் சரி, இங்கே ஏதோ நிலைமை சரியில்லை என மட்டும் புரிகிறது. இருந்தும் அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதில் சுவாரசியம் கூடிப் போனதால் அந்த சுவாரசியம் எங்கள்  பயத்தைத தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இப்போது எல்லா நாய்களும் ஒரே நேரத்தில் தொண்ணூறு டிகிரிக்குத் தலைகளை உயர்த்தி புளியமர உச்சி நோக்கி ஓலமிட ஆரம்பித்தன. அந்த ஓலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரே சுருதியில் குரைத்தலாக மாறத் தொடங்குகிறது.



எனதுடன் சேர்த்து உதயாவின் இதயத் துடிப்பும் தடதடவென எனக்குக் கேட்கிறது. திரும்பி உதயாவைப் பார்க்கிறேன், அவன் ஊசியில் நூல் கோர்க்கும் முகபாவத்தில் புளியமரத்தைப் பார்க்கிறான்.

நாய்களின் தலைகள் அனைத்தும் இப்போது கீழ்நோக்கி எதையோ பார்த்தவண்ணம் ஒருமித்து இறங்க ஆரம்பித்தன. மரத்தின் அடிபாகத்தை நோக்கி இப்போது ஓலமும் குரைத்தலுமாக கலப்பட ஓசைகள் தொடர்கிறது.

இந்த கலாட்டாக்களில் நாங்கள் மறந்து போயிருந்த வெங்கட் வீட்டு பால்கனியில் இன்னொரு விளக்கும் இப்போது எரிகிறது. ஒரு பெரியவர் தன் தலையை வெளியே நீட்டி, "ஏய், போ.....போங்க.....நேரங்கெட்ட நேரத்துல சத்தம் போட்டுட்டு", எனக் குரல் கொடுத்து விட்டு அவர் பங்கிற்கு எங்கள் வண்டி நோக்கி "ரெண்டு நிமிஷம், வெங்கட் வந்துடுவாரு", என சைகை காட்டிவிட்டு உள்ளே மறைகிறார்.


image courtesy: http://all-free-download.com / http://www.stevehornung.com
Related Posts Plugin for WordPress, Blogger...